31.10.12

அசத்தலான ஐந்து நாலடிகள்.


கடந்த வாரம் நாலடியாரின் காமத்துப் பாலில் இருந்து சுவாரஸ்யமான ஐந்து பாடல்களைப் பார்த்தோம். படிக்க விட்டுட்டீங்களா? இந்தாங்க லிங்க்.
இந்த இடுகையில் பொருட்பாலில் இருந்து சுவாரஸ்யமான கருத்துக்களுக்காகவோ, அபாரமான உவமைகளுக்காகவோ ஐந்து பாடல்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

கிட்டத்தட்ட நான் ரசித்த பொருட்பால் பாடல்கள் ஒரு இருபதில் முதல் ஐந்து. பார்ப்போமா? 

பாடல்: 1

கல்லென்று தந்தை கழற அதனையோர்
சொல்லென்று கொள்ளாது இகழ்ந்தவன் - மெல்ல
எழுத்தோலை பல்லார்முன் நீட்ட விளியா
வழுக்கோலைக் கொண்டு விடும்.      (253)

சின்ன வயதில் அப்பா ‘படி படி’ என்று சொல்லியும், அதை ஒரு சொல்லாக மதிக்காது புறக்கணித்தவன், பின்னொரு காலத்தில் எவனோ ஒருவன் மெதுவாக ஒரு ஓலையைக் கொடுத்துப் படித்துக்காட்டச் சொல்ல, அவன் தன்னை அவமதித்ததாக நினைத்து, கோபத்துடன் அவனைத் தாக்க, தடிமனான  கழியைக் கையில் எடுப்பான்.

இந்தப் பாட்டின் ஊசி செருகலை லேசாகச் சிரித்தபடி ரசிக்க முடிகிறது. அப்பா சொல் கேளாதவனின் கையிலிருக்கும் கழி ரொம்பவே வலிக்கும்.

பாடல்: 2

நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும் செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.                (218)

நாயின் காலில் இருக்கும் சின்னஞ்சிறு விரல்களைப் போல் மிகவும் நெருக்கம் உள்ளவர்களாக இருந்தாலும், ஈயின் கால்களின் அளவு கூட உதவி செய்யாதவர்களின் நட்பினால் என்ன பயன்?

வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லை என்றாலும், வயல் விளைய உதவும் வாய்க்காலைப் போன்றவர்களின் நட்பினை, தொலைவில் இருந்தாலும் நாடிப் பெற வேண்டும்.

நாயின் காலையும் ஈயின் காலையும் உவமித்திருக்கும் அழகையும், வயலுக்கும் வாய்க்காலுக்கும் உள்ள உறவை ஒப்பிட்டிருக்கும் மேன்மையையும் மறக்க மனம் கூடுதில்லையே!

பாடல்: 3

ஊரங்கண நீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் - ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.                  (175)

ஊரில் உள்ள சாக்கடை நீர், கடல் நீரில் கலந்த பின், அதன் கடந்த காலமும், அதன் பெயரும் கரைந்து ’தீர்த்தம்’ என்னும் புனிதமான பெயர் பிறக்கிறது. அதுபோல, பெருமையில்லாத குடியில் பிறந்த ஒருவரும், பெருமை மிக்க பெரியவர்களோடு கூடிப் பழக, மலை போலப் புகழ் பெறுவார்கள்.

சாக்கடை தீர்த்தமாகும் நுட்பம் ’அட கவிஞா’ என வாஹ்வாஹ் போட வைக்கிறது.

பாடல்: 4

எறியென்று எதிர்நிற்பாள் கூற்றம் சிறுகாலை
அட்டில் புகாதாள் அரும்பணி - அட்டதனை
உண்டி உதவாதாள் இல்வாழ்பேய் இம்மூவர்
கொண்டானைக் கொல்லும் படை. (363)

கணவன் சொன்ன சொல்லுக்கு பயப்படாது ‘ நல்லா அடி’ என்று எதிர்த்து நிற்பவள் எமன்; காலையில் சமையல் அறைக்குள் நுழையாதவள் நீக்கமுடியாத நோய்; சமைத்த உணவைப் பரிமாறாதவள் வீட்டில் கொலுவிருக்கும் பிசாசு;

இந்த மூவரும், கணவனைக் கொல்லும் கொலைக்கருவிகள்.

ஏசுநாதர் சற்றைக்கு முன் வந்து சென்றிருந்த ஒன்றாம் நூற்றாண்டில் வீட்டுக்குள் இருக்கும் அரசியல், கமகமவென வெளியில் மணக்கும் பாடல் இது. தவிர, போருக்குப் போய்விட்டு சிலபல விழுப்புண்களுடன் ஆண்கள் வீடு திரும்ப,  பெண்கள் சமையலறைப் பக்கமே எட்டிப் பார்க்காமல் பொழுதை ஓட்ட, சீரியல்களுக்குச் சமமான சொக்குப்பொடி வேறு என்ன  இருந்திருக்கும்? என்று நெற்றிப்பொட்டில் தட்டியபடி யோசிக்கவைக்கும் அற்புதமான பாடல்.

பாடல்: 5

கடையாயர் நட்பிற் கமுகனையார் ஏனை
இடையாயர் தெங்கின் அனையர் - தலையாயார்
எண்ணரும் பெண்ணைப் போன்று இட்டஞான்று இட்டதே
தொன்மை யுடையார் தொடர்பு.                 (216)

தினந்தோறும் நீர் பாய்ச்சினால் மட்டுமே பயன் தரும் பாக்குமரம் போல, நாள்தோறும் உதவினால் மட்டுமே பயன்படுபவர்கள் நண்பர்களில் மூன்றாம் தரம்.

விட்டுவிட்டு எப்போதாவது நீர் பாய்ச்சினாலும், உதவும் தென்னையைப் போல அவ்வப்போது உதவினால் மட்டும் பயன்படும் வகை நண்பர்கள் இரண்டாம தரம்.

விதையிட்ட நாளில் வார்த்த நீருக்குப் பின், எந்தக் கவனிப்புமின்றி விட்டாலும் மிகுந்த பயன் தரும் பனையைப் போல, என்றோ செய்த உதவியை நினைவில் வைத்து ஆபத்தில் உதவுபவரே முதல் தரமான நண்பர்கள்.

கமுகு, தென்னை, பனை ஆகிய மூன்று மரங்களைக் கொண்டு மற நண்பர்களை அலசி ஆலா போட்டுத் துவைத்துவிட்டார் நம் கவிஞர்.

மற்றொரு இடுகையில் பொருட்’பால்’ கலந்த மற்றுமொரு ஐந்து பாடல்கள்.

ரை ரைட் போலாம்.

27.10.12

துறவியாய்ப் போகவிருந்த சிவாஜி

சத்ரபதி சிவாஜி
துகாராம் சுவாமிகள் ( கி.பி. 1568 - 1649 ) ஒரு மளிகைக் கடை வியாபாரியின் மகனாகப் பிறந்தார். சிறு வயதிலேயே தந்தையை இழந்துவிட்டதனால், குடும்பப் பொறுப்பையும் வியாபாரப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள வேண்டியவரானார். ஆனால் இரண்டிலும் இவர் மனம் செல்லவில்லை. இரண்டிலும் தோல்வியே கண்டார். வறுமை மேலிட்டது.

ஆனால் இவர் மனமெல்லாம் கடவுள் நெறியிலேயே சென்று கொண்டிருந்தது. துறவு பூண்டார்; ஆண்டவன் புகழைப் பாடுவதிலும், பக்தி மார்க்கத்தில் மக்களைச் செலுத்துவதிலும் காலங் கழித்தார். ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தார். இவரது பக்திப் பாடல்களைக் கேட்டு மக்கள் பரவசப் பட்டுப் போனார்கள்; இவரிடத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டார்கள். இவர் புகழ் மகாராஷ்டிரம் முழுவதும் பரவியது.

சத்ரபதி சிவாஜிக்கு ( கி.பி.1627 - 1680) இருபது அல்லது இருபத்தோரு வயதிருக்கும். ஒரு நாள் துகாராம் சுவாமிகளின் பாடல் ஒன்றை ஒரு பக்தன் வாயிலாகக் கேட்டார்; உள்ளம் உருகி நின்றார்; பின்னர் அவருடைய வேறு சில பாடல்களையும் செவிமடுத்தார்; அவருடைய வாழ்க்கைப் போக்கை ஒருவாறு தெரிந்து கொண்டார்;

அவரை வரவழைத்து, தன்னோடு இருக்கச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்; அப்படி வந்து வசிப்பதாயிருந்தால், பொன்னும் பொருளும் ஏராளமாகக் கிடைக்கச் செய்வதோடு எல்லாவித வசதிகளையும் செய்து கொடுப்பதாகவும் ஒரு பெரியார் மூலம் அவருக்குச் சொல்லி அனுப்பினார். இதற்குத் துகாராம் சுவாமிகள் சில கவிதைகள் மூலம் கடிதம் எழுதியனுப்பினார்.

வெ.சாமிநாத சர்மா எழுதிய “ வரலாறு கண்ட கடிதங்கள்” நூலில் பிரசுரமாகியிருக்கும் அந்தக் கடிதம்:

###
“ என்னை நீ சந்திக்க வேண்டுமென்று உறுதி பூண்டிருக்கிறாய்; இதுதான் உன்னுடைய கடிதத்தின் சாரம்! அப்படியானால் என்னுடைய இந்த பதிலைக் கேள். அரசனே, என் மனப்பூர்வமான வேண்டுகோளுக்குச் செவி கொடு.

எவ்வித நோக்குமில்லாமல் காட்டிலே திரிந்து கொண்டிருக்கிறேன். என்னைப் பார்த்தாலே அருவருப்பு உண்டாகும்; மிகக் குறைவான ஆடையையே உடுத்திக்கொண்டிருக்கிறேன். என் உடம்பின் மீது தூசு தும்புகள் படிந்திருக்கின்றன. எனக்குக் குறைவான ஆகாரந்தான். பழங்களை உட்கொண்டே காலந்தள்ளுகிறேன்.

எனது அங்க அவயங்களோ மிக மெல்லியனவாகவும் கோணல் மாணலாகவும் இருக்கின்றன. மற்றவர்கள் பார்வைக்குத் தகுதியுடையவையாக அவை இல்லை.

ஆகையால் துகாராம் உன்னை வேண்டிக் கொள்கிறேன்; உன்னை வந்து பார்க்க வேண்டுமென்பதைப் பற்றி என்னிடம் பேசாதே.

உன்னுடைய சந்நிதானத்திற்கு நான் வருவதனால் யாருக்கு என்ன நன்மை? என் கால்கள்தாம் சோர்வடையும்.

எனக்கு ஆகாரமா? பிச்சை எடுத்துச் சாப்பிடுகிறேன். அது போதும்! உடையா? கந்தைத் துணிகள் இருக்கின்றன. படுப்பதற்குக் கற்பாறை இருக்கிறது. உடம்பை மூடிக்கொள்ள ஆகாயம் இருக்கிறது.

இப்படியிருக்கிறபோது நான் யாருடைய தயவை எதிர்பார்த்து நிற்கவேண்டும்? அப்படி நிற்பது வாழ்க்கையை வீணடிப்பதாகும்.

எனக்குக் கௌரவம் வேண்டுமென்பதற்காக நான் அரசவையில் போய் நிற்க வேண்டுமா என்ன? அங்கு - அரசவையில் - திருப்தி என்பது காணக் கிடைக்காத அரிய பொருள்.

அரசவையில் பணக்காரர்களுக்குத்தான் கௌரவமெல்லாம். மற்றவர்களுக்குக் கௌரவம் என்பது இல்லை.

ஆனால் எனக்கோ, ஆடம்பரமாக ஆடைகளை அணிந்து கொண்டிருக்கிறவர்களைப் பார்த்தாலே மரண வேதனை அடைவது போன்ற உணர்ச்சி உண்டாகிறது.

இப்படியெல்லாம் நான் சொல்வதைக் கேட்ட பிறகு, உனக்கு என் மீது அலட்சியப் புத்தி ஏற்படலாம். ஆனால் கடவுள் யாரையும் அலட்சியப் படுத்துவதில்லை.

உனக்கு ஓர் இரகசியத்தைச் சொல்லி வைக்கிறேன். பிச்சை எடுத்து உண்பதைக் காட்டிலும் வேறு பெரிய சந்தோஷம் எதுவுமில்லை.

உலக ஆசைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள், எவ்வளவு சடங்குகள் செய்தாலும், எத்தனை உபவாசங்கள் இருந்தாலும் துக்கத்தில் கிடந்து உழல வேண்டியவர்கள்தான்.

துகாராம், மனநிறைவு என்ற செல்வத்தை நிறையப் பெற்றிருக்கிறான்; கடவுளின் அன்பைப் பெற்றிருக்கிறான். அதுவே அவனுடைய ஆஸ்தி. முற்பிறவியில் செய்த புண்ணிய வினைகளே அவனுக்குக் கவசம்.”

##########

இதைப் படித்த சிவாஜி அப்படியே மெய்மறந்து போனார். சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு, துகாராம் சுவாமிகளைத் தேடிக்கொண்டு புறப்பட்டார்.; எங்கெங்கோ அலைந்து திரிந்து கடைசியில் அவரைக் கண்டும் விட்டார்; அவர் அடிகளில் விழுந்து வணங்கினார்; தான் அணிந்திருந்த உடைகளைக் கழற்றிக் கிழித்து எறிந்துவிட்டு, கந்தல் துணிகள் சிலவற்றைப் பொறுக்கியெடுத்து வந்து உடுத்திக்கொண்டு, சுவாமிகள் பின்னால் மௌனமாக உட்கார்ந்து விட்டார்.

இங்ஙனம் யாருக்கும் தெரிவிக்காமல் வந்துவிட்ட சிவாஜியை அவருடைய பரிவாரத்தினர்,  பல இடங்களிலும் அலைந்து தேடி, கடைசியில் கண்டுபிடித்துவிட்டனர்; ஊர் திரும்பி வந்து அரச காரியங்களைக் கவனிக்குமாறு கேட்டுக் கொண்டனர். ஆனால், சிவாஜி இவைகளுக்குச் செவி கொடுக்க மறுத்து விட்டார். கடைசியில் அவர்கள் சிவாஜியின் தாயார் ஜீஜாபாயிடம் சென்று நிலைமையைத் தெரிவித்தார்கள்.

அவர் உடனே சிவாஜியின் இருப்பிடத்திற்கு வந்து ”‘ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டுமென்றும், ஹிந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுத்து வளர்க்க வேண்டுமென்றும் உன்னைப் பின்பற்றி நிற்கும் அனைவருக்கும் ஊக்கமளித்துவிட்டு இப்படி நீ ஒதுங்கியிருக்கலாமா? பாரத நாட்டில் ஞானிகளுக்கும், துறவிகளுக்கும் குறைவில்லை. அனால் புனிதமான இந்தப் பாரத நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க இப்பொழுது ஒரு வீரன் தேவை. உனக்குத்தான் அந்தப் பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது.

ஹிந்து தர்மத்தைக் காப்பாற்றப் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஊர் ஊராகச் சுற்றித் திரியும் பாடகர்களும் சன்னியாசிகளும் இப்பொழுது தேவையில்லை; பலங்கொண்ட படைகளே தேவை. ஆகையால் எழுந்திரு; புறப்படு; உன்னுடைய அரச கடமைகளைச் செய்ய முற்படு” என்றெல்லாம் கடிந்தாற் போல் கூறினார்.

சிவாஜி, தாயின் வாசகத்தில் உண்மை இருக்கிறதை ஒப்புக்கொண்டு, துகாராம் சுவாமிகளிடம் விடைபெற்றுக் கொண்டார்; ஊர் திரும்பி வந்து அரச கடமைகளை மேற்கொண்டார்.

இதற்குப் பிறகு, துகாராம் சுவாமிகளை சிவாஜியால் சந்திக்கவே முடியவில்லை. இவர் சந்தித்த அதே வருஷத்தில் - 1649 ஆம் வருஷத்தில் - அவர் மறுவுலகுக்குச் சென்றுவிட்டார்.

26.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 8


ராம்பாடா சின்னக் கிராமம்தான். சாலைக்கு இருமருங்கிலும் தேனீர்க்கடைகள். அங்கங்கே பனிக்கட்டி கரைந்து சிற்றோடைகளாக ஏதோ சேதி சொல்லப் புறப்பட்ட சேடிப் பெண்கள் போல ரொம்ப ஒயிலாகத்தான் இங்குமங்கும் சென்று கொண்டிருந்தன. இளைப்பாறல் அளவு மீறினால் களைப்பாக மாறிவிடும் என்பதை யாத்ரிகள் அறிவார்கள். எனவே, பிரயாசையுடன், தளர்ந்திருந்த உடலை மறுபடி கூட்டிக்கொண்டு, சற்றே கழற்றி வைத்திருந்த கம்பளிக் கவசங்களைத் தட்டி அணிந்து கொண்டு கிளம்பினோம்.

எதிரே, மிக உயரத்தில் எங்கோ ஒரு மலைப்பாதை தெரிகிறது. அதில் நடந்தும், குதிரைகளிலும் சிலர் சென்று கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எங்கே போகிறார்கள் என்ற என் யோசனை என் முகத்தில் அப்பட்டமாய்த் தெரிந்ததோ என்னமோ, குதிரைப்பயல் சிரித்தபடிச் சொன்னான், ‘ அதுதான் நாம் போகவேண்டிய பாதை’ என்று. தொலைவிலிருந்து பார்க்கும் உயரம் பிரமிப்பாக இருக்கிறது. இதோ இங்கேதான் என்று தோன்றுவன நடக்க நடக்க நம்மைப் பரிகசித்தபடி மேலும் விலகுவதுபோல் தோற்றமளிக்கின்றன. காலறியாமல் உயர்கிறது பாதை. கம்பலை போல் இறைக்கிறது மூச்சு. காதறியாத மௌனத்தின் பேச்சு; கடவுள், தேடினால் கண்ணாமூச்சு! அட! கவிதைபோல் தொனிக்கிறதே! வளைத்துப் போடுவோமா?

காலறியாமல் உயர்கிறது பாதை
கம்பலை போல் இறைக்கிறது மூச்சு
காதறியாத மௌனத்தின் பேச்சு
கடவுள், தேடினால் கண்ணாமூச்சு!

பாதை கோரினால் தொலைவு நிச்சயம்
வாதை மிகுந்த பயணம் நிரந்தரம்
கலவியில் இரண்டும் ஒன்றும் இல்லை
கடலுட் சென்றபின் நதியே இல்லை!

ஒவ்வோ ரடியாய் உணர்ந்து நடந்தால்
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு சிகரம்
ஒவ்வொரு சிகரமும் ஒவ்வொரு துவக்கம்
உண்மையில் நடைதான் உயிருக் கிலக்கம்!

சுழன்று கொண்டே இருக்கும் புவியில்
சும்மா இருந்தும் தொடரும் பயணம்
முடிவறியாமல் முதல்புரியாது
முன்னுள் ளவரை பின் தொலையாது

முகவரி யற்ற வீட்டைத் தேடி
தகவ லற்ற தடத்தில் பயணம்
வானம் அதற்கு வாசலென்றபின்
வழி தொலைந்தது; வம்பு தொடர்ந்தது......

ஒளி, மங்கிக்கொண்டே வருகிறது. உதிர்ந்து கிடந்த திரியை, உணர்வென்னும் காற்று நிமிர்த்தியது. வெட்ட வெளியைக் கிழித்துவந்த சின்னப் பொறியொன்று தீபத் திலகமாய் வீற்றுச் சிரித்தது. என்னெதிரே காரிருள். எதிர் என்ற கருத்தும் தொலைந்த கருப்பு கப்பிக் கிடக்கிறது. என்னிடம் இருப்பது இதோ இந்தச் சின்னச் சுடர்தான். அதோ அங்கே என்ன இருக்கிரது என்பதை இதனால் தெரிவிக்க முடியாது. ஆனால்,

அடுத்த அடியை எடுத்துவைக்க
அகல்விளக்கு போதும்
எடுத்து வைக்க எடுத்து வைக்க
அடிகள் குறைந்து போகும்
இறுதி வரையும் எந்தன் தீபம்
சின்னஞ் சிறிதாய் இருக்கும்
இலக்கை அடைந்து அமரும்போது
சற்றே சிரித்து நிலைக்கும்.....

நின்ற இடத்திலிருந்து நேரே திரும்பியிருந்தால் என்றோ முடிந்திருக்கும் நடை! வட்டத்தில், முதலும் முடிவும் ஒன்றுதானே. இருந்த இடத்தில் இருந்தால் போதுமென்பது நடந்து களைத்தால்தானே புரிகிறது! அலைமோதும் எந்தன் அகவேட்கைக்கும், உடல்நோகும் இந்தப்புறப் பயணத்துக்கும்தான் எத்தனை பொருத்தம்! இவை இரண்டும்கலந்து தவிர்ந்து போகும் தருணம் புலப்படும் அமைதியாய், அதிசயமாய், அனைத்துமாய் அதோ அசையாமல் வீற்றிருக்கிறது சிவம்!

வீதியற்ற பாதையின் வெளிச்சமற்ற விளக்குகளைத் தாண்டி நாதியற்ற குதிரைகளை விட்டிறங்கி நமசிவாயனை நினைத்தபடி நகர்த்தப்பட்டேன்.... புடைத்த சிகரமே லிங்கமாய்ப் புலித்தோல் போர்த்துத் திகழ்கிறது..... மாறி மாறி அதே இடத்தில் கோயில். தலமே முக்கியம்; கோவிலன்று. காதலுக்குக் கவிதை முக்கியமன்று; கவிதை உடம்பு. மஞ்சள் விளக்கொளியில் மாறாத கடுங்குளிரில், நெஞ்சைக் கவர்ந்து நினைவெல்லாம் திருடிக் கொண்டு, உயிர் கொஞ்சத் துடிக்கின்ற கோலவெழிலை, குலவக் குலவக் குழைந்து குழைந்து குழையவைக்கும்  உயிர்க்கினிய காதற் காந்தத்தை என் கண்ணாரக் கண்டுகொண்டேன்!

வானளாவும் நீலமேனி! வளரும் வெற்பைப் போன்ற சடைகள்! கானமாய்க் கலகலக்கும் கங்கை! கணங்கள் உதிரும் கவி உடுக்கு! தேனவாவும் சுத்த சிவம்! திரையிலாத புதிரின் உச்சம்! நான் கரைந்தேன் கண்ணின் முன்னே! நான் முடிந்தேன் கவிதை போலே.....

பிச்சையேந்தும் சாதுக்கள், காலைக்கதிரின் முதற்கிரணங்கள் முத்தமிட்டுப் பொன் துலங்கும் கோவிலுக்குப் பின்னிருக்கும் பனிச்சிகரம், புதிதாய்ப் பாவாடை கட்டிக்கொண்ட சின்னஞ்சிறுமியைப் போல் பாறைகளிடையே சலங்கை கொஞ்சக் கலகலத்துவரும் பனியோடை, எங்கோ கேட்கும் உடுக்கு, கண்ணைப் பறிக்கும் நீலம், புன்னகையே முகமாய்க் கடைக்காரர்கள், கஞ்சாப் புகையில் காலம் மக்கிய கனவு முகம், சாம்பலே ஆடையாய்த் திரியும் துறவி, அந்த இடத்தில் முளைத்த கல்லாய் அசையாது அமர்ந்திருக்கும் அகோரி,

தன்னை மீரா என்று சொல்லிக்கொள்ளும் ஒரு முதிய துறவி, சிறுநாகம் போல் நெளியும் ஜ்வாலை முன் குறுநகை தவழ வீற்றிருக்கும் நாகா, மூக்கும் கால்களும் மஞ்சளாய் அண்டங்காக்கை, கால் வைக்க முடியாமல் குளிரும் கல் பதித்த பிரகாரம், இளைய சூரியனின் கர்வம், கண்கொட்டாமல் நமசிவாயனைப் பார்த்தபடி அமர்ந்திருக்கும் நந்தி, ஈரக்காற்றில் மிக நிதானமாய் அசையும் காவிக்கொடி, பரபரப்புடன் உள்ளே நுழையும் பக்தர்கள், எண்ணற்ற பிரார்த்தனைகள், கணக்கற்ற தேவைகள் யாவும் கலந்து ஒன்றான காட்சிதான் நான் கண்ட தரிசனம்.

அங்கே எனக்குக் கோரிக்கைகள் நேரவில்லை. புத்தியைப் பயன்படுத்தி வாக்கியங்களைக் கோர்த்து விழையும் வரங்கள், முத்தியல்லாமல் வேறேதோ முட்டும் ஆசைகள், அவற்றால் நேரும் குற்ற உணர்வு, இவையெல்லாம் நமக்கே ஒத்து வராத போது இறைவனைத் தொடுமா?

தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறேன். குமிழிகள் ஒன்றன்பின் ஒன்றாய் உடையவும், விட்டுப் புறப்பட்ட ஆவி ஒரு நடனக்காரியின் லாவண்யத்தோடு வளைந்து நெளிந்து வெளியில் கலக்கவும், என்னை விட்டுப் பிரிந்தன கருத்துக்கள், சித்தாந்தங்கள், அபிப்பிராயங்கள், வேட்கைகள் எல்லாம்...

மிடறு விழுங்கிக் கொள்கிறேன். தேனீரின் இளஞ்சூடு நெஞ்சில் பரவுகிறது. நிம்மதியின் உதயத்தில் ஆர்ப்பாட்டம் ஏது? பனியும், தூசும் சேர்ந்து கப்பிக் கிடக்கும் கண்ணாடி டம்ளர். இருப்பினும், தன்னைத் தொட்டுச் சென்ற கதிரின் கிரணத்தை வாங்கி வைத்துக் கொண்டு மகிழ்வில் ஒளிர்கிறது; புதிய முத்தம் பெற்ற பழைய கைதி போல்!

எழுந்தேன் தும் துது தும் துது தும் என்று பெரிய பறை முழங்குகிறது. மிகப் பெரிய தாரையில் மெல்லிய ஒலி வருகிறது. எங்கிருந்தோ வந்த பக்தர்கள் ஒரே விதமாக, பதட்டமில்லாத ஆட்டத்தில் ஈடுபட்டுத் தன்வயம் இழந்தவர்களாகக் கண்கள் மேலே செருகக் காட்சியளிக்கிறார்கள். இன்றைய கலைநடனம் என்பது அந்த வெட்டவெளி நடனத்தின் அற்பப் பிரதிபலிப்புத்தான் என்ற குருநாதரின் வார்த்தை காதில் கேட்கிறது.

சாதித்த உணர்வில்லை; சாதிக்கும் வெறியுமில்லை. ஏக்கமில்லை. ஏற்ற இறக்கங்கள் இனியுமில்லை. அவனாய்க் கிளம்பி, இவனாய்த் திரிந்து சிவனில் கலந்தது சித்தம்.

திரும்பி வந்தால்தானே திரும்பி வந்த கதையைச் சொல்ல முடியும்?

                                                                 நிறைந்தது.
                                                             ஓம் நமசிவாய  

(இன்று ஜாகேஸ்வர் யாத்திரைக்கு இசைக்கவி ரமணன் வழிநடத்திச் செல்ல, உடன் பயணிக்க வேண்டிய பாக்யத்தை சீரற்ற உடல்நிலையால் நான் கடைசி நாளில் ரத்து செய்தேன்.

அந்த இறையருளால் அவர் மேற்கொண்டிருக்கும் இமய யாத்திரை மிக நல்லதொரு இறையனுபவமாக நிறைவுற கடவுளைப் ப்ரார்த்திக்கிறேன்.) 


25.10.12

11. ஈஸ்வர - தக்ஷிணாயனம்



பொன் கிரீடம் தரித்த வருண தேவனைச் சரணடைகிறேன். வேண்டப்படுகிற எனக்கு தீர்த்தங்களின் பலனை நீ அருள்வாய்.  ஏனெனில் தீயவர்களின் பொருளை நான் அனுபவித்துள்ளேன்.  தீயவர்களிடமிருந்து பரிசையும் பெற்றுள்ளேன். 

மனத்தாலும், பேச்சாலும், செயலாலும், என்னாலோ, என்னைச் சேர்ந்தவர்களாலோ எந்தப் பாவச் செயல்கள் செய்யப்பட்டதோ, அந்தப் பாவத்தை இந்திரனும், வருணனும் ப்ருகஸ்பதியும் சூரியனும் முற்றிலுமாக தூய்மையாக்குவார்களாக. 

நீரில மறைந்திருக்கும் நெருப்பிற்கும் இந்திரனுக்கும் வருணனுக்கும் வருணனின் மனைவியாகிய வாருணிக்கும் தண்ணீரின் தேவதைகளுக்கும் வணக்கம்.

துன்பம் தருவதாக, தூய்மையற்றதாக, அமைதியைக் குலைப்பதாக தண்ணீரில் உள்ள அனைத்தும் விலகட்டும். 

அளவுக்கு அதிகமாக உண்ணுதல், அளவுக்கு அதிகமாகப் பருகுதல், தீயவர்களிடமிருந்து பரிசுகளை ஏற்றுகொள்ளல் இவை மூலமாக எந்தப் பாவங்கள் எனதாக உள்ளனவோ, அவற்றை அரசனாகிய வருணன் சொந்தக் கைகளாலேயே துடைத்து விடுவாராக.

(அகமர்ஷண ஸூக்தம்)


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

’சிலிகுரி மண்ண மிதிச்ச அண்ணைலேருந்துதான் நீயி இப்பிடிக் கோட்டி பிடிச்சுத் திரியுதலா’ன்னு என்ன பேசுதோம்னு வெளங்காம பேசிட்டு வண்டீல டுர்ருன்னு எரும கணக்கா உறுமிட்டுப்  போரான்லா அவந்தாம்டே என்னோட வூட்டு ஆம்பள. அந்தாளு ஏசுன ஏச்சுல எத்தன எளுத்துன்னு உன்னால எண்ணீற முடியும்ல மக்கா. ஏம் மனசுக்குள்ள வெந்துட்டுக் கெடக்குல்லா அந்த நோவு அதுக்கு எத்தன எளுத்துன்னு ஒன்னால எண்ணவே முடியாதுடே. 

சுவாதீனமா பொங்கிப் போட்டு புள்ள பெத்து வீட்டுக்குள்ளாறயே அடஞ்சி கெடக்கேம்லா வக்கத்த ஒரு தெரு நாயி கணக்கா, என்னப் பாத்துக் கோட்டிக்காரின்னு நாக்கு மேல பல்லுப் போட்டுப் பேசுதாம்லா அவந்தாங் கோட்டிக்காரப் பயலுக்குப் பொறந்த பயன்னு சொல்லுதக்கு எனக்கு எத்தன தேரம்டே புடிக்கும். பொளச்சுப் போலே பொச கெட்ட மூதி.


இருக்கது ஒரு மண்ணுக்கும் தேராத ஊரு. எப்பப் பாரு எளவு வூடு கணக்கா ஒரு சனியம் புடிச்ச குளுரு. நம்மூர்ல மார்களி பொறந்தாக்க ஒரு குளுரு குளுரும்லா அது கணக்கா இருக்குலா சித்திர மாசத்து வெய்யிலு. எங்கன கண்டாலும் மசமசன்னு கண்ணுல ஆமணக்கெண்ணய ஊத்துனாக்குல. தோலு பொசுங்குனாக்குல ஒரு வெயிலு உண்டுமா? ஏ வெயிலுகந்தா! நீதாம்லே கண்ணத் தொறக்கணுஞ் சாமி. ஒரு கோயிலு கொளம் உண்டுமா? பொங்கலத்தாம் பொங்க ஒரு கொட உண்டுமா? ஒரு கண்றாவியுங் கெடயாது.

ஓலப் பாயில நாயி மோண்டது கணக்கா இவா என்னடா பேசிக்கிட்டே கெடக்கான்னு நெனக்காதடே. ஒரு தேரிக் காட்டுல பனயேறிக் குடும்பத்துல பொரண்டுட்டு கெடந்த பொட்டச்சிக்குத் தோலு கொஞ்சம் செவப்பா இருந்து தொலைச்சிட்டு. அதுக்க நான் என்னலே சேயுது? வெளயாட்டும் படிப்பும் நல்லா வந்திட்டு.  ஒம்பதாப்புல பஸ்ட் ரேங்குலா நானு. 


ஒரு பொட்டப்புள்ள ஃபுட்பால் ஆடிப் பாத்திருக்கீராவே பாட்டா! நா ஒதச்ச பந்தத் தடுக்க பயலுகளுக்கே தெயிரியம் கெடயாதுல்லா.  பந்து எங் கால்ல வுளுந்து அக்கா ஒதச்சிறாதக்கான்னு கெஞ்சும் பாரும். அதப் பாத்தப் பொறவு சொல்லும்  பாட்டா நானு யாருன்னு. பயலுவ என்கிட்ட நின்னு பேசுதக்கோ  பல்லக் காட்டுதக்கோ பயந்து களிவானுங்கேம். பொறம்போக்கு.

வூட்டுல அய்யாவோ அம்மயோ ஆயியோ எதுக்கும் என்கிட்ட நின்னு பேச அப்பிடி ஒரு பயம். பேசாதுவோ. தெரட்டிய எடுத்துக்கிட்டு அம்மாக்காரி ஒரு தெசக்கி ஆடுகளப் பத்திக்கிட்டுக் கெளம்பீருவா. அய்யன் பொளுதுக்கே பன ஏறப் போய் பனங்காட்டுல கெறங்கிக் கெடப்பாரு. ஆயிதாங் குடிக்கதுக்குத் தோதா கஞ்சித் தண்ணியுங் காணத் தொவலயலுங் கொணாந்து கொடுக்கும். 


அதயும் பாக்கப் பாவமாத்தான் இருக்கும். சத்தங்காட்டாம சாணிய சொவத்துல தட்ட ஆரம்பிக்கையிலே, எங்கேருந்தோ கெக்க்கெக்கெந்னு பொட்டயத் தொரத்திக்கிட்டு வர்ற சேவலப் பாக்குங்காட்டியும் வருமே ஒரு கோவம். கையில கெடக்குத விட்டெறிஞ்சு சனியம்புடிச்ச நாயேன்னு வெரட்டிட்டுத்தா ஒக்காருவேன். நாய சனியம் புடிக்குமா என்ன? சொல்லு மக்கா!    
~~~~~   
பயலுவோளுக்கு அப்பக் கண்ணு பொடதீல பொறண்டு கெடந்துச்சா என்னன்னு தெரியல. ஒருத்தனாட்டும் எனக்கு லவ்வு லெட்டர் கிட்டரு கொடுக்கத் துணிஞ்சதுல்ல. அப்படி ஒரு வெறப்பு எனக்கும் புடிச்சுக் கெடந்தது. ஆனாக்க பாரு மக்கா, எனக்கு இந்தப் பயலுவள ஓட ஓடத் தொறத்துன காலம் போயி நம்ம பின்னாடி எவனாச்சும் நாக்கத் தொங்கப்போட்டுக்கிட்டு அலய மாட்டானானு ஏக்கம் வந்துட்டுலே. 

ஆனா எவனுக்கும் என்ன நெருங்குதக்கு ஒரு துணிச்சல் வேணும்லா. அது எவங்கிட்ட இருக்கு? எல்லாப் பயலுவளும் செத்தவங் கையில வெத்லாக்கு கொடுத்தாக் கணக்கா திரியுதானுவோ. பாத்தியா எனக்கு ஆம்பளப் பயகளயும் வேண்டிருக்கு. ’எவன்ல என்ன நெருங்கற தெயிரியம் புடிச்சவங்’கற மண்டக் கனமும் வேண்டிருக்கு. கருமம் அத என்னனு சொல்லுது?

அப்பத்தாண்டே இந்த புல்லட் பாண்டி வந்து சேந்தான். இந்தப் பயல இதுக்கு முன்னக்க எங்க வெச்சுப் பாத்ததாயும் ஓர்மயில்ல. அந்த பைக்கோட ரெண்டு கைப்பிடிலயும் ரெண்டு கையவும் வெறப்பா நிறுத்தி மார்க்கூட்ட முன்னுக்கத்  தள்ளி தோள நிமித்தி மொரட்டுத் தனமா சூரிக்கத்திய வீசுனா மாதிரி பார்வையோட இந்தப் பயலப் பாத்த நிமிசமே நாங் கவுந்துட்டேம்டே. அவுங்களுக்கு எங்கியோ தாதங்கொளமாம்ல. அதுக்குப் பக்கத்துலருந்து ரொம்ப நாளக்கிப் பொறவு இங்க வந்துருக்காவளாம். பொறந்து பத்து வருசத்துல இந்த ஊர வுட்டுப் போயிட்டாஹளாம். 

அந்த புல்லட் பாண்டி பேரு பாண்டிராஜ். பேரும் நல்லாத்தாம்டே இருக்கு. அவன ஏதோ புடிச்சுப் போச்சு. அப்புறமாட்டு அதுக்கு என்ன பேரு வெச்சா என்ன கொற கண்டுபுடிச்சுறப் போறேன்? புல்லட்டுல தொர வர்றயில களுத்துல கெடக்குற செயினப் பல்லால போட்டுக் கடிச்சுக்கிட்டு ஒரு ஓரப் பார்வ பாக்காம போவ முடியாதோ? 


அப்புடி பாத்துக்கிட்டே போயி ஒரு நாளக்கி எரும மாட்டு மேல வண்டிய வுட்டுட்டுக் கவுந்தாம்பாரு சிரிப்பாணிய அடக்க முடியலடே. முட்டில காயம் பட்டு வண்டியப் பொறக்கிக்கிட்டு என்னப் பாத்து எல்லா சனத்து முன்னாலயும் வெக்கங் கெட்டு வெரல ஆட்டிக்கிட்டு ஏதோ சொன்னாம் பாருடே, அன்னக்கித் தாம் மக்கா என் சீவன்லயே வெக்கம்ன்னா என்னான்னு ஒணந்தேன்.

பாண்டியோட அப்பா நெஞ்சு வலி வந்து செத்துச் சுண்ணாம்பானதயும் அவங்க அம்மாக்காரி அடுத்த வருசத்துலயே மண்டையப் போட்டதயும் சொன்னாத்தானடே என்னோட கதய நாஞ் சொல்ல முடியும். ஒனக்கு வெளங்குதுல்லா நா என்ன சொல்ல வாரேன்னு. இப்புடி அப்புடின்னு வரேலயும் போவேலேயும் வெத்துப் பார்வ பாத்துக்கிட்ருந்த பய திடீர்னு எங்கப்பங் குதுர்ல இல்லன்ற கதையா லவ்வு லெட்டர எளுதி அதுக்குள்ளாற கல்ல மடிச்சு எம்மேல வீச அது பக்கத்துல வந்துக்கிட்டிருந்த டீச்சர் மார் கையில கெடச்சி அது ஒரு கூத்தாயிட்டு. பொறகு வூட்ல டீச்சருங்க கோள் சொல்ல படிப்பு அம்புட்டுத்தான். நின்னு போச்சு பாண்டி தயவுல.

பொறவு ஆயி சொல்லு கேட்டு எங்கப்பனும், அம்மையும் நாலு பேர வெசாரிச்சு பாண்டியும் நல்ல புத்தியுள்ள பயதாம். அவங்கப்பா செத்த பின்ன ரயில்வேலய அவனுக்கு வாரிசு மொறைல வேல போட்டுக் கொடுத்து நல்லாக் கை நெறைய சம்பளம் வாங்குதாம். புள்ளய வெச்சுக் காப்பாத்துவான்னு தெரிஞ்சு ஒரு நாளக்கி வூட்டுக்கு வரச் சொல்ல, இந்தப் பூனயும் பாலக் குடிக்குமான்னு ஒரு பார்வ பாத்தாம் பாருடே. அசந்தே போயிட்டேன் அட கள்ளப் பயலேன்னு.

கட்டிக் கொடுத்தாப் போதும். வேறெதும் வேண்டாம்னு பாண்டி கண்டிசனா சொன்ன சொல்லு மாறாம கொல சாமி கோயில்ல வெச்சு தாலி கட்ட குடும்பத்தத் தொடங்குனேஞ் சாமி. கலியாணங் களிஞ்ச நிமிசத்துலயே கெளவி கணக்கா ஓம் பேச்சு மாறிப் போச்சுலாங்கா ஆயிக்காரி. அப்பிடியா மாறும் ஒருத்தி பேச்சு! என்ன எளவோ போ! 

இப்பத்தாம் பொறந்து ஓடி ஆடி வயக்காட்டுல திரிஞ்சு பொறண்டு மரத்துல ஏறிக் குதிச்சு மளைல நனஞ்சு வெயில்ல காஞ்சு ஊர்க்கொடைல ராட்டினத்துல ஏறி, கலர் சருப்பத் குடிச்சு, மலக்கிப் போயி சாமி கும்புட்டு, இஸ்கோலுக்குப் போயி, பயலுவள மெரட்டி, ஆடு மாடு மேச்சு, சேவக்கோளிய தொரத்தின்னு சந்தோசமா இருந்த என்னோட பாதையில இந்தப் பாண்டிப் பய எதுக்குத்தா வந்தானோ தெரியலியே ஆயி! 


ஒரு பக்கம் சந்தோசம் மறு பக்கம் துக்கந் தொண்டைய அடக்கி. கண்ணுல தண்ணி பொங்கி வருது. மாரெல்லாம் அடக்கி. இது என்ன வேதனடா சாமி! என்ன ஏண்டே பொண்ணாப் படச்சேன்னு ஒரு பொண்ணு இப்பத்தாங் கேக்கணும் மக்கா! நேத்து மட்டும் எனக்குத்தா எல்லாந் தெரியும்னு இருந்தேன். பொளுது விடிஞ்சு பாத்தாக்குல, எனக்கு எதுவுந் தெரியாத ஒரு நடுக்காட்டுல நிக்காக்குல நடுங்குதேன். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
காலைல போனாம்னா அதோட சரி. வூட்டுல தெசக்கி ஒண்ணா நாலு நாயி. நாலு பூன. நாயும் பூனையும் ஒண்ணா வளருமான்னு ஆன்னு வாயப் பொளக்கியடே. நானும் பாண்டியும் கட்டிக் குடுத்தனம் பண்ணாமல கொளந்த பெக்காமலா இருந்தோம். ஆனா பொறந்த ரெண்டும் ஒரே வருசத்துல வைசூரி போட்டு போய்ச் சேந்துருச்சுங்க. எனக்கு ரெண்டும் போனதுலருந்து எல்லாமே போனா மாதிரி போயிருச்சு. 

அம்மயும், அப்பனும் ஒரே வாட்டி வந்துட்டு பேயடிச்சாக்குல முளிச்சுதுங்க. 
அவுகள இருங்க சித்த நாளக்கி தொணயாங்கேன். இந்த ஊரு புடிக்கலளா! நீ எப்பிடித்தா இருக்கியோ மக்கா! அவருகிட்ட சொல்லி ஊருப் பக்கமா வந்து சேந்துருலான்னுட்டு போனவஹதான். இந்தப் பக்கமே தல வெச்சிப் படுக்கல. வருசத்துக்கு எப்பவாச்சும் ஒரு கடுதாசு. அத்தோட சரி. இது என்னடா வாள்க்கைன்னு சீயின்னு ஆயிப் போச்சு.

பாண்டிக்கும் புள்ளங்க செத்ததுலருந்து மனசு வுட்டுப் பேசுறது நின்னு போயி எப்பவும் ரயில் ஆப்பீஸே கதீன்னு போயிடுச்சி. எனக்குந்தான் யாருமில்லா இப்புடித் தனீமரமா ஆயிட்டேனேன்னு அளுது தீப்பேன். யாருக்க போயி எங் கொறைய சொல்லி எறக்கி வெக்கன்னு தோணாம நாயிங்களயும், பூனங்களயும் அப்பப்ப கொஞ்சி அதுங்க கத்துதப் பாக்கயில சந்தோசமா இருக்கும். ஊருல பேசுன அதே பேச்சை மாத்தாமப் பேசுதது இந்த நாயும், பூனங்களுந்தான். கொஞ்சங் கொஞ்சமா நாயி பூன மாதிரியே பேசக் கத்துக்கிட்டேன். அதுங்களுக்கு இப்பல்லாம் எல்லா நேரமும் எங்கிட்ட எதாவது கொற சொல்லிக்கிட்டு திரியறதுதாம் பொளுதுபோக்கு. நாயப் பத்திப் பூனங்க. பூனயப் பத்தி நாயிங்க. 

இதப் பாத்துட்டுத்தாம் பாண்டி என்னக் கோட்டீன்னு ஏசுதாம்னு உங்களுக்குப் புரிஞ்சு போச்சோடே! நீயுஞ் சொன்னாச் சொல்லிக்க நல்லாக் கோட்டிக் காரீ! கோட்டிக்குப் பொறந்தவான்னு!  

பாண்டி பாண்டி! இன்னக்கி வாசல்ல சிட்டுக் குருவி வித்துக்கிட்டுப் போனாம்யா ஒரு பயபுள்ள! நாயி பேசுறது வெளங்குது. அந்தக் கூமுட்டை என்ன கேட்டாலும் பூம்பூம் மாடு கணக்கா ஒண்ணையேதாஞ் சொல்லுதா! ஒண்ணூம் வெளங்கல்ல. போங்கடா போக்கத்தவனுங்களான்னு தொரத்தியடிச்சுட்டேம்டே! நீ கண்ணுல கண்டாக்கி அதுங்க ஒரு நால கூண்டுல கட்டி மாட்டுடே. தொணக்கி ஆவும்னு சொன்னதுக்கு, ’மனுசனுக்கு ஆயிரஞ் சோலி கெடக்கியில குருவிக்காரனத் தொரத்திக்கிட்டு அலயுததுதாஞ் சோலின்னு நெனக்கியாடி’ன்னு உருமிக்கிட்டு போய்த் தொலைஞ்சு போனாம் மவராசன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளிய எட்டிப் பாத்து மள கிள வருதா பாருடே பாண்டி கருக்கலுக்கு கல்கத்தாவுக்கு ரயில்ல கூட்டிட்டுப் போறேண்டினு சொல்லிருக்கான். நெசமாட்டும் இன்னும் நமபத்தாம் முடியல. நானும் இங்கன வந்த நாள் தொடக்கம் எங்கேயும் போக வாய்க்கல.

ரயில்ல சாப்புடுதக்கு பணியாரம் முறுக்கு இட்டிலி வட எல்லாம் சுட்டு வெக்கட்டாங்கேன். ம்ம்ம். ஏதாச்சும் செய்யி. அதுக்கொண்டு சட்டி பானயெல்லாம் தூக்க வெச்சுப்புடாதலா. சாப்புடவா ஊரச் சுத்திப் பாக்கவான்னு சிரிச்சுக் கிட்டே சொல்லுதாம் பய. என்னமோ ஆகிப் போச்சு அவனுக்குள்ளாற. பாண்டி எத்தன நாளாச்சிலே நீ சிரிச்சுப் பேசி? பொறந்தது ரெண்டும் போயே போச்சி. அதுக்கு நானும் நீயும் என்னடே செய்ய?ன்னு நெனச்சிக்கிட்டே சட்டி பானயப் போட்டு உருட்டுதேன். பாண்டியும் நா வந்துருதேன் பொழுதுக்கா. இன்னக்கி சாப்பாடு வெக்காத. ஆபீசுல எதோ விசேசம் அங்கயே சாப்பிட்டுக்கிடுதேன்னுட்டு போயிட்டான்.

ஆட்டொரல்ல அரிசியப் போட்டு அரைக்க ஒக்காருதேன். திடீர்னு ஒரு கொரலு அம்மானு. தூக்கி வாரிப் போடுது. இப்புடி ஒரு கொரல இது வரைக்கும் நான் கேட்டதில்ல சாமி. குருத்தெலும்ப ஆட்டுனா மாதிரிக்கி. திரும்பிப் பாக்கேன். ஒன்னுத்தையும் காங்கல. சரி எதாட்டும் பெரமயாட்டு இருக்கும்னு ஆட்டொரல ஆட்டுதேன்.

நம்ப மாட்ட மக்கா. சித்த நேரங் களிச்சு என்ன ஏந்த்தா பொதச்சுட்டுப் போயிட்ட பசியால பாலுக்குத் துடிக்கேனே ஒங் கண்ணுக்குத் தெரியலாங்கு அதே கொரலு. பூனக்கும் நாயுக்கும் ஊத்துத செரட்டையில எனக்கும் கொஞ்சம் ஊத்தக் கூடாதாங்கு கொரலு. 

நான் சொவத்தோட சாஞ்சு ஒக்காந்து கவனிச்சுக் கேக்கேன். எனக்கெதுர பொக மாதிரி ஒரு உருவந் தெரியுது. அது மொகத்த உத்துப் பாக்கைல செத்துப் போன ஆயி போலயுந் தெரியுது. எம் புள்ளங்க மொகமாயுந் தெரியுது. ஏஞ் சீவனே அத்துப் போனது போல நெஞ்ச அடக்கி. மனசுல கெடக்க பாரமெல்லாத்தயும் கொக்கி போட்டு இளுக்கு அந்தக் கொரலு. அம்மா அம்மான்னு கூப்புடுதக்கு இந்தச் சண்டாளிக்கு ஆரு இருக்கா இந்த அநாத மண்ணுலன்னு அப்புடியே போட்டது போட்டது கணக்கா கெடக்க மல்லாந்து மயங்கிக் கெடக்கேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஏதோ ஒடங்காடு கணக்கா ஒரே பொதரு. அதுங்கள இங்கனக்குள்ளாறதான பொதச்சதாச் சொன்னாரு. எங்கன போச்சு நடுகல்லு? யாரப் போயி இதக் கேக்க? ஒரு பன மரத்து மூட்டுல ஒக்காந்து யோசிக்கேன். ஆமா இங்கன எங்கனக்குள்ள பன மூடு? இந்த ஊரப் பாக்கையில நாம் பொறந்த ஊரு கணக்கால இருக்கேடேன்னு மலங்க மலங்கப் பாக்கேன். தெரிஞ்ச மொகம் எதும் கண்ணுல படுதான்னு பாக்க வெள்ளச் சீல உடுத்தியிருக்க ஆயி அன்னா மொனகிக்கிட்டே இங்க என்ன செய்யுதான்னு நெத்தி மேட்டுல கையக் குவிச்சுப் பாக்கேன் கெளவி சுள்ளி பெறக்குதா. அவ தலக்கி மேல ஒரு ஓலக் கூட வெச்சுருக்கா. என்னான்னு எட்டிப் பாக்கேன். எம் புள்ளங்க ரெண்டும் உள்ள படுத்துக் கெடக்கு.

கதவத் தட்டுதாக்குல இருக்கு. யாரா இருக்கும்? நாம் பொதச்சுங்கதாம் பால் கேட்டு வந்துருச்சோன்னு பதக்குனு இருக்கு. சோறு தண்ணி எறங்கல. தலயெல்லாங் கெறங்குது. பைய சொவரப் புடிச்சு எந்திரிச்சுப் போயி தொரக்கேன் கதவ. யாரயுங் காங்கல. எனக்கொண்ணுமே வெளங்கல. ஆட்டொரலச் சுத்தி எறும்புக சார சாரயா மொய்க்குது. எல்லாம் எறும்புங்கதானா இல்ல என் வவுத்துல பொறந்ததுங்களான்னு குனிஞ்சு உத்துப் பாக்கேன். கண்டுபுடிக்கத் தெரியல.

வெளக்கப் பொருத்துதேன். யாராச்சும் ஏதாச்சுங் குடிக்கக் கொடுத்தா நல்லாருக்கும் போல ஒரு ஒடம்பெல்லாம் முறுக்கிப் போட்டாக்குல ஒரு நோவு. இந்தா இதக்குடிங்கா ஆயிக்காரி. மவராசி நல்லா இருப்ப நீன்னு சொல்லிட்டுக் குடிக்கேன் மடக்கு மடக்குன்னு. சோத்துக் கஞ்சி உப்புச் சேத்து நல்ல சூடா குடிக்கத் தோதா இருக்கு. வெஞ்சனம் எதுவுமில்லயா ஆயிங்கேன். புள்ளக் கறிதான் இருக்குங்கா பாதகத்தி. பகீருங்கு. குடிச்ச கஞ்சியெல்லாம் வெளீல வாரது கணக்கா என்ன வார்த்த சொல்லிப்புட்டா? ஓங்கிட்டப் போயி கேட்டேனேன்னு கோபம் பொத்துக்கிட்டு வருது. எடத்தக் காலி பண்ணு கெளவின்னு அவளத் தொரத்தப் பாக்கேன். ஓலக் கூடயத் தூக்கிட்டு அதுக்கு முன்னாடியே கெளம்பிட்டா கெளவி.

பொதச்சு பாலூத்தி மூடி நடுகல்லு நாட்டுன அன்னக்கி இவளும் இங்க வந்திருப்பா போல. தோண்டி எடுத்துக் கூடைல போட்டுக்கிட்டு இப்படி ஊர் ஊர் ஊராத் திரியுதா பாரேன்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பாண்டிக்குப் பக்கத்துல இருக்குத அந்த டாக்டரப் பாத்தா எம்ஜிஆரோட எப்பப் பாத்தாலும் வாள்ச் சண்ட போடுவாம்ல நம்பியாரு அச்சசலு அப்படியே உரிச்சு வெச்சுருக்கான். பக்கத்துல ஒரு பைலருந்து ஏதோ மருந்தெடுக்கான். என்ன உத்துப் பாத்துட்டு பாண்டி கைல கொடுத்து தலைய ஆட்டி ஆட்டி ஏதோ வெளங்காத வெவரஞ் சொல்லுதான். பைக்குள்ளாற எங்கியுங் கத்தி கித்தி வெச்சுருப்பானோ எனக்கொரு சந்தேகம். பையவே உத்துப் பாக்கேன். குனிஞ்சு பைய எடுத்துக் கிட்டுக் கெளம்பிட்டான்.

ஏட்டி ஒன்ன கல்கத்தா போவணுன்னு சொன்னேன்லா. போவோமாங்கான் பாண்டி.

நானும் யோசிச்சுப் பாக்கேன். பக்கத்துல நாயிங்க ரெண்டும் வந்து பாக்குதுங்க. அதுங்க கிட்ட முக்கியமா ஒரு சோலி வந்துருக்கு. போயிட்டு வந்துருதேங்கேன். ரெண்டும் தலைய ஆட்டிட்டுப் போயிட்டு வாங்கு.

வாசல்ல ஏதோ சத்தங் கேக்கு. உள்ளூரு நாவிதப் பய வந்துருக்கான். எதுக்குன்னு கேக்கேம் . ஒனக்கு மொட்ட போடச் சொல்லி அந்த டாக்டரு சொல்லுதான். அப்பத்தான் கல்கத்தா போவ ரயில்ல ஏத்துவாங்கன்னு ஏதோ சம்பந்தமில்லாம ஒளறுதாம் பாண்டி. எனக்கும் மொட்ட போட ரொம்ப ஆசதான். முப்பந்தல்ல முத்தாரம்மங் கோயில்ல காது குத்தி நாஞ் சின்னதா இருக்கும்போது போட்ட மொட்ட நெனப்புக்கு வருது. சந்தனமுந் தடவணுங்கேன். தடவுனாப் போச்சுங்கான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ரயிலு இந்த ஊருல வேற மாதிரியா இருக்கு. இதுல போறவங்களும் வேற சனங்களாட்டுத்தான் இருக்காங்க. டடக் டடக்குனு அது பேசுற பாச மட்டும் எனக்கு மட்டும் புரியுது. நாயி பூனங்க குருவிங்க பேசுற மாதிரி. நம்பூருல போர ரயிலு இங்க வராதா பாண்டிங்கேன். அதெல்லாம் வராது. பேசாட்டு வாங்கான். நானும் மெல்லக் கண்ண மூடுதேன். என்னென்னமோ சத்தங் கேக்குது. தலைக்குப் பூ வெச்சேனாங்கா மாதிரி பின்னந்தலயத் தொட்டுப் பாக்கேன் மொட்ட போட்டது மறந்து போயி. சிரிச்சுக்கிடுதேன். தலமுடி பறக்காம தூங்குததுக்கு நல்லா சொகமா இருக்கு. பாண்டியப் பாத்து யாரோ சலூட் அடிக்காங்க. அவனும் பதிலுக்கு சலூட் வெக்கான்.

எப்பத் தூங்குனேன்னு தெரியல. எப்ப எறங்குனேன்னு புரியல. ஏதோ ஊரு மாதிரி இருக்கி. ரயிலயுங் காணும். பாண்டியயுங் காணும். ஊரு பேரு என்னான்னு படிக்கேன். நக்சல்பாரின்னு எளுதிருக்கு.  


தல வலிக்கு. பசி எடுக்கு. பாண்டி எங்கடே போன? எப்படே வருவ?

(தொடரும்)

24.10.12

வெ.சாமிநாத சர்மாவைத் தெரிந்தவர்கள் கை தூக்கவும்



போன நூற்றாண்டின் பேரறிஞர்களில் ஒருவர் வெ.சாமிநாத சர்மா. சிறுகதை, நாவல், கவிதை இந்த மாதிரியான விஷயங்களில் மௌஸை ஓட்டுபவர்கள் அநேகர். கட்டுரைகள், விமர்சனம் என்பது அவர்களுக்கு எட்டிக்காய்.

இப்படிப்பட்ட பாரம்பர்யமான சூழலில் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு துறையில் ஒரு சாதனையாளர் வந்தால் பெரிதென்று நினைக்கத் தோன்றுகிறது. அந்தத் தளத்தில் வரலாறு, அரசியல் என்றால் வெறுமனே நம் நாட்டோடு நின்று விடாமல் உலக அளவில் பரந்த வாசிப்பும், வாசிப்புக்குச் சளைக்காத அனுபவமும் கொண்ட அறிஞர் வெ.சாமிநாத சர்மா. 

வரலாறையும், வரலாற்றுச் சாதனையாளர்களையும் இவர் அளவுக்கு வாசித்தவர்களோ, அறிமுகப் படுத்தியவர்களோ என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் வேறு யாரும் தெரியவில்லை. ப்ளேட்டோவையும், ரூஸோவையும், ஹிட்லரையும், கார்ல் மார்க்ஸையும், மாஜினியையும், ஸன்யாட் ஸென்னையும் இங்கர்சாலையும் நமக்குத் தமிழில் காட்டியவர் இவர்தான். ராமக்ருஷ்ணர், ரமண மகரிஷி, விவேகானந்தர், திலகர், காந்தியடிகள்,  நேரு, திரு.வி.க., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, பாரதியார் ஆகியவர்களைப் பற்றி இவர் எழுதியுள்ள வரலாற்றுச் செய்திகளுக்கு நாம் மிகவும் கடன் பட்டிருக்கிறோம். 

வலையின் உதவி இல்லாமல் திமிங்கிலங்களைக் கரை சேர்த்த கடின உழைப்பு இவருடையது. தமிழின் அரிய சுவடிகளைக் கரை சேர்த்த பெருமையை உ.வே.சா. தட்டிச் செல்வார் என்றால் வரலாற்றின் கரையான் அரித்துக்கொண்டிருந்த பக்கங்களைத் தமிழுக்குக் கொண்டு தந்தவர் சர்மா. 

அவர் வாழ்ந்த 83 ஆண்டுகளில் 70க்கும் அதிகமான புத்தகங்களை எழுதித் தள்ளினார். 

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86._%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D 


தேசியவாதியாகவும். காந்தியவாதியாகவும் எளிமையாய் இறுதி வரை வாழ்ந்த சர்மா, தேசபக்தன், நவசக்தி, ஜோதி மற்றும் சில சஞ்சிகைகள் மூலமாகப் புகழ் பெற்ற பத்திரிகையாளராகவும் வாழ்ந்தாலும் அவர் காலத்தைக் கடந்து முன்னால் வாழ்ந்தவர் என்பதே நிஜம்.  

ஒரு தலைமுறை முழுவதுமே இவர் மூலம் வரலாற்றின் பக்கங்களைக் கற்றுக் கொண்டது. இன்னும் சில கலைஞர்களோ இவர் எழுத்துக்களின் மூலமே தங்கள் பாணி எழுத்துக்களை உருவாக்கி அரசியலிலும் அதை லாபகரமான செலாவணியாக்கிக் கொழித்துவிட்டு சர்மாவைப் பற்றி மூச்சு விடாமல் இருக்கும் வடிகட்டிய சந்தர்ப்பவாதத்துக்கு நடுவில்  கண்ணதாசன் மட்டும் வாக்குமூலம் கொடுக்கிறார்.


”உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவில் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே.” 

ப்ரகாஷின் அறிமுகத்தால் அவரின் “ எனது பர்மா வழிநடைப் பயணத்தை” என் 21 வயதில் வாசிக்க நேர்ந்தது என் கொடுப்பினை. வாசிக்க ஆரம்பித்த முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை என்னைக் கட்டிப் போட்டதுடன், என் வாசிப்பு உலகத்தையே அது புரட்டிப் போட்டது.  அமுதசுரபியில் தொடராக வெளிவந்த ”எனது பர்மா வழி நடைப் பயணம்” அவரது மரணத்துக்குப் பிறகே புத்தக வடிவம் பெற்றது.

 (மற்றொரு மறக்க முடியாத அனுபவம் ப.சிங்காரமும்- அவர் எழுதிய "புயலிலே ஒரு தோணி"யும்.  நானும் ப்ரகாஷும் அவரை மதுரையில் நேரில் சந்தித்ததைத் தனியே ஒரு பதிவில் எழுதுவேன்)  

செப்டம்பர் 17, 1895ம் ஆண்டு வட ஆற்காடு, செய்யாறு தாலுகாவில் உள்ள வெங்களத்தூர் என்னும் கிராமத்தில் பிறந்த சர்மா, 1978ம் ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி மரணடைந்தார்.

தன்னுடைய 66ஆம் பிறந்த நாளின் போது அவர் சொன்ன வார்த்தைகள் இவை: “வாழ்க்கைப் பாதையில் 65 ஆண்டுகளைக் கடந்து விட்டேன். என்ன சாதித்து விட்டேன்? அதைச் சொல்ல எனக்குச் சந்ததி இல்லை. ஆனால் வருங்காலத் தமிழ் உலகம் ஏதாவது சொல்லும் என்று நினைக்கிறேன்” 

வருங்காலத் தமிழகம் என்ன சொன்னதென்றும் தெரிகிறது. சொல்லவில்லை என்றும் தெரிகிறது.ஆனால் காலம் பத்திரமாக அவரின் வியர்வையில் பூத்த மலர்களைக் கைகளுக்குள் பொதிந்து நீண்ட காலத்துக்கு வாடாமல் எடுத்துச் செல்லும். 

என்னவெல்லாம் வாசிக்கலாம் என்று என்னைக் கேட்டால், அந்தப் பட்டியலில் வெ.சாமிநாத சர்மாவின் பெயருக்கு நிச்சயம் மரியாதைக்குரிய இடம் இருக்கும். சர்மாவை வாசிக்காமல் ஒருவரின் வாசிப்பை முழுமையானதாகக் கருத முடியாது. இது வெறும் புகழ்ச்சியில்லை.

அடுத்த சில இடுகைகளில் அவரின் “ வரலாறு கண்ட கடிதங்கள்” நூலில் இருந்து சில மறக்க முடியாத கடிதங்கள். சிறிய இடைவெளிகளுடன்.   

(சரி. கையைக் கீழே போடவும்)

21.10.12

தொலைந்த செங்கல் - பாவ்லோ கோயெலோ - 6 -


ஒரு தடவை நானும், என் மனைவியும் பயணித்துக் கொண்டிருந்தபோது, என் காரியதரிசியிடமிருந்து ஒரு ஃபேக்ஸ் வந்தது.

“ சமையலறையைப் புதுப்பிக்கத் தேவையான ஒரு கண்ணாடி செங்கலைக் காணவில்லை. ஏற்கெனவே வரையப்பட்ட வரைபடத்துடன், இதைச் சரிக்கட்ட  பொறியாளர் வரைந்து தந்த இன்னொரு மாற்று வரைபடத்தையும் இணைத்திருக்கிறேன்” என்று தெரிவித்தாள்.

ஒரு புறம், காற்றோட்டத்தையும், செங்கற்களின் வடிவ அழகையும் ப்ரதானமாகக் கொண்டு என் மனைவி வடிவமைத்த திட்டம்; மற்றொரு புறம், காணாமல் போன ஒரு செங்கல்லால் உண்டான சிக்கலை மட்டும் மனதில் கொண்டு அழகுணர்ச்சியை அக்கு வேறு ஆணி வேறாக விசிறியடித்து ஜிக்-ஸா புதிருக்கான சதுரங்களைக் கொண்டதைப் போல் வரையப்பட்ட திட்டம்.

“ இன்னொரு செங்கல் வாங்கிக் கொள்” என்று பதிலெழுதினாள் என் மனைவி. அப்படி வாங்கியதால், முதலில் போட்ட திட்டப்படியே வேலை தொடர்ந்தது.

அன்று மதியம், நடந்து முடிந்ததை எல்லாம் நெடுநேரம் சிந்தித்தபடி இருந்தேன்.

இதுபோல எத்தனை தடவைகள், இல்லாது போன ஒரு செங்கல்லுக்காக, நம் வாழ்வின் மூல வடிவத்தை முழுதுமாக நாம் சிதைத்திருக்கிறோம்?

20.10.12

விவேகபோதினி விளம்பரங்கள்.

இவை கிட்டத்தட்ட நூறு வருஷங்களுக்கு முன்னால் தினசரிகளில் வெளியான விளம்பரங்களின் உதாரணங்கள். அநேகமாக ஒரு மரத்தடியில் பெட்றோமக்ஸ் விளக்கு வெளிச்சத்தில் உடும்புத் தைலமும், சிட்டுக்குருவி லேகியமும் விற்றிருக்கிறார்கள்.

இவற்றில் சில முழுப் பக்க விளம்பரங்கள். ஒவ்வொரு விளம்பரமும், அதில் மக்களைக் கவர எழுதப்பட்ட வாசகங்களும் வேடிக்கையாய் இருக்கின்றன.
பொய்யின் கலப்பு அளவுக்கு அதிகமாய் இருந்தாலும், நிச்சயம் இத்தனை ஸ்வாரஸ்யமான விளம்பரங்கள் இப்போது வருவதில்லைதான். அத்தனையும் பொக்கிஷங்கள்.
விவேகபோதினியில் வெளிவந்திருந்த இந்த விளம்பரங்கள் பற்றி பாரதியார் தான் வாழ்ந்த சமகாலத்தில் என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை. அதைப் பற்றி அவர் எதுவும் எழுதவில்லை.

ஆனால் இப்படியொரு பித்தலாட்ட வாசகங்கள் எழுதப்பட்ட ஒரு பக்கத்தைப் பார்த்த பின்புதான்  “ ஐயோ! இவ்வளவு காயிதத்தில் எத்தனையோ ஆச்சர்யங்களும், எத்தனையோ சந்தோஷங்களும் எழுதலாமே”- என்ற அவரின் மிகப் ப்ரபலமான வரியை எழுதியிருப்பார் என நினைக்க வைக்கின்றன இவ் விளம்பரங்கள்.
இவை மோசமாய் எழுதப்பட்டிருக்கின்றனவோ இல்லையோ, மிக மோசமாய்ச் சிரிக்கவைக்கின்றன.

கடந்த காலத்தின் விளம்பர வாசகங்களின் தொனியிலிருந்து நாம் வெகு தொலைவுக்கு வந்துவிட்டோமா, இல்லையா என்பதை 2140ல் வேறு யாராவது சொல்லட்டும்.

பின் குறிப்பு: விளம்பர வாஸகங்களிலே யாதொரு சந்தேகமுமிருந்தால் எம்மிடம் நிவர்த்தி பண்ணிக் கொள்ளத் தவறாதேயுங்கள். ஜவாபு கியாரண்டி.























19.10.12

‘ரமண மகரிஷி’ க்குப் பெயர் சூட்டியவர்.

 காவ்ய கண்ட வாசிஷ்ட கணபதி முனிவர்.
ரமண மகரிஷியால் ’நாயனா’ என்றழைக்கப்பட்ட, ரமணரின் ப்ரதம சீடர். ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் ஜில்லாவில் நந்தபலகா கிராமத்தின் பக்கத்தில் கலுவராயி என்கிற ஊரில் 1878ல் பிறந்து, சமஸ்க்ருத மொழியின் இருபதாம் நூற்றாண்டின் மிகப் பெரிய மேதையாக விளங்கினார்.

பத்து வயதுக்குள் சமஸ்க்ருத காவியங்களையும், கணக்கியலையும், வானவியலையும் கற்றுத் தேர்ந்தார். கோள்களின் சஞ்சாரத்தையும், பலன்களையும் துல்லியமாகக் கணக்கிட்டார். ஜோதிடக் கலையில் ஒரு பெரும் பண்டிதரானார்.

தன் பத்து வயதில், ஒரு மணி நேரத்துக்குள் 34 ஸ்லோகங்கள் கொண்ட “பாண்டவ த்ருதிராஷ்ட்ர சம்பவம்” என்ற சிறு காவியத்தை சமஸ்க்ருதத்தில் எழுதி எல்லோரையும் வியக்க வைத்தார்.

இந்தியாவின் பல பகுதிகளுக்கும் பயணம் செய்து அளவிட முடியாத மொழித் தொண்டும், ஆன்மிகத் தொண்டும் ஆற்றினார். தன் ஆன்ம குருவைத் தேடியலைந்த கணபதி முனி, 18.11.1907 அன்று திருவண்ணாமலையை வந்து சேர்ந்து, விரூபாக்ஷ குகையில் ரமணரைக் கண்ட நொடியில் அவர் பாதங்களில் விழுந்து உண்மயான தவம் என்னவென்று போதிக்கக் கேட்டுக்கொண்டார்.

அப்போது ப்ராம்மண ஸ்வாமி என்றறியப் பட்ட ரமணர், சற்று நேரம் அமைதியுடன் இருந்தார். பின் கணபதி முனியைப் பார்த்து மெல்லப் பேசினார்.

“ நான் நான் என்பது எங்கேயிருந்து புறப்படுகிறதோ அதைக் கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்.

ஒரு மந்திரத்தை ஜபம் பண்ணினால் அந்த மந்திரத்வனி எங்கேயிருந்து புறப்படுகிறது என்று கவனித்தால் மனம் அங்கே ஸீனமாகும். அதுவே தபஸ்”

இந்த போதனையால் தன் குருவையடைந்த கணபதி முனி, அவருக்கருகே இருக்க அனுமதிக்குமாறு கேட்க, ரமணரும் விரூபாக்ஷி குகையில் அமர்ந்து தவம் புரிய அனுமதித்தார்.

ப்ராம்மண ஸ்வாமியின் பூர்வாசிரமப் பெயர் ‘வேங்கடராமன்’ என்றறிந்த கணபதி முனி, அதைச் சுருக்கி, ரமணர் என்ற பெயர் அமையுமாறு ”பகவான் ரமண மஹரிஷி” என்று அழைப்பதென முடிவெடுத்து, மற்றவர்களிடமும் கூறினார். உடனே தன் குருவினைப் புகழ்ந்து, ஐந்து சமஸ்க்ருத ஸ்லோகங்களை எழுதி ரமணரிடம் கொடுக்க, ரமணரும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.
அதேபோல ரமணரும், கணபதி முனியை “நாயனா” என்றழைக்க ஆரம்பித்தார். அதுவே கணபதி முனியின் பெயராக நிலைத்து விட்டது.

ஸ்ரீ அரவிந்தரின் “ஜனனி”க்கு நாயனா எழுதிய முன்னுரையைப் பற்றி ’அது மூலத்தை மிஞ்சி விட்டது’ என்று குறிப்பிடுகிறார் அரவிந்தர். நாயனாவின் உமாசஹஸ்ரத்தைப் படித்த ஸ்ரீ அரவிந்தர் அதை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட அரிய செயல் எனப் புகழ்ந்து, நாயனாவைச் சந்திக்கும் தன் ஆவலை வெளியிட்டார்.

ஸ்ரீ அரவிந்தரின் ஆச்ரமத்திலிருந்து சுதன்வா திருவண்ணாமலைக்கு வந்து நாயனாவை பாண்டிச்சேரிக்கு அழைத்துச் சென்றார். அரவிந்தரும் நாயனாவும் சந்தித்தார்கள். அன்னையும் தன்னுடன் தியானம் செய்ய நாயனாவை அழைத்தார். கணபதி முனிவர் சுமார் ஒரு மாதம் ஆச்ரமத்தில் ஸ்ரீ அரவிந்தருடன் தங்கினார்.

தீண்டாமைக்கு எதிரான அவரின் துணிச்சலான கருத்துக்களை ஆதரித்த தமிழக காங்கிரஸ் கட்சி, தமிழகக் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகி அவரின் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ள அதற்கு நாயனா சம்மதித்து 1923ல் உறுப்பினர் ஆனார்.

பெல்காமில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பேசிய நாயனாவின் பேச்சை காந்தி, மதன்மோஹன் மாளவியா மற்றும் அன்னிபெஸண்ட் ஆகியவர்கள் மிகவும் பாராட்டினார்கள்.

தான் சந்திக்க விரும்பும் காஞ்சி பரமாச்சார்யர் தன்னைச் சந்திக்க ஒப்புவாரா என்ற தயக்கம் நாயனாவுக்கு இருந்தது. ஆனால் அவரை சந்திக்க அழைத்த காஞ்சிப் பெரியவர் கரக்பூரில் கணபதி முனியுடன் சுமார் 50 நிமிடங்கள் சம்ஸ்க்ருதத்தில் உரையாடினார். அவருடன் உரையாடியதில் மகிழ்ந்த பெரியவர், விலைமதிப்பு மிக்க தங்க ஜரிகைகளால் மின்னிய பொன்னாடையால் நாயனாவை கௌரவித்தார்.

நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாக்ருஷ்ணன் ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தபோது தன் வீட்டில் தங்கி, மாணவர்களிடையே சொற்பொழிவாற்ற நாயனாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்தியக் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டிய இப்படிப் பட்ட வ்யக்திகள் நூலாம்படை பிடித்து ஒரு மூலையில் கிடக்க, வழக்கம்போல் வெற்றுவேட்டுக்களின் ஆரவாரம்தான் பலமாக இருக்கிறது. கணபதி முனியின் வாழ்க்கையோ, அவரின் படைப்புக்களோ, கருத்துக்களோ அதிகம் எழுதப்படவோ பேசப்படவோ இல்லை.

அவர் எழுதிய ஏராளமான நூல்கள், அவரின் ஆன்மீக அமானுஷ்ய அனுபவங்கள், அவரின் சீர்திருத்த சிந்தனைகள், ரமண மகரிஷிக்கு அவர் எழுதிய கடிதங்கள், ”கால ஞான விசாரம்” என்று ஒவ்வொரு யுகங்களின் கணக்கையும் கணித்து அவர் 1930ல் நிகழ்த்திய மிக முக்கியமான சம்ஸ்க்ருத உரையை ரமண மகரிஷி மொழிபெயர்த்தது, நாயனாவின் வாழ்க்கையில் ஏற்பட்ட அதிசயமான சம்பவங்கள், நாயனாவின் அகால மரணம், அதை முன்கூட்டியே அறிந்தது என்று நாயனா குறித்து எழுத இன்னும் நிறைய இருக்கிறது. இன்னொரு இடுகையில் அவற்றை எழுத நினைத்திருக்கிறேன்.

”காவ்ய கண்ட கணபதி முனிவர்” என்ற தலைப்பில் ஸ்ரீரமணாச்ரமம் வெளியிட்டிருக்கும் நூல் அற்புதமான பல தகவல்கள் நிரம்பிய ஒரு புதையல்.  தவற விடாதீர்கள்.

18.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 7 - இசைக்கவி ரமணன்


மனமென்னும் குகை வாயில். அதன் இருட்டுக்கும், வாசல் வெளிச்சத்துக்கும் நடுவே அமர்ந்திருக்கிறான் மனிதன். விட்டத்தில் பிரும்மாண்டமான தேனடை. கருத்த தேனீக்களின் பெருத்த சுருதி. ஒற்றுமை, ஒரேயொரு ராட்சதத் தேனீ மட்டும் பாடுவது போல் தொனிக்கிறது.

குகையின் தண்மை, பாதுகாப்பு, மௌனம் இவற்றுக்கு மெருகூட்டுவது போல்தான் ஒலிக்கிறது சுருதி. உறக்கம், விழிப்பு இவற்றின் மத்தியிலே உள்ளவொரு மர்மமான, இடைஞ்சலான தறுவாயில்தான் இருக்கிறான்.

உள்ளே ஆயிரமாயிரம் தேனீக்களாலும் கலையாத மௌனம். வெளியே ஆரவாரத்தின் தாழ்வாரம். ஒரு விபத்தைப் போல், புலன்கள் வழியே புறத்தே சிதறுகிறான்.... ம்..ம்... தேனடையில் கல்லெறிந்த பின்னே திசைகளை வசைபாடி என்ன பயன்?

லயம் கலைந்து, விழுங்கத் தயாராயிருக்கும் புறவொலிகளைக் கருத்தின்றிக் காண்கின்றேன். வந்துவிட்டது கௌரிகுண்டம். கந்தக (வெந்நீர்) ஊற்று; சற்று அதில் உட்கார்ந்து எழுந்திருந்தால், பாட்டி சொல்வது போல், உடம்பு சொடக்கு விட்டாற் போலிருக்கும். கௌரிதேவிக்கு ஒரு சின்னக் கோவிலிருக்கிறது. இங்கிருந்து கேதார் 14 கி.மீ. படிப்படியாக உயர்ந்து 12,000 அடி உயரத்தைத் தாண்டும் மலைப்பாதை.

ஏராளமான குதிரைகள்; அவை கோவேறு கழுதைகளே! சென்று வர, ரூ.700 - 900. ‘டோலி’ அல்லது ‘டண்டி’ எனப்படும் சின்னப் பல்லக்கு. நாலு பேர் சுமந்து செல்வார்கள், உயிரோடு! ரூ.2000 - 2700. குதிரையில் ஏறினால் முதுகு, பிருஷ்டம், கால்கள் இவையெல்லாம் மாநில சுயாட்சி பெற்றுவிடும்! ‘டோலி’ முதுமக்கள் தாழியில் சிறப்புக் குலுக்கல் நடைபெற்றது போல், எலும்புப் பொட்டலமாகத் திரும்பி வரலாம்! இதைவிட வானப்ரஸ்தமே மேலென்று சில தைரியசாலிகள் நடக்கத் துவங்கி விடுகிறார்கள்.

கழுதை ஏறினான் கோ! இனி ஒட்டகம், ஆனை, நெருப்புக் கோழி எதில் வேண்டுமானாலும் சவாரி செய்யமுடியும் என்கிற ஞானம் இரண்டொரு நிமிடங்களிலேயே சத்தித்து விடுகிறது!

பாதையைச் செப்பனிடுகிறோம் என்று பாளம் பாளமாகக் கருங்கல் போட்டிருக்கிறார்கள். அதிலே ஏறியிறங்கப் படாத பாடு படுகிறது குதிரை. திடீரென்று அதன் முன்னங்கால்கள் வழுக்க, நமக்கு இதயம் தொண்டையில் வர....சாமி ஏன் சவுகரியமான இடத்தில் இருக்கக் கூடாது என்று தோன்றுகிறது!

மூன்று குதிரைகளுக்கு இரண்டு பயல்கள். குதிரையைப் பிடித்தபடி, பொருட்களைக் கவனித்தபடி, நம்மையும் பார்த்துக்கொண்டு, இந்தக் கடுமையான பாதையில் ஏறியிறங்க வேண்டும். வெகுளி மனம்; வெள்ளைச் சிரிப்பு; பரம ஏழ்மை.

இமயத்தின் பல பகுதிகளிலும் இதேபோல், மலைவாழ் மக்கள் வறுமையில்தான் இருக்கிறார்கள். குதிரைக்காரன் பயல்களுக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தால் அதிகம். அதுவும் ஆறு மாதங்கள்தான். குளிர்காலத்தில் கோயில் அடைக்கப்படுகிறது.

எந்த அரசாங்கமும் இவர்களைக் கவனிப்பதில்லை. உள்நாட்டிலோ பத்தாயிரம் கோடி, இருபதாயிரம் கோடி என்று ‘ஏழைகளை மேம்படுத்தும்’ திட்டங்கள்!! கொள்ளைகள்! மலைவாழ் மக்களோ வறுமைப் பள்ளத்தாக்கில். இப்படிச் செய்துதான், வடகிழக்கு போயே போய்விட்டது. இந்தப் பகுதியும்....ஐயோ நினைத்தாலே மனம் நடுங்குகின்றது.

நமக்குப் பலவகையான உணவு; இவர்களோ இரண்டு ரொட்டி கிடைத்தால் போதுமென்கிறார்கள். உடுக்கப் பலவிதமான உடைகள் நமக்கு; இவர்களோ உடுத்ததைக் கழற்றியதே இல்லையோ என்னும்படித் தோற்றமளிக்கின்றனர். நமக்கு இருக்க அழகான இல்லம்; இவர்கள் இருப்பதோ குப்பைக் கொட்டாய். சுகங்களில், எதைத் தேர்ந்தெடுப்பது என்பது நம் பிரச்சினை. அவர்களுக்கோ வாழ்க்கையே ஒரு பிரச்சினைக் களஞ்சியம். இவர்களிடம் போய்ப் பேரம் பேசும் நம்மவர்களைப் பார்க்கும்போது குமட்டிக்கொண்டு வருகிறது......

குதிரைச் சவாரியில் வலியே மேலென்று தோன்றவைக்கும் சில விபரீதங்கள் உள்ளன என்பதை விழி பிதுங்கப் புரிந்துகொண்டேன்! மூன்று குதிரைகள் என்றேனா? அவற்றில் இரண்டு ஜோடி; ஒன்று இடைச் செருகல். தன் காதலன் அல்லது காதலி கூட வராது அடுத்த அடியை எடுத்து வைக்காது ஜோடி! அது வந்து சேர்ந்தவுடன் முகர்தல், முத்தமிடல், சிரிப்பு இவையெல்லாம் நடந்து முடியக் கொஞ்ச நேரமாகும். எவனும் அசைக்க முடியாது. பயல், அவற்றோடு மன்றாடிக் கொண்டிருப்பான்.

இதைக் கண்ணுற்ற மூன்றாம் குதிரை, மனமுடைந்து ஆறடி அகல மலைப்பாதையின் விளிம்புக்குச் சென்று, கீழே 4000 அடிப் பள்ளத்தில் ஓடும் நதியில் விழுந்துவிடலாமா என்று யோசித்தபடி குனியும். ஐயன்மீர்! எப்போதும் நான்தான் அந்த மூன்றாம் கழுதைக் கோ!

ஆஹா! எல்லா வேதாந்த சித்தாந்த ஞானமும் நொடிப்பொழுதில் விடைபெற்றுக்கொண்டு பறக்க, இதுவரை இல்லாத பக்தியுடன் கேதாரநாதரைத் துதித்தபடி நான் உறைந்துபோக, சற்றும் பதறாமல் சிரித்தபடி வந்து மெல்ல இழுத்துச் செல்கிறான் எழுதப் படிக்கத் தெரியாத ஏழைச் சிறுவன்...

ராம்பாடா கிராமம் வந்துவிட்டது. சரியாகப் பாதித் தொலைவில் இருக்கிறது. இங்குதான் நாம் களைப்பாறுகிறோம்; குதிரைகள் கட்டுப்புல் தின்று நீரருந்திச் சேணமின்றி இளைப்பாறுகின்றன. பயல்களெல்லாம் விரிந்த விழிகளோடு அண்டப் புளுகுக் கதைகளைச் சொல்லியபடியே தேனீர் அருந்திக் கொள்வார்கள். அடுத்த ‘ரீலை’ அளந்து விடத் துடிக்கிறான் அடுத்தவன்!

(அடுத்த பகுதியுடன் நிறைகிறது)

17.10.12

என்னோடு நீந்த வாங்க!

போன வாரம் சதுரகிரிக்குப் பயணப்பட்டேன். ப்ளாக்கின் அமைதிக்குக் காரணம் இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள். ஒருவேளை அந்தப் பயண அனுபவத்தை எழுத நேரிடலாம். 

ரயிலில் இரவு முழுவதும் இரு புஸ்தகங்களைப் படித்துக்கொண்டிருந்தேன். 1.நாலடியார் 2. வெ. சாமிநாத சர்மா எழுதிய “வரலாறு கண்ட கடிதங்கள்”. 

நாலடியாரைப் பாடமாகப் படித்தபோதும், வேண்டா வெறுப்பாக என் முப்பதுகளில் படித்தபோதும் உணராத பல விஷயங்கள் இப்போது கண்ணில் படுவதை என்ன சொல்ல? என் நண்பன் செல்லத்துரையுடன் பகிர்ந்துகொண்டே வந்தேன்.

பதிணெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளுக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கும் மிக முக்கியமான ஒரு தொகுப்பு நாலடியார். நாலடிக்கு மிகாத பாட்டுக்களை உடைய நூல்கள் எல்லாம் கீழ்க்கணக்கில் வந்துவிடும். பெயர் தெரியாத சமணத் துறவிகளால் நாற்பது அதிகாரமும், அதிகாரத்துக்கு நாற்பது வெண்பாக்களும் என மொத்தம் நானூறு வெண்பாக்கள். மொத்தமும் ரத்னங்கள்.

பதுமனார் என்ற புலவரால் கி.பி.250ஐ ஒட்டிய களப்பிரர்களின் காலத்தில் தொகுக்கப்பட்டது. அறத்துப் பாலில் 13 அதிகாரங்களில் 130 பாட்டுக்கள். பொருட்பாலில் 24 அதிகாரங்களில் 240 பாட்டுக்கள். காமத்துப்பாலில் 3 அதிகாரங்களில் 30 பாட்டுக்கள் என்று பெயர் தெரியாத நானூறு தனித்தனிப் புலவர்களால் எழுதப்பட்டிருந்தாலும், அதன் தொனி ஒன்றாகவே இருப்பது சிறப்பு.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழமொழியில் நாலின் இடம் நாலடியாருக்கு வழங்கப்பட்டிருப்பதில் இருந்து திருக்குறளுக்குச் சமமான இதன் மேன்மை புரியும்.

பொதுவான என் குணம் பின்னாலிருந்து கவிதைகளை வாசிப்பது. ஆக முதலில் வருவது காமத்துப்பாலில் என்னைக் கவர்ந்த ஐந்து சுவாரஸ்யங்கள். பஞ்ச ரத்னங்கள்.

பாடல் :1.

அங்கோட்டு அகல் அல்குல் ஆயிழையாள் நம்மோடு
செங்கோடு பாய்துமே என்றாள்மன் - செங்கோட்டின்
மேற்காணம் இன்மையான் மேவாது ஒழிந்தாளே
காற்கால்நோய் காட்டிக் கலுழ்ந்து.                                      ( நாலடியார் - 372 )

என்ன சொல்கிறார் கவிஞர்?

பொருள்:

”அழகிய அல்குல்லை உடைய பொதுமகள் ஒருத்தி, என்னிடம் செல்வம் மிகுதியாய் இருந்தபோது, அன்பால் ஒன்றுபட்டு ஒரு கணமும் என்னைப் பிரிய விரும்பாதவள் போல, அவசியமானால் ‘நாம் மலைமீதேறிக் குதிப்போம்’ என்றாள். செல்வம் எல்லாம் வற்றிப்போன பின், காலில் வாதநோய் வந்துவிட்டது என்றழுது நடித்து, என்னுடன் மலையுச்சிக்கு வாராமல் விலகிச் சென்றாள்.”

மலையுச்சிக்கு வா என்று நினைவாக பொதுமகளை வந்து கூப்பிட்ட எள்ளல் எத்தனை சுவை?

பாடல் :2. 

கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான் - ஒருங்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்.                                                        ( நாலடியார் - 387 )

பொருள்:

”ஒரு கிராமத்தான் ருசியில் தாழ்ந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் வேறுபாடின்றி காசுக்கு ஆறு மரக்கால் என்று வாங்கிக் கொண்டானாம். 

அது போல, முழுதும் என்னோடு ஒத்துவராத, அழகிய நெற்றியை உடைய பொதுமகளை அனுபவித்த மலை போன்ற மார்பை உடைய கணவன் குளிக்காமல் என்னையும் அனுபவிக்க வருகிறான்.”

இந்தப் பாட்டு எழுதப்பட்ட காலத்தின் கண்ணாடி.

அவன் பொதுமகளை அனுபவித்துவிட்டுத் தன்னிடம் குளிக்காமல் சேர வருகிறான் என்றெழுதும் தலைவியின் மனம் வெகு ஆச்சர்யமானது. கணவனின் அகத்தூய்மையில் (ஒருவேளை திருந்தாத பூட்ட கேஸ்?) கோபம் கொண்டு புகார் அளிக்காமல், அவனின் புறத்தூய்மை பற்றி மட்டும் அலுத்துக்கொள்ளும் தொனி கொண்ட இந்தப் பாடல் கவிஞரின் டிலைட். ’தோய’ என்ற கிளர்ச்சியூட்டும் வார்த்தைப் ப்ரயோகம் கொண்ட இந்தப் பாடல் என் ஃபேவரிட்.

பாடல் :3.

எஞ்ஞான்றும் எம்கணவர் எம்தோள்மேல் சேர்ந்தெழினும்
அஞ்ஞான்று கண்டேம்போல் நாணுதுமால் - எஞ்ஞான்றும்
என்னை கெழீஇயினர் கொல்லோ பொருள்நசையால்
பன்மார்பு சேர்ந்தொழுகு வார்.                                            ( நாலடியார் - 385 )

பொருள்:

”நாள்தோறும் எம் கணவர் எம் தோளைத் தழுவிச் சேர்ந்தாலும், முதல்நாள் நாணம் அடைந்ததைப் போலவே இன்றும் நாணம் அடைகிறோம். ஆனால் பொருளுக்காகப் பலருடைய மார்புகளையும் தழுவிக் கொள்ளும் பொது மகளிர் எப்படித்தான் நாணம் இன்றித் தழுவிக் கொள்கிறார்களோ?” 

தனி மகளிரின் நாணம் குறித்தும், பொது மகளிரின் நாணமின்மை குறித்தும் வியப்படையும், பெண் மனம் சொல்லும் இந்தப் பாடலிலும் காலம் வெளிப்பட்டிருக்கிறது.

பாடல்: 4

சாய்ப்பறிக்க நீர்திகழும் தண் வயலூரன்மீது
ஈப்பறக்க நொந்தேனும் யானேமன் - தீப்பறக்கத்
தாக்கி முலைபொருத தண்சாந்து அணியகலம்
நோக்கி இருந்தேனும் யான்.                                   ( நாலடியார் - 389 )

கோரைப் புற்களைப் பறித்த இடத்தில் நீர் சுரக்கும் குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த ஊர்க்காரனான என் தலைவன் மீது முன்பொரு நாள் ஈ பறந்தாலும் அதைப் பார்த்து வருத்தப்பட்டவளும் நான்தான்.

இப்போது, தீப்பொறி பறக்க பொதுமகளிரின் முலைகள் மோதுவதால் என் தலைவனின் மார்பில் பூசப்பட்ட சந்தனம் கலைந்ததைப் பொறுமையோடு பார்த்துக்கொண்டிருப்பவளும் நான்தான்.

இந்தப் பாடல் திருவிளையாடலில் நாகேஷ் சொல்லும் ’ஓஹோ! அப்டீன்னா இங்கே எல்லாமும் நீர் ஒருவர்தானா?’ என்ற வசனம் நினைவுக்கு வருகிறது. பொதுமகளிருடன் தன் கணவன் கூடுவதைக் ஒரு கவிதையில் பொருத்திப் பார்க்கும் இந்தப் பொறுமை எழுதப்பட்ட காலத்தால் பழதானாலும், உள்ளடக்கத்தால் நவீன கவிதையின் பாடுபொருட்களுக்குச் சமமானதாய் இருக்கிறது.

பாடல் :5.

விளக்கொளியும் வேசையர் நட்பும் இரண்டும்
துளக்கற நாடின் வேறல்ல - விளக்கொளியும்
நெய்யற்ற கண்ணே அறுமே, அவரன்பும்
கையற்ற கண்ணே அறும்.                                                    ( நாலடியார் - 371 )

பொருள்:

விளக்கின் ஒளியையும், பொது மகளிரின் அன்பையும் ஆராய்ந்தால் இரண்டும் வேறானவை அல்ல. விளக்கின் ஒளி எண்ணெய் வற்றியபோது எப்படி நீங்குமோ, அதேபோல் நாடுவோரின் செல்வம் வற்றிப்போக பொதுமகளிரும் அவர்களை விட்டு விலகிவிடுவார்கள்.

”உற்று நோக்குகிறோம்
தீபத்தின் சுடரை நீயும்
திரி உறிஞ்சவிருக்கிற
தைலத்தை நானும்.” 

என்ற என் கவிதை வரிகளும் இப்போது நினைவுக்கு வருகின்றன.

சரி. இந்த ஐந்து பாடல்களோடு மட்டும் நான் நிறுத்தினால், நாலடியாரைத் தேடிப் படிக்க ஆர்வம் உண்டாகலாம். உண்டாகாமல் இருக்கலாம். 

ஆனாலும் வரக்கூடிய இடுகைகளில் நிறைய என்னைக் கவர்ந்த நாலடியார் பாடல்களை உங்களுக்காக எழுதுவேன்.

11.10.12

இமயம் - அந்தரங்கத்தின் பகிரங்கம் - 6 - இசைக்கவி ரமணன்


ஹர் த்வாரில் கங்கையில் குளிக்கும்போது, மூன்று பிரார்த்தனைகள் செய்து மும்முறை மூழ்கச் சொன்னார்கள். ஒன்று, நமக்காக; இரண்டு, சுற்றத்துக்கும் நட்புக்குமாக; மூன்றவது, நாட்டு நலனுக்காக. சமுதாயம் நலமாக இருந்தால்தான் நாம் நலமாக வாழ முடியும். நமது நலம், சமுதாய நலனையே பெரிதும் சார்ந்திருக்கிறது.

இதை அழுத்தமாக எனக்கு விளக்கிய என் குருநாதர், “சமுதாயத்தில் வாழும்வரை நாம் கடன்பட்டுள்ளோம். அதன் நன்மைக்காகப் பணியாற்றுவதன் மூலமே அதை ஓரளவு தீர்க்க முடியும். காட்டுக்குச் சென்று தனிமையில் இருப்பின், கடமைகள் கிடையாது. ஆனால், சமூகத்தில் வாழும் மட்டும், ஒரு குடிமகனின் பொறுப்பாய கடமையிலிருந்து சன்யாசிக்கும் விலக்குக் கிடையாது. இந்தப் பொறுப்பை நிர்வகிக்காமல், முக்தி விழைவது பகற்கனவே!”.

நாட்டுப் பற்றுடன் சமூகக் கடமை ஆற்றியபடி வாழ்வதே தவம்; வேறெதையும் செய்யாமலேயே அவன் ஆன்ம விடுதலை பெறுவான் என்று அவர் ஆணித்தரமாகச் சொல்லுவார். அதைப் பலர் ஏற்பதில்லை. அது பற்றி, அவருக்கோ எனக்கோ அக்கறையில்லை!

கேதாரப் பயணம், ருத்திரப் பிரயாகையிலிருந்துதான் களைகட்டுகிறது. இங்கே, ஒருவன் ஆன்ம விடுதலையே கோரும்படித் தூண்டப்படுகிறான். விடுதலை என்பது ஒரு கணத்தின் முனைப்பில் நிகழ்வது. அதிலே, செயல், காலம் எதுவுமில்லை. ஆனால் அந்தக் கணத்தை நோக்கி வாழ்வதற்கு, ஒரு பிரத்யேகமான மனப்பாங்கும், பயிற்சியும் தேவையாகிறது; அதைக் காலம் நிர்வகிக்கிறது.

பரீட்சத்துக்கு முடி சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் அத்தினாபுரத்திலிருந்து நடந்து இங்கே வந்தார்கள்; ருத்திரப் பிரயாகையிலிருந்து, அவர்கள் நீரை மட்டும் உட்கொண்டு நடந்தார்கள். இடைவிடாத நடை. கேதாரநாதனைத் தவிர வேறெதும் விழையாத மனநிலை. திரும்பிப் பாராத துறவு. எண்ணங்கள் ஓய்ந்த மனம். நடைதொடர்ந்து உடல் கீழே விழும். ஆன்ம விடுதலை நேரும். இதற்குப் பெயரே வானப்ரஸ்தம்.

சமீபகாலம் வரையிலும் யாத்திரைக்குச் செல்பவர்கள் திரும்பிவர டிக்கெட்டு எடுப்பதில்லை! இப்போது உறுதி நீர்த்து விட்டது. இருந்தும் குற்றமில்லை.

கேதார் என்றால் மலைச்சிகரம் என்று பொருள். புராணத்தில், இது ‘முக்கண்டி’ அதாவது மூன்றாம் கண் என்று வர்ணிக்கப்படுகிறது. கேட்டதைத் தரும் கற்பகத்தரு என்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. ஆனால், இங்கே கேட்க வேண்டியது முக்தி மட்டுமே! மனம், ஓரிலக்கில் தீவிரம் கொண்ட பின்னே, உடல் முன்னே தள்ளப்படுகிறது. உடலின் துவட்சியும் ஓர் இனிய மனநிலையாகப் பரிமளிக்கிறது. சிந்தனைகள் ஓய்ந்து சித்தத்தில் சிள்வண்டின் சீழ்க்கை கேட்கிறது. வானளாவிய அமைதி வண்ண மலராய் உள்ளிருந்து விரிகிறது.

வாழ்க்கை முடிகிறது.... வாழ்தல் தொடர்கிறது.......

(தொடரும்)    

9.10.12

கதிர்பாரதியின் ’என் தெய்வமே தேவதையே மோகினியே’

சமீபத்தில் என்னை அயர அடித்த அபாரமான கவிதை இது.

இந்த ஒரு வாரத்தில் திரும்பத் திரும்ப பலமுறை வாசித்து விட்டேன்.


ஒருவேளை நான் எழுதியிருக்கவேண்டிய கவிதையோ என்று பொறாமையுடன் என்னை மோகிக்க வைத்த கவிதை.


இந்த வருடத்தில் தொடர்ந்து பல அற்புதமான கவிதைகளை எழுதி வாசிப்பனுபவத்தைக் கிள்ர்ச்சியுர வைக்கும் கதிர்பாரதிக்கு என் அன்பு முத்தங்கள்.


கதிர்பாரதியின் வலைப்பூ: http://yavvanam.blogspot.in/2012/10/blog-post.html

என் தெய்வமே... தேவதையே... மோகினியே



என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன

அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.

ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.

வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில் 

பால் பௌர்ணமி இறங்கி வருகிறது

அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்.

ஏனெனில் அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.



காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.


சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.


அவளருகே முத்தமாகிக் கிடந்த நான்
சுழன்றடிக்கும் அவள் வாசனையைப் பூசிக்கொண்டு
ருத்ரமூர்த்தியாக ஆடுகிறேன்.
என்னோடு சேர்ந்தாடுகிறது காதல்.


அவள் வதனத்தில் அரும்பியிருக்கும் பருவின் கூர்முனை ஏறி
உயிரைப் பலிபொருளாக்குகிறேன்.
அப்போது என் தெய்வமாகத் தரிசனமாகிறாள்.


என் தெய்வமே
என் தேவதையே
என் மோகினியே

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...