21.2.14

இரு கவிதைகள்

#
ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
ஊனம் என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகக்
கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
சிறகு என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகப்
பறந்து கொண்டே இருக்கிறது.

#
ஒரு நீர்த்தொட்டியின் 
துவாரத்திடம் இருந்து
உள்ளிருப்பவற்றை
வெளியேற்றவும் - 
நடுக்கடலில் படகின் 
துவாரத்திடம் இருந்து 
வெளியிருப்பவை
உட்புகாதிருக்கவும் - 
கற்றவனுக்கு 
வேறேதும் போதனை 
புதிதாய்த் தேவையில்லை.

17.2.14

கவிதையின் இறுதி வாக்கியம்.

"கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்." நீங்கள் படித்துக் கடக்கும் இந்த முதல் வாக்கியம் உண்மையிலேயே ’இறுதி வாக்கியமாய் இருக்கட்டும்’ என நான் எடுத்து ஒதுக்கி வைத்ததுதான். உங்களுக்கு இது வினோதமாய் இருக்கலாம். -ஒரு புத்தகத்தை இறுதிப் பக்கத்திலிருந்து வாசிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் -அல்லது முதலில் பரிமாறப்பட்ட மிகப் பிடித்த இனிப்பை இறுதியில் சாப்பிட எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இது ஒன்றும் பெரிய வியப்பாய் இருக்க முடியாது. ’ஏறுபவர்களும் இறங்குபவர்களும் தீர்மானிக்கும் ஒரு மாடிப்படியின் முதலும் இறுதியுமான படிகள்’ என்ற இறுதி வாக்கியமும் அல்லது ’ஒரு செலாவணியாகும் நாணயத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தல் போல’ என்றெழுதப்பட்ட இந்த வாக்கியமும் என் இரு கவிதைகளின் இறுதி வாக்கியம்தான். எனக்கு ஒரு கவிதையின் இறுதி வாக்கியம் போதும் முழுக் கவிதையின் நுனி அகப்பட. இந்த வினோதமான பழக்கத்தின் நிழலில் இந்தக் கவிதையின் நுனி உங்களுக்கு அகப்படாவிட்டால் பரவாயில்லை. "கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்."

14.2.14

நானும் நீங்களும்


உங்களுக்கு
மிகப் பரிச்சயமான 
மலையடிவாரத்தின் 
அண்மையில்தான் நிற்கிறேன்.
இப்போது ஓலமிடும் காற்றை 
நீங்கள் கேட்கமுடியும்.
ஓடிக்கொண்டிருக்கும் நதியில் 
இதோ கால் நனைக்கிறேன் 
என்ற இந்த வரியில் 
உங்கள் பாதங்களும் நனைகின்றன.
வேறெங்கோ பார்த்துக்கொண்டே 
எதிர்பாரா பள்ளத்தில் தடுக்கி விழுகிறேன்.
மன்னியுங்கள். என்னால் 
நீங்களும்தான் விழுந்து எழுகிறீர்கள்.
கண்ணில் பட்ட ஆட்டுக்குட்டியை 
அதன் அச்சத்துடன் தூக்கியணைத்துக் 
கொஞ்சி முத்தமிடுகிறேன்.
உங்கள் நாசியிலும் 
கிளர்வூட்டுகிறது தோல் மணம்.
உங்களுக்குத் தெரியாத 
ஒரு மூன்றாம் மனிதருடன் 
நிகழ்த்தும் உரையாடல் 
என்னைப் போலவே 
உங்களுக்கும் அலுப்பூட்டுகிறது.
இதோ நான் போக வேண்டிய இடம் வந்து 
உங்களுடன் சேர்ந்து உள்ளே நுழைகிறேன்.
கவிதை வெளியே காத்து நிற்கிறது.

12.2.14

தேவி காலோத்தரம் மற்றும் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம்


”தேவி காலோத்தரம்”, ”ஆன்மசாட்சாத்காரப் பிரகரணம்” இவை இரண்டும் இரு தொன்மையான நூல்கள். அவற்றிலிருந்து சில பார்வைகள்.

#######

வேர் எதுவுந் தான் பிடுங்க வேண்டாம் இலையினையும்
வேறுபடுத்தும் செயலும் வேண்டாமே - சீறி
இனாத செயவேண்டாம்  எவ்வுயிர்க்கும் பூவும்
அனாதரவாய்க் கிள்ள வேண்டாம்.

சுயமாகவே உதிர்ந்த தூமலர்கள் கொண்டே
செயக்கடவன் பூசை சிவனுக்கு - இயற்றியிடும்
மாரணம் உச்சாடனமுன் மற்ற வித்து வேடணமும்
பேருற்ற தம்பனமும் பின்.

இவை இரண்டும் "தேவி காலோத்தரம்" என்று அழைக்கப்படுகிற மிகத் தொன்மையான நூலில், சிவனுக்கும் உமைக்கும் இடையேயான உரையாடலின் மொழிபெயர்ப்பு.

சமஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்த்து வெண்பாவாக இயற்றியவர் ரமண மகர்ஷி. இந்த இரு பாடலிலும் தனக்கான வழிபாடு எப்படி இருக்க வேண்டுமென ஈசனின் உத்தரவாய் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.

பாடலின் பொருள் புரியும்படியாய்த்தான் இருப்பதாய் நினைக்கிறேன்.

தன் பூசைக்கு வேரோ, இலையோ பிடுங்கப்பட வேண்டாம். எந்த ஓர் உயிருக்கும் கோபத்தினால் துன்பமளிக்கக் கூடிய செயல் எதையும் செய்ய வேண்டாம். மென்மையான மலர்களைச் செடியிலிருந்து கிள்ள வேண்டாம்.

தானாய் உதிர்ந்த மலர்கள் கொண்டு சிவனுக்குச் செய்யப்படும் பூசையே உகந்தது. இதை விட்டு மந்திர உச்சாடனங்களால் அழிவை உண்டாக்குதல், மந்திரப் ப்ரயோகத்தினால் ஏவுதல், விரட்டுதல், ஸ்தம்பித்துப் போகச் செய்யும் தம்பனம் செய்தல் சிவனுக்கு உகந்ததல்ல.

அஹிம்சை என்பதன் வேர் நீளும் தொலைவு மலைப்பானதுதான்.

########

மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் இன்றைய துறவிகளின் மனநிலையை ஒப்புநோக்க "ஆன்ம சாட்சாத்பிரகரணம்" எனும் தொன்மையான நூலின் இரு பாடல்கள் துணை புரிகின்றன. 

"ஆன்ம சாட்சாத்பிரகரணம்" இது சிவன் முருகனுக்கு உபதேசித்த மிகத் தொன்மையான நூல். வடமொழியிலிருந்து தமிழில் வெண்பாவாக்கியது ரமண மகர்ஷி. 

மொத்தம் 62 பாடல்கள் கொண்ட இந்த நூலின் இரு பாடல்களை இப்போது பார்ப்போம். 

செல்லினும் நிற்கினு நித்திரை செய்யினும்
புல்லினும் சாக்கிர போசனநீர் - கொள்ளினும்
காற்று குளிர் வெய்யிற் கலந்திடுங் காலுமெவ்
வாற்றினுமெக் காலத்து மற்று.

[சென்றாலும், நின்றாலும், உறங்கினாலும், தழுவினாலும், விழித்திருந்தாலும், உண்ணுகையில் நீர் பருகினாலும், காற்று, குளிர், வெய்யில் எனத் தாக்கினாலும், வேறு எந்த இடையூறினாலும் எக்காலத்திலும் பாதிப்புற மாட்டான்.]

பயமும் வறுமைநோய் பற்றுசுர மந்த
மியைந்திடுங் காலத்து மேதுந் - தியங்கானே
யான்மநிட் டன்சாந்த னார்நிட் களனாகி
யான்ம திருத்தனா வான்.

[அச்சத்தாலும், வறுமையாலும், நோயாலும், சுட்டெரிக்கும் சுரத்தாலும், செரிப்பின்றி மந்த நோயாலும் அவதியுற்றபோதும், ஆன்ம நிட்டனாய் எதைக் கண்டும் கலக்கமுறாமல் நிலையாய் இருப்பான்.]

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...