31.12.11

நீர்த்துவம்
























தாமிரபரணியும்
குறுக்குத்துறையும்
உனக்குப் புரியாது.

காவிரியும்
கொள்ளிடமும்
எனக்குத் தெரியாது.

பாலாறு வந்தாலும்
வாராதே போனாலும்
அதுபோல வாராது.

வெட்டாறும்
சங்கராபரணியும்
அவனுக்குப் புரியாது.

நதியில்லாதவனுக்குச்
சிறுவாணி போல் அமையாது.

குளத்தின் சாகசங்கள்
ஏரிகள் அறியாது.

ஏரியின் படகுக்கோ
வேறெதுவும் ஆகாது.

கடலின் சூட்சுமங்கள்
கிணறுகள் உணராது.

கிணற்று மீனின்
ரகசியங்கள்
கடல்மீன் அறியாது.

அருவியின் உன்மத்தம்
சுனைநீர் தாங்காது.

நகரவாசிக்குக்
குழாய்நீர் போல
ஒரு நீரும் கிடையாது.

போத்தல் நீர் பயணிக்கு
பிஸ்லெரி பக்கத்தில்
அக்வா ஃபினா நெருங்காது.

நீரெல்லாம் ஒன்றானாலும்
நீரெல்லாம் ஒன்றாகாது.

நன்றி- ஆனந்த விகடன்- 04.01.2012

23.12.11

பீஷ்மரின் போதனை

மஹாபாரதத்தின் பக்கங்களில் நிறைந்திருக்கும் போதனைகளும் கதைகளும் கணக்கில் அடங்காதவை. வேறெந்த நாட்டின் இதிகாசத்துக்கும் இப்படிப்பட்ட செழுமையான பரந்த பெருமை கிடையாது.படிக்கப்படிக்க நம்மைச் செழுமைப் படுத்திக் கொள்ளவும், பல நேரங்களில் நம் வாழ்க்கைக்கான வழிகாட்டியாகவும் மஹாபாரதம் விளங்குகிறது. வாழ்வின் அனுபவம் முதிர முதிர நமக்கு அது மேலும் மேலும் தன்னைத் திறந்து கொடுக்கும் பொக்கிஷத்தின் சாளரமாக விளங்குகிறது.

அதிலிருந்து ஒரு தொடராக மஹாபாரதக் கதைகளைச் சொல்லலாம் என நினைக்கிறேன். முதலாவது இடுகை இது.

பிதாமகர் பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருக்கிறார். வரவிருக்கிற தக்ஷிணாயன புண்ய காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார். அவரின் இறுதி ஸ்வாசத்தை நோக்கி மூச்சு வந்துபோய்க் கொண்டிருக்கும் தருணம். அவரின் விடைபெறலுக்கு முன் அவரிடமிருந்து நீதி, நேர்மை, அரசியல் தர்மம் குறித்த போதனைகளைப் பெற தர்ம புத்திரர் விரும்பினார்.

தனது சகோதரர்கள் நால்வருடன் திரௌபதியையும் அழைத்துக்கொண்டு பிதாமகரிடம் சென்றார் .

பாண்டவர்கள் அனைவரும் பீஷ்மரை வணங்கி "பிதாமகரே!தாங்கள் எங்களுக்கு நீதி, நேர்மை, அரசியல் தர்மம் பற்றி உபதேசிக்க வேண்டும் " என்று கேட்க, திரௌபதி மட்டும் பலமாக வாய்விட்டுச் சிரித்தாள். அதில் கேலியின் நெடியை உணர்ந்த தர்மர், "நம் தந்தைக்கு இணையான பிதாமகரைப் பார்த்து ஏன் சிரிக்கிறாய்?இது தகாத செயல்" என்று கடுமையாகக் கேட்டார்.

"துரியோதனனின் சபையில் துச்சாதனன் என்னை மானபங்கம் செய்தபோது, கண்ணனின் அன்புக்கும் கருணைக்கும் நிகரான முடிவில்லாத ஆடை மட்டும் வந்து காப்பாற்றியிருக்காவிட்டால் என் கதி என்னவாகியிருக்கும்? இன்றைக்கு போதனை செய்ய இருக்கிற தர்மவானான பீஷ்மர், அந்தச் சபையில் அமர்ந்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர, துரியோதனனை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசினாரா? இப்படிப்பட்டவரிடம் நீங்கள் அரசியல் தர்மத்தைப் பற்றிக் கேட்கிறீர்களே என்று நினைக்கும்போது சிரிக்காமல் என்ன செய்வது?" என்று சொல்ல, தர்மரையும் உள்ளிட்ட பாண்டவர்கள் என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியில் உறைந்தார்கள்.

பீஷ்மர் பொருள் பொதிந்த பார்வையுடனும் புன்னகையுடனும் பதில் அளித்தார். 

"திரௌபதியின் சிரிப்பும் கேள்வியும் முற்றிலும் நியாயமானது. அவள் உதிர்த்த வார்த்தைகளுக்கு நான் பதில் சொல்லியே ஆக வேண்டும். அப்போதுதான் உங்களுக்கும், உலகத்துக்கும் உண்மை என்னவென்று தெரியும். 

துரியோதனன் அன்னமிடுவதில் உயர்ந்தவன். எந்த நேரத்தில் யார் வந்தாலும் அவர்கள் வயிறு நிறையும்படி உபசரிப்பான். ஆனால் அவன் செய்யும் அன்னதானம் பரிசுத்தமான மனதுடன் செய்யப்பட்டதல்ல. சுயநலத்துக்காக அன்னதானம் என்ற பெயரில் உணவிட்டு, அவர்களைத் தன் காரியங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வான். உண்டவர்களும் செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, வேறு வழியில்லாமல் அவன் சொல்படி நடப்பார்கள். இதற்கு சல்லியனும் கர்ணனும் உதாரணங்கள்.
 .
"ஒருவன் தூய்மையான மனமில்லாமல் வஞ்சக எண்ணத்துடன், மற்றவர்களுக்கு அன்னமிட்டால், அந்த எண்ணம் உண்டவனின் ரத்தத்தில் கலந்துவிடும். நான் துரியோதனன் இட்ட சோற்றை உண்டதால் எனக்குள் அவனது தீய குணமே குடிகொண்டு விட்டது. அதனால்தான் பாஞ்சாலியை மானபங்கம் செய்தபோதும் எதுவும் பேச முடியாமல் வாயடைத்து அமர்ந்திருந்தேன்"

"ஆனால் இப்போது பார்த்தன் அமர்த்திக் கொடுத்த அம்புப்படுக்கையில் படுத்த பிறகு எனது உடலிலிருந்த தீய எண்ணங்களுடன் கலந்திருந்த ரத்தம் முழுவதும் வெளியேறி விட்டது. அத்தோடு தீய சக்திகளும் வெளியேறிவிட்டன. இப்போது என் உடலில் தூய்மையான ஆன்மா மட்டும்தான் இருக்கிறது. எனவே நான் அரசியல் தர்மத்தைப் பற்றிப் பேசத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன்." என்று சொல்லி பாண்டவர்களுக்கு அரசியல் தர்மத்தை உபதேசம் செய்தார்.

அதனால்தான் முற்காலத்தில் விவரம் தெரிந்த சான்றோர்கள், சாதுக்கள், ஞானிகள், பண்டிதர்கள் பரான்னத்தை அதாவது வெளியில் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள்.

(இணைக்கப்பட்ட சிற்பத்தின் புகைப்படம் பீஷ்மர் அம்புப் படுக்கையில் இருப்பதைக் குறிக்கிறது. இச்சிற்பம் 8ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தில் கட்டப்பட்டதும் மாலப்ரபா நதிக்கரையில் பாகல்கோட் மாவட்டத்தில் பட்டாடக்கல் என்ற கிராமத்தில் அமைந்திருக்கும் அற்புதமான விருபாக்‌ஷா ஆலயத்தில் உள்ளது)

20.12.11

வரவேற்கிறேன்




சீன மொழியில் கவிதையையும் அது தொடர்பானவற்றையும் குறிக்கும் எழுத்துக்கள்தான் அவை. புரிந்திருக்குமே?

கவிதைக்கானதாய் மட்டும் இருக்கட்டும் ஓர் வலைப்பூ என்று நிறைவாய் யோசித்தபின் தோன்றிய இந்த மலர்தான் பரிவின் இசை.

இந்த வலைப்பூவில் மட்டுமே இனி என் கவிதைகளை எழுதுவேன்.அத்தோடு கவிதை குறித்த எழுத்துக்களும் மொழிபெயர்ப்புக்களும் ரசித்த கவிதைகளும் இனி பரிவின் இசையில்.  

பரிவின் இசை(www.parivinisai.blogspot.in)க்கும் நாளை ஏற்பட இருக்கிற சனிப்பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இந்த வலைப்பூவில் பின்பற்றுபவர்களுக்கான கேட்ஜெட் இணைக்கப்பட்ட போதும் கூடுதல் தகவலுக்காகப் புதிய இடுகைகள் வெளியாகும் போது கைகள் அள்ளிய நீர் அதைச் சொல்லிவிடும்.

பரிவின் இசை-என் வலைப்பூ


சீன மொழியில் கவிதையையும் அது தொடர்பானவற்றையும் குறிக்கும் எழுத்துக்கள்தான் அவை. புரிந்திருக்குமே?

கவிதைக்கானதாய் மட்டும் இருக்கட்டும் ஓர் வலைப்பூ என்று நிறைவாய் யோசித்தபின் தோன்றிய இந்த மலர்தான் பரிவின் இசை.

இந்த வலைப்பூவில் மட்டுமே இனி என் கவிதைகளை எழுதுவேன்.அத்தோடு கவிதை குறித்த எழுத்துக்களும் மொழிபெயர்ப்புக்களும் ரசித்த கவிதைகளும் இனி பரிவின் இசையில்.  

பரிவின் இசை(www.parivinisai.blogspot.in)க்கும் நாளை ஏற்பட இருக்கிற சனிப்பெயர்ச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது கூடுதல் தகவல்.

இந்த வலைப்பூவில் பின்பற்றுபவர்களுக்கான கேட்ஜெட் கிடைக்கவில்லை. ஆகையால் புதிய இடுகைகள் வெளியாகும் போது கைகள் அள்ளிய நீர் அதைச் சொல்லிவிடும்.

19.12.11

குரங்கிலிருந்து குரங்கிற்கு.


என் தாத்தா எனக்குச் சொன்ன இந்தக் கதையை தாத்தாவோடும் கதைகளோடும் வாழ்ந்தவர்கள் கேட்டிருக்கலாம். கேட்டிராதவர்களுக்காகத்  தொடர்கிறது கதை. முன்னாலேயே தெரியும் என்று சொல்பவர்களுக்கு இரண்டு சாய்ஸ். இப்படியே விலகிக் கொள்ளலாம். அல்லது ஒழுங்காய் என்னதான் சொல்லியிருக்கான் பாக்கலாமே என்று பொறுமையாய்ப் படிக்கலாம்.

கதைக்குப் போவோமா?

அது ஒரு வசந்த காலம். காட்டில் நதியோரத்தில் அமர்ந்து ஓடும் நீரில் கால்களை அளைந்தபடியே சிந்தித்துக்கொண்டிருந்தார் கடவுள்.

எல்லா உயிரினங்களுக்கும் ஆயுளை எத்தனை ஆண்டு காலம் வைப்பது என்ற சிந்தனையின் முடிவோடு எழுந்தார். எல்லா ஜீவராசிகளுக்கும் சரிசமமாக முப்பது ஆண்டுகள் வாழ்க்கை என்று முடிவோடு காட்டின் மையப் பகுதிக்கு எல்லா உயிரினங்களையும் வரவழைத்தார்.

உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுட்காலம்.என் முடிவு சரியென நினைப்பவர்கள் இங்கிருந்து செல்லலாம். காலத்தை நீட்டவோ குறைக்கவோ நினைப்பவர்கள் இங்கேயே அமரலாம்.ஒவ்வொருவரையும் தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன்என்றார் கடவுள்.

கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வரைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் சலசலப்பின்றி அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றன.

கழுதையிடம் திரும்பினார். முதலாவதாக நின்றிருந்த அக்கழுதையை அழைத்தார் கடவுள். உன் மனவருத்தம் என்ன?சொல்.என்று கேட்டார்.

அதற்குக் கழுதை கருணையும் பெருந்தன்மையும் கொண்ட கடவுளே! என் நிலைமையைச் சொல்லித் தீராது. நாள்தோறும் நான் படும் வேதனையை நீங்கள் எப்படி அறிவீர்கள்? ஏராளமான சுமைகளைச் சுமந்து திரிகிறேன். நேரத்திற்கு ஓய்வோ தூக்கமோ உணவோ எனக்குக் கிடைப்பது இல்லை.  முதுகில் சுமையுடன் வரும் என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. நான் தெருவோரம் முளைத்திருக்கும் புற்களை மேயவும் வழியில்லை. தேங்கிக் கிடக்கும் நீரையும் பருக வழியில்லை. எனக்குக் கனவிலும் வருவது தூக்கமுடியாத சுமைகளின் காட்சியே. என் வாழ்க்கையே நரகம். இந்த நரகத்தையும் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள். உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும்என்று புலம்பியது.

சரி! உன்னைப் பார்த்தால் பாவமாகத்தான் இருக்கிறது. உன் ஆயுட்காலத்தில் ஒரு பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான். என்ன மகிழ்ச்சிதானே?” என்றார் கடவுள்.

இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் கனைத்தபடியும் ஆடியபடியும் அங்கிருந்து கிளம்பியது.

அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள். உன் குறை என்னப்பா?” என்று கேட்டார்.

கடவுளே! நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. ஆண்டுக்காண்டு பிறக்கும் குட்டிகளுக்கு முன்னால் என்னை யாரும் கண்டுகொள்வதில்லை. தெருவில் நடமாடினால் எல்லோரும் என்னைத் துரத்தியடிக்கிறார்கள். எனக்கு இருக்கும் பயத்தை குரைத்துக் குரைத்துத் தீர்த்துக்கொள்கிறேன் நான். தவிரவும் நான் முதுமையடைந்து தளர்ந்து போய்விட்டால் எல்லோருமே என்னை மிகக் கேவலமாக நடத்துகின்றனர். கடைசிக் காலங்களில் எனக்கு உணவும் கிடைப்பதில்லைஎன்று அழுதது நாய்.

சரி.சரி. அழாதே. உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று நினைப்பது புரிகிறது. குறைத்து விடுகிறேன். இனி உனக்கு வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான். போதுமா?” என்றார் கடவுள்.

அளவில்லாத மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டு சந்தோஷமாகக் குரைத்தபடியே புறப்பட்டது.

கழுதையும் நாயும் சந்தோஷமாகப் புறப்பட்டதை மரத்தில் தலைகீழாய்த் தொங்கியபடியே குரங்கு கவனித்துக் கொண்டிருந்தது. மிகுந்த நம்பிக்கையுடன் கடவுளின் முன் தாவிக்குதித்து வணங்கியது. 

உனக்கு என்ன குறை? உன்னைப் பார்த்தால் சந்தோஷமாக இருப்பது போல இருக்கிறதே? என்று கேட்டார் கடவுள்.

தலையைச் சொறிந்தபடியும், பல்லைக் காட்டியபடியும் நின்ற குரங்கு, ” சரியாப் போச்சு! அடக் கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எத்தனை நீண்ட காலம் தெரியுமா? அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். 

இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்களும் வீணாய்ப்போன சோறும்தான். முதுமையடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறைத்து விடுங்கள்என்று வேண்டிக் கொண்டது.

சரி. நீயும் இத்தனை கஷ்டப் படுகிறாய். இனி உனக்கும் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள்என்றார் கடவுள்.

குரங்கும் குட்டிக்கரணம் அடித்தபடியே ஒவ்வொரு கிளையாகத் தாவித்தாவி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து மறைந்தது. 

கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.

உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்?” என்று கேட்டார்.

கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் . அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு தொழிலையோ கலையையோ வித்தையையோ முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் தங்குவதற்காகச் சொந்தமாக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.

நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயனை அனுபவிக்கும் காலம் அது. அந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது எத்தனை கொடுமை? முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்குக் குறைந்தது நூறு ஆண்டுகளாவது வேண்டும்என்று வேண்டிக் கொண்டான் மனிதன்.

இங்கு வந்த நீ குறையுடன் செல்லக் கூடாது. அதற்காக நான் உனக்கு நூறு ஆண்டுகள் தரமுடியாது. உனக்கும் எனக்கும் பொதுவாக ஒரு ஆயுட்காலத்தை நிர்ணயிக்கிறேன். கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்கிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே?” என்று கேட்டார் கடவுள்.

ஹும். வேறென்ன சொல்லமுடியும்? அப்படியும் இப்படியும் பேசி இருபது ஆண்டுகளைக் குறைத்து எண்பதுடன் போகச் சொல்லுகிறீர்கள். பரவாயில்லை. மகிழ்ச்சிதான்என்று அரைகுறை மனதுடன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான் மனிதன். 

எதிர்காலத்தில் நடக்கப் போகிற வேடிக்கையை நினைத்துப் புன்னகைத்தாலும்  கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக கடவுள் வருத்தப்பட்டார்.

கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். 

முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பிறருக்குப் பயனுள்ளவனாக வாழ்ந்தான். கடவுள் அவனுக்கு முதன் முதலில் நிர்ணயித்த ஆயுட்காலம் அது. 

அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள் துவங்கியது. அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் அவமானங்களாலும் வாடினான். பொறுப்புக்களை இழுத்துப் போட்டுக்கொண்டு மிகுந்த சிரமப் பட்டான்.

நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் ஆரம்பமானது. இந்தக் கால கட்டத்தில் தான் சேர்த்த பொருட்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் வேறேதோ நோக்கத்துடன் வந்தாலும் அதைக் கைப்பற்ற வந்ததாய் எண்ணிக் குரைத்து ஒரு நாயின் வாழ்க்கையை நடத்தினான். 

அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கை போலானது. தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்டவும், கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்லவும் வேண்டியதாயிற்று. அவனுக்கென்று சுயமாய் எதுவுமற்று அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துக் கடைசியில் சுய பச்சாதாபத்துடன் இறந்தான்.

15.12.11

குரைப்பின் மொழி


வெளியே கூட்டிப் போக
ஒரு குரல்.

தனியே விட்டு
ஊர் போய்த்திரும்பினால்
தவிப்பாய்
வேறொரு குரல்.

பேப்பர் போட
வருபவருக்கு ஒருவிதம்.

கொய்யா மரத்தில்
அணிலும் காக்கையும்
விரட்டிப்பிடிக்கமுடியாக்
கோபத்தில் ஒருவிதம். 

மேயும் மாடுகளின்
நடமாட்டத்துக்கு
தொடர் குரைப்பு.

மாதமொருமுறை வரும்
சிலிண்டருக்கோ
பயத்தோடு ஓர் குரைப்பு.

ஓரெழுத்துக் கூடினாலும் 
பால்காரருக்கும் 
தபால்காரருக்கும்
வெவ்வேறுவிதம்.

பாம்புக்கு வன்குரல்.

சிறுநீர் கழிக்கவும்
இனம் பெருக்கவும்
வெவ்வேறு தொனிகளில்.

குட்டிகளுடன்
விளையாடுகையில்
செல்லமாய் ஒரு குரல்.

யாருமற்ற இரவுகளில்
தொலைதூரக்
குரைப்புக்கு
பதில்குரைப்பாய்
சிலநேரம்.    

எதுவுமில்லா அலுப்பூட்டும்
பொழுதுகளில்
ஆயாசமாய் ஒரு குரல்.

திடுக்கிடும் கனவுகள்
கலைகையில்
குழப்பமாய் ஒரு குரல்.

எஜமானன்
இறந்துபோனால்
தேற்றமுடியாத
உயிரின் துயரம்
சொட்டும் குரலென

நாயின் குரல்
நாற்பது விதம்.
என் கவிதைக்குக்
கூட இல்லை
இத்தனை விதம்.


(நன்றி-சொல்வனம்-ஆனந்தவிகடன்-21.12.11)

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும் - II

எனது 24 குருமார்கள்.
====================
முன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன், பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த யௌவனரான ஒரு துறவியிடம்,

”மனிதர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், புகழ் பாராட்டு, செல்வம் ஆகியவற்றை அடையவே அறம், பொருள், இன்பம், வீடென்ற சக்கரத்துள் அழுந்தியிருக்கிறார்கள். சதா காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரோ அவைகளால் தீண்டப்படாமல், கங்கையில் மூழ்கிக் களிக்கும் யானையைப் போல - இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீரே? உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டான்.

 ”என் புத்தியில் புகுந்து குருவாய் விளங்குபவர்கள் எனக்குப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியர்களிடமிருந்து நான் பெற்ற போதனையால் நான் முக்தனாகச் சஞ்சரிக்கிறேன். என்றபோதும் நான் போதனை பெற்ற 24 குருமார்களைப் பற்றிக் கூறுகிறேன். கேளும்.

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிக்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்தி, குளவி ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.

1.
மற்றவர்களால் எத்தனை துன்புறுத்தப் பட்டாலும் எல்லாம் ப்ராரப்த கர்மாவின் படியே நடப்பதாய் எண்ணி, தன் மீது பள்ளம் தோண்டினாலும், உழுதாலும், எரித்தாலும் பொறுமையோடு ஏற்பதுடன், எல்லா உயிர்களும் வாழத் தேவையான சூழ்நிலைக்கும் உதவியாய் இருக்கும் இந்த பூமியிடமிருந்து பொறுமை, எந்தச் சூழ்நிலையிலும் பிறருக்கு உதவும் அன்பு, சகிப்பு இவற்றைக் கற்றேன். மலைகளோடும் நதிகளோடும் மரங்களும் இதன் சீடர்கள். இவற்றை எனக்குப் போதித்த பூமியே எனது முதல் குரு.

2.
தூய்மையும் மணமும் அற்றது காற்று. மணம் நிறைந்த பொருட்களின் மீதும், துர்நாற்றம் வீசும் பொருட்களின் மீதும் எந்தப் பாரபட்சமும் இன்றி வீசிக் கடப்பதைப் போல, இன்பம் துன்ப்ம் துவங்கி, வாழ்க்கையின் எல்லா எதிரெதிர் நிலைகளின் குண தோஷங்களால் பீடிக்கப்படாமல், பற்றின்றி எதிர்கொள்ளும் பக்குவத்தைக் காற்றிடம் கற்றேன். காற்றே என் இரண்டாவது குரு.

3.
காற்றினால் அலைக்கழிக்கப்படும் மேகங்கள் ஆகாயத்தில்தான் இருக்கின்றன. அசைபவை, நிலைத்திருப்பவை அனைத்திலும் மறைந்தும், பிளவுபடாமலும், பற்றில்லாமலும், எங்கும் வியாபித்தும் இருக்கும் நிர்மலமான ஆகாயம், எங்கும் நிறைந்த ஆன்மாவுடன் உள்ள ஒற்றுமையை போதிப்பதால் ஆகாயம் அல்லது வெளி- என் மூன்றாவது குரு.

4.
தெளிவானதும், மனநிறைவு அளிப்பதும், எல்லாவற்றையும் தூய்மையாக்கும் நீரே என் நான்காவது குரு. பார்வை மற்றும் உபதேசங்களால் மக்களைத் தூய்மைப்படுத்தும் ஞானி ‘நீரின் நண்பன்’ என அழைக்கப்படுகிறார்.

5.
நெருப்பு சில இடங்களில் மறைந்தும், சில இடங்களில் வெளிப்படுத்தியும் கொள்கிறது. தன்னில் இடப்பட்டவற்றின் நன்மை, தீமை பேதமின்றி எதையும் எரித்துச் சாம்பலாக்குகிறது. பிறருக்காக அனைத்தையும் ஏற்கும் சுடரும் நெருப்பே என் ஐந்தாவது குரு. 

6.
பிறப்பிலிருந்து மரிப்பு வரை உடலில் மாற்றங்கள் உண்டாகின்றன. அதற்கும் ஆன்மாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தேய்வதும், பின் வளர்வதும் காட்டி இல்லாமையிலிருந்து இருப்பை உணர்த்தும் சந்திரனே என் ஆறாவது குரு.

7.
சூரியன் தன் கதிர்களால் நீரை உறிஞ்சி மழையாய்ப் பொழிவிக்கிறான். ஆனால் உறிஞ்சும் நீருடனும், பொழியும் நீருடனும் உறவை உண்டாக்கிக் கொள்வதில்லை. பெறுவதிலும், கொடுப்பதிலும் ஞானிக்குப் பற்றிருக்கக் கூடாது. பல இடங்களில், பல நாடுகளில் உதிப்பதாய்த் தோன்றினாலும் உதிப்பது ஒரே சூரியனே. உடல்களால் பலவாக இருந்தாலும் ஆன்மா ஒன்றே என உணர்த்திய சூரியனே என் ஏழாவது குரு.

8.
வேடன் ஒருவன் வலை விரித்துப் புறாக்குஞ்சுகளைப் பிடித்தான். அவற்றின் மீது அன்பு கொண்ட தாய்ப்புறா தானும் வலியச் சென்று வலையில் சிக்கியது. இவற்றைக் கண்ட ஆண் புறா தானும் வலையில் சென்று சிக்கிகொண்டது. குடும்ப வாழ்க்கை நடத்தும் மனிதன் மன அமைதி இழந்து, நிலையற்ற சிந்தனைகளோடு அவர்களைப் பராமரித்துக் கொண்டு குடும்பத்திலேயே கட்டுண்டு அழிகிறான். அளவுக்கு மீறிய பற்றே துன்பத்திற்குக் காரணம் என்பதை உணர்த்திய புறாவே என் எட்டாவது குரு.

9.
எங்கும் அலையாமல் பெரியதோ, சிறியதோ சுவை மிக்கதோ, அற்றதோ, கிடைத்தாலோ கிடைக்காது போனாலோ கவலையற்று, தன்னைத் தேடி வரும் உணவைப் பிடித்துக் கிடைப்பதை உண்டு பிழைக்க வேண்டும் என்பதை மலைப்பாம்பிடம் கற்றேன். ஆக மலைப்பாம்பே என் ஒன்பதாவது குரு.

10.
கடலில் நதிகள் கலப்பதால் கடல் தன் கரையைக் கடப்பதிலை. கலக்காவிடில் வற்றுவதுமில்லை. அதுபோல ஒரு ஞானி தன் விருப்பங்கள் நிறைவேறினால் வருத்தமோ, இல்லாதுபோனால் துயரமோ அடையமாட்டார். மேலும் ஒரு ஞானி கடலைப்போல ஆரவாரத்துடனும், கம்பீரத்துடனும், ஆழங்காண இயலாதவராயும், கடக்க இயலாதவராகவும் கலக்கமுடியாதவ்ராகவும் விளங்க மாதிரியாய் விளங்கும் கடலே என் பத்தாவது குரு.

11.
புலன்களை வெல்லாதவன் தீயில் வீழும் விட்டிலைப் போன்றவன். மாயையால் உண்டாக்கப்பட்ட பெண், பொன், ஆபரணம், ஆடை ஆகியவற்றால் வசீகரிக்கப்படும் அஞ்ஞானி அறிவைத் தொலைத்து அவற்றிலேயே மூழ்கி விட்டிலைப் போல அழிகிறான் என்று போதனையைத் தூண்டிய விட்டில் பூச்சி என் பதினொன்றாவது குரு.

12.
எல்லா மலர்களிடமிருந்தும் சிறிது தேனை நுகரும் தேனீ, எல்லோரிடமும் சிறிதளவு உணவைப் பெற்று சரீரத்தைக் காப்பது குறித்தும், பலவிதமான சாஸ்திரங்களிலிருந்தும் அதன் சாரமான தத்துவத்தை மட்டும் கிரஹித்து வீண் தர்க்கங்களைத் தவிர்க்க அறிவுறுத்தியது. பிச்சை ஏற்கும் கைகளே கலம். வயிறே அதனை வைக்கும் இடம். அடுத்த வேளைக்கென உணவைச் சேமித்தால் தேனைச் சேகரித்து கூட்டுடன் அழியும் தேனீயின் நிலைதான் உண்டாகும். இதனால் தேனீ என் பன்னிரெண்டாவது குரு.

13.
வேடன் அமைத்த குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையைப் பார்த்து மோகம் கொண்ட ஆண் யானையும் குழியில் வீழ்ந்தது. துறவியானவன் மரத்திலான பெண்ணைக் காலினால் கூடத் தொடக்கூடாது என்பதை உணர்ந்தேன். யானை என் பதிமூன்றாவது குரு.

14.
தேனீக்கள் பல நாட்களாகத் தேனைச் சேகரிகின்றன. கூட்டினைக் கலைத்து கவர்ந்து செல்கிறான் வேடன். கருமி சேகரித்து வைக்கும் பொருட்களும் மரணத்துக்குப் பின் இன்னொருவனால் அனுபவிக்கப்படுகின்றன. தேன் சேகரிக்கும் வேடனே என் பதினான்காம் குரு.

15.
மானைப் பிடிப்பதற்கு முன்னால் அதைத் தூண்ட வலை விரிக்கும் வேடன் இசைக்கும் இசைக்கு ஆபத்தையும் சூழ்நிலையையும் அறியாமல் கண்ணை மறைக்கும் ஆசையுடன் துள்ளிக்குதித்து வேடனிடம் சிக்கிக்கொண்டது மான்.[மானின் வயிற்றில் பிறந்த ரிஷ்யசிருங்கர் பெண்களின் ஆட்டம் பாட்டங்களில் சிக்கி அவர்களின் கைப்பாவை ஆனார்] துறவி உலகின்பமூட்டும் இசைக்கு அடிமையாகக் கூடாது. ஆக, மான் என் பதினைந்தாம் குரு.

16.
தூண்டில் புழுவைச் சுவைக்க ஆசை கொண்டு மாட்டிக்கொண்ட மீனே வாயைக் கட்டுப்படுத்தும் உபாயத்தைக் கற்றுக்கொடுத்தது. உணவின் மீதான ஆசையை வென்றவர்கள் புலன்களை எளிதில் கடப்பார்கள் எனும் பாடத்தை உணர்த்திய மீனே என் பதினாறாம் குரு.

17.
பிங்களா என்ற தாசி நன்கு தன்னை அலங்கரித்துக் கொண்டு வருவதாய்ச் சொல்லியிருந்த வாடிக்கையாளனுக்குக் காத்திருந்தாள். நெடுநேரம் கடந்தும் அவன் வராது போகவே அவளுக்குள் வைராக்கியம் உதித்தது. தன்னையே அளிக்கும் இறைவனை விட்டு நாளை அழிய இருக்கும் நரர்களிடம் ஆசை வைத்தேனே என வருந்தி ஆண்கள் மீது வைத்த ஆசையைத் துறந்து தெளிவடைந்தாள். பெருவிருப்பம்,பெருந்துக்கம்; விருப்பமின்மை பரம சுகம் என்பதைப் புரிந்துகொண்டேன். அவளே என் பதினேழாவது குரு.

18.
தன் வாயில் அபூர்வமான ஒரு இறைச்சித் துண்டைக் கவ்விச்சென்ற ஒரு குர்ரப் பறவையை எல்லாப் பறவைகளும் துரத்தித் துன்புறுத்தின. காரணம் புரிந்து வாயிலிருந்து அத்துண்டை விடுவித்தவுட்ன் அதன் துன்பம் நீங்கியது. அவசியமில்லாத, அளவுக்கு மிகுதியானவற்றைச் சுமந்து அலைவது துன்பம் என குர்ரப் பறவை கற்றுக் கொடுத்து என் பதினெட்டாவது குருவானது.

19.
மான அவமான பேதமற்ற, வீடு மக்கள் குறித்த கவலையற்றவர்கள் பாலகர்களே. பரமானந்தத்தில் மூழ்கியோர் இருவரே. ஒருவர் சூதுவாது அறியாக் குழந்தை; மற்றொருவர் குணங்களை எல்லாம் கடந்த ஞானி. தாயிடம் பாலருந்தும் மழலையே என் பத்தொன்பதாம் குரு.

20.
வீட்டில் யாருமில்லை. திடீரென வந்த உறவினர்களுக்கு உணவு தயாரிக்க குமரிப்பெண் ஒருத்தி கை நிரம்ப வளையல்களுடன் உரலில் நெல்லைக் குத்துகிறாள். அவள் நெல் குத்துவதை வளையல்கள் ஒலி எழுப்பிக் காட்டிக் கொடுக்கின்றன. அதைக் கண்டு வெட்கமுற்று இரு வளையல்களை மட்டும் அணிந்து தொடர்கிறாள். இப்போதும் அவை ஒலி எழுப்பவே ஒற்றை வளையல் அணிந்து ஒலியை முடக்குகிறாள். இதில் இருந்து இரண்டு பேர் இருந்தாலும் கூட தேவையற்ற விவாதம், கலகம் ஏற்படும் என்பதைப் புரிந்துகொண்டு தனிமையே சிறந்ததென்ற முடிவுக்கு வந்தேன். அவளே என் இருபதாம் குரு.

21.
அம்புடன் இலக்கை நோக்கிக் குறி வைத்துக் கொண்டிருந்தான் ஒருவன். பரிவாரங்களுடன் கடந்துபோன அரசனைக் கூட கவனியாது தன் இலக்கில் தீவிரமான கவனத்தைச் செலுத்தியபடி இருந்த அவன், சஞ்சலமில்லாது மனதை ஒரே இலக்கில் செலுத்தும் வைராக்கியத்தையும், பயிற்சியையும் எனக்கு அறிவுறுத்தினான். அவனே என் இருபத்தியொன்றாவது குரு.

22.
தனக்கென்று இருப்பிடத்தைப் பாம்பு உருவாக்கிக் கொள்ளாது  கரையான் உருவாக்கிய புற்றில் உறைகிறது. சிறிது காலமே வசிக்க இருக்கும் இந்த உடலுக்கு பெரிய வீட்டைத் திட்டமிடுவது துக்கத்தின் தொடக்கம். துறவிக்கு வானமே குடிசையாய் வாழும் போதனையைக் கற்றுக் கொடுத்த பாம்பே என் இருபத்தியிரண்டாம் குரு.

23.
சிலந்தி தன் வாயிலிருந்து உற்பத்தியாகும் இழையில் நெய்யப்பட்ட வலையைத் தன தேவை பூர்த்தியானவுடன் மீண்டும் தனக்குள்ளேயே இழுத்துக்கொள்கிறது. ஈசனும் தன்னிலிருந்து இவ்வுலகை வெளிக்கொண்டு தன விருப்பப்படி லீலைகளை முடித்துக்கொண்டு யுக முடிவில் மீண்டும் தனக்குள்ளே இழுத்துக்கொள்கிறார். இதை போதித்த சிலந்தியே என் இருபத்திமூன்றாவது குரு.

24.
புழுவானது வண்டின் கூட்டில் புகுத்தப்பட்ட நாளிலிருந்து சதா வண்டையே நினைத்து நினைத்து இறுதியில் குளவியாய் மாறிவிடுகிறது. உடல் எடுத்தவன் மனத்தால் எதை எதைப் பற்றி - அன்பினாலோ, வெறுப்பினாலோ, அச்சத்தினாலோ - சிந்தித்துக் கொண்டிருக்கிறானோ, அத்தோற்றத்தையே அடைகிறான்.  இறைவனையே தியானிக்கும் பக்தன் அதேபோல ஜீவன் முக்தனாகிறான் எனப் புரிய வைத்த குளவி என் இருபத்திநான்காம் குரு.

ஸ்ரீமத் பாகவதத்தின் பதினோராவது ஸ்கந்தத்தில் ஏழு, எட்டு, ஒன்பதாவது அத்யாயமாக அமைந்திருக்கும் அவதூத கீதை, உத்தவ கீதையின் ஒரு அங்கமாகவும் கருதப்படுகிறது.  

குருமார்கள் இருபத்தி நான்மர் மட்டுமல்ல; நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவருமே நமக்கு ஒரு ஞானத்தை போதிக்கும் குருமார்கள் என்பதுதான் மைய போதனை. 

உதிர்ந்துகொண்டிருக்கும் இறுதி நொடி வரை நாம் கற்க இருக்கிறோம் என்றுணராது, கல்வியென்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் என்றும் நம்மை விட அடையாளத்திலும் தகுதியிலும் குறைந்தவர்களிடம் கற்க மறுக்கும் அகந்தையும் உள்ள நமக்காக உருவாக்கிக் கொடுத்த போதனைகள்தான் இவை.

மேற்கத்திய சிந்தனையும், அறிவின்பாற் பட்டு சிந்திக்கும் வழக்கமும் பல தருணங்களில் நம் நம்பிக்கைகளுக்கும் சிந்தனைகளுக்கும் முரணாக இருந்திருக்கிறது.மேலை நாடுகளிலிருந்து பலதரப்பட்ட அறிஞர்கள் இங்கு வந்து நம் செல்வங்களையும் சிந்தனைகளின் ஆழத்தையும் பார்த்து வியந்து பாராட்டிக்கொண்டிருக்க நாம் நம் வேர்களை வெட்கமின்றி இழந்துகொண்டிருக்கிறோம்.

தத்தாத்ரேயர் குறித்து அறிய ஏராளமான புத்தகங்களும் தகவல்களும் இருக்கின்றன. அவற்றில் முத்தாய்ப்பாக பண்டிட் ராஜ்மணி டிகுநைத் (Pandit Rajmani Tigunait) எழுதியுள்ள ”The Himalayan Masters” புத்தகத்திலிருந்து இரு பத்திகள்:

[The ashram of Sage Dattatreya’s parents, known as Ansuya in Chitrakut, is still nestled in the beautiful Vindhya Range of the central Indian mountains. A steep mountain towers over the back of the ashram and the serene streams of the Mandakini River issue from a nearby cave. In the air is a pervasive sense of tranquility.

The fish leap from the water to take puffed rice from the hands of pilgrims. Monkeys come from the forest, greet visitors, and share their food like old friends. Your intellect may insist that they do it out of habit or to get food. But listen to nature and you will hear a silent voice: “Do not pollute the spirit cultivated by sages with your cold intellectualism.”]

மத்திய இந்திய மலைப்ரதேசங்களில் அழகான விந்திய மலைச்சாரலில் சித்ரகூடத்தில் தத்த முனியின் பெற்றோர்கள் தங்கியிருந்த ஆஸ்ரமம் அனுசுயா என்ற பெயரில் இன்னமும் இருக்கிறது.  அருகில் இருக்கும் குகையில் இருந்து பாயும் மந்தாகினி நதியின் அற்புதமான தீரத்தில் நெடிதுயர்ந்த மலைகளின் பின்னணியில் ஆஸ்ரமம் அமைந்திருக்கிறது. வீசும் காற்றில் தான் எத்தனை ஏகாந்தமான ஒரு அமைதி?

யாத்ரிகர்களின் கையிலுள்ள பொரியை உண்ண நீரிலிருந்து எம்பிக் குதிக்கின்றன மீன்கள். காடுகளிலிருந்து வெளியே வந்து வரவேற்று ஏதோ அவர்களின் நீண்ட நாள் நண்பர்கள் போல உணவைப் பகிர்ந்துகொள்கின்றன குரங்குகள். உங்களின் அறிவு அவை பழக்கத்தாலோ உணவுக்காகவோ இப்படி நடந்துகொள்கின்றன என உங்களை வற்புறுத்தலாம். ஆனால் ஏகாந்தமான அந்த இயற்கையின் நிசப்தமான குரலை உற்றுக்கேட்டீர்களானால்

“யுகாந்திரங்களாய் முனிஸ்ரேஷ்டர்கள் நிர்மாணித்திருக்கும் வாழ்க்கையின் மேன்மைமிக்க அடிநாதத்தை உறைந்துபோன உங்களின் புத்திசாலித்தனத்தால் மாசு படுத்திவிடாதீர்கள்”

எனும் அதன் கோரிக்கை உங்கள் காதுகளைத் தொடக்கூடும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...