13.12.11

தத்தாத்ரேயரும் 24 குருமார்களும்-I



மார்கழி பிறந்ததுமே பனியில் குளித்த அதிகாலையும் வாசல்களை நிறைக்கும் வண்ணக்கோலங்களும் ப்ரும்மமுஹூர்த்தத்தில் எழுந்து தண்ணென்ற நீரில் உடலும் மனமும் குளிர நீராடி மேற்கொள்ளும் இறைவழிபாடும் ரம்மியமானவை. இந்த மார்கழி மாதத்தில் திருமாலை ஆராதிக்கும் வைகுந்த ஏகாதசித் திருநாளைப்போல, சிவபெருமானை வணங்கும் திருவாதிரைத் திருநாளும் மஹா வ்யதீபாதமும் அதிக முக்யத்வம் வாய்ந்தவை. மார்கழி மாதப் பௌர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் கூடி வரும் நாள் திருவாதிரைத் திருநாள் ஆகும். 

1.விஷ்கம்பம் 2. ப்ரீதி 3. ஆயுஷ்மான் 4. சௌபாக்யம் 5. சோபனம் 6. அதிகண்டம் 7. சுகர்கம் 8. த்ருதி 9. சூலம் 10. கண்டம் 11. விருத்தி 12. த்ருவம் 13. வியகாதம் 14. ஹர்ஷணம் 15. வஜ்ரம் 16. ஸித்தி 17. வ்யதீபாதம் 18. வரியான் 19. பரீகம் 20. சிவம் 21. ஸித்தம் 22. சாத்யம் 23. சுபம் 24. சுப்ரம் 25. ப்ரம்மம் 26. ஜந்ரம் 27. வைத்ருதி எனும் இருபத்தேழு வகை யோகங்களில் ஒன்று வ்யதீபாத யோகம். 


நட்சத்திரங்கள் இருபத்தேழு இருப்பது போல இந்த எல்லா யோகங்களும் ஒவ்வொரு மாதமும் ஏற்படும். இந்த யோகங்களில் ஒன்றான வ்யதீபாதம் மார்கழி மாதத்தில் வரும்போது இதற்கு "மஹா வ்யதீபாதம்' என்று பெயர். ஆனால் நாள்தோறும் ஏற்படும் சித்த, அமிர்த, மரண யோகங்கள் இந்த இருபத்தேழு யோகங்களில் சேராது. 



மஹா வ்யதீபாதத்தை ஒட்டி திருவாவடுதுறைக்கு மூன்று கிலோமீட்டர்கள் தெற்கே உள்ள திருக்கோழம்பம் என்ற தலத்திலும் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. 



சந்திரன் குருபத்னியான தாரையிடம் தவறான எண்ணத்துடன் பழக முற்பட்டபோது, தர்மோத்தமரான சூரிய பகவான் சந்திரனைக் கோபத்துடன் கடிந்து உஷ்ணமாகப் பார்த்தார். தனது சொந்த விஷயத்தில் சூரியன் தலையிடுவதை விரும்பாத சந்திரனும் பதிலுக்கு சூரியனைச் சினந்து நோக்கினான். 

அப்போது அவர்களுடைய கோபப்பார்வை ஒன்று கலந்ததால் அவர்களிடையே ஒரு திவ்ய புருஷன் தோன்றினான். இவ்விதம் ஏற்பட்ட தேவதையே வ்யதீபாதம் என்ற யோகத்திற்கு உரிய தேவதை யாகும். இந்த தேவதைக்கு அதிதேவதை சிவபிரானாவார். தவிர, இந்த மஹா வ்யதீபாதத்தன்று "தத்த, தத்த' என்று ஜபித்து தத்தாத்ரேயரை வழிபடுபவர்களுக்கு தத்துவஞானம் ஏற்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. 

அன்றைய தினம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வது சிறந்தது. ஒரே ஆண்டில் செய்யப்படும் ஷண்ணவதி என்று கூறப்படும் 96 சிரார்த்தங்களில் இந்தப் பதின்மூன்று வியதீபாதங்களும் அடங்கும். அதிலும் மஹா வ்யதீபாத தினத்தில் செய்யும் பித்ரு காரியங்கள், கயா சிரார்த்தப் பலனைக் கொடுக்கும் என்பது நம் மரபின் நம்பிக்கை. 

இனி தத்தாத்ரேயர் புராணம். 

அத்ரி, ப்ருகு, குப்தர், வசிஷ்டர், கௌதமர், காச்யபர், ஆங்கீரசர் ஆகிய ஏழு முனிவர்களையும் சப்த ரிஷிகள் என்று இந்து மதம் வ்ணங்கி வழிபடுகிறது. இவர்கள் சப்தரிஷி மண்டலம் எனப்படும் நட்சத்திரங்களாக விளங்கிக் கொண்டிருப்பதாக ஐதீகம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான அத்ரி மாமுனிவரின் மனைவி அனசூயா தேவி ஆவார். கர்த்தம ப்ரஜாபதி- தேஹூதி தம்பதிக்குப் பிறந்தவர் அனசூயா தேவி.

 "மற்றவர்கள்மீது கொஞ்சமும் பொறாமை இல்லாதவள்” என்ற பொருள் தரும் அனசூயா என்ற பெயர் கொண்ட இந்த ரிஷிபத்னி கற்பிற் சிறந்த பதிவ்ரதையாகப் போற்றி வணங்கப்படுகிறாள். ஸ்ரீ ராமபிரான் சீதாதேவியோடு வனவாசம் சென்றபோது அத்ரி- அனசூயா ஆசிரமத்திற்குச் சென்று இருவரையும் வணங்கியதையும் அனசூயா தேவி சீதாதேவிக்குப் பெண்களின் பல்வேறு கடமைகளைப் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறியதையும் இராமாயணம் குறிப்பிடுகிறது.

கலகம் உண்டாக்குவதில் கெட்டிக்காரரான நாரதர் மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மாவிடம் சென்றார். "அத்ரி மகரிஷியின் மனைவி அனசூயாதேவியின் கற்பைச் சோதிக்க மூவரும் தனித்தனியாக சென்று வாருங்கள்" என்று கேட்டுக் கொண்டார். 

மும்மூர்த்திகளும் மாறுவேடத்தில் அனுசுயாதேவியின் குடிலுக்குள் நுழைந்தனர். அவர்களை வரவேற்று விருந்து படைத்தார் அனசூயா. அதில் திருப்தியுறாத அவர்கள், அனசூயா தேவியை ஆடை ஏதும் அணியாமல் உணவு பரிமாறும்படி கேட்டனர். அதற்கு உடன்படுவதாகத் தெரிவித்த அனசூயா தேவி, தன் கணவரும் தவ ஸ்ரேஷ்டருமாகிய அத்ரி மகரிஷியை மனதுக்குள் வணங்கி அவர் கமண்டலத்திலிருந்த நீரை அவர்கள் மூவரின் மேலும் தெளித்து மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றி, அவர்களை மடியில் கிடத்தித் தாய்ப்பாலும் அருந்தும்படி செய்தார். 

அப்போது குடிலுக்குத் திரும்பிய அத்ரி மகரிஷியும் தமது ப்ரார்த்தனையின் பலனே இம்மூவரும் என்று சொல்லியபடியே மூன்று குழந்தைகளையும் வாரி அணைக்க 3 தலைகளும் 2 கால்களும் 6 கைகளும் ஒரே உடலில் இணைய தத்தாத்ரேயர் அவதரித்தார். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழுகின்ற தத்தாத் ரேயரின் ஆறு கரங்களில் மும்மூர்த்திகளுக்குரிய ஆயுதங் களும், அவருக்கு அருகில் நான்கு வேதங்கள் நான்கு நாய்களாகவும் சித்தரிக்கப் பட்டுள்ளதை நாம் பார்க்க முடியும். 

அத்ரியின் புதல்வர் என்பதும் மூவரின் அம்சங்களும் நிறைந்தவர் எனக்குறிக்க தத்த+ஆத்ரேயர் என்ற பெயர் கொண்டார்.இவரின் அவதாரம் மார்கழிப் பௌர்ணமியில் மிருகசீர்ஷ நக்ஷத்திரத்தில் நிகழ்ந்தது. 

ப்ரயாகையில் இவருக்குக் கோயில் இருக்கிறது. அவதூதரான இவருக்கு தண்டம், கமண்டலம், காஷாயம் போன்றவை கிடையாது. உத்திரப் ப்ரதேசத்தில் குருமூர்த்தி என்றால் அது தத்தாத்ரேயரையே குறிக்கும்.  அதேபோல இவர் இமயத்தில் நெடுநாட்கள் ஆத்ரேய மலைப்பகுதியில் தவம் இயற்றிய குகைக்கு தத்தா குகை என்றே பெயர். ஸஹய மலையில் காவிரியின் உற்பத்தி ஸ்தானத்துக்கருகிலும், சித்ரதுர்கா மலைப்பகுதியிலும், குல்பர்கா அருகே கங்காபூரிலும் இவர் தவம் புரிந்த குகைகள் இருக்கின்றன. 

தமிழகத்தில் சேர்ந்தமங்கலத்திலும், சேலம் ஸ்கந்தகிரியிலும், புதுக்கோட்டையிலும், சேங்காலிபுரத்திலும் தத்தருக்கு சிலைகளுடன் ப்ரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன. 

அதேபோல் அவதூதரான தத்தாத்ரேயர் தனக்கு ஞானத்தைக் கற்பித்தவர்கள் யார் என்று விளக்கமளிக்கும் உரையாடல் மிகவும் தத்வார்த்தமும் தெளிவும் நிறைந்ததாகும். 

முன்னொரு காலத்தில் யது என்னும் பெயர் கொண்ட அரசன், பிறந்த மேனியாய்ச் சுற்றிக்கொண்டிருந்த யௌவனரான ஒரு துறவியிடம்,

”மனிதர்கள் பெரும்பாலும் நீண்ட ஆயுள், புகழ் பாராட்டு, செல்வம் ஆகியவற்றை அடையவே அறம், பொருள், இன்பம், வீடென்ற சக்கரத்துள் அழுந்தியிருக்கிறார்கள். சதா காமம், லோபம் என்கிற தீயில் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீரோ அவைகளால் தீண்டப்படாமல், கங்கையில் மூழ்கிக் களிக்கும் யானையைப் போல - இப்படி ஆனந்தமாய்த் திரிகிறீரே? உமக்கென்று எந்தச் செயலுமின்றி இருக்க எப்படிச் சாத்தியமாயிற்று?” என்று கேட்டான்.

”என் புத்தியில் புகுந்து குருவாய் விளங்குபவர்கள் எனக்குப் பலர் இருக்கிறார்கள். அந்த ஆச்சாரியர்களிடமிருந்து நான் பெற்ற போதனையால் நான் முக்தனாகச் சஞ்சரிக்கிறேன். என்றபோதும் நான் போதனை பெற்ற 24 குருமார்களைப் பற்றிக் கூறுகிறேன். கேளும்.

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், மாடப்புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேகரிக்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்தி, குளவி ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.

(இன்னொரு இடுகையில் தொடர்வேன்)

6 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

பூமி, காற்று, ஆகாயம், நீர், நெருப்பு, சந்திரன், சூரியன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில் பூச்சி, தேனீ, யானை, தேன் சேர்க்கும் வேடன், மான், மீன், பிங்களை எனும் வேசி, குர்ரப் பறவை, குழந்தை, குமரிப் பெண், அம்பு தயாரிப்பவன், பாம்பு, வண்டு, கூட்டில் உள்ள புழு ஆகியோரே அவர்கள்” என்றார் அவதூதரான தத்தாத்ரேய மஹரிஷி.

ஒவ்வொருவரிடமும் என்ன கற்றார்..?
அறிவின் ஜோதி பிரகாசிக்கட்டும்

Ramani சொன்னது…

இதுவரை அறியாத அரிய தகவல்களுடன் கூடிய
அருமையான பதிவு
தாத்த்ரேயர் குறித்த அருமையான பதிவைத் தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தத்தாத்ரேயரும் 25 குருமார்களும்"

தத்த குருவுக்கு நமஸ்காரம்..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பகிர்வு அருமை..சேந்த மங்கலம் தத்தாத்ரேயர் சன்னிதி சென்றுள்ளேன்..அடியேனும்!

சிவகுமாரன் சொன்னது…

நான் புனேயில் இருந்த இரண்டு வருடங்களில் தத்தாத்ரேயரை அடிக்கடி தரிசனம் செய்ததுண்டு.
இங்கு பிள்ளையார் கோயில் போல அங்கு தத்தா ஆலயங்கள் எல்லா இடங்களிலும் தென்படும்

நிலாமகள் சொன்னது…

தாள் ப‌ணிந்து அறிய‌க் குவிந்து கிட‌க்கின்ற‌ன‌ அனேக‌ம் த‌ங்க‌ளிட‌ம்...! எம் கைக‌ள் கொண்ட‌ம‌ட்டும் அள்ளிக் கொள்கிறோம். ந‌ன்றி ஜி! அந்த‌ ஜியைக் கேட்டால் இந்த‌ ஜியிட‌ம் கிடைப்ப‌த‌ற்கு!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...