4.12.11

ரமண மகரிஷி முக்தியடைந்த தருணம்

ரமண மகரிஷி குறித்த புத்தகங்களைப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவரது வீடியோக்களைத் தேடியபோது மிக அபூர்வமான அவரது இந்த வீடியோக் காட்சிகள் பொக்கிஷமாய் அகப்பட்டன. அவரின் இறுதி மூச்சு அவரது ஸ்தூல உடலை விட்டு விக்ருதி வருடம் சித்திரை மாதம் 2ம் தேதிக்ருஷ்ண பக்ஷத் த்ரயோதசியும் பூரட்டாதி நக்ஷத்ரமும் கூடிய வெள்ளிக்கிழமையின் முதல் யாமத்தில் ( 14-04-1950 @ இரவு 8.47 ) விடைபெற்றது. 

அந்தக் கடைசி மூச்சுக்கு முந்தைய இரு நாட்களின் சம்பவங்களை ஸ்ரீ ரமணாச்ரம வெளியீடான “ஸ்ரீ ரமண மஹா நிர்வாணம்” என்ற புத்தகத்திலிருந்து இங்கு தருகிறேன். அதுவும் இந்த வீடியோக் காட்சியின் குரலும் கிட்டத்தட்ட அதிகாரப் பூர்வமான ஒரே தகவலை வெவ்வேறு மொழிகளில் சொல்வதாகவே எனக்குப் பட்டது.


“ மஹாநிர்வாணத்துக்கு இரண்டு நாள் முன்னர், புதன்கிழமை மாலை, தம்மை தரிசித்த ஒவ்வொருவரையும் பகவான் அருளுடன் ஆழ்ந்து நோக்கினார். இதுவே முடிவான கடாக்ஷமோவென்று சில உள்ளங்களில் ஐயம் எழுந்தது, அவ்வாறேயாயிற்று. அடுத்த இரண்டு நாட்களும் உடற்களைப்பு, வழக்கம்போல் ஒருபக்கந்திரும்பிப் பார்க்க இடந்தரவில்லை. பார்வை நேரே நிலைத்திருந்தது; சில காற் கண்மூடியிருந்தார் பகவான்; எனினும் உடலிற் பிராணன் ஓடிய மட்டும், சற்றும் நீங்காத் தெளிவுடன் இருந்தார்; அவசியமானபோது, அருகில் இருந்தவருடன் பேசவுஞ்செய்தார்.

வியாழக்கிழமை காலை, நெஞ்சுக்கபத்தை நீக்கப் பஸ்மங் கொடுக்க வந்த வைத்தியர் ஒருவரை நோக்கி, பகவான், “ மருந்தெதற்கு? இரண்டு நாளில் எல்லாம் சரியாகிவிடும்” என்றுரைத்தார். அன்றிரவு, தமது பணியாளரைப் பார்த்து “ இனி என்னை யாருந் தொடவேண்டாம். அவரவர் வேலையைப் பாருங்கள்; தூங்குகிறவர் தூங்குங்கள். தியானிப்பவர் தியானியுங்கள்” என்றருளினார்.

வெள்ளி முற்பகல், இடைப்பக்கத்தைப் பிடித்துவிட்ட கிராமவாசியாந் தொண்டர் ஒருவரை நோக்கி, பகவான், “ தாங்க்ஸ்” என்று கூறி முறுவல் பூத்தார். ஆங்கிலம் அறியா அவ்வன்பர் அதன் பொருள் புரியாது விழிக்கவே, பகவான், “ அதுதான் ஓய்! நன்றியைத் தெரிவிப்பதற்கான இங்க்லிஷ் வார்த்தை. ரொம்ப நன்றி என்றர்த்தம்” என்று முகமலர்ச்சியுடன் விளக்கியருளினார். பணி செய்தோர் யாவர்க்கும் முடிவாகத் தமது பேரருளை பகவான் இவ்வாறு வெளியிட்டார் போலும்!

அன்று மாலை, பெருந்திரளாகக் கூடியிருந்த அன்பர் யாவரும் பகவானது த்ரிசனம் பெற்ற பின் தமதிருப்பிடந் திரும்பாது, கவலையில் ஆழ்ந்து மௌனமாயமர்ந்தனர்.

மாலை ஆறு மணிக்கு மேல், சாய்ந்த நிலையிலிருந்த தமதுடலை நன்றாயுட்கார வைக்கும்படி தொண்டர்களை அண்ணல் கேட்டுக் கொண்டார். அவ்வாறே அவர்கள் ஆண்டான் திருமேனியை நன்கமர்வித்தனர்; தலையை ஒருவர் சற்றே தாங்கி ஏந்திக்கொண்டார். சுவாச சிரமம் ஏற்படாதிருப்பதற்காக டாக்டர்கள் பிராண வாயுவை நாசிப்பக்கங் காட்டத் தொடங்கவும், திறந்த வலக்கையின் குறிப்பால், பகவான் அதை நிறுத்தச் செய்தார்.

தொண்டர்களும் வைத்தியர்களுமாக அருகே நின்ற பத்துப் பனிரெண்டு பேர்களுக்குத்தான் அச்சிறு அறையில் இடமிருந்தது. ஏனைய அன்பரின் பெருங் குழாம், நிர்வாண நேரம் நெருங்கியதறிந்து, பகவான்பால் ஒருமுகமாய்க் கருத்தைச் செலுத்தி, அசைவற்ற அமைதியுடன் வெளியே காத்திருந்தது.

அறைக்குள்ளிருந்த அன்பர்களின் கண்ணுங்கருத்தும் பக்திக்கனலுடன் பகவானிடம் முற்றிலும் அழுந்தியிருந்தன. இரு தொண்டர்கள் விசிறி வீசிக் கொண்டிருந்தனர். பூரண மௌனத்தில் யாவரும் அமிழ்ந்தனர். எதிரே, அறையின் வெளியே அமர்ந்து, சில அன்பர்கள், ஸ்ரீ பகவான் அருள்வாக்காம் அருணாசலசிவ ஸ்துதியைப் பாடத் தொடங்கியதும், பகவான் ஒரு கணம் கண்ணைத் திறந்து தம்முன் நோக்கினார். பகவானது கண் வெளியோரத்திருந்து ஆனந்தவமுதத் துளிகள் சிந்தின.


அசலமாய் வீற்றிருந்த அண்ணலை ஒருவர்பின்னொருவராய் இத்தனை நாளும் தரிசித்துச் சென்ற அன்பர்கள் போலவே, இறுதி மூச்சுக்களும் ஒன்றன் பின்னொன்றாய் அமைதியாய் ஒரே சீராய் நடந்து சென்றன. இறுதி மூச்சும் இவ்வரிசையில் ஒன்றேபோன்றிருந்தது. அண்மையிலிருந்தோர் அடுத்த மூச்சை எதிர்பார்த்திருக்க, மேலுமோர் அசைவின்றிப் பிராணன் அப்படியே அமைதிமயமாய் அனைத்துலகின் ஆதாரமும் மூலஸ்தானமுமாகிய இதயத்தே முற்றிலும் ஒடுங்கியது.

பகவான் மஹாநிர்வாணம் எய்திய அதே கணத்தில் வான வெளியில் தெற்கேயிருந்து பகவானது இருக்கையின் மேல் வழியே வடதிசையிலுள்ள அருணாசலத்தை நோக்கிப் பிரகாசமிக்க ஒளியொன்று ஜோதிரேகை கீரிச் சென்றது. தமிழ்நாட்டின் பலவிடங்களில் இவ்வற்புதம் காணப் பெற்றதென்று பிறகு தெரிந்தது.”

காலங்களைக் கடந்த இந்த வீடியோக்களில் இடம் பெற்ற உரையும் குரலும் எத்தனை உருக்கமும் கவிதை நயமும் பொருந்தியவை. அக்குரலுக்குப் பின்னே ஆழமான உணர்வுகளைத் தூண்டும் வாத்தியங்களின் தேர்வும் இக்காட்சிகளை அற்புதமான அனுபவத்தை தரிசனத்தைத் தந்து மனதை நிறைக்கிறது- 61 வருடங்களுக்கு முந்தைய ஏப்ரலுக்கு ஒரே தாவலில்.

இந்த இறுதி நிமிடங்களைப் பதிவு செய்த பின் ரமணர் குறித்துப் படித்தவற்றில் சில துளிகள்:

# 1948ம் ஆண்டின் முடிவில் ரமணரின் இடது முழங்கைப் புறத்தில் ஒரு சிறிய தசை வளர்ச்சி தோன்றி சிறுகச் சிறுக வளர்ந்து அடுத்த ஃபெப்ருவரிக்குள் ஒரு நெல்லிக்காய் அளவு பெரிதானது. ஆச்ரம வைத்திய சாலையின் வைத்தியர் அதை சஸ்திர முறையில் எளிதாக நீக்கிக் கட்டுக்கட்ட அது இருந்த இடம் தெரியாமல் பத்து நாட்களில் குணமானது.

# இரண்டாம் முறை 1949ம் ஆண்டு மார்ச் மாதம் 27ல் அதே இடத்தில் மறுபடியும் தசை வளர்ச்சி காணப்படவே சென்னையிலிருந்து தேர்ச்சி பெற்ற சஸ்திர நிபுணர்கள் வருகை தந்து மறுபடியும் அதை நீக்கிக் கட்டுப் போட்டனர். ஆனால் நோயணுக்களை ஆராய்ந்தபோது அது கொடிய புற்றுநோய் ( சர்கோமா) எனக் கண்டுகொண்டனர். ஆயுர்வேதம் இந்நோயை ரக்தார்புதம் என அழைக்கிறது.

# ஏப்ரலில் ரேடியம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆயினும் அதன் வளர்ச்சி தீவிரமாகவே இடது கையைத் துண்டிப்பதே மாற்றெனக் கருதி பகவானிடம் கூற அதற்கு ரமணர் மறுத்துவிட்டார். தொடர்ச்சியாக பச்சிலை வைத்தியமும் செய்யப்பட்டது.

# ஆகஸ்ட் 7ம் தேதி மூன்றாம் முறையாக சஸ்திர சிகிச்சை செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ரேடியம் சிகிச்சை அளித்தனர். குணமடைந்தது போலத்தோன்றிய இந்நோய் மீண்டும் பெரிதாகக் கிளைத்தது. டிசம்பர் 19ம் தேதி நான்காம் முறை சஸ்திர சிகிச்சை செய்யப்பட்டது.

# இந்நிலையில் ஹோமியோபதி மருத்துவ முறையும் கையாளப்பட்டது.இது தவிர மலையாள அஷ்டவைத்தியர் ஆயுர்வேத சிகிச்சையும் வங்காளக் கவிராஜர் வைத்தியமும் முயன்றும் எதுவும் தீர்வாய் அமையாது புற்று உள்முகமாய் தீவிரமாகப் பரவியது.

# 1950ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி ரமணரின் 70ம் ஜயந்தி கொண்டாடப்பட்டது. அப்போது அண்ணாமலையார் கோயில் யானை ரமணரை நீண்ட நேரம் சேவித்து நின்றதன் பின் தனது துதிக்கையால் பகவானது திருவடிகளை எட்டித் தொட்டு விடைபெற்றுக்கொண்ட அரிய காட்சி வழிபாட்டுக்கு வந்திருந்த ஒரு சமஸ்தான ராணியால் வீடியோ எடுக்கப்பட்டது. ( இந்த நிமிடம் வரை இந்த வீடியோவையும் தேடிக்கொண்டிருக்கிறேன்.)

# ஞானிக்குத் தேகமொழித்தலை சுமையிறக்குதலுக்கும் சாப்பிட்ட இலையை எறிதலுக்கும் மிக எளிய உவமைகளால் ஒப்பிடும் ரமணர் “நான் போய்விடப் போகிறேன் என்று கவலைப் படுகிறார்கள். எங்கே போவது? எங்கே வருவது. போக்கேது? வரவேது?” எனும் தத்துவ விசாரத்தின் மூலம் தனது அசரீரத் தன்மையையும் தேசகால வரையிலாப் பூர்ணாத்ம பாவத்தையும் உரைக்கிறார்.

# பண்டிதர்- பாமரர்- ஏழை- பணக்காரர்- குழந்தை- கிழவர் என்ற பேதமின்றி எல்லோரும் அவரைத் தரிசித்தார்கள். எல்லோரையும் ஒரே விதமான புன்னகையுடனேயே ரமணர் வரவேற்றார். எல்லா ஜீவராசிகளும் அவரோடு நெருக்கமாயிருந்தன. அணில்கள் அவர் சமிக்ஞைக்குக் கட்டுப்பட்டு அவர் மேனியின் மேல் ஓடி விளையாடின. குரங்குகள் அவர் கையால் பழங்களை வாங்கி உண்டன. அவற்றின் சர்ச்சைகளை ரமணர் பலமுறை தீர்த்து வைத்திருக்கிறார். மயில்கள் அவர் முன் ஆனந்தமாய் நடனமாடின.

# 20 ஆண்டுகளாய் ரமணரோடு வாழ்ந்த லக்ஷ்மி என்கிற ஆசிரமப் பசு தன்னை யார் துன்புறுத்தினாலும் தொழுவத்திலிருந்து அறுத்துக்கொண்டு ரமணரின் அறைக் கதவின் அருகில் புகார் சொல்லும் பாவத்துடன் வந்து நிற்பது அங்குள்ளோருக்கு அதியமான காட்சியாய் இருக்கும். ரமணாச்ரமத்தில் மான் - காகம்- நாய்-பசு லக்ஷ்மி ஆகிய நான்கின் சமாதிகளும் இருக்கின்றன.

12 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அரியதோர் காணொளி....

ரிஷபன் சொன்னது…

எதுவும் செய்யத் தோன்றவில்லை சுந்தர்ஜி. வீடியோ+பதிவு பார்த்தபின்.

ஹ ர ணி சொன்னது…

மௌனித்திருக்கிறேன்.

இரசிகை சொன்னது…

remba porumaiyaa niraiyaa yezhuthiyirukenga..
sundarji..

ariya vaiththamaikku nantrikal.

:)

சிவகுமாரன் சொன்னது…

அருணாச்சல சிவ அருணாச்சல சிவ
அருணாச்சல சிவ அருணாச்சலா

....வேறொன்றும் சொல்லத் தோணவில்லை.

ராஜா MVS சொன்னது…

பகவான் ரமணர் பற்றிய அரிதான பல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி... நண்பரே...

ராஜா MVS சொன்னது…

வணக்கம் நண்பரே...
என் கணினியில் வீடியோ தடைசெய்யப்பட்டுள்ளது. ஆகயால் இந்த காணோளி என்னால் பார்க்கமுடியவில்லை. தங்களுக்கு சிரமமில்லையேல் என் மின்னஞ்சலுக்கு அனுப்பிவைக்க வேண்டுகிறேன்...
senthilrajatamil@gmail.com

Anonymous சொன்னது…

Good to see this video and information about Maharishi. Really it is very impressive about his spirituality.

RAMESHKALYAN சொன்னது…

மிக அருமையான பதிவு. மஹாநிர்வாணம் என்ற கையடக்க புத்தகத்தை போனவாரம்தான் படித்தேன். உங்களுடைய பதிவு ஒளிக்காட்சியுடன் இருப்பது நிறைவளிக்கிறது. வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காணொளி காணக்கிடைக்காத பொக்கிஷம் ..

Tamilan சொன்னது…

ஒளிக்காட்ச்சி பார்த்தது இனம்புரியாத ஓர் மௌன அனுபவம் ஏதாவது எழுதுஎன்று மனம் சொல்கிறது மௌனத்தின் வார்த்தைகளை மொழிபெயர்க்க முடியவில்லை "நன்றி"

D.selvakumar, சொன்னது…

அருமை

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...