30.8.12

கடவுளுக்கு நன்றி!

அறைக்கு வெளியே ”அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது” என்று யந்திர கதியில் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கக்கூடிய அதே வாசகங்களைக் கடவுளின் வடிவாய், குரலாய் டாக்டர்.குரியனின் குழுவினர் சொன்னபோது நான் கரைந்தேன்.

இதற்கு முன்பு என் இரு குழந்தைகளையும் ப்ரசவித்த என் மனைவியின் அருகே இது போன்ற உணர்வுக் குவியலில் இருந்திருக்கிறேன்.

கடவுளின் அருளுக்கும், அவர்களின் ப்ரதிநிதிகளாய்ச் செயல்பட்ட ஒவ்வொரு மருத்துவருக்கும், செவிலியருக்கும், துணையாளர்களுக்கும் நன்றி சொன்னேன்.

உங்கள் அல்லது நம் ஒவ்வொருவரின் ப்ரார்த்தனையையும் செவிமடுத்த ஆண்டவனின் அன்புக்கு நான் சொல்லும் நன்றி உங்கள் ஒவ்வொருவருக்கும்தான்.

தஞ்சாவூர்க்கவிராயர் விரைவில் ICUக்கு மாற்றப்படுவார். அவர் நினைவு திரும்ப இன்றிரவு ஆகலாம். மீண்டும் மயக்கநிலைக்கு ஆட்படுத்தப்பட்டு நாளை முழுவதும் நினைவற்ற நிலையிலேயே இருப்பார்.

நினைவற்ற அந்த நிலை? அது எப்படியிருக்கும்? வலிந்த மயக்க நிலையில் இந்த 59 வருட வாழ்வின் அல்லது முந்தைய பிறவிகளின் சுவடுகள் தெரியக்கூடுமா? தெரியவில்லை.

அவர் நினைவு திரும்புகையில் உங்கள் ஒவ்வொருவரின் வாழ்த்தையும் அவருக்கு நான் தெரிவிப்பேன்.

இன்று மரத்தை விட்டுக் கிளம்பிய பறவைகள் கூடு திரும்புகையில் அவற்றை ரசிக்கும் மனநிலையைக் கொடு இறைவா!என்று என் ப்ரார்த்தனையை முடித்திருந்தேன்.

இன்றைக்கு அந்தப் பறவைகளை, அவற்றின் கூவலை என்னால் எப்போதும் போல் ரசிக்க முடியும்.

29.8.12

கோபாலி! சீக்கிரமா வாங்க!

என் நண்பர்களுள் மிக நெருக்கமானவரும், வழித்துணையுமான தஞ்சாவூர்க்கவிராயர் (கோபாலி) இதய அறுவை சிகிச்சைக்காக இன்று மெட்ராஸ் மெடிகல் மிஷனில் அனுமதிக்கப்பட இருக்கிறார்.

அறுவை சிகிச்சைக்கான நாளும், நேரமும் அவரின் உடல்நிலை (சர்க்கரையும், ரத்த அழுத்தமும்) கண்காணிக்கப்பட்ட பின் முடிவாக இருக்கிறது.

நவீன மருத்துவத்தில் இவ்விதமான சிகிச்சைகள் தற்போது மிகுந்த லாவகத்துடனும், கண்காணிப்புடனும் நடைபெறும் இவ்வேளையில் இந்த அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு, அவர் பரிபூரண நலம் பெற்று மீண்டும் எழுதத் துவங்கும் நாளை நான் ஆவலுடன் எதிர்நோகியிருக்கிறேன்.

கடந்த பத்து நாட்களில் அவரோடு என்னால் நிறைய நேரங்களில் உடனிருக்க முடிந்தது. பாரதியின் கட்டுரைகள், சார்வாகன், நகுலன், க.நா.சு, வள்ளலார் போன்றோரின் எழுத்துக்களை நான் வாசிக்க அவர் கேட்டுக்கொண்டிருந்தார். கர்ணன் திரைப்படத்தில் வரும் உள்ளத்தில் நல்ல உள்ளம் என்னைப் பாடச் சொன்னார். அவர் வீட்டில் வந்து தங்கிச் செல்லும் பறவைகளைப் பற்றி, குறித்த நேரத்தில் இரைக்காகக் கிளம்பி வரும் ஐந்து கட்டெறும்புகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்துவந்த பின் நாம் இருவரும் ஒரு பயணம் மேற்கொள்ளவேண்டும் எனவும், சின்ன அளவில் ஒரு ஹோட்டல் நடத்திப் பார்க்கவேண்டும் எனவும் என்னிடம் ஆசைப்பட்டார்.

அவர் மனைவி அவருக்கு அறுவை சிகிச்சை அவசியம் என்று ஆஞ்சியோக்ராம் முடிந்து தெரிவித்தவுடன் தேம்பி அழுதது இன்னும் என் மனதிலேயே உறைந்திருக்கிறது.

தன் எழுத்துக்கள் மூலம் இந்தச் சமூகத்துக்கு சிகிச்சைகள் தந்து, வாழ்வின் ரசத்தைப் பருக வைக்கும் இந்த எளிமையான கலைஞன், மீண்டும் புது உற்சாகத்துடனும் ஆரோக்யத்துடனும் திரும்பி வரவேண்டி என் இஷ்ட தெய்வம் சுவாமிமலை முருகனின் பாதங்களில் பணிகிறேன்.

மருத்துவமனையின் வெளிப்புறம் உங்களுக்காகக் காத்து நிற்கிறேன் கோபாலி. சீக்கிரமா வாங்க!

24.8.12

என் நண்பர் ஆத்மாநாம்.

[ஸ்டெல்லா ப்ரூஸ் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்னால் எழுதிய இறுதிக் கடிதம்:]

“கடந்த 67 வருட எனது வாழ்க்கை பற்றி வருத்தங்கள் இல்லை. எளிய, உண்மையான, அடக்கமான மனிதனாக ஆடம்பர சிந்தனை துளியும் இல்லாமல் வாழ்ந்திருக்கிறேன். கண்ணை இமை காப்பது போல் என்னைப் பார்த்து அலாதியான காதலுடன் நேசித்து, பத்திரப்படுத்தி, அபூர்வ, ஆனந்த மனைவியாக என் மனைவி ஹேமா வாழ்ந்தார்.

எத்தனை பிறவியானாலும் இதை மறக்க மாட்டேன். நானும், அவளும் வாழ்ந்த வாழ்க்கை அற்புதமான, ஆன்மீகமான, இலக்கியத் தன்மையான காவியம். ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கை சூனியமாக இருக்கிறது. என்னால் அதைத் தாங்க முடியவில்லை. தனிமைச் சிறை கடும் தன்மையாக என்னை நெரிக்கிறது. எனவே நான் ஹேமாவிடம் செல்கிறேன். மரணத்தின் கதவுகளைத் திறந்து, வாழ்க்கை தண்டனை ஆகிவிடும் போது மரண விடுதலை பெறுகிறேன்.”

#

போன வருடம் என்னை அடைந்து என்னை அயரவைத்த புத்தக வரவு ஸ்டெல்லா ப்ரூஸ் கடைசியாக எழுதும்படியான “என் நண்பர் ஆத்மாநாம்” என்ற புத்தகத் தொகுப்புத்தான். நானும், தஞ்சாவூர்க்கவிராயரும் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்குப் பயணித்த ஒரு ரயில் பயணத்தில் இருவருமாகத் தொடர்ந்து வாசித்து முடித்த புத்தகம்.

விருட்சம் சிற்றிதழில் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இது.
’என் நண்பர் ஆத்மாநாம்’, ‘சைவ உணவும் வேறு பல ஞாபகங்களும்’, ’கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள்’, ’ஜவஹர்லால் நேருவுக்கு நான் எழுதிய கடிதம்’, ’மரணங்கள்’ என்னும் தலைப்புக்களில் 103 பக்கங்களில் ஐந்து கட்டுரைகளும், அவர் மனைவி ஹேமாவின் சகோதரி ப்ரேமா த்யானேஸ்வரி எழுதிய “சாம்பல் நிறங்கள்” என்ற ஒரு சிறுகதையும், அவர் மனைவி ஹேமாம்புஜத்தின் ஆறு கவிதைகளும், ஸ்டெல்லா ப்ரூஸ் “ஹேமா இல்லை” என்ற தலைப்பில் எழுதிய ஒரு கவிதை என்று கணிக்க முடியாத கலவையாய் இந்தத் தொகுப்பு.

இதில் என்னை வசீகரித்தது ஸ்டெல்லா ப்ரூஸின் கட்டுரைகள்தான். நான் ஸ்டெல்லா ப்ரூஸை இதற்கு முன்னால் வாசித்தது இல்லை. அது என்னை அவரின் முந்தைய எழுத்துக்களைத் தேட வைத்தது. 

அவர் காளி-தாஸ் என்ற பெயரில் எழுதிய கணையாழியில், நானும் எழுதிய சில கவிதைகளின் மூலமாக சந்தித்திருக்கிறோம் என்பதையே அவரின் மரணத்துக்குப் பின்னரே அறிந்தேன். 

1970ல் ஜெயகாந்தனின் ஞானரதத்தில் அவரின் முதலாவது கதை ப்ரசுரமானது- ராம்மோகன் என்ற பெயரில். பொதுவாக எழுதுபவர்களைச் சந்திக்கப் பெரிய ஆர்வமற்ற நான், சந்திக்காது தவற விட்ட ஒரு ஆளுமையாக இவரை நினைக்கிறேன்.

இந்தத் தொகுப்பின் மிகச் சிறந்த கட்டுரை ”சைவ உணவும் வேறு பல ஞாபகங்களும்”.

விருதுநகரில் ராம்மோஹன் என்ற பெயரில் பிறந்த காரணத்தில் தொடங்கி, தன் பரம்பரையின் உணவுப் பழக்கங்களுக்கு நேரெதிரான சைவ உணவுப் பழக்கம், தன் அப்பாவின் புத்தக வாசிப்பு, ஜே.கிருஷ்ணமூர்த்தி தொடர்பான தகவல்கள், தன் அப்பாவிற்கும், காமராஜுக்கும் உள்ள தொடர்பு, தன் மேல் ப்ரத்யேகமாக தன் அப்பா காட்டிய சிநேகம் என்று மிக அற்புதமான எழுத்து. மெல்லிய நகைச்சுவையோடு ஆரம்பிக்கும் இக்கட்டுரையின் சுடரை எடுத்துச் செல்கிறது தத்ரூபமான நுட்பமான பார்வை. நான் வாசித்த வரை தமிழில் எழுதப் பட்ட மிகச் செறிவான பத்து கட்டுரைகளில் இதற்கு மிக முக்கியமான இடமுண்டு.

40 வருடங்களாக மாமிசம் சாப்பிடாது தவிர்த்து வந்த அவரது அப்பா மறுபடியும் சாப்பிட ஆரம்பித்ததையும், 48 வயது வரை திருமணமே வேண்டாமென்றிருந்த ஸ்டெல்லா ப்ரூஸ், தன் 32 வயது வாசகியை மனைவியாக ஏற்றுக்கொண்டதையும் பொதுவான ஒரு சரடு இணைப்பதாகத் தோன்றியது. அந்தக் கட்டுரையின் முடிவை ஒரு அமானுஷ்யமான ஆன்மீக யூகத்துடன் முடித்த- எழுதினால் இப்படி ஒரு கட்டுரை நான் சாவதற்குள் எழுதிவிட வேண்டுமென பொறாமைப்பட வைத்த - ஸ்டெல்லா ப்ரூஸின் எழுத்துக்கு ஒரு சபாஷ்.

இதற்கு அடுத்த ஸ்தானத்தைப் பிடித்த கட்டுரை ”கண்ணுக்குத் தெரியாத சிலுவைகள்”. ஸ்டெல்லா ப்ரூஸின் ஆரம்ப கால வாசிப்பு ஆர்வம், அவர் சித்திக்கும் அவருக்குமான நேர்மையான உறவு, அவர் சித்தியின் எழுத்தார்வம், சித்தப்பாவின் கொச்சையான அணுகல் ஏற்படுத்திய எதிர்பாராத விலகல், மிக நீண்ட இடைவெளிக்குப் பின் ஒரு எழுத்தாளரான பின் சந்திக்க நேர்ந்த தருணங்கள் என மிக அற்புதமான விருதுநகர் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிய ஒரு கலைப் படைப்பு.

ஆத்மாநாமிற்கும், இவருக்குமிடையிலான உறவை பக்கம் பக்கமாக எழுதிச் செல்கிறது “என் நண்பர் ஆத்மாநாம்” கட்டுரை. வேறு யாருக்கும் ஆத்மாநாமுடன் இத்தனை நெருக்கமான உறவிருந்திருக்க முடியாது என்பதை இவர்கள் இருவருக்கும் இடையில் பகிரப் பட்ட உறவு சொல்கிறது. ஆத்மாநாமின் மனச் சிக்கல்கள் படிக்க நேரும்போது கண்களைக் கசிய வைக்கிறது. நவீன விருட்சத்தில் இந்தக் கட்டுரை மூன்று பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. அவற்றின் இணைப்பைக் கீழே தருகிறேன்.

http://navinavirutcham.blogspot.in/2008/07/1.html
http://navinavirutcham.blogspot.in/2008/07/1983.html
http://navinavirutcham.blogspot.in/2008/07/blog-post_30.html

ஆத்மாநாம் 1984ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் தேதி தற்கொலை செய்துகொண்டதைத் தாங்கமுடியாத  மனதைக் கனக்க வைக்கும் துக்கமாக அனுசரித்த ஸ்டெல்லா ப்ரூஸ், 24 வருடங்களுக்குப் பிறகு 2008 மார்ச் 1ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது ஒரு யதேச்சையான, துயர் படிந்த ஒற்றுமை.

தற்கொலையின் கசப்பை ஒரு மிடறு சுவைக்கக் கூட விரும்பாத ஸ்டெல்லா ப்ரூஸை, வாழ்க்கை ஒரு கோப்பை ததும்பப் பருகச் செய்ததுதான் வினோதம்.

ஸ்டெல்லா ப்ரூஸுக்கும், அவர் மனைவி ஹேமாவுக்குமான உணர்வு ததும்பும் பதிவு ”மரணங்கள்”. ஒரு வாசகியின் தளத்திலிருந்து, ஒரு கூட்டுப் பறவை போல் மனைவியாகிச் சிறகடித்துப் பயணித்த தடம் ஒரு ஆன்மீக அனுபவமாய்ப் பரிணமித்து நெஞ்சைக் கனக்க வைக்கும் பதிவாய் நீண்டு,  அனைத்திலும் ஹேமாவைத் தேடியபடி முடிகிறது.

மற்றுமொரு யூகிக்க முடியாத கோணத்தில் பயணிக்கும் ”ஜவஹர்லால் நேருவுக்கு நான் எழுதிய கடிதம்” சுவாரஸ்யம். 1962ல் இவர் பம்பாயில் இருந்த காலத்தில், டி.ஹெச். லாரன்ஸின் ’லோலிடா’, அதன் திரைப்பட அனுபவம், அதற்கு விதிக்கப்பட்ட தடை, இந்திய-சீனப் போர்ப் பின்னணி, நேருவுக்கு இவர் எழுதிய கடிதம், நேருவின் மரணம் என்று செல்லும் விறுவிறுப்பான கட்டுரை முடிவதை மனம் ஏற்க மறுக்கிறது.  

இக்கட்டுரைகளைத் தாண்டிச் செல்லும் மற்ற 30 பக்கங்களின் வாசிப்பு ஒரு கலைடாஸ்கோப்பிக் அனுபவத்தைத் தந்தாலும், என் ஓட்டு முதல் நூற்றுச் சொச்சப் பக்கங்களில் சொர்க்கத்தைப் படைக்கும் கட்டுரைகளுக்கே.

அழகியசிங்கர் ஸ்டெல்லா ப்ரூஸைப் பற்றிப் பகிர்ந்துள்ள நினைவுகளும், தேவராஜன் எழுதியுள்ள ’மன ஆழங்களில் பயணித்தவன்’ என்ற கட்டுரையும் அதிகம் அறியப்படாத ஸ்டெல்லா ப்ரூஸின் உள் உலகத்தை வெளிக்காட்டும் மிக முக்கியமான உரைகளாகும்.

ஏராளமான அச்சுப் பிழைகளை ஸ்டெல்லா ப்ரூஸின் எழுத்துக்காகத் தாங்கிக் கொள்ளலாம். அதே போல் வாசிக்கத் தடையாய் உள்ள பத்தி அமைப்பு. இரண்டையும் அடுத்த பதிப்பில் சரி செய்து விடுங்கள் அழகியசிங்கர். அற்புதமான எழுத்தைப் பதிப்பித்த உங்களின் முயற்சிக்குத் துணையாக, வேண்டுமானால் நான் உதவுகிறேன்! 

நான் என்றாவதொரு நாள் உருவாக்கப் போகும் திரைப்படமாக ”சைவ உணவும், வேறு பல ஞாபகங்களும்’ என்ற கட்டுரையைப் பார்க்கிறேன். அதற்கான தார்மீக உரிமையை மானசீகமாக ஸ்டெல்லா ப்ரூஸிடம் கோருகிறேன். தருவீர்களா ஸ்டெல்லா ப்ரூஸ்?

நல்ல எழுத்தின் லாகிரியைப் பருக விரும்புபவர்கள் தவற விடக் கூடாத அனுபவம் “ என் நண்பர் ஆத்மாநாம்”. அவசியம் விலை கொடுத்து வாங்கிப் படிக்கவும், இந்த எழுத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளவும் முயலுவோம்.

ஸ்டெல்லா ப்ரூஸின் கண்ணுக்குப் புலப்படாத விரல்களுக்கு என் முத்தம்.

(என் நண்பர் ஆத்மாநாம்- கட்டுரைகள்- ஸ்டெல்லா ப்ரூஸ்- விருட்சம், +919444113205, 044-24710610- 152 பக்கங்கள்- விலை ரூ.100/=)

18.8.12

நாளை முடிந்தால் தப்பிக்கவும்.



அறிவிப்பும், எச்சரிக்கையும் சரிபாதியாய்க் கலந்து செய்த கலவை இது.

நாளை (ஞாயிறு 19.08.2012) பொதிகை தொலைக்காட்சியில்  கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர்”. 

இசைக்கவி ரமணன் மற்றும் கவிஞர் ரவி உதயனோடு நானும் பங்குபெறும் நிகழ்ச்சி நண்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

அவசியம்  நிகழ்ச்சியைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

வள்ளலாரின் நித்ய கர்ம விதி

வள்ளலாரின் வாழ்க்கை எப்படி அமைந்தது? எப்போது பிறந்தார்? அவரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் என்ன?இந்த மாதிரி மனதில் எழும் கேள்விகளுக்கு இந்த இடுகையைப் பயன்படுத்தப் போவதில்லை. 

ஆனால் அவர் ஒரு மிகப் பெரிய சித்தர் என்பதிலும், தன்னுடைய வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் தான் இதுவரை நம்பிய விஷயங்களையெல்லாம் தூக்கியெறிந்து விட்டு, தன் புதிய நம்பிக்கையை முன்வைக்கும் இடத்திலும் அவர் மற்ற ஆன்மீகவாதிகளைக் கடந்து செல்கிறார். உருவ வழிபாட்டைக் கடந்து ஜோதி வழிபாட்டை நோக்கி நகர்கிறார்.        
                             
 //நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. 

நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.//-(வள்ளலார்- பேருபதேசம்)

அதுபோலவே, மூலிகைகளின் உபயோகம் குறித்தும், உடலைக் காப்பது குறித்தும், மூச்சுப் பயிற்சி குறித்தும் மிக விரிவாகவே வெளிப்படையாக நிறையப் பேசியிருக்கிறார். இவருக்கு முன்னால் வேறு எந்த சித்தரும் இப்படி வெளிப்படையாக இத்தனை சூட்சுமங்களைத் தெரிவித்ததில்லை.

ஆகவே வள்லலாரின் நித்ய கர்ம விதி என்பது ஒரு ரஸவாதம் போல மிக மிக அபூர்வமான ஒரு பயிற்சிக்கான விதியாகத்தான் நாம் கொள்ள வேண்டும். இந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்து முறைக்கும் மேல் ஆதியோடந்தமாக வாசித்து விட்டேன். 

அவர் உபயோகித்திருக்கும் மொழியும், தன்னையே பரிசோதித்து அவர் கண்டு சொல்லியிருக்கும் விஷயங்களும் இன்னும் முழுமையாக சோதித்துப் பார்க்கப் படாமல், ஒரு குறிஞ்சி மலர் போலக் காத்து நிற்கிறது. இன்னும் 500 வருடங்கள் போன பின் மெல்ல விழித்தெழுந்து ஆஹா! 1800களிலேயே எப்படிப்பட்ட அற்புதத்தை நிகழ்த்திவிட்டுச் சென்றிருக்கிறார் வள்லலார் என்று நாம் வியந்து கொண்டிருப்போம். 

வழக்கம்போலவே கைக்கெட்டும் தூரத்தில் அமுதமே கிடைத்தாலும் நேரமில்லை என்ற சால்ஜாப்போடு அதைத் தவிர்த்துவிட்டு, பின்னால் நாம் தவிர்த்த விஷயத்தைப் பற்றியே நேரெதிராக விமர்சனமும் பண்ணுவோம்.  

இனி அவரின் நித்ய கர்ம விதியை முழுதுமாக ஊன்றிப் படியுங்கள். வேறு வழியில்லை. இது நீளமான பதிவென்றாலும் இதைப் பிரித்து எழுதினால் அதன் ஆர்வம் குறைந்து போகும். அதற்கடுத்து பொது விதியும், சிறப்பு விதியும் பற்றி இன்னொரு பதிவாக எழுதலாம் என்றிருக்கிறேன்.

கீழே இருக்கும் சாதாரண விதி அப்படியே வள்ளலாரின் நூற்றாண்டுக்கு முந்தைய சுவாரஸ்யமான மொழியில்.

1. சாதாரண விதி

சூரியோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்து, விபூதி தரித்து சிறிது நேரம் உட்கார்ந்து, கடவுளைத் தியானஞ் செய்தல் வேண்டும்.

பின்பு களிப்பாக்கு மிகுதியாகவும் வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் போட்டுக்கொண்டு,முன் ஊறுகிற ஜலத்தை உமிழ்ந்து, பின்வரும் ஜலத்தையெல்லாம் உட்கொள்ளல் வேண்டும்.*

பின்பு எழுந்து உள்ளே சற்றே உலாவுதல் வேண்டும்.பின் மலஜல உபாதிகளைக் கழித்தல் வேண்டும். மலங்கழிக்கின்றபோது, வலது கையால் இடது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். ஜலம் கழிக்கும் போது, இடது கையால் வலது பக்கம் அடிவயிற்றைப் பிடித்திருத்தல் வேண்டும். 

மலமாவது ஜலமாவது பற்றறக் கழியும் வரையில், வேறு விஷயங்களைச் சிறிதும் நினையாமல், மலஜல சங்கற்பத்தோடு இருக்க வேண்டும். மலம் பின்னுந் தடைபடுமானால், இடது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை வலத்தே வரும்படி செய்து கொண்டு, மலசங்கற்பத்தோடு மலவுபாதி கழித்தல் வேண்டும். ஜலம் தடை பட்டால், வலது பக்கமாகச் சற்றே படுத்துப் பிராண வாயுவை இடது பக்கம் வரும்படி செய்து கொண்டு, ஜல சங்கற்பத்தோடு ஜலவுபாதி கழித்தல் வேண்டும்.


மலஜல வுபாதி கழிந்த பின், செவிகள், கண்கள், நாசி, வாய் தொப்புள் - இவைகளில் அழுக்கு, பீளை, சளி, ஊத்தை என்கின்ற அசுத்தங்களையும், கைகால் முதலிய உறுப்புக்களிலுள்ள அழுக்குகளையும் வெந்நீரினால் பற்றறத் துடைத்தல் வேண்டும். 

பின் வேலங்குச்சி, ஆலம்விழுது - இவைகளைக் கொண்டு பல்லழுக்கெடுத்து**, அதன் பின் கரிசலாங்கண்ணித்தூள் கொண்டு உள்ளே சிறிது சாரம் போகும் படி பல்லில் தேய்த்து வாயலம்பின பின்பு, பொற்றலைக் கையாந்தகரை இலை அல்லது கரிசலாங்கண்ணி இலை ஒரு பங்கு, தூதுளையிலை***முசுமுசுக்கையிலை கால்பங்கு, சீரகம் கால் பங்கு - இவைகளை ஒன்றாகச் சேர்த்துச் சூரணமாகச் செய்து கொண்டு, அதில் ஒரு வராகனெடை ஒரு சேர் நல்ல ஜலத்திற் போட்டு, அதனுடன் ஒரு சேர் பசுவின் பால் விட்டுக் கலந்து, அதிலுள்ள ஒரு சேர் ஜலமுஞ் சுண்டக் காய்ச்சி அந்தப் பாலில் நாட்டுச் சர்க்கரை கலந்து சாப்பிடல் வேண்டும்.



காலையில் இளம் வெய்யில் தேகத்திற் படாதபடி, பொழுது விடிந்து 5 நாழிகை பரியந்தம் உடம்பைப் போர்வையோடு காத்தல் வேண்டும். பின்பு வெய்யிலில் நெடுநேரம் தேகமெலிவு வரத்தக்க உழைப்பையெடுத்துக் கொள்ளாமல், இலேசான முயற்சியில் சிறிது வருத்தந்தோன்ற முயலுதல் வேண்டும். பின் இளம் வெந்நீரில் குளித்தல் வேண்டும். விபூதி தரித்துச் சிவசிந்தனையோடு சிறிது நேரம் இருத்தல் வேண்டும்.

பசி கண்டவுடன் தடை செய்யாமல் ஆகாரம் கொடுத்தல் வேண்டும். ஆகாரங் கொடுக்கும்போது, மிகுந்த ஆலசியமுமாகாது^^ மிகுந்த தீவிரமுமாகாது^^, முதற்பக்ஷம் சீரகச்சம்பா அரிசி அன்றிப் புன்செய் விளைவும் காரரிசியுந் தவிர நேரிட்ட அரிசியின் வகைகள் - ஆகும். 

அது சாதமாகும்போது, அதிக நெகிழ்ச்சியு மாகாது, அதிக கடினமும் ஆகாது. நடுத்தரமாகிய சோற்றை அக்கினி அளவுக்கு அதிகப்படாமலும் குறைவு படாமலும் அறிந்துண்ணுதல் வேண்டும். ஆயினும் ஒரு பிடி குறைந்த பக்ஷமே நன்மை. போஜனஞ் செய்த பின்னர் நல்ல நீர் குடித்தல் வேண்டும். அந்த நல்ல நீரும் வெந்நீராதல் வேண்டும் அதுவும் அதிகமாகக் குடியாதிருத்தல் வேண்டும்.

கிழங்கு வகைகள் உண்ணாமல் இருக்க வேண்டும். அவற்றில் கருணைக்கிழங்கு மாத்திரம் கொள்ளுதல் கூடும்^. பழ வகைகள் உண்ணாதிருத்தல்வேண்டும். அவற்றில் பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் - இவை நேர்ந்தால் சிறிது கொள்ளுதல் கூடும். 

பழைய கறிகளைக் கொள்ளாதிருத்தல் வேண்டும். பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்க வேண்டும். மிளகு சீரகம் அதிகமாகச் சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது அவசியமல்ல. 

உப்பு குறைவாகவே சேர்த்துக் கொள்ளல் வேண்டும்#. அன்றி, எந்த வகையிலும் உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம். 

தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பக்ஷத்தில் நல்லெண்ணெய் சிறிது சேர்க்கவுங் கூடும். 

வெங்காயம் வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும். கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய், கலியாணபூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய் - இவைகள் பதார்த்தஞ் செய்தல் கூடும். 

இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் - இவைகளை அடுத்தடுத்துக் கறி செய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் செய்து கொள்ளலாம். 

வடை, அதிரசம், தோசை, மோதகம் முதலிய அப்பவர்க்கங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளவுங் கூடும். 

சர்க்கரைப் பொங்கல், ததியோதனம், புளிச்சாதம் முதலிய சித்திரான்னங்கள் கொள்ளப்படாது; ஏகதேசத்தில் சிறிது கொள்ளலாம். 

புளியாரைத் துவையல் தினந்தோறும் கிடைக்கினும் மிகவும் நன்று. கரிசலாங்கண்ணிக்கீரை, தூதுளைக்கீரை, முன்னைக்கீரை, பசலைக்கீரை, முருங்கைக்கீரை - இவைகளைப் பருப்போடு சேர்த்தும், மிளகோடு சேர்த்தும், புளியிட்டும், தனித்தும், கறிசெய்து கொள்ளக் கூடும். மற்றைக் கீரைகள் ஏகதேசத்தில் நேரில் சிறிது சேர்த்துக் கொள்ளவுங் கூடும். 

புளித்த தயிர் சேர்த்தல் கூடும். பருப்பு வகைகளில் முளைகட்டாத துவரம் பருப்பு அல்லது முளைகட்டின துவரம்பருப்பு மிளகு சேர்த்துக் கடைதல், துவட்டல், துவையல் செய்தல், குழம்பிடல், வேறொன்றில் கூட்டல் முதலியவாகச் செய்து, நெய் சேர்த்துக் கொள்ளுதல் கூடும். அந்த நெய்யை மிகவுஞ் சேர்க்கப் படாது. 

மற்றப் பருப்பு வகைகள் அவசியமல்ல. ஏகதேசத்தில் நேர்ந்தால் கொள்ளவுங் கூடும். 

சுக்கைச் சுண்ணாம்பு தடவிச் சுட்டு, மேலழுக்கைச் சுரண்டிப் போட்டுச் சூரணமாக்கி வைத்துக்கொண்டு, நல்ல ஜலத்திற் கொஞ்சம் போட்டு, 5 பங்கில் 3 பங்கு நீர் சுண்ட 2 பங்கு நீர் நிற்கக் காய்ச்சி, அதைத் தாகங் கொள்ளுதல் வேண்டும். நேராத பக்ஷத்தில் வெந்நீராவது கொள்ளுதல் வேண்டுமே யன்றிக் குளிர்ந்த ஜலங் கொள்ளப்படாது. 

எந்தப் போஜனத்திலும் புலால் எந்த வகையினும் புசிக்கப்படாது. எப்படிப்பட்ட போஜனமாயினும் சிறிது குறையவே புசித்தல் வேண்டும். எந்தக் காலத்திலும் பசித்தாலல்லது எந்த வகையிலும் போஜனஞ் செய்யப்படாது. வாத பித்த சிலேத்துமங்கள் அதிகரிக்கத்தக்க போஜனங்களை அறிந்து விடல் வேண்டும்.

பகலில் போஜனஞ் செய்தவுடன் சற்றே படுத்தெழுந் தல்லது வேறு காரியங்களிற் பிரவேசிக்கப்படாது. ஆயினும் நித்திரை வரும்படிப் படுக்கப்படாது. பகலில் எந்த வகையிலும் நித்திரை யாகாது##. 

சிறிது படுத்து எழுந்த பின் பாக்கும் வெற்றிலையும் குறைவாகவும் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் தாம்பூலம்^^^ பஞ்சவாசங்களோடு தரித்து முதலில் ஊறிய ஜலத்தைப் புறத்தில் உமிழ்ந்து விட்டுப்பின்பு ஊறுஞ் ஜலத்தை உட்கொள்ளல் வேண்டும். 

பகற் போஜனஞ் செய்த சுமார் பதினேழரை நாழிகைக்குப் பின்பு, பேயன் வாழைப்பழம் ரஸ்தாளி வாழைப்பழம் பங்காள வாழைப்பழம் சிறிது சர்க்கரை சேர்த்து நேர்ந்தால் சாப்பிடக்கூடும். காலையில் பால் சாப்பிடும்போது பசி அதிகரித்திருந்தால், இந்தப் பழங்களில் நெய், சர்க்கரை கலந்து சிறிது சாப்பிடக்கூடும். 

பகலில் பெண்கள் தேகசம்பந்தங் கூடாது. பகற்போஜனஞ் செய்த பின், சற்று நேரங் கடவுளைத் தியானித்திருக்க வேண்டும். அதன் பின் எந்த வேலை செய்யினுந் தேக கரணங்களுக்கு மெலிவு உண்டு பண்ணுகிற வேலைகளாகச் செய்யப்படாது. செய்யினும் சிறிது சிறிதாகச் செய்தல் வேண்டும்.

சாயங்கால வெய்யில் தேகத்திற் படும்படி சிறிது உலாவுதல் வேண்டும். காற்று மிகுந்தடிக்கில் அப்போது உலாவப்படாது. அன்றி கடின வெய்யில், பனி, மழை - இவைகள் தேகத்திற்பட உலாவப் படாது.

இராத்திரி முன் பங்கில் தேகசுத்தி செய்து, விபூதி தரித்துச் சிவத்தியானஞ் செய்தல், தோத்திரஞ் செய்தல், சாத்திரம் வாசித்தல், உலகியல் விவகாரஞ் செய்தல் - இவை முதலியவை கூடும். பின் போஜனஞ் செய்தல் வேண்டும். இராப் போஜனம் பகற் போஜனத்தைப் பார்க்கிலும் அற்பமாகப் புசித்தல் வேண்டும்###. 

இரவில் தயிர்*^, கீரை, வாயுவான பதார்த்தம், குளிர்ச்சியான பதார்த்தம் சேர்க்கப்படாது. சூடான பதார்த்தங்களையே அறிந்து சேர்க்க வேண்டும். அவை சிறுகத்திரி முருங்கை அவரை வற்றல் முதலியவையாம். இரவில் போஜனஞ் செய்தபின், சிறிது உள்ளே உலாவுதல் வேண்டும். பின்பு சிவத்தியானம் முதலியவை செய்தல் வேண்டும். 

சுமார் 12நாழிகைக்கு மேல் காலைக்குச் சொல்லியபடியாவது தனித்தாவது பசுவின் பாலை நன்றாகக் காய்ச்சிப் புசித்தல் வேண்டும். பின் சில நேரஞ் சென்று சுமார் 15 நாழிகையில் பாக்கும் சுண்ணாம்பும் மிகவுங் குறைய வெற்றிலை மிகவும் அதிகப்படக் கலந்து பஞ்சவாசத்தோடும் போட்டுக் கொண்டு முதல் ஜலத்தையுமிழ்ந்து பின் வருஞ் ஜலத்தையுட் கொண்டு, திப்பியை யுமிழ வேண்டும். மற்ற வேளையும் தாம்பூலத்தின் திப்பியை உமிழுதல் அவசியம்.

பெண்களுடன் தேகசம்பந்தம் செய்ய வேண்டில், முன் ஒரு நாழிகை பரியந்தம் மனத்தைத் தேகசம்பந்தத்தில் வையாது வேறிடத்தில் வைத்துப் பின் சம்பந்தஞ் செய்தற்குத் தொடங்கல் வேண்டும். 

தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் - என்றால், வேறுபடாமல் - மன முதலிய கரண சுதந்தரத்தோடு, தேகத்திலும் கரணங்களிலுஞ் சூடு தோன்றாமல், இடது புறச் சாய்வாகத் தேகசம்பந்தம் செய்தல் வேண்டும். 

புத்திரனைக் குறித்த காலத்தன்றி மற்றக் காலங்களில் சுக்கிலம் வெளிப்படாமலிருக்கத்தக்க உபாயத்தோடு தேகசம்பந்தஞ் செய்தல் வேண்டும். அவ்வுபாயமாவது பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல் வெளியேயும் விடாமல் நடுவே யுலாவச் செய்து கொள்ளுதலாம். ஒரு முறையன்றியதன் மேலுஞ் செய்யப்படாது. 

தேகசம்பந்தஞ் செய்த பின், தேகசுத்தி செய்து திருநீறணிந்து சிவத்தியானஞ் செய்து பின்பு படுக்க வேண்டும். எந்தக் காலத்தில் எது குறித்துப் படுத்தபோதிலும், இடதுகைப் பக்கமாகவே படுத்தல் வேண்டும்^*.

பின்பு ஏழரை அல்லது பத்து நாழிகையளவு நித்திரை செய்தல் வேண்டும். அதன் பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடனிருத்தல் வேண்டும். இரவில் தேகசம்பந்தம் 4 தினத்திற் கொருவிசை செய்தல் அதம பக்ஷம். 8 தினத்திற் கொருவிசை செய்தல் மத்திம பக்ஷம். 15 தினத்திற்கொருவிசை செய்தல் உத்தம் பக்ஷம். 

அதன் மேற்படில் சுக்கிலம் ஆபாசப்பட்டுத் தானே கழியும். 4 தினத்திற்கொரு விசை செய்யில் சுக்கிலம் நெகிழ்ச்சிப்பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும், ஆதலில், அதம பக்ஷமாயிற்று. இரவில் சொப்பனம் வாராது மிருதுவாகவே நித்திரை செய்து விழித்துக் கொள்ளல் வேண்டும்.

எப்போதும் பயத்தோடிருக்கப்படாது. பரிச்சேதம் பயமில்லாமலும் இருக்கப்படாது. எப்போதும் மனவுற்சாகத்தோடிருக்க வேண்டும். கொலை, கோபம், சோம்பல், பொய்மை, பொறாமை, கடுஞ்சொல் முதலிய தீமைகள் ஆகா. உரத்துப் பேசல், வேகமாக நடத்தல், ஓடி நடத்தல், வழக்கிடல், சண்டையிடல் கூடா. எந்த விதத்திலும் பிராணவாயு அதிகமாகச் செலவாகாமற்படி ஜாக்கிரதையோடு பழகுதல் வேண்டும்.

பொற்றலைக்கையாந்தகரையை உலர்த்தித் தூள் செய்து வைத்துக்கொண்டு, அதை நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சித் தலைக்கிட்டு 4 நாளைக்கு ஒருவிசை வெந்நீரில் முழுக வேண்டும். அன்றி வாரத்திற்கு ஒருவிசையாவது முழுகுதல் வேண்டும். 

தூளில்லாத பக்ஷத்தில் நல்லெண்ணெயைக் காய்ச்சியே முழுகுதல் வேண்டும். புகைக்குடி, கஞ்சாக்குடி, கட்குடி, சாராயக்குடி முதலிய மயக்கக்குடி களாகா. 

மலஜலத்தைச் சிறிதும் அடக்கப்படாது#^. சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது. துன்மார்க்கப்பழக்கஞ் செய்யக்கூடாது. எந்த வேலை செய்யினும், எந்த விவகாரஞ் செய்யினும், சிவசிந்தனையோடு செய்து பழகுதல் வேண்டும்.

இந்தத் தேகத்தில் புருவமத்தியில், நமது ஆன்ம அறிவென்கிற கற்பூரத்தில், கடவுள் அருளென்கிற தீபம் விளங்குவதாகப் பாவித்துப் பார்த்து, அதில் பழகிப் பழகிக் கடவுளிடத்தே உண்மையாகிய அன்பையும், ஜீவர்களிடத்தே உண்மையாகிய காருணியத்தையும் இடைவிடாமல் வைத்து, ஓங்காரபஞ்சாக்ஷர ஞாபகஞ்செய்தல் வேண்டும்; சிவபஞ்சாக்ஷர ஞாபகஞ் செய்தல் வேண்டும்; அவசியம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
* 1.இது இல்லத்தார்க்கு மட்டுமே விதித்தது. துறவறத்தார்க்குத் தாம்பூலம் தரித்தல் விலக்கு.

வெற்றிலையில் நுனியையும், காம்பையும் கிள்ளியெறிந்து விடவேண்டும். முதுகு நரம்பை நகத்தால் எடுத்து விட வேண்டும். பல் துலக்குமுன் தாம்பூலம் தரிக்கக்கலாகாது.

காலையில் பாக்கு மிகுதியாகவும், உச்சியில் சுண்ணாம்பு மிகுதியாகவும், மாலையில் வெற்றிலை மிகுதியாகவும் கொள்ளவேண்டும். மென்றவுடனே முதல் இரண்டுமுறை ஊரும் நீரை விழுங்காது உமிழ்ந்து விடவேண்டும்.

தாம்பூலம் தரிக்கையில் முதலில் பாக்கைப் போட்டுக்கொள்ளாமல், முதலில் வெறும் வெற்றிலையை வாயில் போட்டுக்கொண்டு, பிறகே பாக்கைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

** 2.இல்லத்தார் வேம்பு, வேல், பூல், ஆல், மா, அத்தி, தேக்கு, நாவல், ஆத்தி, கடம்பு, விளா, அசோகு, குருக்கத்தி, சண்பகம் முதலியன. இவை தாது புஷ்டியைத் தரக் கூடியவை.

துறவிகளுக்குப் பெருவாகை, நொச்சி, மருது, மகிழ், பெருங்குமிழ், புங்கு, நாயுருவி, கருங்காலி, கையாந்தரை, காட்டாமணக்கு முதலியன. இவை போகத்தில் இச்சையைக் குறைக்கக் கூடியவை.

பட்டமரம், பாளை, கைவிரல்கள், செங்கல், மண், மணல், சாம்பல், கரி ஆகிய எட்டும் இரு பிரிவினருமே பல் துலக்குவதற்கு ஆகாதன.

*** 3.கையாந்தரையும், தூதுளையும் ஞானப் பச்சிலைகள். இவற்றை வள்ளலார் அடிக்கடி வற்புறுத்துகிறார்.

 ^^4.ஆலசியம்-தாமதம். தீவிரம்- விரைவு. 

^ 5.மன்பரவு கிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்- பதார்த்த குண சிந்தாமணி. 

#6.உப்பு, புளி, மிளகாய் இவை உடலுக்குக் கேடு. புளிக்குப் பதில் எலுமிச்சையும், மிளகாய்க்குப் பதில் மிளகும் மிக உகந்தது.

## 7.பகல் உணவுக்குப் பின் -ஆழ்ந்த உறக்கமாக அன்றி-சற்றே துயில்வதும், இரவு உணவுக்குப் பின் சற்று உலாவுதலும் வேண்டும். (பகலுறக்கஞ் செய்யோம்- பதார்த்த குண சிந்தாமணி)

^^^8. 1ம் குறிப்பைப் பார்க்கவும்.

### 9.பகல் உணவிற் பாதியளவே இரவில் புசிக்க வேண்டும். அதுவும் 10 நாழிகைக்குள் புசிக்க வேண்டும்.

*^ 10.காலை மாலை யுறங்குவர் காரிகை
     கோலமேனி குலைந்தபின் கூடுவர்
     சாலி ராத்தயிர் சாதமொ டுண்பவர்
     மாலை நேரினும் மாது பிரிவளே.       -தனிப்பாடல் திரட்டு.

காலை மாலை உறங்குவோரும், விதவைகளையும் தம்மில் மூத்த பெண்களையும் சேர்வோரும், இரவு தயிர்சாதம் உண்போரும், திருமாலைப் போன்ற செல்வமுடையவராயினும் திருமகள் அவர்களை விட்டு நீங்குவாள்.

^* 11.இடது கையிற் படுப்போம்- பதார்த்த குண சிந்தாமணி

#^ 12.இரண்டடக்கல் செய்யோம்- பதார்த்த குண சிந்தாமணி.

( அந்தக் கதவுகளுக்குப் பின்னால்தான் வள்ளலார் முக்தி அடைந்தது)

16.8.12

இறைவன் எங்கே இருக்கிறான்?

நான்கு ஆரக்கால்களுடன் சக்கரம் செய்கிறோம். என்றாலும் அச்சாணிக்கும் சக்கரத்துக்கும் இடையே உள்ள வெற்றிடத்தாலேயே அது இயங்குகிறது. நான்கு புறமும் சுவர் எழுப்பி மேலே கூரை வேய்கிறோம். எனினும் இடையே உள்ள வெற்றிடத்தில்தான் நாம் வசிக்கிறோம். உலகில் தோன்றும் பொருட்கள் யாவும் உபயோகத்துக்குரியவை என்றாலும் அவற்றின் பின்னணியில் மறைந்திருக்கும் தோன்றாப் பொருளில்தான் உயிரோட்டமான வாழ்வு உள்ளது. 
-லா வோ த்ஸூ.
லா வோ த்ஸூவின் இந்த சிந்தனை இருப்பவற்றில் இருந்து இல்லாத பரம்பொருளைத் தேடும் ஞானத்தைத் தருகிறது. வெற்றிடத்தில் இருந்து பூரணத்தை அறியும் வழியைக் காட்டுகிறது. இரண்டல்ல ஒன்று எனும் விடையில் இருந்து ஒன்றில் எல்லாமும் என்ற நிறைவுக்கு இட்டுச் செல்கிறது.
திருவருட்செல்வர் திரைப்படம் பார்த்தவர்களும் இதைப் படிக்கலாம். 
சேக்கிழாரை நோக்கி சோழ மன்னன் கேட்டான்:
1. இறைவன் எங்கே இருக்கிறான்?
2. எந்தத் திசையை இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறான்?
3. இப்போது அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாருக்குக் குழப்பம். இந்த மூன்று கேள்விகளுக்கும் பதில் தெரியாத குழப்பம் இல்லை. ஆனால் எப்படி இதை சுருக்கமாக மன்னனுக்கு உணர்த்துவது என்ற குழப்பம்.
அவர் முகம் கண்டு கவலையின் காரணம் கேட்கிறாள் அவரது பத்து வயதுப் பேத்தி. மன்னன் கேட்ட கேள்விகளைச் சொன்னார் சேக்கிழார். இவ்வளவுதானா? கவலையின்றி உறங்குங்கள் தாத்தா. நான் போதுமே மன்னரின் கேள்விகளுக்குப் பதில் கூற என்று தன் தாத்தாவிற்கு ஆறுதல் கூறினாள் சிறுமி.
மறுநாள் மன்னனின் முன்னே நின்ற சிறுமியைக் கண்டதும் மன்னனுக்கு ஆச்சர்யம். சேக்கிழாரின் பேத்தி தன் கேள்விகளுக்கு விடை தர இருக்கிறாள் என்ற கூடுதல் மகிழ்ச்சி.
முதல் கேள்வியை அரசன் கேட்க, ஒரு கிண்ணத்தில் பால் கொண்டு வரச் சொன்னாள் சிறுமி.
”அரசே! இந்தப் பாலில் மறைந்திருக்கும் தயிர்,மோர், வெண்ணெய், நெய் இவற்றை உங்களால் காட்ட முடியுமா?”
அரசனுக்குப் பொறி தட்டியது போல இருந்தது. 
”இறைவன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறார்.மறைந்திருக்கிறார். நிறைந்திருப்பதைக் காண மறைந்திருப்பவற்றை அடைய வேண்டும். மறைந்திருப்பதை அடைய சில வழிகளும், அசைக்கவியலாத நம்பிக்கையும், உழைப்பும் தேவை.”
இரண்டாவது கேள்விக்கு ஒரு குத்துவிளக்கை ஏற்றச் சொன்ன சிறுமி, ”இந்த விளக்கின் சுடர் எந்தத் திசையைப் பார்க்கிறது?” எனக் கேட்டாள்.
மன்னன் புரிந்துகொண்டான்.ஆனந்தப் பட்டான்.
“ஒரு தீபத்தின் சுடர் எல்லாத் திசைகளையும் பார்க்கிறது.எல்லாத் திசைகளுக்கும் ஒளி தருகிறது- இறைவனைப் போல” என்றாள்.
மூன்றாவது கேள்விக்கு, தன்னை சிறிது நேரம் அரசியாக்கும்படி கேட்டாள். மன்னனும் சம்மதிக்க, அரசியான சிறுமி கட்டளையிட்டாள்.
“யாரங்கே? மந்திரி சபையில் உள்ள இவர்கள் எல்லோரையும் சிறையில் அடையுங்கள். சிறையில் இருப்பவர்களை எல்லாம் விடுவியுங்கள். இவர்கள் சொத்தைப் பறிமுதல் செய்து அவர்களிடம் கொடுங்கள்”
மன்னன் ஆச்சர்யமும் புதிரும் கலந்து சிறுமியைப் பார்க்க,
“இதைத்தான் கடவுள் செய்து கொண்டிருக்கிறார். மேலே இருப்பவனைக் கீழேயும், கீழே இருப்பவனை மேலேயும் கொண்டு வருகிறார். இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. பிறந்தவன் இறக்கிறான். இறந்தவன் பிறக்கிறான். உயர்ந்தவன் தாழ்கிறான். தாழ்ந்தவன் உயர்கிறான்.
சேக்கிழாரின் ஆனந்தத்தை அவர் விழிகளிலிருந்து கசிந்த கண்ணீர் வெளிப்படுத்த கண்களை மூடிக் கைகளைக் கூப்பி இறைவனை மனதால் தொழுது நின்றார்.
சிறிது நேரம் அரசியான சேக்கிழாரின் பேத்தி, மன்னனின் மனதில் நிரந்தரமாக சிம்மாசனம் இட்டு அமர்ந்தாள்.மன்னன் மண்டியிட்டு அந்த மகளைக் கடவுளாய்க் கருதி வணங்கினான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம்; வேழத்தில்
பட்டுருவும் கோல்பஞ்சில் பாயாது- நெட்டிருப்புப்
பாரைக்கு நெக்குவிடாப் பாறை, பசுமரத்தின்
வேருக்கு நெக்கு விடும்.
-இது நல்வழி தந்த ஔவையின் முதுமொழி.
இனிய சொல்லின் மேன்மைக்கு இதற்கு ஈடாக ஒரு தமிழ் பாட்டு இருக்கமுடியுமா என்பது, இதுவரை வாசித்த என் மிகக் குறுகிய அனுபவத்தில் இல்லை என்றே தோன்றுகிறது.
வலிய யானையின் மீது எய்யப்படும் அம்பு அதன் உடலை உருவி உள்ளே பாய்வது போல பஞ்சு மூட்டையின் உள்ளே பாயாது. வலிய இரும்பினால் செய்யப்பட்ட கடப்பாரை கற்பாறையைப் பிளக்காது. கொஞ்சமும் அசைந்துகொடுக்காத கற்பாறை ஏதோ ஒரு பசுமரத்தின் வேருக்கு இடம்கொடுத்து பிளந்துபோகும். அதைப் போல கொடுமையான கடும் சொற்களால் ஒரு இம்மியளவும் பயன் நேராது.இனிமையான சொல்லே வெல்லும்.
எத்தனை எளிமை! எத்தனை அபூர்வமான ஒப்பீடும், உவமையும்! நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஔவையின் மூதுரையிலிருந்து ஒவ்வொரு செய்யுள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜா தாள்பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.

யாத்திரை போகும்போது என்னென்ன கொண்டுபோக வேண்டும் என்ற விலாவாரியான பட்டியல் போட்டு இந்தப் பாட்டை எழுதியது யார்? 


இதற்கு விடையைப் பின்னூட்டத்தில் சரியாகச் சொல்லாதவர்களுக்கு அப்புறமாய்ச் சொல்லுகிறேன்.


க்ளூ: உருவத்தில் தமிழ் ஹிட்லர்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நூற்றி இருபத்தியொரு வருடப் பழமையான இந்தக் கடிதத்தைப் படியுங்கள். 

இது யாருக்கு எழுதியதென்று உங்களால் யூகிக்க முடிகிறதா?


Paris la May 7th 1891.
எனதன்பிற்குரிய மகாசாஸ்திரிகளே,
நாம் போன மாசமுமக்கெழுதின காகிதம் உங்கிட்ட வந்ததுக்கு முன்னே நீர் எமக்கனுப்பிய காகிதமடைந்தது. அதில் நீர் சிலப்பதிகார மச்சிற் பதிப்பித்தற்குரிய தென்றும், அதைப் பரிசோதித்துக் கொண்டு வருகிறேனென்றும், கண்ட பிரதிகளில் உரை தப்பியிருக்கிறதென்றும், இங்கு பெரிய புத்தகசாலையிற் சிலப்பதிகாரத்தொரு கையெழுத்துப் பிரதியுண்டாவென்றும் கேட்கிறீர்.
அதற்கு உத்தரங் கொடுக்க வருகிறோம்.
Bibliothique Nationale என்கிற பெரிய புத்தகசாலையிலிருக்கின்ற ஓராயிரந் தமிழ்க் கையெழுத்துப் புத்தகங்களெமக்கு நன்றாய்த் தெரியும். அவைகளின் list or cataloqueபண்ணினோமானால் அவற்றுள் சிலப்பதிகாரம் இல்லை.
பழைய புத்தகங்களோ வென்றால் அந்தச் சாலையிலே மணிமேகலை ஒரு கையெழுத்துப் பிரதியுண்டு. ஆனால் நாம் போன மாசம் எழுதிய காகிதத்திற் சொன்னபடி அந்தப் பிரதியில் பற்பல கவியும் வார்த்தையு மெழுதாமல் விட்டிருக்கின்றது. அந்தப் பிரதியிலும் மூலமாத்திர முரையின்றி வருகின்றது. அது ஓலைப் பிரதியாக்கும். நாம் அதைக் கடுதாசியிலெழுதினோம், நங்கட் சிறுபுத்தகசாலையிலே வைக்க, ஆதலால் நீரதைப் பார்க்க வேண்டுமேல் அந்தக் கடுதாசிப் பிரதியனுப்புவோம். நீரதைக் கண்டு மில்லாத கவிகளும் வார்த்தைகளும் போட்டுத் திருப்பி யனுப்பலாம்.
நாமிங்குத் தமிழைப் படித்தோமல்ல. நாம் பிள்ளையாயிருக்கும்போது எங்கடகப்பனார் காரைக்காலிலே French Judge ஆயிருந்தாரப்போதே தமிழைப் பேசவுமெழுதவும் படித்தோம். இங்கு நாம் செய்த சில கவிகளுமக்கு அனுப்புகின்றோம்.
இங்ஙனம்,
அன்புடையவன்
Julien Vinson
க்ளூ: மூன்றெழுத்தில் இவர் பெயர் இருக்கும்.

14.8.12

வள்ளல் யார்= வள்ளலார்



முதன் முதலாய் வள்ளலார் பரிச்சயமானது எனது ஆறாம் வகுப்பில்.

தமிழ் ஆசிரியர், சேத்தூர் சிங்கம் என்ற புனைபெயரோடும், பெரிய கடா மீசையோடும் பயமுறுத்திய திரு. நச்சாடலிங்கத்தின் வகுப்பு.

வள்ளலார் பிறந்த ஊரை மருதூர். அதை ’ர’ வராத சின்னச்சாமியிடம் கேட்டு, அவனும் விடாது ’மதுதூர்’ என்றே சொல்ல வெகுண்டு, அவன் காது மடலைத் திருகி, நாலு மொத்து மொத்தி வள்ளலாரின் அறிமுகத்தைத் துவக்கினார்.

வள்ளலாருக்கு ஏற்பற்ற முரணான வழியில் அவரின் அறிமுகம்.

வள்ளலாரின் வாழ்க்கை ஏராளமான ஆச்சர்யங்களும், புதிர்களும் நிறைந்த அளவிற்கு நேர் எதிரான எளிமையோடும், தெளிவோடும் அவரின் தத்துவங்களும், போதனைகளும்.

இன்றைக்கு வள்ளலாரின் சில அற்புதங்களும். சில கட்டளைகளும்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கோடைகாலத்தில் தரும சாலைக்கு வந்தவர்களில் பலர் மழையில்லாத காரணத்தால் பயிர்கள் எல்லாம் வாடுகின்றன என்றும் கால்நடைகளும், மக்களும் பல துன்பங்களுக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்றும் வள்ளலாரிடம் முறையிட்டனர்.

ஒரு செம்பு நீரைத் தனது காலில் ஊற்றும்படி கூறினார் வள்ளலார். அன்பர்களும் அவ்வாறே செய்தனர்.

என்ன ஆச்சரியம்! சற்று நேரத்தில் மேகங்கள் திரண்டு நான்கு அங்குல அளவுக்கு மழை பெய்தது.

அது கேட்டு புதுப்பேட்டை என்னும் ஊரில் உள்ள அன்பர்கள் வடலூருக்கு வந்து தங்கள் ஊரிலும் மழை இல்லாதது சொல்லி வள்ளலாரை அழைத்தார்கள்.

வள்ளலார் அங்கு சென்று ஆறு குடம் தண்ணீரைத் தன் தலையில் ஊற்றுமாறு கட்டளையிட்டார். ஊர் மக்களும் அவர் சொல்படி செய்தனர். அவ்வளவுதான்!

புதுப்பேட்டை கிராமத்தில் தண்ணீர் பொங்கியது. ஆறு, கிணறுகளில் நீர் நன்கு ஊறிப் பெருகியது. நீரின் சுவையும் கூடியது. ஊரில் நல்ல மழையும் பொழிந்து செழித்தது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

வள்ளலார் தரும சாலையின் வெளியே உச்சிப்பொழுதில் வெயிலில் அமர்ந்து தியானத்தில் மூழ்கி இருப்பார். அந்தச் சமயங்களில் வள்ளலாரின் தலைக்கும் சூரியனுக்கும் இடையே ஓர் அக்னிக் கம்பம் இருப்பது போல் தோன்றும்.

இது அனைவருக்கும் பழக்கப்பட்ட காட்சியாக இருந்திருக்கிறது.

இதைவிட இன்னொரு காட்சிதான் வள்ளலாரை வெறும் துறவியாக மட்டுமின்றி மாபெரும் சித்தராக உலகுக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

ஒருநாள் உச்சிவேளையில் தருமச்சாலையில் இருந்து வள்ளலார் வெளியே புறப்பட்டுச் சென்றார். வெகுநேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால், கவலைப்பட்ட சண்முகம் பிள்ளை என்னும் அன்பர் வெளியே வந்து தேடினார்.

ஓரிடத்தில் வள்ளலாரின் கை, கால் என்று அனைத்து அங்கங்களும் வெவ்வேறாகிக் கிடப்பதைக் கண்டு பயந்து பதறி மயங்கி விழுந்தார் அவர்.

உடனே வள்ளலாரின் அங்கங்கள் எல்லாம் ஒன்றாகி, சண்முகம் பிள்ளையை எழுப்பி, "இனி இப்படி என்னைத் தேடி வர வேண்டாம்!" என்று கூறி அவருடன் தருமச்சாலைக்குத் திரும்பினார்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சித்திவளாகத் திருமாளிகைக்குக் கிழக்குத் திசையில் சற்றுத் தூரத்தில் மரம், செடி, கொடிகளுக்கு இடையே ஒரு நீரோடை இருக்கிறது. வள்ளலாரைக் காணவருபவர்கள் அந்த ஓடையில் நீராடுவது வழக்கம். நீரோடையில் ஒரு முறை நீர் வற்றிவிட்டது. வள்ளலார் அங்கு சென்றார். தமது கரத்தால் நீரோடையைத் தொட, நீர் பொங்கி எழுந்து நிறைந்தது.

அது முதல் அந்த நீரோடை ‘தீஞ்சுவை நீரோடை’ என அழைக்கப்படுகிறது. கோடைகாலத்திலும் நீர் வற்றுவதில்லை. அது மட்டுமல்ல, இந்த ஓடையில் குளித்தாலும், அதன் நீரைப் பருகினாலும் நோய்கள் நீங்குகின்றன.

வள்ளலார் கரம் பட்டதும் சாதாரண நீரோடை, சக்தி வாய்ந்த நீரோடை ஆகிவிட்டது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கேள்வி: மரம், செடி, கொடி ஆகிய தாவரங்களும் உயிர்கள்தானே! அவற்றை ஆகாரமாக உட்கொள்வதும், உயிர்க்கொலை போலத்தானே?

வள்ளலாரின் பதில்: தாவரங்களும் உயிர்கள்தான். ஆனால், அவை தோன்றும் வித்துகள் வெறும் ஜடங்களே.

அவற்றை நாமே விதைத்து, உயிரூட்ட முடியும். அப்படி நாமே உயிரூட்டிய அந்த உயிர்களைக் கொல்லாமல், அந்தத் தாவரங்களில் உயிரின்றி, உயிர் தோன்றுவதற்குத் தகுதியுள்ள ஜடங்களான வித்துகளையும், காய்களையும், கனிகளையும், பூக்களையும், கிழங்குகளையும், தழைகளையுமே ஆகாரமாகக் கொள்கிறோம். தாவரங்களை வேருடன் பிடுங்கி ஆகாரமாகக் கொள்வதில்லை.

வளர்ந்த தாவரங்களின் விதைகள், காய், கனிகள் ஆகியவற்றைப் பறிக்கும்போது, மனிதர்களின் நகம், முடி ஆகியவற்றை அகற்றும்போதும் துன்பம் உண்டாகாதது போல் தாவரங்களுக்கும் துன்பம் உண்டாவதில்லை.

தவிர, மனிதர்களுக்கு மட்டுமே உரிய மனம் தாவரங்களுக்குக் கிடையாது என்பதால், அது உயிர்க்கொலையும் அல்ல; துன்பம் உண்டுபண்ணுவதும் அல்ல. எனவே, இது ஜீவகாருண்ய விரோதமாகாது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

சன்மார்க்க சங்கத்தார்களுக்கு வள்ளலார் 18 தருணங்களில் கட்டளைகள் பிறப்பித்திருக்கிறார். அவற்றில் ஒரு மாதிரிக்காக மூன்று வித்யாசமான கட்டளைகள் உங்கள் பார்வைக்கு. நூற்றி இருபது வருஷங்கள் தொலைவில் மிக நெருக்கமாக இருக்கிறது வள்ளலாரின் உரைநடை மொழிப்ரயோகம்.

26.10.1871ல் அன்பர்களுக்கு இட்ட தருமச் சாலைக் கட்டளை:

திருச்சிற்றம்பலம்

அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடனறிவிப்பது.

ஒருவனைப் பற்றி அனந்தம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பியிருங்கள். என்னா லுங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம். நான் இன்னுங் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன். அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில் வெளிப்படுவேன். அஞ்ச வேண்டாம். சாலையை லகுவாய் நடத்துங்கள்.

திருச்சிற்றம்பலம்.

09.03.1872ல் தருமச் சாலையிலுள்ளவர்களுக்கு இட்ட ஒழுக்கக் கட்டளை:

சிவமயம்

அப்பாசாமி செட்டியா ரவர்களுக்கு,

இந்த சாலையால் எனக்கு மிகவும் சலிப் புண்டாகிறது. அந்தச் சலிப்பு இரண்டு பக்கத்திலும் உபத்திரவம் பண்ணும். ஆதலால் சாலையிலிருக்கிறவர்க ளெல்லாம் சன்மார்க்கத்திற்கு ஒத்து வாயடங்கி மனமடங்கி இருக்க வேண்டும். என்மேற் பழியில்லை. சொல்லிவிட்டேன். பின்பு வந்ததைப் படவேண்டும்.

பிரஜோற்பத்தி
மாசி மீ உஅ

சன்மார்க்க சங்கத்தாருக்கு வள்ளலார் இட்ட இறுதிக் கட்டளை:

“நான் உள்ளே பத்துப் பதினைந்து தின மிருக்கப்போகிறேன். பார்த்து அவநம்பிக்கையடையாதீர்கள். ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தானிருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார். என்னைக் காட்டிக்கொடார்.”

ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 19ஆம் நாள், புனர்பூசமும், பூசமும் கூடும் நன்னாளில் 1874-ஆம் வருடம் ஜனவரி 30ம் தேதி வள்ளலார் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். இரவு பன்னிரண்டு மணிக்குச் சித்திவளாகத் திருமாளிகைத் திருஅறைக்குள் புகுந்தார். அவரது விருப்பப்படி, அவரது பிரதம சீடர்களான கல்பட்டு ஐயாவும், தொழுவூர் வேலாயுதமும் மூடப்பட்ட அறையின் வெளிப்புறத்தைப் பூட்டினார்கள்.

8.8.12

ஒரு படு பழைய கடிதம்


கோபாலி,

ப்ரகாஷுக்கு லெட்டர் எழுதியிருக்கிறேன். ஞாயிற்றுக்கிழமையின் சுகத்தில்.அது சாப்பிடும் முன்.இது சாப்பிட்ட பின்.புதன்கிழமை மாலையும் இரவும் கூடும் ஒரு விதமான மனதைக் கலங்க வைக்கும் நேரத்தில் லக்ஷ்மியோடு உங்களைப் பார்த்தது.

ப்ரகாஷால் புதன்கிழமை வர முடியவில்லை.அதனால் நீங்கள் சொன்னபடி என் ப்ளானை மாற்றிக்கொண்டு (முதலில் வியாழக்கிழமை இரவே பாண்டிச்சேரி புறப்படுவதாக இருந்தேன்)வியாழக்கிழமை இரவு நீங்கள்/ப்ரகாஷ்/நான்/சிவசு மற்ற நண்பர்களோடு Bertolucciயின் “தி லாஸ்ட் எம்பரர்” பார்த்துவிட்டு நள்ளிரவே பாண்டி புறப்பட முடிவு செய்தேன்.வியாழக்கிழமையன்று நானும்,ப்ரகாஷும் மட்டுமே மீதமாகிப் போக அருள் தியேட்டர் போய்(அதற்கு முன்னால் வெங்கடா லாட்ஜ் ஏ/சி ரூமின் கனத்த தனிமையை எங்கள் சிரிப்பாலும் பேச்சாலும் விலக்கி ஓட்டி சாப்பிட்டோம்)”த க்வெஸ்ட் ஃபார் ஃபயர்” சினிமா பார்த்தோம்.ப்ரகாஷ் சொல்லியிருக்கக்கூடும்.

நள்ளிரவு 2மணி வரை ப்ரகாஷும் நானும் திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டில் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தோம்.மனசுக்கு வருத்தமான சூழலைத் தந்தது அந்த இரவு.பொதுவாகவே ரயில்வே ஸ்டேஷனின் இரவுக்கும் பஸ் ஸ்டாண்டுகளின் இரவுக்கும் நிறைய வித்யாசங்கள் உண்டு.ரயில்வே ஸ்டேஷனின் இரவு கல்யாணச் சத்திரத்தின் ராத்திரி போலவும்,பஸ் ஸ்டாண்டின் இரவுகள் நமக்குப் பிடிக்காத ஒரு விருந்தாளியின் வீட்டில் கழிக்கும் இரவு போலவும் இருக்கும்.

என்னமோ எனக்கு இப்படியே தோன்றும்.ஒவ்வொரு கிழமையின் பகலும் தனித்தனியானது.வெள்ளிக்கிழமை காலைதான் வாரநாட்களிலேயே மனதுக்கு நிம்மதியான நேரம் போலவும்,சனிக்கிழமை மதியம் போல மனசை சோகமாக்கும் பகல் எதுவும் கிடையாது என்றும். இன்னும் இப்படியே நிறைய.இப்படியெல்லாம் பிரித்துப்பார்க்கலாமா?கூடாதா?தெரியவில்லை.

ஆனால் பிரித்துப் பார்க்கும் போது ஒரு பெரிய சிடுக்கு நூலை சிடுக்கெடுத்து முடித்தவுடன் கிடைக்கும் த்ருப்தி போல இது ஒரு விதம்.நமக்குள்ளே எத்தனை பைத்தியக்காரத்தனங்கள்!காதம்பரி சொல்லுவார்-”எல்லாப் பயல்களும் எப்படி இவ்வளவு சந்தோஷமா இருக்கானுங்க?நம்ம மட்டும் ஏன் ஸார் எப்பவும் கஷ்டப்பட்டுண்டே இருக்கோம்”னு.இதில் எனக்கு முழுக்க உடன்பாடு இல்லாவிட்டாலும் அவர் சொல்ற பாவம் ரொம்பப் பிடிக்கும்.

ரெண்டு மணிக்கு ப்ரகாஷ் கையில்/காலில் வலியோடு எனக்குக் கையசைத்துவிட்டு தன் பாட்டுக்குத் தனியாகவும், நான் பஸ்ஸில் தனியாகவும் போனபோது அழுகையை அடக்க முடியவில்லை.ரொம்ப மனது கஷ்டப்பட்டது.ரித்விக் கட்டக்கின் “மேக் தாக் தாரா”பார்த்த ஒரு இரவில் குலுங்கிக் குலுங்கி இதுபோல அழுதிருக்கிறேன்.அழுதபடியே எப்போது தூங்கினேன்?தெரியவில்லை.

அடர்த்தியான புகை மூட்டத்துக்கும்/பனிக்கும் நடுவே மீதியாகிப் போன கரும் சாலையில் பஸ் போய்க்கொண்டிருந்தபோது விழித்தேன்.பாண்டிச்சேரியை அடைய இன்னும் பத்து கி.மீ. என்று தெரிந்தது.தஞ்சாவூருக்கும்,பாண்டிச்சேரிக்குமான இடைவெளியை நீட்டல் அளவையால் சுமார் இருநூறு கி.மீ. என்று அளந்துவிட முடியாது.இடைவெளி இன்ஃபினிடிவ்.வெள்ளி/சனி வேலைக்குப் போனேன்.

வழக்கம் போல ஃபாக்டரி மேனேஜர் பெரிய ஸீரோ.அக்கௌண்டன்சி துணையோடு கி.பி.1950ல் வசித்துக்கொண்டு/அடிக்கடி இருமிக் கொண்டு/தொப்பையிலிருந்து நழுவுகிற பேண்டை அலட்சியமாகத் தூக்கிவிட்டுக்கொண்டு/இரு புருவத்துக்கிடையில் ஸ்ரீசூர்ணம் தீற்றிக்கொண்டு/பக்கத்தில் இருக்கும் லக்ஷ்மி என்கிற என் சக ஊழியரியான தெலுங்கு ப்ராம்மண ஸ்ரீமதியைத் தனியாய் நேரங்கிடைக்கும் போது தொட்டுத்தடவிக்கொண்டு அலைகிறார்.அடிக்கடி என்னை”மீனாக்ஷிசுந்தரம்,இங்க வாங்கோ”என்று கூப்பிட்டுத் தன் பைத்தியக்காரத்தனமான புராதனத் தூசி படிந்த அக்கௌண்டன்சியை என் மேல் சுமத்துகிறார்.

நேற்று சொல்லிவிட்டேன்-”மாடர்ன் மெதட் இப்படி இல்லை ஸார்.இடது கையில் பேனாவைப் பிடித்துக்கொண்டு ஈஸிசேரில் சாய்ந்து கொண்டு எண்ட்ரி போடும் சுலபம் உங்களை இன்னும் எப்படி எட்டவில்லை?என்று தொனிக்க.அதன் முகம் சுருங்கிப் போயிற்று.ஆனால் ஜாக்ரதையாகிவிட்டார்.

அதன் பின் வெகு நிதானமாக என்னை அணுகுகிறார்.அடிக்கடி”உள்ளே நம்ம கம்பெனி ப்ரொட்யூஸ் பண்ற பாட்டில் மௌத் ஸ்டாப்பர்ஸ்(ரப்பர் கார்க்குகள்)கறுப்பு. நீ சிகப்புய்யா”என்ற அர்த்தத்தில் நான் சிரிக்கிறேன்.அவருக்குப் புரிய மாட்டேன் என்கிறது.

என் பக்கத்தில் ரெங்கராஜன் என்கிற மதுராந்தக 34வயது அக்கவுண்டண்ட்,வலது பக்கம் லக்ஷ்மி,அவர்கள் எல்லாரும் ஒரே க்ரூப்.மேனேஜரை ஏமாற்றிவிட்டு ஆஃபீஸ் ஃப்ளாஸ்க் டீயை இரண்டு,மூன்று தடவை குடித்து விடுகிறோம்.நாங்கள் குடிக்கும் நேரத்தில் மேனேஜர் ஒண்ணுக்குப் போயிருப்பார்.தொண்டைக்குள் ’மேனேஜருக்கு நீரிழிவோ?’ என்ற சந்தேக தாகம் மையம் கொண்டிருக்கிறது.

சரி.ஆஃபீஸ் புராணம் ஜாஸ்தியாப் போச்சு.நிறுத்திக் கொள்கிறேன்.

பாண்டிச்சேரியின் பரந்த எல்லையில் 136B, கீழ ராஜ வீதி என்ற முகவரி கிடைக்காது என்ற ஏமாற்றத்தைப் போக்கிக்கொள்ளக் கைவசம் இருப்பது பழைய ஞாபகங்கள்-கொஞ்சம் புஸ்தகங்கள்-கடற்கரை-இன்னும் கொஞ்ச நாளில் என்னை அடைய இருக்கிற என் நண்பனான சைக்கிள்-நான் இன்னும் போகாத லைப்ரரிகள்-ஆஸ்ரம்-பார்க்க நேரமில்லாத தொலைவில் இந்திராபார்த்தசாரதி/ராஜு/மாலதி.இது தவிர இப்போதைக்கு சுந்தர்ஜியை மறக்கடித்து மீனாக்ஷிசுந்தரத்தை ஞாபகப்படுத்துகிற என் அலுவலகம்.வேறென்ன?

ப்ரகாஷின் உடல்நலத்தைத் தயவு செய்து கவனித்து அவரை ஆபரேஷனுக்கு உட்படுத்துங்கள்.தயவு செய்து அவரிடம் இதைச் சொல்லி அடுத்த மாதத்துக்குள் ஆபரேஷனை முடித்து விடுங்கள்.

எதிர்வீட்டில் ஒரு பெண் என்னை இன்று காலையில் இருந்து சைட் அடிக்கிறாள்.என்ன செய்ய?உங்கள் மனைவி/பெண் லக்ஷ்மி/பயல் பாரதி/அப்பா நலம்தானே?அன்பழகன்/ரமேஷ்பாபு/சுப்பராயலு/மு.ராமசாமி/ராமானுஜம் நலம்தானே?

ஒரு வாரத்துக்குள் பாண்டிச்சேரியில் ரூம் வாடகைக்குக் கிடைத்துவிடும்.அதுவரை ஆஃபீஸ் முகவரிக்கு லெட்டர் போடுங்கள்.என் மாமாவின் நண்பரின் ரூமில் தற்போது வாசம்.

காதம்பரிக்கு என் விபரம் தெரியப்படுத்தவும்.ஒரு வாரத்துக்குள் அவருக்கு லெட்டர் எழுதுவேன் என்றும் சொல்லவும்.அவர் வீட்டு நம்பர் 34ஆ?அல்லது 43ஆ?விவரம் தேவை.எழுதுங்கள்.

சுந்தர்ஜி,
20.02.1989

(என் 27 வருட மெ(மே)ன்மையான நட்பு கோபாலியுடன் -தஞ்சாவூர்க்கவிராயர்- பாறை போல் இறுகியிருக்கிறது. கிட்டத்தட்ட 22 வருஷங்களுக்கு முன்னால் எனக்கு முதன்முதலில் வேலை கிடைத்தபின் என் 24வது வயதில் எழுதப்பட்ட என் கடிதத்தின் உணர்வுகளில் இருந்து வெகுவாக நான் மாறியிருக்கிறேன்.

இன்றைக்கு என்னால் எழுதப்படும் ஒரு கடிதத்தில் மனிதர்களின் அடையாளங்கள் குறித்த விமர்சனங்கள் இடம் பெறாது.அன்று எழுதப்பட்ட கடிதத்தால் யாரின் மனதும் புண்பட்டிருந்தால் மன்னியுங்கள்.

ஆனாலும் அந்த வயதின் அடையாளமாய் இந்தக் கடிதத்தின் சருகு என்னை வருடிச் செல்கிறது.)

6.8.12

ரகசியம் பற்றிய சில குறிப்புகள்



I
நீ சொல்லாத ரகசியங்கள் 

மீதான யூகங்கள்
ஏதுமில்லை எனக்கு.

நீ சொல்ல விரும்பாதவற்றின்
மீதும் அப்படியே.

II
ரகசியங்கள் தீட்டுகின்றன 

எல்லோரும் விரும்பும்
வர்ணங்களாலான ஓவியத்தை.

என்றாலும்-
யாரும் விரும்புவதில்லை

தனக்குத் தெரியாமல்
வரையப்படும் ஓவியத்தை.

III

நழுவாத முடிச்சிட்டுத்தான் மறைகிறேன் 
ஒவ்வொரு முறையும்.

ஆனாலும் 
வெட்கங்கெட்டு அவிழ்கின்றன

ரகசியங்களால் நெய்யப்பட்ட
ஆடைகளின் முடிச்சுக்கள்.

IV
நினைவுறுத்துகின்றன-

காற்றைத் துறந்த பலூனைக்
கசிந்த ரகசியங்களும்-

காற்றுப் புகாதவற்றை
உருவாகாத ரகசியங்களும்-

ஊதிப் பருத்தவற்றை
வெடிக்க இருப்பவையும்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...