12.2.15

தனியே ஒரு கரித்துண்டு


தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தையே உபதேசிப்பது போல் தோன்றவே, போவதை நிறுத்தி விட்டான்.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஒரு பனிக்கால இரவில் பாதிரியார் அவனைச் சந்திக்க வந்தார்.

' அவர் அநேகமாகத் தன்னை மீண்டும் பிரார்த்தனையில் கலந்து கொள்ள வற்புறுத்தும் பொருட்டே வந்திருக்கலாம்' என்றெண்ணினான் ஜுவன். பலமுறை தான் பிரார்த்தனையில் கலந்து கொள்ளாமல் இருந்ததன் உண்மையான காரணத்தைத் தன்னால் சொல்ல முடியாது என்றும் அவன் எண்ணினான்.

ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி சமாளிக்கும் எண்ணத்தில், கணப்பு அடுப்பின் அருகில் இரண்டு நாற்காலிகளை இழுத்துப் போட்டபடி, தட்ப வெப்பம் பற்றிப் பேச ஆரம்பித்தான்.

பாதிரியார் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் ஏதாவது பேச முயன்று தோற்று தன் முயற்சியைக் கைவிட்டான் ஜுவன். சுமார் அரைமணி நேரம் இருவரும் எரியும் நெருப்பை உற்றுப் பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர்.

கணப்பு அடுப்பின் இன்னும் ஒரு கட்டை எரிய மீதமிருக்கையில் எழுந்த பாதிரியார், நெருப்பில் இருந்து ஒரு கரித்துண்டை விலக்கி தனியே வைத்தார்.

அந்தத் துண்டு கனன்று எரியப் போதுமான நெருப்பு இல்லாமல் அணைந்து குளிரத் தொடங்கியது.

' இரவு வணக்கம்' என்றபடியே புறப்படத் ஆயத்தமானார் பாதிரியார்.

' இரவு வணக்கம். மிகுந்த நன்றி' என்ற ஜுவன், " எவ்வளவு கொழுந்துவிட்டு ஒரு கரித்துண்டு கனன்று கொண்டிருந்தாலும், அதை நெருப்பில் இருந்து விலக்கினால், அது அணைந்து விடும். எவ்வளவு புத்திசாலியாக ஒருவன் இருந்தாலும், சக மனிதர்களிடம் இருந்து விலகி இருந்தால், விரைவில் அவன் ஒளி மங்கியவனாகி விடுவான். அடுத்த ஞாயிற்றுக்கிழமை உங்களை ஆலயத்தில் சந்திக்கிறேன்" என்றான்.

(பௌலோ கோயெலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து The solitary piece of coal என்ற பத்தி)

11.2.15

நீலகிரிக் குன்றுகளில்......

நான் ஆஸ்ட்ரேலியாவைச் சென்றடைந்த மறுநாள், சிட்னிக்கு அருகில் ஒரு பூங்காவிற்கு என் பதிப்பாளர் அழைத்துச் சென்றார். அதனுள்ளே இருந்த வனப்பகுதியில் பாறைகளால் அமைந்த குன்றுப் பகுதி நீலகிரி என்றழைக்கப்படுகிறது.

" அவர்கள் மூன்று சகோதரிகள்" என்று சொன்ன என் பதிப்பாளர், கீழ்க்கண்ட செவிவழிக் கதையைக் கூறலானார்.

ஒரு மந்திரவாதி தன் மூன்று சகோதரிகளுடன் சென்று கொண்டிருந்த போது, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான போர்வீரன் ஒருவன் அவரிடம் சென்று,

" இந்த அழகான சகோதரிகளில் ஒருவரை மணக்க விரும்புகிறேன்" என்றான்.

" இவர்களில் ஒருவரை மட்டும் நீ மணந்தால், மற்ற இருவரும் தாங்கள் அழகற்றவர்கள் என்று கருத நேரிடும். அதனால் மூவரையும் மனைவிகளாய் ஏற்றுக் கொள்ளும் இனத்தைச் சேர்ந்த போர்வீரனைத் தேடிச் செல்கிறேன்" என்ற மந்திரவாதி மேலே கடந்து சென்றார்.

ஆஸ்ட்ரேலியா முழுவதும் பல காலம் சுற்றி அலைந்த பின்னரும் அப்படி ஒரு இனத்தை அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை.

நடந்து நடந்தே வயதாகியும், சோர்ந்தும் போன சகோதரிகளில் ஒருத்தி, " குறைந்த பட்சம் ஒருவராவது சந்தோஷமாய் இருந்திருக்கலாம்" என்றாள்.

" நான் தவறு செய்து விட்டேன். ஆனால் இப்போது காலம் கடந்து விட்டது" என்றெண்ணினார்.

ஒருவரின் மகிழ்ச்சி என்பது பிறரின் துயரம் ஆகாது என்ற படிப்பினையை, அந்தக் குன்றுகளைக் கடந்து செல்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணத்தில், அவரின் மூன்று சகோதரிகளையும் கற்குன்றுகளாக மாற்றினார் அந்த மந்திரவாதி.

(பௌலோ கோயெலோவின் "நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து In the blue mountains என்ற பத்தி)

10.2.15

ஒன்றில் எல்லாம்

















சௌ பௌலோவில் பிறந்து ந்யூயார்க்கில் வசிக்கும் ஓர் ஓவியரின் இல்லத்தில் ஒரு கூட்டம்.

கோணங்கள் மற்றும் ரசவாதம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் 'நம் ஒவ்வொருவரிலும் இந்தப் பிரபஞ்சம் அடங்கியிருக்கிறது. அதனால் அதன் வளத்திற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்' என்ற ஒரு ரசவாத சிந்தனையை நான் விளக்க முயன்ற போது, என் வாதத்தை விளக்க சரியான வார்த்தைகளோ, உருவகமோ கிடைக்காமல் தடுமாறினேன்.

அமைதியாய் இதை கவனித்துக் கொண்டிருந்த அந்த ஓவியர் எழுந்து, அவர் அறையின் சாளரம் வழியே சாலையை அனைவரையும் பார்க்கும்படிச் சொன்னார்.

" என்ன தெரிகிறது?" என்று கேட்டார்.

" இந்தச் சாலை தெரிகிறது" என்றார் ஒருவர்.

அந்தக் காட்சி தெரியாதபடி சாளரத்தை ஒரு தாளால் அந்த ஓவியர் மூடினார். பிறகு ஒரு பேனாக்கத்தியால் கீறி, ஒரு சதுரத்தை உருவாக்கினார்.

" இதன் வழியே யாராவது பார்க்க நேர்ந்தால் என்ன காட்சி தெரியும்?"

" அதே சாலைதான்" என்ற பதில் வந்தது.

அந்த சதுரத்தின் மேலே மேலும் பல சதுரங்களை வெட்டி உருவாக்கினார்.

" எப்படி ஒவ்வொரு சதுரத்தின் உள்ளும் இந்தச் சாலையின் முழுக் காட்சியும் மறைந்திருக்கிறதோ, அதுபோல் நம் ஒவ்வொருவரின் ஆன்மாவினுள்ளும் இந்தப் பிரபஞ்சம் மறைந்திருக்கிறது" என்றார் ஓவியர்.

அவர் உருவாக்கிய அற்புதமான அந்த உருவகத்தை அனைவரும் பாராட்டினோம்.

( பௌலோ கோயெலோவின் " நீந்தும் நதியைப் போல" நூலில் இருந்து " how one thing contain everything" என்ற பத்தி.)

9.2.15

சிற்றெறும்பு குருமார்கள்

நேற்று முதல் எங்கள் வீட்டு சர்க்கரையையும், கடலை மாவையும் ருசி பார்க்க சிற்றெறும்புகள் வரிசையில் வர ஆரம்பித்து விட்டன.

"வாங்க வாங்க குட்டிப் பசங்களா! ஓய்வு நல்ல முறையில் செலவானதா?" என்று வரவேற்றேன் புன்னகையுடன்.

:சிவராத்திரிக்குப் பின் பனி சிவசிவா என்று போகும்' என்ற பழமொழியின் அளவுகோலால் நாம் கோடையை அளப்பது வழக்கம்.

ஆனால் கோடை துவங்கி விட்டதை இத்தனை துல்லியமாக - மைக்ரோ நொடியைக் கூடக் காட்டும் - மிக நவீன கடிகாரம் கூடச் சொல்லி விட முடியாது.

இத்தனை நாளும் அந்தச் சிற்றெறும்புகள் எங்கே வாழ்ந்தனவோ, எப்படி உண்டனவோ தெரியவில்லை என்று முதலில் யோசித்த சிறுபிள்ளைத்தனம் என்னை வெட்கச் செய்தது.

மாறாக இறுதியாய் மழைக் காலத்தின் முந்தைய நாள் வரை சேமித்த, அவற்றின் சேமிப்பில் இருந்த சேகரம் அவற்றின் தேவையை எப்படி இத்தனை கச்சிதமாக நிறைவு செய்தது என்ற பிரமிப்பு எனக்குள் மலைப்பைக் குமிழியிடச் செய்தது.

ஆனாலும் நாளை முதல் நம் உழைப்பு தொடங்க இருக்கிறது என்பதை ஒரே நேரம் உணர்ந்து, கட்டுக்கோப்புடன் பணியில் இறங்கி விட்டன.

எந்த ஆரவாரமும் இன்றி நிசப்தம் ஒலிக்க இயங்கும் அந்தச் சிற்றெறும்புகள் உருவத்தால் மட்டுமே சிறியன. போதனையில் அவையே நமது உண்மையான குருமார்கள்.

8.2.15

ஓர் உரையாடல்


ஒரு தாயின் கருவில் இரு குழந்தைகள். அவற்றின் இடையே நிகழ்ந்த ஓர் இயல்பான உரையாடல் இது.

அ: நாம் இந்த இருண்ட அறையை விட்டு வெளியேறிய பின் நமக்கு வாழ்க்கை உண்டென்று நம்புகிறாயா?

ஆ: அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக நம்புகிறேன். இங்கிருந்து வெளியேறிய பின் வாழ இருக்கும் வாழ்க்கையின் ஒத்திகை என்றே இதை நம்புகிறேன்.

அ: உன் நம்பிக்கை முட்டாள்த்தனமானது. இங்கிருந்து வெளியேறி நாம் எங்கும் செல்லப் போவதில்லை. இதுதான் நம் இறுதிப் பயணம். சரி. ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இங்கிருந்து வெளியேறிய பின் என்ன நடக்கும்? உன் கற்பனையையும் கேட்கலாம்.

ஆ: எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இங்கே இருப்பதை விட அதிக வெளிச்சம். அதிகக் காற்று. நிச்சயம் கால்களால் நடக்கவும், வாயினால் உண்ணவும் நாம் கற்றுக் கொள்வோம் என நம்புகிறேன். நம்மால் இப்போது யூகிக்க முடியாத பிற புலன்களின் உதவியும் நமக்குக் கிட்டலாம்.

அ: சரியான வேடிக்கைதான். கால்களால் நடப்பதாம். வாயினால் உண்பதாம். முட்டாள். தொப்புள் கொடியில்லாமல் எப்படி உண்பதாம்? நமக்கு உணவளிக்கும் அதுவும் சிறிதாகிக் கொண்டே வருவது உன் கண்ணில் படவில்லை? நம் வாழ்க்கை இங்கேயே முடிந்து போய் விடும். புரிந்து கொள்.

ஆ: அப்படி இல்லை. இங்கே நாம் வாழும் வாழ்க்கையை விட அது வேறுபட்டதாக ஒருவேளை இருக்கலாம். தொப்புள் கொடி இனி நமக்குத் தேவையற்றதாய் மாறலாம்.

அ: பிதற்றல். அப்படி இங்கிருந்து வெளியேறிய பின் வாழ்க்கை உண்டு என்றால், இங்கிருந்து சென்ற ஒருவர் கூட இங்கு ஏன் திரும்பி வரவில்லை? என்னைப் பொருத்தவரை இங்கேயே நம் வாழ்க்கை முடிந்தது. வெளியே சென்ற பின் மேலும் அடர்த்தியான இருள். மேலும் அடர்த்தியான நிசப்தம். கூடுதலான மறதி.

ஆ: எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் நிச்சயமாக நம் அன்னையைச் சந்திப்போம் என நம்புகிறேன். அவள் நம்மை கவனித்துக் கொள்வாள் எனவும் நம்புகிறேன்.

அ: ஹாஹாஹா! அன்னையா? யாரவள்? அப்படி ஒருத்தியை நம்புகிறாயா? அவள் இருப்பது உண்மையானால் இப்போது எங்கே இருக்கிறாள்?

ஆ: நம்மைச் சுற்றி இருப்பது அவள்தான். அவள் இன்றி நாம் இல்லை . அவளால்தான் நாம் இருக்கிறோம். அவளில்தான் நாம் வாழ்கிறோம். அவளின்றி எதுவும் இல்லை . இருக்கவும் முடியாது .

அ: என்னால் காண இயலாத ஒன்றை இருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஆகவே அவள் இல்லை என்றே தர்க்க ரீதியாக நான் கருதுகிறேன்.

ஆ: அப்படி இல்லை. சில சமயங்களில் நாம் மிகுந்த  அமைதியில், மிகுந்த தியானத்தில்  தோய்ந்திருக்கும் போது, மிகுந்த நுட்பத்துடன் செவிமடுக்கும் போது அவள் இருப்பை உணர நேரலாம்.அவளின் அன்பில் நனைந்த குரலை மேலிருந்து கேட்க வாய்க்கலாம். நம்பிக்கையுடன் மட்டும் இரு. அது நம்மை சரியான பாதையில் செலுத்தும்.

முதன்முறையாக 'அ' வால் உரையாடலைக் கொண்டு செல்ல வார்த்தைகள் இல்லை. இருப்பதை விரும்பவும் இல்லை.

(வெய்ன் டயரின் Your sacred self ல் இருந்து நெடிய ஆழங்களைத் தொடும் இந்தக் குட்டிக் கதை.)

6.2.15

மீண்டும் உங்கள் முன்னே-
=========================
வலைப்பூவின் உதவியாலேயே தரமான எழுத்தையும், ரசனையையும் சந்திக்க நேர்ந்தது. பல நேர்த்தியான எழுத்துகள் அறிமுகமான சூழல். அதன் கிறக்கம் இன்னமும் தீரவில்லை. என் முதல் காதல் இன்னமும் வலைப்பூதான்.

இத்தனை நாள் முகநூலில் எழுதிய பின்னாலும் 2008 முதல் எழுதி வந்த என் வலைப்பூ வற்றிக் கிடப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

இனி நான் இங்கு ஏற்றும் ஊதுவத்திகளில் ஒன்று முகநூலிலும் இருக்கும்.

என்னை இன்னமும் நினைவில் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் என் காலடிகளைப் பதிக்கிறேன்.

அத்தனை நண்பர்களுக்கும் என் அன்பு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...