15.12.12

இதப் பாருங்க சாமியோவ்!


சமீபத்திய வாசிப்பில் என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீ. அரவிந்தர்தான். என் பல்வேறு நம்பிக்கைகளின் சுவர்களை மிக அனாயாசமாகத் தகர்ந்தெறிந்து விட்டார். அவரின் ”மேற்கின் அழிபாடுகளிலிருந்து - இந்தியாவின் மறுபிறப்பு” , அமிர்தா எழுதிய “அரவிந்த தரிசனம்” , Nirodbaran எழுதிய "Twelve years with Sri. Aurobindo" இந்த மூன்று புஸ்தகங்களில் இதுவரை அரவிந்தர் பற்றி அறிய நேராதவர்களுக்கு  சொர்க்கம் காத்திருக்கிறது. ஒரே மூச்சில் நீளும் நள்ளிரவில் எடுத்தபின் கீழே வைக்க முடியாமல் வாசித்தேன்.

காந்தியின் பல முடிவுகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்திருக்கும் இவரின் துணிச்சல் வேறு யாரிடமும் நான் பார்த்திராதது. இந்தியாவின் விடுதலைக்கு இவர் போடும் அடித்தளம் காலத்தால் திசைமாறி வேறு திசையில் செல்கிறது.

அலிப்பூர் குண்டுவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காலத்தில் வேதங்களையும், உபநிஷத்துக்களையும் வாசிக்க நேர்கிறது. ஓராண்டு சிறையில் இருக்கும் அவருக்கு யோகசாதனை குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த விவேகானந்தரிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கிறது. கண்ணனின் காட்சியையும் அவர் பெறுகிறார். அந்த நாளில் இருந்து அவரின் அரசியல் திசை ஆன்மீகத்தின் பாதைக்குத் திரும்புகிறது.

இது போதும். தனியாக ஒரு இடுகையில் பார்க்கலாம்.
***********************
இன்னொரு சுவாரஸ்யமான புஸ்தகம் ஏ.கே.செட்டியார் தொகுத்த நூறாண்டுகளுக்கு முன்பு வெளியான பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. படு ரசனையான எழுத்து. கமகமக்கும் நாஸ்டால்ஜியா பக்கத்துக்குப் பக்கம்.

செல்லம்மாள் பாரதி தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு போன அனுபவத்தை விவரித்திருக்கும் அழகு ஒரு மஹாகவியின் மனைவி என்பதை நிரூபிக்கிறது. ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் வேதனையைப் பல கட்டுரைகள் புலம்பித் தீர்க்கின்றன.

தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் தீர்த்த யாத்திரை ( வெள்ளைப் பிள்ளையாரை தரிசித்துவிட்டுக்  குதிரையில் கிளம்பும் ராஜா, போகும் வழியில் அய்யம்பேட்டையில் சீட்டித்துணி விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரியிடம் பணம் கொடுத்துத் துணியை வாங்கிக் கொள்கிறார்) சென்னையின் குஜிலிக் கடை வரலாறு.....

கண்டிப்பாய்ப் படியுங்கள்.
*************************
திருமூலரிடம் சீடராக இருந்த போகர், சுவடியில் ஒளித்து வைத்த ”கற்ப மூலிகைகள்” என்ற தலைப்பில் அந்தாதி ஃபார்மட்டில் ஒரு பாடலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம் போலத் திறந்த வாய்தான். இன்னும் மூடவில்லை.

"கேளென்ற
1கருநெல்லி, 
2 கருத்த நொச்சிகெடியான, 
3 கருவீழி, 
4 கருத்த வாழை
காளென்ற, 
5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 
7 கரியவேலி
கோளென்ற 
8 கரூமத்தைத் 
9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 
11 சாயா விருட்சம்
ஏளென்ற 
12 எருமை கனைச்சான் 
13 ரோமவிருட்சம்ஏற்றமாம் 
14 சுணங்க விருட்சம் 
15 செந்திரா" 

"செந்திராய் 
16 செங்கள்ளி 
17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 
19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடுநலமான 
20 கற்பிரபி 
21 கறசேம் பாகும்
பரந்திராய் 
22 கல்லுத்தா மரையி னோடுபாய்ந்த 
23 குழல் ஆ தொண்ட 
24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 
26 வெண்புரசு 
27 வெள்ளைத் துத்திமிகு 
28 வெள்ளைத் தூதுவளை 
மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 
29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 
31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 
32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 
34 மதுர வேம்பு
கிடுக்கான 
35 கிளிமூக்குத் துவரை 
36 அமுகண்ணிகெடியான 
37 பொன்மத்தை 
38 மதுர கோவை
படுக்கான 
39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 
41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 
42 மூவிலையாம் குருத்துமாகும்தணலான 
43 சிவத்ததில்லை 
44 கருத்த வேம்பு
45 இண்டோடே 
இவ்வகைகள் நாற்பத் தைந்தும்ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

ஹப்பா! நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளை எண்ணிப் பாத்துக்குங்க.

இதை முறையாக உட்கொள்ளுபவர்களுக்கு 

1. சாவு இல்லை. 
2. மன்மதன் போல மிடுக்கான வாலிபத்தோற்றம் க்யாரண்டி.
3. முடி (இருந்தால்) நரைக்காது.
4. தோல் சுருங்காது.
5. உடல் மூப்பு அடையாது.
6. மலைகளில் தாவி அஸால்ட்டாக ஏறலாம்.
7. மூச்சு இரைக்காது.
8. வான்வெளியில் வாக்கிங் போகலாம்.
9. வான மண்டலத்தில் உள்ள எல்லா நட்சத்திர மண்டலங்களையும்  பார்க்கலாம்.
10. இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும்.
11. இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும்.

இதையெல்லாம் விட்டு விட்டுக் கண்ட கண்ட கேப்மாரிகளின் விளம்பரத்தில் மயங்கி உங்கள் மேனிப்பொலிவை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


*********************
படம்: தஞ்சாவூர் தெற்கு வீதி. (150 வருஷங்களுக்கு முன்னால்)

11.12.12

யுகங்களைக் கடந்த கோயில்


தஞ்சாவூர் போயிருக்கிறீர்களா? அதன் கூப்பிடு தூரத்தில் இருக்கும் திருவையாறு போனால் அவசியம் பார்க்கவேண்டியவற்றில் நான் வரிசைப் படுத்துபவை இந்த நான்கும்:

1. ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வரர்) திருக்கோயில் 

2. த்யாகப் ப்ரும்மத்தின் ஆராதனை நிகழும் காவிரிக்கரையோரம் அமைந்த சமாதி. ( பகுள பஞ்சமியன்று நடக்கும் ஆராதனைப் பரபரப்புக்கள் எல்லாம் ஓய்ந்த பின்னால் ஆடுகள் திரியும் - வெறிச்சோடிக் கிடக்கும் வெட்டவெளியில் த்யாகய்யாவின் சமாதியை தரிசிப்பது எனக்குப் பிடிக்கும்) 

3. திருவையாறு இசைக் கல்லூரி. 

4. கடைவீதியில் காத்திருக்கும் ஆண்டவர் அசோகா அல்வா. பசும் வாழை இலையில் ஒரு இந்தியாவின் வரைபடம் போலக் கிடத்தப்பட்டிருக்கும் சூடான அசோகா அல்வா. எந்த வேளையில் உள்நுழைந்தாலும் சகட்டுமேனிக்கு ஒரு கடையின் அத்தனை இருக்கைகளிலும் அமர்ந்திருப்பவர்கள் அல்வாவை கபளீகரம் செய்வது ஆச்சர்யமான காட்சி. ருசியில் இருட்டுக்கடை அல்வா முதலிடம் பெற்றாலும் அது ஒரு கையேந்தி பவன். அதை இதனுடன் ஒப்பிட ஒப்பிட முடியாது.


போன வாரம் ஐயாறப்பர் கோயிலுக்குப் போயிருந்தேன். எத்தனை முறை என் நாட்காட்டியின் தாட்கள் கிழிக்கப்பட்டு விட்டன? தோராயமாக 17 ஆயிரம் நாட்களுக்கும் சற்று அதிகம். இத்தனை நாட்களில் ஐந்து தடவைதான் போக நேர்ந்திருக்கிறது. வெவ்வேறு பருவங்களில். 

கோயில் யானையை வேடிக்கை பார்க்கும் பருவத்தில் - தெருவைப் பார்த்திருக்கும் ஆட்கொண்டாரின் குங்கிலியக் கேணியில் குங்கிலியத்தைப் போட ஆசைப்பட்ட பிராயத்தில் - ஒரு ஆடி அமாவாசையின் போது உலகின் அத்தனை சிவ அடியார்களும் கூடிக் கூத்தாடிய ஒரு செவ்வாய்க் கிழமையின் விளிம்பில் - என்று ஐயாறப்பனுக்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் இந்தக் கோயிலைப் பார்த்துப் பரவசப் பட எனக்குப் 17000 நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. 
வெட்கமாய் இருந்தாலும், வாழ்க்கையின் ரகஸ்யமே இதுதான். கையெட்டும் தொலைவில் பொக்கிஷம் இருக்கிறதை - காலின் கீழ் நிழலாய்த் தொடரும் அற்புதத்தை இன்றைக்குத்தான் காண நேர்கிறதை - இப்போதெல்லாம் ஒவ்வொரு பொழுதும் அநுபவித்துக்கொண்டிருக்கிறேன்.   

வழிபாட்டை முடித்த பின் கோயிலின் சுற்றுச் சுவரில் எழுதப் பட்டிருந்த அக்கோயிலின் தல புராணம் ஆனந்தக் களிப்பில் தலையைச் சுழற்றியது. அதை முதலில் பார்ப்போம். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
”இத்திருக்கோயிலுக்கு முதன் முதலில் ப்ரியவ்ரதன் எனும் சூரிய வம்சச் சக்ரவர்த்தி* திருப்பணி செய்தான் என்பது புராண வரலாறு. 

கி.மு. - முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான். இவன் காட்டை அழித்து நாடாக்கி வளம் பெருக்கியவன். கல்லணை கட்டி, காவிரிக்குக் கரை எழுப்பி இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில் ஐயாற்றை அடைந்ததும் அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. இதனடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான். 

பூமியின் அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள்,  சண்டர், சூரியன் திருவுருவங்களும், யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன. 

மேலும் அகழவே, ’நியமேசர்’ எனும் அகப்பேய்ச் சித்தர் நிட்டையிலிருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் பாதம் பணிந்தான். அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம் ’தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இம்மகாலிங்கத்திற்கும், மற்றைய படிமங்கட்கும் கோயில் எடுப்பாயாக’ எனக்கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்று மளித்து, கோயில் கட்டுதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குளம்படியில் கிடைக்குமென அருள் புரிந்தார். 

அவ்வாறே கரிகாற் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்து நிவந்தங்கள் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாரப்பரே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் தான்தோன்றி, நாதராக சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடம் காட்டிக் கோயிலும் கட்டச்செய்தார் என்பதறிந்தோம். 

கற்பக் கிரகப் பிரகாரத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் பிரகாரத்தைச் சுற்றி வரக் கூடாதென்பதும், சோழனால் கட்டிய செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாயிருப்பதும், கரிகாற்சோழன், அவன் மனைவி இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உண்மை உணரலாம்.

கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்திற்கு முந்திய திருப்பணி, ஆதி கோயில் அமைப்பை மாற்றியுள்ளது. அருள்மிகு ஐயாரப்பர் எழுந்தருளியுள்ள கருவறைக் கற்றளி துவார பாலகர், யாளித்தூண்கள் பல்லவர் காலப் பாணியாகும்.


கி.பி. 982** ல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர் இதனைப் புதுக்கி, மகாதேவர்க்கு நிறைய அணிகலண்கள் வழங்கியுள்ளார்.

கி.பி. 1006 – ல் முதலாம் இராசராசன் (985 – 1014) மனைவி ஒலோக மாதேவியார் வட கைலாயம் எனும் ஒலோக மாதேவீச் சுரத்தைஎழுப்பி எழுந்தருளும் திருமேனிகள், ஒலோக வீதி விடங்கர் எனும் சோமஸ்கந்தர், விநாயகர் முதலான பஞ்சமூர்த்திகளை வழங்கியுள்ளார்.

கி.பி. 1014 – 1042 முதலாம் இராசேந்திரசோழத் தேவர் மனைவி பஞ்சவன் மாதேவியார் தென் கைலாயக் கோயில் பழுதுபட்டு இருந்ததை புதுப்பித்தார்.

அடுத்து, கிருஷ்ண ராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றுள்ளது. சலவைத் தூண்கள் சாளுக்கிய நாட்டு வாகாடகச் சிற்பத் திறனை எடுத்துக்காட்டவே பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்தவையாகவுள்ளன.

கி.பி. 1118 – 1135 விக்ரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழக்கோபுரங்களும் எடுக்கப்பட்டிருப்பதுடன் வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் அடிப்படை பீடத்துடன் எழும்பி நின்று விட்டது.

கி.பி. 1381 - ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் வீர சரவண உடையார் காலத்து செந்தலைகருப்பூர், கச்சி வீரப்பெருமான் மகளால் கோயில் மண்டப மதில் சீர்திருத்தம் பெற்றது.

கி.பி. 1530 – ல் அச்சுதப்ப நாயக்கர் நின்று போன தண்டபாணி கோயில் மண்டபத்தை 144 தூண்களுடைய அழகிய மண்டபமாக உருவாக்கி முடித்தார். அவர்காலத்து இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்திய நாதராலும் மேலக்கோபுரம், முதற் பிரகாரம், அதில் திருநடமாளிகைப் பத்தி (மாடி) மூன்றாம் பிரகாரத் தெற்குக் கோபுரம், திருக்குளம், காவிரி பூசைப் படித்துறை “கல்யாண சிந்து” மண்டபம், குதிரை பூட்டிய தேர் மண்டபங்கள் ஆகிய இவை யாவும் அவர்களால் எடுக்கப் பட்டனவே.

கி.பி. 1784 காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார், மூன்றாம் பிரகார முகப்பு மண்டபத் திருப்பணி செய்துள்ளார். அவரும் அவரது இரு மனைவியர் திருவுருவங்களும் தூண்களில் உள்ளன. மூன்றாம் பிரகார கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப் பெற்றதாகும்.

கி.பி. 1937 – ல் நாமறிந்த வகையில் அம்மன் கோயில் முழுமையும் அழகு ஒழுகும் பளிங்குக் கருங்கள் திருப்பணியாக தேவகோட்டை சிவத்திரு உ.ராம.மெ.சுப.சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப் பெற்று 2-5-1937 ல் குடமுழுக்கு இனிதே நிறைவேறியுள்ளது.

கி.பி. 1971 – ல் திருக்கையிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுமையும் செப்பமுற திருப்பணி செய்யப்பெற்று 31-3-1971 ல் திருக்குடமுழுக்குப் பெருவிழா மிகச் சீரும் சிறப்புமாக நிகழ்ந்தேறியது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

* ரகுவம்சத்தைச் சேர்ந்த மன்னனாகையால், இது த்ரேதா யுகத்தைச் சேர்ந்த கோயிலாகவும் இருக்கக்கூடும்.

**1013 – 14 ஆம் ஆண்டு என கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விமலாதித்த தேவர்தான் ராஜராஜ சோழனின் புதல்வி குந்தவி தேவியை மணம்செய்திருக்கக் கூடும்.


எனக்குத் தெரிந்த வகையில் பல ஆட்சியாளர்களின் காலங்களையும் பார்த்த கோயில் இதுவாகத்தான் இருக்கும். கரிகாற்சோழனில் தொடங்கி, போன நூற்றாண்டின் மெய்யப்பச் செட்டியார் வரைக்கும் கோயில் மெருகூட்டப்பட்டிருப்பது ஆச்சர்யமான அற்புதம்.  

கோயில் நெடுகிலும் கண்ணில் படும் பல கலாச்சாரங்களின் தடமாக விதவிதமான சிற்பங்களின் அழகும், ஏராளமான கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறும் திகட்டத் திகட்டப் பருக ஏற்றவை. இன்னொரு முறை ஒரு முழு நாளும் தங்கி, குறிப்புகள் எடுத்து இன்னொரு இடுகையில் அவற்றை எழுதுகிறேன்.

கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பில் பரந்து கிடக்கும் இந்த வரலாற்றின் சாட்சியைப் பார்க்கும்போது இது தஞ்சாவூர்ப் பெரிய கோயிலுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று தோன்றியது. கரிகால் சோழனைப் பார்த்த நந்தி என்னையும் உற்றுப் பார்த்த தருணத்தில், நான் கி.மு.முதலாம் நூற்றாண்டில் நீந்திக்கொண்டிருந்தேன்.

நான் சென்றிருந்தபோது மிகுந்த உற்சாகத்துடன் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இறைவனின் கருணையால் நீண்ட இடைவேளை கடந்து - 41 வருடங்களுக்குப் பின் - வரும் தை மாதம் 25ம் நாள் வியாழக்கிழமை, மூல நக்ஷத்திரத்தில் ( 07.02.2013 ) குடமுழுக்கு மிகச் சிறப்பாக நிகழ இருக்கிறது.    

வாய்ப்பு அமையாவிட்டாலும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவசியம் சீக்கிரமாகவே சென்று தரிசிக்கவேண்டிய கோயில் இது. இறைநம்பிக்கை இல்லாதாரும் கலைநுணுக்கத்திற்காகச் சென்று பாருங்கள். பொக்கிஷங்கள் அடிக்கடி நம் கண்களில் தட்டுப்படுவதில்லை. 

1.12.12

நான் ரசித்த வெண்பாக்கள்

”நகரம் நானூறு” என்ற தலைப்பில் நிறைகுடங்களாய் விளங்கும் திரு. ஹரி கிருஷ்ணனும், எழுத்தாளர் திரு. இரா.முருகனுமாய்ச் சேர்ந்து பெருந்திட்டம் போட்டுக் கலக்க இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. மெதுவாய்க் காது கொடுத்துக் கேட்டபோது - குவா குவா சத்தம் கேட்கவில்லை - சில வெண்பாக்கள் கேட்டன. 

கீழே இருப்பவை திரு. ஹரி கிருஷ்ணன் எழுதியவை. இன்றைய நகரத்துக் காட்சிகளை - வெண்பாவில் அமைத்த - சில சுவாரஸ்யமான காட்சிகளைச் சந்தித்தேன். அகம், புறம் என்றிருக்குமோ தெரியாது. ஆனால் இங்கே சில புறக் காட்சிகளைச் சொல்லும் வெண்பாக்கள்.


ஹரி கிருஷ்ணன்

இவற்றைச் சிலர் வாசித்திருக்கலாம். பரவாயில்லை இன்னொரு முறை வாசியுங்கள். பார்க்கும் காட்சிகளில் அவற்றின் கோணங்களில் கலாப்பூர்வமான ரசனையையும், தமிழையும் குழைத்து வரையும் அபூர்வமான தூரிகை அவருடையது.


இந்தப் பாடல்களுக்கும் அதன் வசீகரத்துக்கும் நடுவில் கருத்துக்களைத் திணிப்பது துரோகம். ஆகையால் ரசிகர்களை நேரடியாய் சென்னை நகரத்தின் வீதிகளுக்கு அழைத்துச் செல்கிறேன்.                                      

*********



தொங்கும் மரக்கிளையில் தொங்குதே காற்றாடி

பெய்த மழையினிலும் பேய்க்காற்றின் வீச்சினிலும்
தொய்ந்து மரக்கிளையில் தொங்குகையில் – நைந்திருக்கும்
காற்றாடி நெஞ்சில் கனக்கிறதோ வானெங்கும்
நேற்றாடிச் சென்ற நினைவு.
********

போதெல்லம் கொஞ்சி திரி புறா போல்

காதலுக்குப் பஞ்சமுண்டோ கான்க்ரீட் வனங்களிலும்?
ஆதரவா அன்பா அடைக்கலமா – போதெல்லாம்
கொஞ்சும் புறாவினம்தான் கூறுவது கேட்கலையோ,
எஞ்சுவது அன்பொன்றே என்று.

********
நகரத்துப் பூனைகள்

வண்டியின் கீழ் கூடும் துளிப்புலி

முன்னால் குடியிருந்த மோகன் வளர்த்ததாம்
தன்னால் நுழைந்து தலைநீட்டப் – பின்னால்
அயாவ்என்று பிள்ளாண்டான் ஆசையாய்க் கூவ
மியாவொன்று வந்ததிந்த வீடு.

நின்றால் முழங்காலில் நீட்டி முகம்தேய்க்கும்
சென்றஇடம் எல்லாம் திரியவரும் – தின்றாலோ
வால்குழைத்துத் தட்டருகே வாய்நீட்டும். பூனையுடன்
பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.

நீடுதுயில் கொள்ளும்; நிறுத்திவைத்த வண்டியின்கீழ்
கூடும்; குடிநகரும்; குட்டிபெறும் – வீடெல்லாம்
துள்ளி இறையும் துளிப்புலியைக் கையிரண்டில்
அள்ளவுந்தான் ஆகுமல்லோ அங்கு?

எலியின் தவம் கலைக்கும் துளிப்புலி

தரைவாசம் நெஞ்சில் சலித்துவிட்டால் தாவி
மரவாசம் செய்து மறைவார் – குருயாரோ?
என்னதவம் அங்கேநீர் ஏற்கின்றீர் !
யோகுதுயில் தன்னைக் கலைக்கும் எலி.

********


நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.


********



சாலைக்குக் கூன்விழுந்தால் சர்ரென்று போவாயோ? 
வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப்  
போகத்தடை ஏனோ? புதையா(து) எரியாதென்றும் 
ஏகத்தான் இத்தடையாம் இங்கு.


********

தில்லைகங் காநகரில் சென்ற திசையெல்லாம்
எல்லையொன்றில்லா இடம்பிடிப்பு – கல்லறைமேல்
வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!
ஈடுண்டோ இங்கே இதற்கு.

வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.

ஆற்றுநீர் ஓட்டம் அடிக்கின்ற காற்றெல்லாம்
போற்றியென்றும் மக்கள் பொதுவென்று – நேற்றொருநாள்
சொல்லித் திரிந்தார்கள்; சொற்பப் பொழுதுக்குள்
எல்லாமும் மாறியதே இங்கு.

விற்பனைக்குத் தண்ணீர்; விளம்பரங்கள்; போட்டிகள்;
சொற்புனைந்து காசாம் சுவர்ப்பரப்பு – நிற்பதற்குள்
மூச்சுவிடக் காசு; முனகுதற்கும் காசினிமேல்
பேச்செடுத்தால் காசொன்றே பேச்சு.

தொட்டதெல்லாம் காசாக்கும் சூக்குமம் கற்றபின்னும்
விட்டுவிட்டார் உன்னை விழிதப்பி – முட்டாள்கள்!
அப்பா ஒளிக்கலனே, ஆதிநாள் சூரியனே
எப்போது காசாவாய் இங்கு.

(முதல் நான்கு படங்கள் திரு.ஹரி கிருஷ்ணன் எடுத்தவை)

29.11.12

நாஸதீய ஸூக்தம் - ப்ரளயத்துக்கு முன்னால்.

ப்ரளய காலம் என்ற ப்ரயோகம் அடிக்கடி நாம் கேள்விப்படுவதும், அறிய முடியாத ஒன்றும். ஆனால் ப்ரளய காலத்தை - அதாவது ச்ருஷ்டிக்கு முந்தைய காலத்தை - அற்புதமான மொழியில் பாடியிருக்கிறது நாஸதீய ஸூக்தம்.

ஆதிப்பொருளை அறிய முற்படுகிற, எவ்வித நிர்பந்தங்களுமில்லாத பல்வேறு அறிஞர்களால் விவாதிக்கப்பட்டு ஞானத்தையும், அதிசயத்தையும் ஒரே தட்டில் கொடுத்த களஞ்சியம்தான் - உருவில் சிறியதும், உள்ளடக்கத்தில் ப்ரும்மாண்டமும் ஆன - நாஸதீய ஸூக்தம்.  

யாரால் இயற்றப்பட்டது? என்ற ரிஷிமூலம் தெரியாத, மொத்தம் ஏழு ச்லோகங்கள் மட்டுமே உள்ள இந்த ஸூக்தம் ரிக் வேதத்தின் அபூர்வமான ஒரு ஆன்மீகக் கவிதை.

விவேகானந்தரின் வார்த்தைகளில் இதைப் பார்ப்போம்.

“ இவை உலகிலேயே மிகச் சிறந்த கவிதைகள். வேதங்களின் சம்ஹிதைப் பகுதிகளைப் படிப்பீர்களானால், எழில் கொஞ்சித் ததும்பும் அற்புதமான பகுதிகளைக் காண்பீர்கள். உதாரண்மாக, ப்ரளய வர்ணனையைப் பாருங்கள். தம ஆஸீத் தமஸா கூட மக்ரே - இருள் இருளால் மூடப்பட்டிருந்தபொழுது என்று செல்கிறது கவிதை. என்ன ஒரு நுட்பமான கவிதை நயம்?

காளிதாஸர் “ஊசி நுனி நுழைந்து ஊடுருவுகின்ற இருள்” என்கிறார். மில்டனோ, “ ஒளியில்லை; மாறாக, காணத்தக்க இருள்” என்கிறார். இப்போது உபநிஷத்திற்கு வாருங்கள். ” இருளை இருள் மூடியிருந்தது”, “ இருள் இருளில் மறைந்திருக்கிறது”. வெப்பப் பகுதியில் வாழ்பவர்களான நாம்தான் இதைப் புரிந்துகொள்ள முடியும். மழைக்காலம் சட்டென்று வரும். கணநேரத்தில் அடிவானம் இருளும். கருமேகத் திரள்கள் எழும். கரிய மேகக் கூட்டங்கள் அதை விடக் கரிய மேகங்களால் மூடுவதும், எழுவதுமாக ஓர் அற்புதக் கோலம் விரியும்.” ( ஞானதீபம் - 5.268.269)  

இனி நாஸதீய ஸூக்தம்.


***********************

नासदासींनॊसदासीत्तदानीं नासीद्रजॊ नॊ व्यॊमापरॊ यत् ।
किमावरीव: कुहकस्यशर्मन्नभ: किमासीद्गहनं गभीरम् ॥१॥

நாஸதாஸீன்னோ ஸதாஸீத் ததானீம் நாஸீத்ரஜோ நோ வ்யோமா பரோ யத்
கிமாவரீவ: குஹ கஸ்ய சர்மன்னம்ப: கிமாஸீத் கஹனம் கபீரம்

படைப்புக்கு முன்பு இல்லாமை இல்லை; இருப்பு இல்லை; பூமி இல்லை; மேலே ஆகாயம் இல்லை. மூடி போன்றுள்ளதே அது என்ன? அது எங்கே இருக்கிறது? இன்ப துன்ப அனுபவங்கள் எல்லாம் யாருக்கானது? ஆழமான இந்த வெள்ளம் அப்போது உண்டா?

न मृत्युरासीदमृतं न तर्हि न रात्र्या।आन्ह।आसीत् प्रकॆत: ।
आनीदवातं स्वधया तदॆकं तस्माद्धान्यन्नपर: किंचनास ॥२॥ 

ந ம்ருத்யுராஸீதம்ருதம் ந தர்ஹி ந ராத்ர்யா அஹ்ன ஆஸீத்ப்ரகேத:
             ஆனீதவாதம்ஸ்வதயா ததேகம் தஸ்மாத்தாயன்ன பர: கிஞ்சனாஸ 

அவ்வேளையில் மரணம் இல்லை; அமரத்வமும் இல்லை; இரவு பகலின் அடையாளம் இல்லை; மூச்சற்ற அந்த ஒரே இறைவன் தமது சக்தியால் ஸ்வாசித்தார். அவருக்கப்பால் அவரைத் தவிர எதுவும் இருக்கவில்லை.

तम।आअसीत्तमसा गूह्ळमग्रॆ प्रकॆतं सलिलं सर्वमा।इदम् ।
तुच्छॆनाभ्वपिहितं यदासीत्तपसस्तन्महिना जायतैकम् ॥३॥ 

தம ஆஸீத்தமஸா கூடமக்ரேSப்ரகேதம் ஸலிலம் ஸர்வமா இதம்
       துச்ச்யேனாப்வபிஹிதம் யதாஸீத் தபஸஸ்தன்மஹினா ஜாயதைகம் 

படைப்புக்கு முன்னால் இருள் இருளால் மூடப்பட்டிருந்தது. இங்கிருக்கும் எல்லாமே அடையாளம் காணமுடியாத வெண்மையாக இருந்தது. எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவராக, சூன்யத்தால் மூடப்பட்டவராக, ஒரே ஒருவராக எந்தக் கடவுள் இருந்தாரோ அவர் தவத்தின் மகிமையால் தம்மை வெளிப் படுத்திக்கொண்டார்.

कामस्तदग्रॆ समवर्तताधि मनसॊ रॆत: प्रथमं यदासीत् ।
सतॊबन्धुमसति निरविन्दन्हृदि प्रतीष्या कवयॊ मनीषा ॥४॥

காமஸ்ததக்ரே ஸமவர்த்ததாதி மனஸோ ரேத: ப்ரதமம் யதாஸீத்
ஸதோ பந்தும்ஸதி நிரவிந்தன் ஹ்ருதி ப்ரதீப்யா கவயோ மனீஷா 

மனத்தின் முதல் விதையாக எது இருந்ததோ, அந்த ஆசை ஆரம்பத்தில் எழுந்தது. இதயத்தில் தேடுகின்ற ரிஷிகள் உண்மைக்கு உண்மையல்லாததுடன் உள்ள தொடர்பை உள்ளுணர்வின் மூலம் கண்டுபிடித்தார்கள்.

तिरश्चीनॊ विततॊ रश्मीरॆषामध: स्विदासी ३ दुपरिस्विदासीत् ।
रॆतॊधा।आसन्महिमान् ।आसन्त्स्वधा ।आवस्तात् प्रयति: परस्तात् ॥५॥

திரச்சீனோ விததோ ரச்மிரேஷாமத ஸ்விதாஸீதுபரி ஸ்விதாஸீத்
ரேதோதா ஆஸன்மஹிமான ஆஸன்த்ஸ்வதா அவஸ்தாத் ப்ரயதி: பரஸ்தாத்

இவற்றின் கதிர்கள் கீழேயும், மேலேயும், குறுக்காகவும் விரிந்தன. சந்ததியைத் தோற்றுவிக்க வல்லவையான உயிரினங்கள் இருந்தன. மகத்தானவை இருந்தன. கீழே ஆற்றல் இருந்தது. மேலே வேகம் இருந்தது.

कॊ ।आद्धा वॆद क‌।इह प्रवॊचत् कुत ।आअजाता कुत ।इयं विसृष्टि: ।
अर्वाग्दॆवा ।आस्य विसर्जनॆनाथाकॊ वॆद यत ।आबभूव ॥६॥

கோ அத்தா வேத க இஹ ப்ரவோசத் குத ஆஜாதா குத இயம் விஸ்ருஷ்ட்டி:
அர்வாக் தேவா அஸ்ய விஸர்ஜனேனாSதா கோ வேத யத ஆபபூவ

உண்மையில் இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார் அறிவார்? இதை யார் சொல்லக் கூடும்? தேவர்களோ கூட இந்தப் படைப்புக்குப் பிறகு தோன்றியவர்கள். எனவே, அவர்களுக்கும் அது தெரியாது.  இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியது என்று யார்தான் அறிவார்?  

इयं विसृष्टिर्यत ।आबभूव यदि वा दधॆ यदि वा न ।
यॊ ।आस्याध्यक्ष: परमॆ व्यॊमन्त्सॊ आंग वॆद यदि वा न वॆद ॥७॥

இயம் விஸ்ருஷ்ட்டிர்யத ஆபபூவ யதி வா ததே யதி வாந
யோ அஸ்யாத்யக்ஷ: பரமே வ்யோமன்த்ஸோ அங்க வேத யதி வா ந வேத

இந்தப் படைப்பு எங்கிருந்து தோன்றியதோ, அது இந்தப் படைப்பைத் தாங்குகிறதா, இல்லையா? மேலான விண்ணில் வாழும் இந்தப் படைப்பின் தலைவர் யாரோ அவர் கட்டாயமாக அறிவார். ஒருவேளை அவருக்கும் தெரியாதோ என்னவோ?

பரந்து கிடக்கிற வான வெளியையும், மின்னித் திளைக்கின்ற நக்ஷத்ரக் கூட்டங்களையும், நிலவையும், கதிரையும், கடலையும், மலையையும் ஒரு கணமாவது பார்த்து சிந்திப்பவர்கள் ப்ரமிப்பைத் தவிர வேறென்ன அடைய முடியும்?

அத்தகைய ப்ரமிப்பில் ஆழ்ந்த முனிவர் ஒருவர் படைப்பின் ரகசியம் நமக்கும், தேவர்களுக்கும் தெரியவில்லை. அனைத்தையும் படைத்த இறைவனுக்கே கூட ஒருவேளை அது தெரியாதோ என்று மிகைப்படுத்தி ச்ருஷ்டியின் ப்ரும்மாண்டத்தை வியக்கிறார்.

************************************************

விவேகானந்தரின் வார்த்தைகளாலேயே இந்த இடுகையை முடிக்கிறேன்.

“ இது எப்போது தோன்றியது என்பது ஒருவருக்கும் தெரியாது. இக்கால ஆராய்ச்சியாளர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். இது எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். ஆனால் அன்று போலவே இன்றும் அவை புதுமை மாறாமல் இருக்கின்றன; ஏன் முன்னை விடப் புதுப்பொலிவுடன் திகழ்வதாகவே கூறலாம்”.

நன்றி: 
1. வேத மந்திரங்கள் - ஸ்வாமி ஆசுதோஷானந்தர்.

26.11.12

ரசிகன் ரங்கமணி - காதம்பரி

கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஹிந்தி வகுப்புக்கள் நடத்தும் என் நண்பர் ஒருவர், கல்வி நிலைய மாணவ மாணவிகளுக்காக காந்தி ஜயந்தியன்று எனது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பொருள்: “ருஷ்ய மஹாகவி புஷ்கினின் வாழ்க்கை வரலாறு”. மகிழ்வுடன் அந்த நிகழ்ச்சிக்குச் சம்மதித்தேன்.

மாலை ஆறு மணிக்குத்தான் கூட்டம் துவங்குவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கே புறப்பட்டு விட்டேன். எனது நண்பரும், கலை விமர்சகருமான தேநுகாவை அவர் பணி புரிந்த ஸ்டேட் பாங்க் அலுவலகத்தில் சந்தித்து சற்று நேரம் பேசலாம் என்ற எண்ணமிருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களைத் தோப்புத் தெருவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசவும் விழைந்தேன். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் தெற்கு வாசலருகே இறங்கி விட்டேன். கோயிலுக்குள் புகுந்து மூடப்பட்டிருந்த சந்நிதிக்கு வெளியே பயபக்தியுடன் கண்களை மூடி தியானம் செய்து, தரிசித்து வணங்கினேன். கீழ சந்நிதி வழியாக நான் வந்து கொண்டிருந்தபோது எதிரில் திடீரென்று கோவில் யானை வந்தது,

திடுக்கிட்ட நான் கொஞ்சம் பயத்துடன் ஒதுங்கி நின்றேன். யானை துதிக்கையை இப்படியும், அப்படியும் ஆட்டவே வேறு வழியின்றி பக்கத்திலிருந்த ஒரு சிறிய கடையில் ஏறிவிட்டேன். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருந்தால் பாரதியார் கதை ஆகியிருக்கும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

கடைக்குள் இருந்து ரங்கமணி வெளியே வந்தான். என்னைக் கண்டதும் வியப்பு மேலிட்ட குரலில், “ஜவுளிக்கடை கோபாலய்யர் பிள்ளை மணிதானே?” என்று கேட்டான். எனக்கு அவனை நன்றாக நினைவிலிருந்தது. அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமோ? இருக்காதோ? என்று முதலில் தயங்கினேன். அவனே என்னை விசாரித்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

”திருவிழந்தூர் ரங்கமணிதானே? சௌக்கியமா இருக்கியா? இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே?,” என்று படபடவெனக் கேட்டேன்.

“ வா. டிஃபன் சாப்டுண்டே பேசலாம். அடேயப்பா! எத்தனை வருஷமாச்சு? ஐம்பது வருஷத்துக்கு மேலே இருக்குமே,” என்று கையைப் பிடித்து இழுத்தான் அவன்.

“ இருக்கும். இருக்கும். கடசியா ஒன்ன எங்க பாத்தேன் தெரியுமா? சீர்காழி மதனகோபால் நாயுடு சத்திரத்துலே சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கச்சேரியிலே 1954லே பாத்ததுதான்,” என்றேன். எனக்கு ஒரு சாபக்கேடு. எதுவுமே மறப்பதில்லை.

கோயில் வாசலுக்கு வந்தோம். “ இங்கே ஆராதனான்னு ஒரு ஓட்டல் தெறந்திருக்கான். வா சாப்பிடலாம்,” என்றான் ரங்கமணி.

இருவரும் அங்கே போய் எதிரும், புதிருமாக உட்கார்ந்தோம்.

“ ஊம். அப்புறம்? ஒன்னப் பத்தி விஜாரிச்சேன். பதிலே சொல்லலியே?,” என்று தொடர்ந்தேன்.

“ என்னத்தச் சொல்றது போ. கழுத கெட்டா குட்டிச் சொவரு. இந்த ஊர்லதான் இருக்கேன். இப்ப வயத்துப் பொழப்புக்கு சுண்டல், காராச்சேவு, பகோடா பொட்லம் போட்டு விக்கறேன். லோலோன்னு நாயலச்சல். நூறு ரூவா சம்பாதிக்கறதுக்குப் பன்னண்டு மணி ஒழைக்க வேண்டீருக்கு,” என்று அலுத்துக் கொண்டான் ரங்கமணி.

எனக்கு என்னவோ போலிருந்தது.

” சரி. என்ன சாப்பிடறே சொல்லு. ரொம்ப வருஷங் கழிச்சுப் பாக்கறோம். எதாவது ஸ்வீட் சாப்பிடலாம்,” என்றேன்.

ரங்கமணி சற்று நேரம் மௌனமாக இருந்தான்.

பிறகு, “ ஒன்ன என்னால மறக்கவே முடியாதுப்பா. காவேரி மணல்ல ஒக்காந்து சிவகாமியின் சபதம் கதைய நாலு மணி நேரம் சொன்னியே! அப்படியே சினிமா பாக்கற மாதிரி இருந்தது. அதுக்கப்புறம் நாம எல்லாரும் எட்டுத் திக்குலயும் பிரிஞ்சு போயுட்டோம்,” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.  

“ சரி ரங்கமணி. இப்பல்லாம் கச்சேரிக்குப் போறதுண்டா? ஒனக்குப் பாட்டுன்னா உசுராச்சே?” என்றேன் சிரித்துக்கொண்டே.

“ அட! ஞாபகம் வெச்சுண்டிருக்கியே!” என்று என்னைத் தட்டிய ரங்கமணி,  “போன மாசங்கூட சுதா ரகுநாதன் கச்சேரி நடந்துது. அதுக்கு முன்னாடி நித்யஸ்ரீ கச்சேரி கேட்டேன்,” என்றான் தொடர்ந்து.

சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம்.

“ ஒரு தடவை ஏ.கே.சி. நடராஜன் க்ளாரினெட் கேக்கறதுக்காக நீ சிதம்பரம் வந்தபோது, நாம கீழ வீதீல பாத்துண்டோம். ஆனா நீ கலகலப்பாப் பேசல. என்ன காரணம்னு அப்பறம் விஜாரிச்சுத் தெரிஞ்சுண்டேன். நீ கச்சேரி கச்சேரின்னு அடிக்கடி லீவு போட்டதால உங்க மொதலாளி வேலைய விட்டு நீக்கிட்டார். சரிதானா?”

“ ஆமாம். என்னால எங்கியுமே ரெண்டு வருஷங் கூடத் தொடந்தாப்ல இருக்க முடியல. சங்கீதக் கச்சேரிகளைக் கேக்காமலும் இருக்க முடியல. அப்ப மாயவரத்துல வேலை பாத்தேன். ஏ.கே.சி. கச்சேரி ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் சிதம்பரம் வந்தேன். இதுவரைக்கும் பத்துப் பதினஞ்சு ஓட்டல்ல வேலை பாத்துட்டேன். எந்த மொதலாளிக்கும் என்னப் பிடிக்கல. கச்சேரிக்காக லீவு எடுத்தா டிஸ்மிஸ்தான்,” என்று துயரம் நிறைந்த குரலில் மொழிந்தான் ரங்கமணி.

“ தஞ்சாவூர்ல வேலை பாத்தியா?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“ பாக்காம என்ன? கௌரி பவன்னு தெக்கு வீதீல இருக்கே அங்கே ஒரு வருஷம் இருந்தேன். நன்னாத்தான் போயிண்டிருந்தது. நாலு கால் மண்டபம் ஆஞ்சநேயர் கோயில்ல உத்ஸவம். கத்ரி கோபால்நாத் கச்சேரி. ராத்திரி ஒம்பது மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணி வரைக்கும் நடந்துது. தெருவுல ஒக்காந்துண்டு பூராவுங் கேட்டேன். விடிஞ்சா ஜொரம் வந்துடுத்து. பயங்கரமான தலவலி. எழுந்திருக்கவே முடியல. ஓட்டல் மாடீலதான் படுத்திண்டிருந்தேன்.

விடிகாலம்பற நாலு மணிக்கு எழுந்து வேல செஞ்சு பழக்கம். அன்னிக்கு முடியல. அன்னிக்கின்னு பாத்துக் காலம்பற ஏகப்பட்ட கூட்டம் ஓட்டல்ல.  என்னால தலயே தூக்க முடியல. மொதலாளி பயங்கரமா சத்தம் போட்டார். ஜாதியச் சொல்லிக் கன்னாப் பின்னான்னு திட்டினார். என்னால தாங்கிக்க முடியல. போடா நீயும் ஒன் ஓட்டலும்ன்னு கத்திட்டுக் கும்மோணம் வந்து சேந்தேன்,” என்றான் ரங்கமணி வெறுப்புடன்.

“ கேக்கறதுக்கு வருத்தமா இருக்கு ரங்கமணி. ஒன்னோட ரசிகத் தன்மையைப் புரிஞ்சுண்டு ஒன்னப் பாராட்றவங்க யாருமே இல்லியா?” என்று அனுதாபம் பொங்கும் குரலில் வினவினேன்.

” இல்லாம என்ன? அத்தி பூத்தாப்ல யாரேனும் ஒரு மொதலாளி அமையறதுண்டு. கடலூர்ல ஒரு ஓட்டல்ல இருந்தேன். அங்க ஆஞ்சநேயர் கோவில்ல வருஷப் பிறப்பன்னிக்கு லக்ஷதீபம் உண்டு. மதுரை சேதுராமன் பொன்னுசாமி நாயனம்னு கேழ்விப்பட்டேன். எப்பன்னு விஜாரிச்சேன்.

ராத்திரி ஸ்வாமி உலா பொறப்படும். பத்து மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலம்பற மூணு மணி வரைக்கும் கச்சேரி உண்டுன்னு ஒரு ராயர் சொன்னார். மொதலாளிகிட்ட போய் விஷயத்தச் சொன்னேன். அவரு வலது காது கொஞ்சம் செவிடு. ஆனாலும் விஷயத்தப் புரிஞ்சுண்டர். சரி! நாளக்கிக் கார்த்தால நீ வேலைக்கி வர வேணாம். சாயந்தரம் வந்தாப் போறும். ஆஞ்சநேயர் உண்டியல்ல போடுன்னு பத்து ரூவா பணங் கொடுத்தார்,” என்று விவரித்தான் ரங்கமணி.

” கல்யாண வேலைக்கிப் போறதுண்டா?” என்று அக்கறையுடன் விசாரித்தேன்.

“ ஊம். போகாம என்ன? குத்தாலம் பாலாஜி க்ரூப்ல எட்டு மாசம் வேலை பாத்தேன். சிதம்பரம் தெக்கு வீதீல ஒரு செட்டியார் சத்திரத்துல ஒரு பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம். பெரிய திட்டம். ஏகப்பட்ட கூட்டம். தெருவெல்லாங் காரா நிக்கறது. திருநெல்வேலிச் சுப்பையா நாதஸ்வரம். அவரப் பத்தி முன்னால ஒண்ணுங் கேள்விப்பட்டதில்ல. யாரோ புதுசு போல்ருக்குன்னு அலக்ஷியமா இருந்துட்டேன்.

திடீர்னு சாருமதில ஆலாபனை பண்ண ஆரம்பிச்சுட்டார். என்ன கீர்த்தனைன்னு சரியா ஞாபகம் இல்ல. மோக்ஷமுகலதாவா? சரியா நினைவில் இல்ல. உள்ள பெரிய மனுஷா பந்தியில பாயசம் போட்டுண்டு இருந்தேன். பொண்ணுக்கு மாமாவாம். பெரிய மிராசாம். இன்னொரு கரண்டி போட்டுட்டு உள்ள போய் கொஞ்சம் வெந்நீர் எடுத்துண்டு வாய்யான்னு உத்தரவு போட்டார். சாதாரண நாளா இருந்தா உத்தரவுன்னு சொல்லிப்ட்டு பவ்யமா கொண்டுவந்து கொடுத்திருப்பேன். ஒரு ப்ரச்சினையும் இருந்திருக்காது. நல்ல பேரோட ஊருக்கு வந்திருக்கலாம்,” என்று ரங்கமணி மூச்சுவிட்டான்.

“ ஏன் என்ன ஆச்சு?” என்று ஆர்வத்துடன் விசாரித்தேன்.

“ அங்கே சுப்பையா தேனாப் பொழியரார். கச்சேரில முன்வரிசை ஓரமா ஒக்காந்துண்டு அனுபவிச்சுக் கேக்கணும்னு தோணித்து. ஒடனே வர்றது வரட்டும்னு போயிட்டேன். கால்மணி கழிச்சுத் திரும்பி வந்தேன் பரிமாற. ஒரே ரகளை. மாஸ்டர் குக் பாலாஜி ஐயர் பயங்கரக் கோவத்துல இருக்கார்.

’எலே! என்ன நெனச்சுண்டிருக்க ஒம் மனசுல? தென்பாதி பிள்ளைவாள் வெந்நீர் கேட்டாராம். நீ பாட்டுக்குக் காதுல வாங்காம அலக்ஷியமாப் போயிட்டியாமே? என்ன திமிரு ஒனக்கு? ஒரு பரிஜாரகனுக்கு இவ்வளவு திமிரு இருந்தா ஐநூறு காணி மிராசுதாருக்கு எவ்வளவு இருக்கும்? கொத்துச்சட்டியைக் கீழே வைய்டா. வைய்டா சொல்றேன். ஏம் மொகத்துல முழிக்காத. எங்கியானும் ஒழிஞ்சு போ’ன்னு காட்டுக்கத்தலாக் கத்தினார்.  அவமானமா இருந்துது. மாயவரத்துக்குத் திரும்பி வந்தேன்,” என்றான் ரங்கமணி.

சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. ஹோட்டலில் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, உள்ளேயிருந்து வெளியே வந்தோம்.

“ ஏன் ரங்கமணி? ஓட்டல்லயும் ஒன்னால ஒழுங்கா வேலை பாக்க முடியல்ல. கல்யாண சமையல் பார்ட்டிலயும் இருக்க முடியல. அப்பறம் ஜீவனத்துக்கு என்னதான் வழி?” என்று உண்மையான கரிசனத்துடன் விசாரித்தேன்.

அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.

” பொண்டாட்டி புள்ளைகளைக் காப்பாத்தறது ஒன்னோட கடமை இல்லியா? இப்படி அடிக்கடி வேலையை விட்டுட்டு நின்னா, குடும்பத்தோட கதி என்ன? அவங்கள்ளாம் சாப்பாடு, துணி மணிக்கெல்லாம் எங்கே போவாங்க? அந்தக் காலத்துல சரியாப் படிக்கமுடியாமத்தான் உன் வாழ்க்கை வீணாப் போச்சு. கோவில்ல பரிஜாரகரா இருந்த ஒங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வெச்சார்? எஸ்.எஸ்.எல்.சி.ல மூணு தடவை கணக்குல ஃபெய்ல் ஆனதுனால் எந்த உத்யோகத்துக்கும் போக முடியாமப் போயிடுத்து. ஒன்னப் பாத்தா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,” என்று கடிந்துகொண்டேன்.

” நல்ல வேளையா நா ஒரு முட்டாத்தனம் பண்ணாம இருந்தேன். நல்லதோ கெட்டதோ என்னோட போச்சு. நீங்கள்ளாம் கல்யாணத்தப் பண்ணிண்டு என்ன சொகத்தக் கண்டேள்? ஓயாத குடும்பக் கவலை. பணக் கவலை. உத்யோகத்தப் பத்தின கவலை. ஒரு நிமிஷமாவது மன நிம்மதியோட இருந்ததாச் சொல்ல முடியுமா?” என்றான் ரங்கமணி கம்பீரமாக.

“ அப்படியா? ரொம்ப சந்தோஷம். அப்ப ஒரு கவலையும் இல்லாம நீ இருக்கேன்னு சொல்ற,” என்றேன் குழப்பத்துடன்.

“ சந்தேகமில்லாம. நா நிம்மதியா இருக்கேன். பணக் கஷ்டமிருக்கு. நடுநடூல ஒடம்பு சரியில்லாம தொந்தரவு பண்றது. அதெல்லாம் உண்மைதான். இல்லேங்கல. டாட்டா பிர்லாவுக்குக் கூடத்தாம் பனக் கஷ்டமிருக்கு. யாருக்குத்தான் இல்ல? ஆனா மனக் கவலை இல்லாம என்னால இருக்க முடியறது. அது ஒரு அதிசயமில்லியா?

எனக்குப் பிடிச்சது கர்நாடக சங்கீதம். அதுல என்ன இழந்துடறேன். எதிர்காலத்தப் பத்திக் கவலையில்லை. நா சின்ன வயசுலேர்ந்து கேட்ட கச்சேரிகளெல்லாம் என் காதுல கேட்டபடியிருக்கு. இதுவரைலயும் அங்கே இங்கேன்னு ஓடி ஓடிக் கேட்டிண்டு இருந்தேன். இப்ப வயசாயிடுத்து. முன்னப்போல இஷ்டப்படி அலைய முடியல. அதுனால என்ன?

ஒரு ஃபிலிப்ஸ் டூ.இன்.ஒண்ணும் நூறு காஸெட்டுந்தான் என் சொத்து. அந்தக் காலத்து முசிறி சுப்ரமண்ய ஐயர்லேர்ந்து நேத்திக்கு வந்த உன்னிக்ருஷ்ணன் வரைக்கும் வெச்சுருக்கேன். ராத்திரி பன்னெண்டு வரையிலும் இஷ்டப்பட்டதைப் போட்டுக் கேட்பேன். அப்பிடியே ஒருநாள் போயிட்டாலும் கவலையில்ல. நிதிசால சுகமான்னு கேட்டார் தியாகய்யர். நாம என்ன தியாகப் பிரம்மத்த விடக் கெட்டிக்காராளா?” என்று படபடவென்று பொரிந்தான் ரங்கமணி.  

நான் வாயடைத்து நின்றேன்.

( நன்றி: முகப்பு ஓவியம் - ஆதித்ய பாண்ட்யா)

25.11.12

ஆளை உருக்கும் ஒரு அஞ்சலி.



போன மாதம் ஒரு நடுநிசியின் பேரமைதியில் என் நண்பன் செல்லத்துரையோடு இந்த விளம்பர வீடியோவைப் பார்த்துப் பரவசப் பட்டேன்.

ஒன்றே முக்கால் நிமிடத்தின் முறிவில் துளிர்க்கும் ப்யானோவின் ஒற்றைச் சொல்லுக்கும், அதற்கடுத்த சொல்லுக்கும் நடுவே சமுத்திரம் போல் பரவிக்கிடக்கும் நிசப்தம் என்னை அசைக்கத் துவக்கியது.

தன் தந்தையை இழந்த செல்லக் குழந்தைகளை அந்தத் தாய் அணைத்துக் கொண்ட போது என் மனம் நிறைந்து தளும்பியது.

உறவைப் பற்றியும், பிரிவைப் பற்றியும், வாழ்க்கையின் குறைநிறைகளை நாம் பார்க்க வேண்டிய கோணம் பற்றியும் அற்புதமாய் போதித்த யாஸ்மின் அஹமதுக்கு என் வந்தனங்கள்.

அந்த உரையைத் தோராயமாய் மொழிபெயர்த்திருக்கிறேன்.
இந்த வீடியோவுக்காக ஒரு மூன்று நிமிடம் செலவழியுங்கள் ப்ளீஸ்.

”திருமதி லீ! மரித்த உங்கள் துணை குறித்துச் சொல்ல விரும்புவீர்கள் என நினைக்கிறேன்.

இன்றைக்கு நான் மரித்துப்போன என் கணவரின் புகழைப் பாட இங்கு வரவில்லை.

அவரின் நல்ல குணாதிசயங்களைப் பற்றிப் பேசவும் வரவில்லை. நிறையப் பேர் அதைச் செய்துவிட்டார்கள்.

மாறாக, உங்களில் சிலருக்கு அசௌகர்யமாக உணரக்கூடிய சிலவற்றைப் பற்றிப் பேசப் போகிறேன்.

முதலாவதாக எங்கள் படுக்கையில் நடந்த விஷயங்களைப் பற்றிப் பேச விரும்புகிறேன்.

காலையில் உங்கள் கார் என்ஜினை இயக்க உண்டாகும் கஷ்டத்தை எப்போதேனும் பெற்றதுண்டா?

( ஒலியை எழுப்புகிறார்)

கிட்டத்தட்ட இப்படித்தான் டேவிட் உண்டாக்கும் குறட்டை ஒலி இருக்கும்.

பொறுங்கள். ஆனால் குறட்டை மட்டுமல்ல. அத்தோடு கூட அதன் பின்னிருந்து கிளம்பும்  காற்றும் கூட.

சில இரவுகள் பலமான அவரின் குறட்டை ஒலியே அவரை எழுப்பிவிடும்.

“ ஓ! நாயாயிருக்கும். நீ தூங்கு டேவிட்” என்று சொல்வேன்.

இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாய் இருக்கலாம். ஆனால் தன் வாழ்க்கையின் - நோயால் பீடிக்கப்பட்ட - இறுதி நாட்களில் இந்தக் குறட்டை ஒலிதான் ’என் டேவிட் இன்னும் வாழ்கிறார்’ என்று உணர்த்தும்.

வேறென்ன சொல்ல? நான் உறங்கும் முன் மீண்டும் அந்தச் சத்தங்களைக் கேட்க விரும்புகிறேன்.

கடைசியில் நினைவிலாடும் இந்த மாதிரியான சின்னச் சின்ன சில அரைகுறை விஷயங்கள்தான் அவர்களை முழுமையாய் நினைவுறுத்துகின்றன.

என் அழகான குழந்தைகளே! ஒருநாள் நீங்களும் - எனக்கு உங்கள் தந்தையைப் போல - அரைகுறையானாலும் அற்புதமான ஒருவரை உங்கள் வாழ்க்கைத் துணையாய்ப் பெறக்கூடும்.”

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...