26.11.12

ரசிகன் ரங்கமணி - காதம்பரி

கும்பகோணத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஹிந்தி வகுப்புக்கள் நடத்தும் என் நண்பர் ஒருவர், கல்வி நிலைய மாணவ மாணவிகளுக்காக காந்தி ஜயந்தியன்று எனது சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார். பொருள்: “ருஷ்ய மஹாகவி புஷ்கினின் வாழ்க்கை வரலாறு”. மகிழ்வுடன் அந்த நிகழ்ச்சிக்குச் சம்மதித்தேன்.

மாலை ஆறு மணிக்குத்தான் கூட்டம் துவங்குவதாக நிச்சயிக்கப்பட்டிருந்தது. ஆனால் தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் ஒரு மணிக்கே புறப்பட்டு விட்டேன். எனது நண்பரும், கலை விமர்சகருமான தேநுகாவை அவர் பணி புரிந்த ஸ்டேட் பாங்க் அலுவலகத்தில் சந்தித்து சற்று நேரம் பேசலாம் என்ற எண்ணமிருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் எம்.வி.வெங்கட்ராம் அவர்களைத் தோப்புத் தெருவில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசவும் விழைந்தேன். ஆனால் விதி வேறு விதமாக இருந்தது.

ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் தெற்கு வாசலருகே இறங்கி விட்டேன். கோயிலுக்குள் புகுந்து மூடப்பட்டிருந்த சந்நிதிக்கு வெளியே பயபக்தியுடன் கண்களை மூடி தியானம் செய்து, தரிசித்து வணங்கினேன். கீழ சந்நிதி வழியாக நான் வந்து கொண்டிருந்தபோது எதிரில் திடீரென்று கோவில் யானை வந்தது,

திடுக்கிட்ட நான் கொஞ்சம் பயத்துடன் ஒதுங்கி நின்றேன். யானை துதிக்கையை இப்படியும், அப்படியும் ஆட்டவே வேறு வழியின்றி பக்கத்திலிருந்த ஒரு சிறிய கடையில் ஏறிவிட்டேன். கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்திருந்தால் பாரதியார் கதை ஆகியிருக்கும். இதயம் படபடவென்று அடித்துக்கொண்டது.

கடைக்குள் இருந்து ரங்கமணி வெளியே வந்தான். என்னைக் கண்டதும் வியப்பு மேலிட்ட குரலில், “ஜவுளிக்கடை கோபாலய்யர் பிள்ளை மணிதானே?” என்று கேட்டான். எனக்கு அவனை நன்றாக நினைவிலிருந்தது. அவனுக்கு என்னை ஞாபகம் இருக்குமோ? இருக்காதோ? என்று முதலில் தயங்கினேன். அவனே என்னை விசாரித்ததும் எனக்கு சந்தோஷமாக இருந்தது.

”திருவிழந்தூர் ரங்கமணிதானே? சௌக்கியமா இருக்கியா? இப்போ எங்கே இருக்கே? என்ன பண்றே?,” என்று படபடவெனக் கேட்டேன்.

“ வா. டிஃபன் சாப்டுண்டே பேசலாம். அடேயப்பா! எத்தனை வருஷமாச்சு? ஐம்பது வருஷத்துக்கு மேலே இருக்குமே,” என்று கையைப் பிடித்து இழுத்தான் அவன்.

“ இருக்கும். இருக்கும். கடசியா ஒன்ன எங்க பாத்தேன் தெரியுமா? சீர்காழி மதனகோபால் நாயுடு சத்திரத்துலே சூலமங்கலம் சிஸ்டர்ஸ் கச்சேரியிலே 1954லே பாத்ததுதான்,” என்றேன். எனக்கு ஒரு சாபக்கேடு. எதுவுமே மறப்பதில்லை.

கோயில் வாசலுக்கு வந்தோம். “ இங்கே ஆராதனான்னு ஒரு ஓட்டல் தெறந்திருக்கான். வா சாப்பிடலாம்,” என்றான் ரங்கமணி.

இருவரும் அங்கே போய் எதிரும், புதிருமாக உட்கார்ந்தோம்.

“ ஊம். அப்புறம்? ஒன்னப் பத்தி விஜாரிச்சேன். பதிலே சொல்லலியே?,” என்று தொடர்ந்தேன்.

“ என்னத்தச் சொல்றது போ. கழுத கெட்டா குட்டிச் சொவரு. இந்த ஊர்லதான் இருக்கேன். இப்ப வயத்துப் பொழப்புக்கு சுண்டல், காராச்சேவு, பகோடா பொட்லம் போட்டு விக்கறேன். லோலோன்னு நாயலச்சல். நூறு ரூவா சம்பாதிக்கறதுக்குப் பன்னண்டு மணி ஒழைக்க வேண்டீருக்கு,” என்று அலுத்துக் கொண்டான் ரங்கமணி.

எனக்கு என்னவோ போலிருந்தது.

” சரி. என்ன சாப்பிடறே சொல்லு. ரொம்ப வருஷங் கழிச்சுப் பாக்கறோம். எதாவது ஸ்வீட் சாப்பிடலாம்,” என்றேன்.

ரங்கமணி சற்று நேரம் மௌனமாக இருந்தான்.

பிறகு, “ ஒன்ன என்னால மறக்கவே முடியாதுப்பா. காவேரி மணல்ல ஒக்காந்து சிவகாமியின் சபதம் கதைய நாலு மணி நேரம் சொன்னியே! அப்படியே சினிமா பாக்கற மாதிரி இருந்தது. அதுக்கப்புறம் நாம எல்லாரும் எட்டுத் திக்குலயும் பிரிஞ்சு போயுட்டோம்,” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.  

“ சரி ரங்கமணி. இப்பல்லாம் கச்சேரிக்குப் போறதுண்டா? ஒனக்குப் பாட்டுன்னா உசுராச்சே?” என்றேன் சிரித்துக்கொண்டே.

“ அட! ஞாபகம் வெச்சுண்டிருக்கியே!” என்று என்னைத் தட்டிய ரங்கமணி,  “போன மாசங்கூட சுதா ரகுநாதன் கச்சேரி நடந்துது. அதுக்கு முன்னாடி நித்யஸ்ரீ கச்சேரி கேட்டேன்,” என்றான் தொடர்ந்து.

சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தோம்.

“ ஒரு தடவை ஏ.கே.சி. நடராஜன் க்ளாரினெட் கேக்கறதுக்காக நீ சிதம்பரம் வந்தபோது, நாம கீழ வீதீல பாத்துண்டோம். ஆனா நீ கலகலப்பாப் பேசல. என்ன காரணம்னு அப்பறம் விஜாரிச்சுத் தெரிஞ்சுண்டேன். நீ கச்சேரி கச்சேரின்னு அடிக்கடி லீவு போட்டதால உங்க மொதலாளி வேலைய விட்டு நீக்கிட்டார். சரிதானா?”

“ ஆமாம். என்னால எங்கியுமே ரெண்டு வருஷங் கூடத் தொடந்தாப்ல இருக்க முடியல. சங்கீதக் கச்சேரிகளைக் கேக்காமலும் இருக்க முடியல. அப்ப மாயவரத்துல வேலை பாத்தேன். ஏ.கே.சி. கச்சேரி ரொம்பப் பிடிக்கும். அதனாலதான் சிதம்பரம் வந்தேன். இதுவரைக்கும் பத்துப் பதினஞ்சு ஓட்டல்ல வேலை பாத்துட்டேன். எந்த மொதலாளிக்கும் என்னப் பிடிக்கல. கச்சேரிக்காக லீவு எடுத்தா டிஸ்மிஸ்தான்,” என்று துயரம் நிறைந்த குரலில் மொழிந்தான் ரங்கமணி.

“ தஞ்சாவூர்ல வேலை பாத்தியா?” என்று ஆவலுடன் கேட்டேன்.

“ பாக்காம என்ன? கௌரி பவன்னு தெக்கு வீதீல இருக்கே அங்கே ஒரு வருஷம் இருந்தேன். நன்னாத்தான் போயிண்டிருந்தது. நாலு கால் மண்டபம் ஆஞ்சநேயர் கோயில்ல உத்ஸவம். கத்ரி கோபால்நாத் கச்சேரி. ராத்திரி ஒம்பது மணிக்கு ஆரம்பிச்சு ஒரு மணி வரைக்கும் நடந்துது. தெருவுல ஒக்காந்துண்டு பூராவுங் கேட்டேன். விடிஞ்சா ஜொரம் வந்துடுத்து. பயங்கரமான தலவலி. எழுந்திருக்கவே முடியல. ஓட்டல் மாடீலதான் படுத்திண்டிருந்தேன்.

விடிகாலம்பற நாலு மணிக்கு எழுந்து வேல செஞ்சு பழக்கம். அன்னிக்கு முடியல. அன்னிக்கின்னு பாத்துக் காலம்பற ஏகப்பட்ட கூட்டம் ஓட்டல்ல.  என்னால தலயே தூக்க முடியல. மொதலாளி பயங்கரமா சத்தம் போட்டார். ஜாதியச் சொல்லிக் கன்னாப் பின்னான்னு திட்டினார். என்னால தாங்கிக்க முடியல. போடா நீயும் ஒன் ஓட்டலும்ன்னு கத்திட்டுக் கும்மோணம் வந்து சேந்தேன்,” என்றான் ரங்கமணி வெறுப்புடன்.

“ கேக்கறதுக்கு வருத்தமா இருக்கு ரங்கமணி. ஒன்னோட ரசிகத் தன்மையைப் புரிஞ்சுண்டு ஒன்னப் பாராட்றவங்க யாருமே இல்லியா?” என்று அனுதாபம் பொங்கும் குரலில் வினவினேன்.

” இல்லாம என்ன? அத்தி பூத்தாப்ல யாரேனும் ஒரு மொதலாளி அமையறதுண்டு. கடலூர்ல ஒரு ஓட்டல்ல இருந்தேன். அங்க ஆஞ்சநேயர் கோவில்ல வருஷப் பிறப்பன்னிக்கு லக்ஷதீபம் உண்டு. மதுரை சேதுராமன் பொன்னுசாமி நாயனம்னு கேழ்விப்பட்டேன். எப்பன்னு விஜாரிச்சேன்.

ராத்திரி ஸ்வாமி உலா பொறப்படும். பத்து மணிக்கு ஆரம்பிச்சு விடிகாலம்பற மூணு மணி வரைக்கும் கச்சேரி உண்டுன்னு ஒரு ராயர் சொன்னார். மொதலாளிகிட்ட போய் விஷயத்தச் சொன்னேன். அவரு வலது காது கொஞ்சம் செவிடு. ஆனாலும் விஷயத்தப் புரிஞ்சுண்டர். சரி! நாளக்கிக் கார்த்தால நீ வேலைக்கி வர வேணாம். சாயந்தரம் வந்தாப் போறும். ஆஞ்சநேயர் உண்டியல்ல போடுன்னு பத்து ரூவா பணங் கொடுத்தார்,” என்று விவரித்தான் ரங்கமணி.

” கல்யாண வேலைக்கிப் போறதுண்டா?” என்று அக்கறையுடன் விசாரித்தேன்.

“ ஊம். போகாம என்ன? குத்தாலம் பாலாஜி க்ரூப்ல எட்டு மாசம் வேலை பாத்தேன். சிதம்பரம் தெக்கு வீதீல ஒரு செட்டியார் சத்திரத்துல ஒரு பிள்ளைமார் வீட்டுக் கல்யாணம். பெரிய திட்டம். ஏகப்பட்ட கூட்டம். தெருவெல்லாங் காரா நிக்கறது. திருநெல்வேலிச் சுப்பையா நாதஸ்வரம். அவரப் பத்தி முன்னால ஒண்ணுங் கேள்விப்பட்டதில்ல. யாரோ புதுசு போல்ருக்குன்னு அலக்ஷியமா இருந்துட்டேன்.

திடீர்னு சாருமதில ஆலாபனை பண்ண ஆரம்பிச்சுட்டார். என்ன கீர்த்தனைன்னு சரியா ஞாபகம் இல்ல. மோக்ஷமுகலதாவா? சரியா நினைவில் இல்ல. உள்ள பெரிய மனுஷா பந்தியில பாயசம் போட்டுண்டு இருந்தேன். பொண்ணுக்கு மாமாவாம். பெரிய மிராசாம். இன்னொரு கரண்டி போட்டுட்டு உள்ள போய் கொஞ்சம் வெந்நீர் எடுத்துண்டு வாய்யான்னு உத்தரவு போட்டார். சாதாரண நாளா இருந்தா உத்தரவுன்னு சொல்லிப்ட்டு பவ்யமா கொண்டுவந்து கொடுத்திருப்பேன். ஒரு ப்ரச்சினையும் இருந்திருக்காது. நல்ல பேரோட ஊருக்கு வந்திருக்கலாம்,” என்று ரங்கமணி மூச்சுவிட்டான்.

“ ஏன் என்ன ஆச்சு?” என்று ஆர்வத்துடன் விசாரித்தேன்.

“ அங்கே சுப்பையா தேனாப் பொழியரார். கச்சேரில முன்வரிசை ஓரமா ஒக்காந்துண்டு அனுபவிச்சுக் கேக்கணும்னு தோணித்து. ஒடனே வர்றது வரட்டும்னு போயிட்டேன். கால்மணி கழிச்சுத் திரும்பி வந்தேன் பரிமாற. ஒரே ரகளை. மாஸ்டர் குக் பாலாஜி ஐயர் பயங்கரக் கோவத்துல இருக்கார்.

’எலே! என்ன நெனச்சுண்டிருக்க ஒம் மனசுல? தென்பாதி பிள்ளைவாள் வெந்நீர் கேட்டாராம். நீ பாட்டுக்குக் காதுல வாங்காம அலக்ஷியமாப் போயிட்டியாமே? என்ன திமிரு ஒனக்கு? ஒரு பரிஜாரகனுக்கு இவ்வளவு திமிரு இருந்தா ஐநூறு காணி மிராசுதாருக்கு எவ்வளவு இருக்கும்? கொத்துச்சட்டியைக் கீழே வைய்டா. வைய்டா சொல்றேன். ஏம் மொகத்துல முழிக்காத. எங்கியானும் ஒழிஞ்சு போ’ன்னு காட்டுக்கத்தலாக் கத்தினார்.  அவமானமா இருந்துது. மாயவரத்துக்குத் திரும்பி வந்தேன்,” என்றான் ரங்கமணி.

சற்று நேரம் மௌனமாகக் கழிந்தது. ஹோட்டலில் பில்லுக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு, உள்ளேயிருந்து வெளியே வந்தோம்.

“ ஏன் ரங்கமணி? ஓட்டல்லயும் ஒன்னால ஒழுங்கா வேலை பாக்க முடியல்ல. கல்யாண சமையல் பார்ட்டிலயும் இருக்க முடியல. அப்பறம் ஜீவனத்துக்கு என்னதான் வழி?” என்று உண்மையான கரிசனத்துடன் விசாரித்தேன்.

அவன் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டான்.

” பொண்டாட்டி புள்ளைகளைக் காப்பாத்தறது ஒன்னோட கடமை இல்லியா? இப்படி அடிக்கடி வேலையை விட்டுட்டு நின்னா, குடும்பத்தோட கதி என்ன? அவங்கள்ளாம் சாப்பாடு, துணி மணிக்கெல்லாம் எங்கே போவாங்க? அந்தக் காலத்துல சரியாப் படிக்கமுடியாமத்தான் உன் வாழ்க்கை வீணாப் போச்சு. கோவில்ல பரிஜாரகரா இருந்த ஒங்கப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னப் படிக்க வெச்சார்? எஸ்.எஸ்.எல்.சி.ல மூணு தடவை கணக்குல ஃபெய்ல் ஆனதுனால் எந்த உத்யோகத்துக்கும் போக முடியாமப் போயிடுத்து. ஒன்னப் பாத்தா எனக்கு ரொம்ப வருத்தமா இருக்கு,” என்று கடிந்துகொண்டேன்.

” நல்ல வேளையா நா ஒரு முட்டாத்தனம் பண்ணாம இருந்தேன். நல்லதோ கெட்டதோ என்னோட போச்சு. நீங்கள்ளாம் கல்யாணத்தப் பண்ணிண்டு என்ன சொகத்தக் கண்டேள்? ஓயாத குடும்பக் கவலை. பணக் கவலை. உத்யோகத்தப் பத்தின கவலை. ஒரு நிமிஷமாவது மன நிம்மதியோட இருந்ததாச் சொல்ல முடியுமா?” என்றான் ரங்கமணி கம்பீரமாக.

“ அப்படியா? ரொம்ப சந்தோஷம். அப்ப ஒரு கவலையும் இல்லாம நீ இருக்கேன்னு சொல்ற,” என்றேன் குழப்பத்துடன்.

“ சந்தேகமில்லாம. நா நிம்மதியா இருக்கேன். பணக் கஷ்டமிருக்கு. நடுநடூல ஒடம்பு சரியில்லாம தொந்தரவு பண்றது. அதெல்லாம் உண்மைதான். இல்லேங்கல. டாட்டா பிர்லாவுக்குக் கூடத்தாம் பனக் கஷ்டமிருக்கு. யாருக்குத்தான் இல்ல? ஆனா மனக் கவலை இல்லாம என்னால இருக்க முடியறது. அது ஒரு அதிசயமில்லியா?

எனக்குப் பிடிச்சது கர்நாடக சங்கீதம். அதுல என்ன இழந்துடறேன். எதிர்காலத்தப் பத்திக் கவலையில்லை. நா சின்ன வயசுலேர்ந்து கேட்ட கச்சேரிகளெல்லாம் என் காதுல கேட்டபடியிருக்கு. இதுவரைலயும் அங்கே இங்கேன்னு ஓடி ஓடிக் கேட்டிண்டு இருந்தேன். இப்ப வயசாயிடுத்து. முன்னப்போல இஷ்டப்படி அலைய முடியல. அதுனால என்ன?

ஒரு ஃபிலிப்ஸ் டூ.இன்.ஒண்ணும் நூறு காஸெட்டுந்தான் என் சொத்து. அந்தக் காலத்து முசிறி சுப்ரமண்ய ஐயர்லேர்ந்து நேத்திக்கு வந்த உன்னிக்ருஷ்ணன் வரைக்கும் வெச்சுருக்கேன். ராத்திரி பன்னெண்டு வரையிலும் இஷ்டப்பட்டதைப் போட்டுக் கேட்பேன். அப்பிடியே ஒருநாள் போயிட்டாலும் கவலையில்ல. நிதிசால சுகமான்னு கேட்டார் தியாகய்யர். நாம என்ன தியாகப் பிரம்மத்த விடக் கெட்டிக்காராளா?” என்று படபடவென்று பொரிந்தான் ரங்கமணி.  

நான் வாயடைத்து நின்றேன்.

( நன்றி: முகப்பு ஓவியம் - ஆதித்ய பாண்ட்யா)

12 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

அசந்து போனேன். இது கற்பனைக் கதை இல்லை என்று நினைக்கிறேன். இது போல் மனிதர்களை நான் நிறைய சந்தித்திருக்கிறேன்.

பி. சுவாமிநாதன் சொன்னது…

டியர் சுந்தர்

வழக்கம் போல் அருமை.

என்ன ஒரு யதார்த்தமான வரி - நூறு ரூவா சம்பாதிக்கறதுக்குப் பன்னண்டு மணி ஒழைக்க வேண்டீருக்கு

ரசித்தேன்.

மீனாக்ஷி சொன்னது…

அம்மா! என்ன ஒரு எழுத்து நடை. மெய் மறந்து போனேன். பேச்சு வழக்கில் சில வார்த்தைகளின் உச்சரிப்பு எப்படி இருக்குமோ அதை கூட நுணுக்கமாக கதையில் சேர்த்து, படிக்கும் போது என்னை சிலிர்க்க வைத்து விட்டார். வாழ்த்துக்கள்!
பணக்கஷ்டத்தை விட மனகஷ்டம் இல்லாமல் இருப்பது எவ்வளவு பெரிய விஷயம். கதையில் இதை ரங்கமணி கம்பீரமாக சொல்லும் இடம் பிரமாதம். காவேரி கரையில் உட்கார்ந்து கதை பேசுவது எவ்வளவு சுகம். பைசா செலவில்லாத எளிமையான சுகம். ஆனால் இது கிடைக்க கூட கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

காதம்பரி அவர்களின் கதைகளை மிகவும் ரசிக்கிறேன். தொடர்ந்து பதிவிடுவதற்கு நன்றி சுந்தர்ஜி.

ஜி.பி. சதுர்புஜன் சொன்னது…

Dear Sir,

Simply superb. Appidiyae Rangamani namma kannu munnaadi nikkaraar.

Thank you for this reading experience.

டி.ஆர். ராமநாதன் சொன்னது…

'பன்னெண்டு மணி உழைச்சும் நூறு ரூபா கூட உறுதியில்லே' என்பதுதான் எப்போதும் உண்மையான யதார்த்தம், குறிப்பாக சுயதொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு.

அவர்களை ஒப்பிட்டால், வேலையில் இருக்கும் அன்பர்களுக்குப் பணத்தின் அருமை தெரியலாம்; ஆனால் சம்பாதிப்பதின் சிரமம் அவ்வளவாகத் தெரியாது.

குறிப்பாக எங்கள் ஊர்களில் சுயதொழில் செய்யும் உழைப்பாளிகள், குறு/சிறு முதலாளிகள், இன்றைய தமிழ்நாட்டின் (சென்னையைத் தவிர) மின்வெட்டினால் படும் சிரமம், ரங்கமணியின் பாடு தேவலை என்று
கூறச்சொல்லும்.

ரங்கமணிக்கு முதலாளியை மாற்றவாவது சுதந்திரம் உண்டு; இங்கே எதை மாற்றுவது?

எஸ்.ஆர்.எஸ்.கூத்தநயினார் சொன்னது…

மனிதர்களின் பல்வேறு முகங்களைப் படித்து அவற்றை
சுவாரஸ்யமாக வெளிப்படுத்துவது கவிஞர்களுக்குக்
கைவந்த கலை . அதை அவருக்கே
உரிய அழகான பாணியில் பதிவு செய்திருக்கிறார் -
மிக அருமை !

vasan சொன்னது…

வாழ்வை தன் ர‌ச‌னையோடு, ச‌ம‌ர‌சமில்லால் வாழ‌ எத்த‌னை பேருக்கு முடியும்?
இதுவும் ஒரு விய‌க்கக்கூடிய‌ ச‌ந்நியாசியின் வாழ்க‌கை போல‌வே தான்.

சுப்பையர் ராமசாமி சொன்னது…

கருத்தும் நடையும் கவர்ந்தன.

மிக அருமை

அப்பாதுரை சொன்னது…

இப்படியும் வாழலாம். மனம் இன்னும் பழைய கதையிலேயே சுற்றிக் கொண்டிருக்கிறது. மிகச்சிறந்த படைப்பை முதலில் படித்து விட்டால் தொடர்வதை எல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் பாழும் அறிவு.

ப. தியாகு சொன்னது…

உங்களின் நண்பர் இந்த இடுகையை வாசித்தால் தேவலாம் எனத்தோன்றுகிறது சுந்தர்ஜி சார், நிச்சயம் நெகிழ்ந்து போவார்.

vasan சொன்னது…

காத‌ம்ப‌ரி அவ‌ர்க‌ள், சிறுக‌தைக் க‌ம்ப‌னோ?!
கால் த‌ட‌மெல்லாம் க‌தைக‌ளாய் ம‌ல‌ர்கிற‌தே!!

Vassan சொன்னது…

ஆண்டுகள் ஓடிவிட்டன, நினைவுகள் கலங்களாக உள்ளன. இல்லாவிடில் கிட்டதட்ட ரங்கமணி போன்ற பேர்வழி, தென்பாதி கைவிளாஞ்சேரி அக்ராகரத்தில் வசித்த ஆள் பேர் சொல்லியிருப்பேன். வேர்மண்ணில் நடக்கும் கதைகளை படிப்பது அலாதியானவொன்றே. நன்றி உங்களுக்கு.

இப்படிக்கு,
ஒரு "முன்னாள்" தென்பாதி பிள்ளைவாள்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...