15.12.12

இதப் பாருங்க சாமியோவ்!


சமீபத்திய வாசிப்பில் என்னைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பவர் ஸ்ரீ. அரவிந்தர்தான். என் பல்வேறு நம்பிக்கைகளின் சுவர்களை மிக அனாயாசமாகத் தகர்ந்தெறிந்து விட்டார். அவரின் ”மேற்கின் அழிபாடுகளிலிருந்து - இந்தியாவின் மறுபிறப்பு” , அமிர்தா எழுதிய “அரவிந்த தரிசனம்” , Nirodbaran எழுதிய "Twelve years with Sri. Aurobindo" இந்த மூன்று புஸ்தகங்களில் இதுவரை அரவிந்தர் பற்றி அறிய நேராதவர்களுக்கு  சொர்க்கம் காத்திருக்கிறது. ஒரே மூச்சில் நீளும் நள்ளிரவில் எடுத்தபின் கீழே வைக்க முடியாமல் வாசித்தேன்.

காந்தியின் பல முடிவுகளை அக்குவேறு ஆணிவேறாக விமர்சித்திருக்கும் இவரின் துணிச்சல் வேறு யாரிடமும் நான் பார்த்திராதது. இந்தியாவின் விடுதலைக்கு இவர் போடும் அடித்தளம் காலத்தால் திசைமாறி வேறு திசையில் செல்கிறது.

அலிப்பூர் குண்டுவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காலத்தில் வேதங்களையும், உபநிஷத்துக்களையும் வாசிக்க நேர்கிறது. ஓராண்டு சிறையில் இருக்கும் அவருக்கு யோகசாதனை குறித்து ஆறு ஆண்டுகளுக்கு முன்பே மறைந்த விவேகானந்தரிடமிருந்து வழிகாட்டுதல் கிடைக்கிறது. கண்ணனின் காட்சியையும் அவர் பெறுகிறார். அந்த நாளில் இருந்து அவரின் அரசியல் திசை ஆன்மீகத்தின் பாதைக்குத் திரும்புகிறது.

இது போதும். தனியாக ஒரு இடுகையில் பார்க்கலாம்.
***********************
இன்னொரு சுவாரஸ்யமான புஸ்தகம் ஏ.கே.செட்டியார் தொகுத்த நூறாண்டுகளுக்கு முன்பு வெளியான பயணக் கட்டுரைகளின் தொகுப்பு. படு ரசனையான எழுத்து. கமகமக்கும் நாஸ்டால்ஜியா பக்கத்துக்குப் பக்கம்.

செல்லம்மாள் பாரதி தங்கள் குலதெய்வக் கோயிலுக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு போன அனுபவத்தை விவரித்திருக்கும் அழகு ஒரு மஹாகவியின் மனைவி என்பதை நிரூபிக்கிறது. ரயிலில் மூன்றாம் வகுப்பில் பயணிக்கும் வேதனையைப் பல கட்டுரைகள் புலம்பித் தீர்க்கின்றன.

தஞ்சாவூர் சரபோஜி மஹாராஜாவின் தீர்த்த யாத்திரை ( வெள்ளைப் பிள்ளையாரை தரிசித்துவிட்டுக்  குதிரையில் கிளம்பும் ராஜா, போகும் வழியில் அய்யம்பேட்டையில் சீட்டித்துணி விற்றுக்கொண்டிருக்கும் வியாபாரியிடம் பணம் கொடுத்துத் துணியை வாங்கிக் கொள்கிறார்) சென்னையின் குஜிலிக் கடை வரலாறு.....

கண்டிப்பாய்ப் படியுங்கள்.
*************************
திருமூலரிடம் சீடராக இருந்த போகர், சுவடியில் ஒளித்து வைத்த ”கற்ப மூலிகைகள்” என்ற தலைப்பில் அந்தாதி ஃபார்மட்டில் ஒரு பாடலை வாசிக்க நேர்ந்தது. வழக்கம் போலத் திறந்த வாய்தான். இன்னும் மூடவில்லை.

"கேளென்ற
1கருநெல்லி, 
2 கருத்த நொச்சிகெடியான, 
3 கருவீழி, 
4 கருத்த வாழை
காளென்ற, 
5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 
7 கரியவேலி
கோளென்ற 
8 கரூமத்தைத் 
9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 
11 சாயா விருட்சம்
ஏளென்ற 
12 எருமை கனைச்சான் 
13 ரோமவிருட்சம்ஏற்றமாம் 
14 சுணங்க விருட்சம் 
15 செந்திரா" 

"செந்திராய் 
16 செங்கள்ளி 
17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 
19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடுநலமான 
20 கற்பிரபி 
21 கறசேம் பாகும்
பரந்திராய் 
22 கல்லுத்தா மரையி னோடுபாய்ந்த 
23 குழல் ஆ தொண்ட 
24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 
26 வெண்புரசு 
27 வெள்ளைத் துத்திமிகு 
28 வெள்ளைத் தூதுவளை 
மிடுக்குமாமே" (2)

"மிடுக்கான குண்டலமாம் 
29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 
31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 
32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 
34 மதுர வேம்பு
கிடுக்கான 
35 கிளிமூக்குத் துவரை 
36 அமுகண்ணிகெடியான 
37 பொன்மத்தை 
38 மதுர கோவை
படுக்கான 
39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 
41 மதனத் தண்டே" (3)

"தண்டொடு 
42 மூவிலையாம் குருத்துமாகும்தணலான 
43 சிவத்ததில்லை 
44 கருத்த வேம்பு
45 இண்டோடே 
இவ்வகைகள் நாற்பத் தைந்தும்ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)

"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)

ஹப்பா! நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளை எண்ணிப் பாத்துக்குங்க.

இதை முறையாக உட்கொள்ளுபவர்களுக்கு 

1. சாவு இல்லை. 
2. மன்மதன் போல மிடுக்கான வாலிபத்தோற்றம் க்யாரண்டி.
3. முடி (இருந்தால்) நரைக்காது.
4. தோல் சுருங்காது.
5. உடல் மூப்பு அடையாது.
6. மலைகளில் தாவி அஸால்ட்டாக ஏறலாம்.
7. மூச்சு இரைக்காது.
8. வான்வெளியில் வாக்கிங் போகலாம்.
9. வான மண்டலத்தில் உள்ள எல்லா நட்சத்திர மண்டலங்களையும்  பார்க்கலாம்.
10. இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும்.
11. இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும்.

இதையெல்லாம் விட்டு விட்டுக் கண்ட கண்ட கேப்மாரிகளின் விளம்பரத்தில் மயங்கி உங்கள் மேனிப்பொலிவை இழக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.


*********************
படம்: தஞ்சாவூர் தெற்கு வீதி. (150 வருஷங்களுக்கு முன்னால்)

11.12.12

யுகங்களைக் கடந்த கோயில்


தஞ்சாவூர் போயிருக்கிறீர்களா? அதன் கூப்பிடு தூரத்தில் இருக்கும் திருவையாறு போனால் அவசியம் பார்க்கவேண்டியவற்றில் நான் வரிசைப் படுத்துபவை இந்த நான்கும்:

1. ஐயாறப்பர் (பஞ்சநதீஸ்வரர்) திருக்கோயில் 

2. த்யாகப் ப்ரும்மத்தின் ஆராதனை நிகழும் காவிரிக்கரையோரம் அமைந்த சமாதி. ( பகுள பஞ்சமியன்று நடக்கும் ஆராதனைப் பரபரப்புக்கள் எல்லாம் ஓய்ந்த பின்னால் ஆடுகள் திரியும் - வெறிச்சோடிக் கிடக்கும் வெட்டவெளியில் த்யாகய்யாவின் சமாதியை தரிசிப்பது எனக்குப் பிடிக்கும்) 

3. திருவையாறு இசைக் கல்லூரி. 

4. கடைவீதியில் காத்திருக்கும் ஆண்டவர் அசோகா அல்வா. பசும் வாழை இலையில் ஒரு இந்தியாவின் வரைபடம் போலக் கிடத்தப்பட்டிருக்கும் சூடான அசோகா அல்வா. எந்த வேளையில் உள்நுழைந்தாலும் சகட்டுமேனிக்கு ஒரு கடையின் அத்தனை இருக்கைகளிலும் அமர்ந்திருப்பவர்கள் அல்வாவை கபளீகரம் செய்வது ஆச்சர்யமான காட்சி. ருசியில் இருட்டுக்கடை அல்வா முதலிடம் பெற்றாலும் அது ஒரு கையேந்தி பவன். அதை இதனுடன் ஒப்பிட ஒப்பிட முடியாது.


போன வாரம் ஐயாறப்பர் கோயிலுக்குப் போயிருந்தேன். எத்தனை முறை என் நாட்காட்டியின் தாட்கள் கிழிக்கப்பட்டு விட்டன? தோராயமாக 17 ஆயிரம் நாட்களுக்கும் சற்று அதிகம். இத்தனை நாட்களில் ஐந்து தடவைதான் போக நேர்ந்திருக்கிறது. வெவ்வேறு பருவங்களில். 

கோயில் யானையை வேடிக்கை பார்க்கும் பருவத்தில் - தெருவைப் பார்த்திருக்கும் ஆட்கொண்டாரின் குங்கிலியக் கேணியில் குங்கிலியத்தைப் போட ஆசைப்பட்ட பிராயத்தில் - ஒரு ஆடி அமாவாசையின் போது உலகின் அத்தனை சிவ அடியார்களும் கூடிக் கூத்தாடிய ஒரு செவ்வாய்க் கிழமையின் விளிம்பில் - என்று ஐயாறப்பனுக்காக நிர்மாணிக்கப் பட்டிருக்கும் இந்தக் கோயிலைப் பார்த்துப் பரவசப் பட எனக்குப் 17000 நாட்கள் தேவைப் பட்டிருக்கின்றன. 
வெட்கமாய் இருந்தாலும், வாழ்க்கையின் ரகஸ்யமே இதுதான். கையெட்டும் தொலைவில் பொக்கிஷம் இருக்கிறதை - காலின் கீழ் நிழலாய்த் தொடரும் அற்புதத்தை இன்றைக்குத்தான் காண நேர்கிறதை - இப்போதெல்லாம் ஒவ்வொரு பொழுதும் அநுபவித்துக்கொண்டிருக்கிறேன்.   

வழிபாட்டை முடித்த பின் கோயிலின் சுற்றுச் சுவரில் எழுதப் பட்டிருந்த அக்கோயிலின் தல புராணம் ஆனந்தக் களிப்பில் தலையைச் சுழற்றியது. அதை முதலில் பார்ப்போம். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
”இத்திருக்கோயிலுக்கு முதன் முதலில் ப்ரியவ்ரதன் எனும் சூரிய வம்சச் சக்ரவர்த்தி* திருப்பணி செய்தான் என்பது புராண வரலாறு. 

கி.மு. - முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழப் பேரரசன் கரிகாற் பெருவளத்தான். இவன் காட்டை அழித்து நாடாக்கி வளம் பெருக்கியவன். கல்லணை கட்டி, காவிரிக்குக் கரை எழுப்பி இமயத்தே புலி பொறித்து வெற்றியுடன் வரும் வழியில் ஐயாற்றை அடைந்ததும் அவன் ஏறி வந்த தேர் பூமியில் அழுந்தி இடம் பெயரவில்லை. இதனடியில் ஏதோ ஓர் சக்தி ஈர்க்கிறது என உணர்ந்து காட்டை அழித்து பூமியை அகழ்ந்தான். 

பூமியின் அடியில் சிவலிங்கம், சக்தி, விநாயகர், முருகன், சப்த மாதர்கள்,  சண்டர், சூரியன் திருவுருவங்களும், யோகி ஒருவரின் சடைகள் பரந்து, விரிந்து, புதைந்து வேரூன்றியும் காணப்பட்டன. 

மேலும் அகழவே, ’நியமேசர்’ எனும் அகப்பேய்ச் சித்தர் நிட்டையிலிருப்பது கண்டு மெய்விதிர்ப்பெய்தி அவர் பாதம் பணிந்தான். அவரும் கருணை கூர்ந்து கரிகாலனிடம் ’தேவர்களும், நந்தீசரும் வழிபட்ட இம்மகாலிங்கத்திற்கும், மற்றைய படிமங்கட்கும் கோயில் எடுப்பாயாக’ எனக்கூறி எவராலும் வெல்லற்கரிய தண்டமொன்று மளித்து, கோயில் கட்டுதற்கு வேண்டிய பொருளும் நந்தியின் குளம்படியில் கிடைக்குமென அருள் புரிந்தார். 

அவ்வாறே கரிகாற் சோழன் சிறப்பாக ஆலயத் திருப்பணி செய்து, குடமுழுக்கும் செய்து நிவந்தங்கள் அளித்தான். கரிகாற் சோழனுக்கு ஐயாரப்பரே எல்லாம் வல்ல சித்தர் வடிவில் தான்தோன்றி, நாதராக சுயம்பு வடிவில் உள்ள தன் இருப்பிடம் காட்டிக் கோயிலும் கட்டச்செய்தார் என்பதறிந்தோம். 

கற்பக் கிரகப் பிரகாரத்தில் விரிசடை படர்ந்திருப்பதால் பிரகாரத்தைச் சுற்றி வரக் கூடாதென்பதும், சோழனால் கட்டிய செம்பிய மண்டபமே செப்பேச மண்டபமாயிருப்பதும், கரிகாற்சோழன், அவன் மனைவி இருவரின் சிலைகள் இருப்பதும் கண்டு உண்மை உணரலாம்.

கி.பி. 825-850 தெள்ளாறெறிந்த நந்திவர்ம பல்லவன் காலத்திற்கு முந்திய திருப்பணி, ஆதி கோயில் அமைப்பை மாற்றியுள்ளது. அருள்மிகு ஐயாரப்பர் எழுந்தருளியுள்ள கருவறைக் கற்றளி துவார பாலகர், யாளித்தூண்கள் பல்லவர் காலப் பாணியாகும்.


கி.பி. 982** ல் வேங்கி நாட்டு விமலாதித்த தேவர் இதனைப் புதுக்கி, மகாதேவர்க்கு நிறைய அணிகலண்கள் வழங்கியுள்ளார்.

கி.பி. 1006 – ல் முதலாம் இராசராசன் (985 – 1014) மனைவி ஒலோக மாதேவியார் வட கைலாயம் எனும் ஒலோக மாதேவீச் சுரத்தைஎழுப்பி எழுந்தருளும் திருமேனிகள், ஒலோக வீதி விடங்கர் எனும் சோமஸ்கந்தர், விநாயகர் முதலான பஞ்சமூர்த்திகளை வழங்கியுள்ளார்.

கி.பி. 1014 – 1042 முதலாம் இராசேந்திரசோழத் தேவர் மனைவி பஞ்சவன் மாதேவியார் தென் கைலாயக் கோயில் பழுதுபட்டு இருந்ததை புதுப்பித்தார்.

அடுத்து, கிருஷ்ண ராஜ உடையாரால் இக்கோயிலின் திருச்சுற்று மாளிகை எடுக்கப்பெற்றுள்ளது. சலவைத் தூண்கள் சாளுக்கிய நாட்டு வாகாடகச் சிற்பத் திறனை எடுத்துக்காட்டவே பகைவர் நாட்டிலிருந்து கொணர்ந்தவையாகவுள்ளன.

கி.பி. 1118 – 1135 விக்ரம சோழன் காலத்தில் மூன்று, நான்காம் திருச்சுற்றுகளும், மதில், கீழக்கோபுரங்களும் எடுக்கப்பட்டிருப்பதுடன் வடகிழக்கில் நூற்றுக்கால் மண்டபம் அடிப்படை பீடத்துடன் எழும்பி நின்று விட்டது.

கி.பி. 1381 - ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் வீர சரவண உடையார் காலத்து செந்தலைகருப்பூர், கச்சி வீரப்பெருமான் மகளால் கோயில் மண்டப மதில் சீர்திருத்தம் பெற்றது.

கி.பி. 1530 – ல் அச்சுதப்ப நாயக்கர் நின்று போன தண்டபாணி கோயில் மண்டபத்தை 144 தூண்களுடைய அழகிய மண்டபமாக உருவாக்கி முடித்தார். அவர்காலத்து இடைமருதூர் ஆனையப்பப் பிள்ளையாலும், அவர் தம்பி வைத்திய நாதராலும் மேலக்கோபுரம், முதற் பிரகாரம், அதில் திருநடமாளிகைப் பத்தி (மாடி) மூன்றாம் பிரகாரத் தெற்குக் கோபுரம், திருக்குளம், காவிரி பூசைப் படித்துறை “கல்யாண சிந்து” மண்டபம், குதிரை பூட்டிய தேர் மண்டபங்கள் ஆகிய இவை யாவும் அவர்களால் எடுக்கப் பட்டனவே.

கி.பி. 1784 காஞ்சீபுரம் வள்ளல் பச்சையப்ப முதலியார், மூன்றாம் பிரகார முகப்பு மண்டபத் திருப்பணி செய்துள்ளார். அவரும் அவரது இரு மனைவியர் திருவுருவங்களும் தூண்களில் உள்ளன. மூன்றாம் பிரகார கிழக்குக் கோபுரம் விக்கிரம சோழனால் கட்டப் பெற்றதாகும்.

கி.பி. 1937 – ல் நாமறிந்த வகையில் அம்மன் கோயில் முழுமையும் அழகு ஒழுகும் பளிங்குக் கருங்கள் திருப்பணியாக தேவகோட்டை சிவத்திரு உ.ராம.மெ.சுப.சேவு. மெய்யப்பச் செட்டியார் அவர்கள் குடும்பத்தினரால் திருப்பணி செய்யப் பெற்று 2-5-1937 ல் குடமுழுக்கு இனிதே நிறைவேறியுள்ளது.

கி.பி. 1971 – ல் திருக்கையிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் 25 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் அவர்களால் திருக்கோயில் முழுமையும் செப்பமுற திருப்பணி செய்யப்பெற்று 31-3-1971 ல் திருக்குடமுழுக்குப் பெருவிழா மிகச் சீரும் சிறப்புமாக நிகழ்ந்தேறியது.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

* ரகுவம்சத்தைச் சேர்ந்த மன்னனாகையால், இது த்ரேதா யுகத்தைச் சேர்ந்த கோயிலாகவும் இருக்கக்கூடும்.

**1013 – 14 ஆம் ஆண்டு என கல்வெட்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த விமலாதித்த தேவர்தான் ராஜராஜ சோழனின் புதல்வி குந்தவி தேவியை மணம்செய்திருக்கக் கூடும்.


எனக்குத் தெரிந்த வகையில் பல ஆட்சியாளர்களின் காலங்களையும் பார்த்த கோயில் இதுவாகத்தான் இருக்கும். கரிகாற்சோழனில் தொடங்கி, போன நூற்றாண்டின் மெய்யப்பச் செட்டியார் வரைக்கும் கோயில் மெருகூட்டப்பட்டிருப்பது ஆச்சர்யமான அற்புதம்.  

கோயில் நெடுகிலும் கண்ணில் படும் பல கலாச்சாரங்களின் தடமாக விதவிதமான சிற்பங்களின் அழகும், ஏராளமான கல்வெட்டுக்களில் சொல்லப்பட்டிருக்கும் வரலாறும் திகட்டத் திகட்டப் பருக ஏற்றவை. இன்னொரு முறை ஒரு முழு நாளும் தங்கி, குறிப்புகள் எடுத்து இன்னொரு இடுகையில் அவற்றை எழுதுகிறேன்.

கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பில் பரந்து கிடக்கும் இந்த வரலாற்றின் சாட்சியைப் பார்க்கும்போது இது தஞ்சாவூர்ப் பெரிய கோயிலுக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை என்று தோன்றியது. கரிகால் சோழனைப் பார்த்த நந்தி என்னையும் உற்றுப் பார்த்த தருணத்தில், நான் கி.மு.முதலாம் நூற்றாண்டில் நீந்திக்கொண்டிருந்தேன்.

நான் சென்றிருந்தபோது மிகுந்த உற்சாகத்துடன் திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. இறைவனின் கருணையால் நீண்ட இடைவேளை கடந்து - 41 வருடங்களுக்குப் பின் - வரும் தை மாதம் 25ம் நாள் வியாழக்கிழமை, மூல நக்ஷத்திரத்தில் ( 07.02.2013 ) குடமுழுக்கு மிகச் சிறப்பாக நிகழ இருக்கிறது.    

வாய்ப்பு அமையாவிட்டாலும், வாய்ப்பை உருவாக்கிக் கொண்டு அவசியம் சீக்கிரமாகவே சென்று தரிசிக்கவேண்டிய கோயில் இது. இறைநம்பிக்கை இல்லாதாரும் கலைநுணுக்கத்திற்காகச் சென்று பாருங்கள். பொக்கிஷங்கள் அடிக்கடி நம் கண்களில் தட்டுப்படுவதில்லை. 

1.12.12

நான் ரசித்த வெண்பாக்கள்

”நகரம் நானூறு” என்ற தலைப்பில் நிறைகுடங்களாய் விளங்கும் திரு. ஹரி கிருஷ்ணனும், எழுத்தாளர் திரு. இரா.முருகனுமாய்ச் சேர்ந்து பெருந்திட்டம் போட்டுக் கலக்க இருக்கிறார்கள் என்று தெரியவந்தது. மெதுவாய்க் காது கொடுத்துக் கேட்டபோது - குவா குவா சத்தம் கேட்கவில்லை - சில வெண்பாக்கள் கேட்டன. 

கீழே இருப்பவை திரு. ஹரி கிருஷ்ணன் எழுதியவை. இன்றைய நகரத்துக் காட்சிகளை - வெண்பாவில் அமைத்த - சில சுவாரஸ்யமான காட்சிகளைச் சந்தித்தேன். அகம், புறம் என்றிருக்குமோ தெரியாது. ஆனால் இங்கே சில புறக் காட்சிகளைச் சொல்லும் வெண்பாக்கள்.


ஹரி கிருஷ்ணன்

இவற்றைச் சிலர் வாசித்திருக்கலாம். பரவாயில்லை இன்னொரு முறை வாசியுங்கள். பார்க்கும் காட்சிகளில் அவற்றின் கோணங்களில் கலாப்பூர்வமான ரசனையையும், தமிழையும் குழைத்து வரையும் அபூர்வமான தூரிகை அவருடையது.


இந்தப் பாடல்களுக்கும் அதன் வசீகரத்துக்கும் நடுவில் கருத்துக்களைத் திணிப்பது துரோகம். ஆகையால் ரசிகர்களை நேரடியாய் சென்னை நகரத்தின் வீதிகளுக்கு அழைத்துச் செல்கிறேன்.                                      

*********



தொங்கும் மரக்கிளையில் தொங்குதே காற்றாடி

பெய்த மழையினிலும் பேய்க்காற்றின் வீச்சினிலும்
தொய்ந்து மரக்கிளையில் தொங்குகையில் – நைந்திருக்கும்
காற்றாடி நெஞ்சில் கனக்கிறதோ வானெங்கும்
நேற்றாடிச் சென்ற நினைவு.
********

போதெல்லம் கொஞ்சி திரி புறா போல்

காதலுக்குப் பஞ்சமுண்டோ கான்க்ரீட் வனங்களிலும்?
ஆதரவா அன்பா அடைக்கலமா – போதெல்லாம்
கொஞ்சும் புறாவினம்தான் கூறுவது கேட்கலையோ,
எஞ்சுவது அன்பொன்றே என்று.

********
நகரத்துப் பூனைகள்

வண்டியின் கீழ் கூடும் துளிப்புலி

முன்னால் குடியிருந்த மோகன் வளர்த்ததாம்
தன்னால் நுழைந்து தலைநீட்டப் – பின்னால்
அயாவ்என்று பிள்ளாண்டான் ஆசையாய்க் கூவ
மியாவொன்று வந்ததிந்த வீடு.

நின்றால் முழங்காலில் நீட்டி முகம்தேய்க்கும்
சென்றஇடம் எல்லாம் திரியவரும் – தின்றாலோ
வால்குழைத்துத் தட்டருகே வாய்நீட்டும். பூனையுடன்
பால்குடிக்கும் பிள்ளைபோல் பற்று.

நீடுதுயில் கொள்ளும்; நிறுத்திவைத்த வண்டியின்கீழ்
கூடும்; குடிநகரும்; குட்டிபெறும் – வீடெல்லாம்
துள்ளி இறையும் துளிப்புலியைக் கையிரண்டில்
அள்ளவுந்தான் ஆகுமல்லோ அங்கு?

எலியின் தவம் கலைக்கும் துளிப்புலி

தரைவாசம் நெஞ்சில் சலித்துவிட்டால் தாவி
மரவாசம் செய்து மறைவார் – குருயாரோ?
என்னதவம் அங்கேநீர் ஏற்கின்றீர் !
யோகுதுயில் தன்னைக் கலைக்கும் எலி.

********


நாளெல்லாம் கண்சிரிக்க நாற்பதுக்கும் ஐம்பதுக்கும்
ஆளின்றி வீதியிலே ஆசையுடன் – தோளெல்லாம்
போட்ட குழந்தைகள் போணியைக் கண்டால்தான்
வீட்டில் குழந்தைக்குப் பால்.


********



சாலைக்குக் கூன்விழுந்தால் சர்ரென்று போவாயோ? 
வேலைக்குச் செல்கையிலே வீண்தடையேன் – கூலாகப்  
போகத்தடை ஏனோ? புதையா(து) எரியாதென்றும் 
ஏகத்தான் இத்தடையாம் இங்கு.


********

தில்லைகங் காநகரில் சென்ற திசையெல்லாம்
எல்லையொன்றில்லா இடம்பிடிப்பு – கல்லறைமேல்
வீடெழுப்பும் ஊருக்குள் விந்தையுண்டோ அன்னியத்தில்!
ஈடுண்டோ இங்கே இதற்கு.

வாழ்ந்திருந்த மக்களிடம் மண்பிடுங்கி வீடெழுப்பி
வாழ்கின்ற மக்கள் வசிக்கின்றார் – பாழுலகில்
தப்படியை வைப்பதற்கும் சாணகலம் மிஞ்சாக்கால்
இப்படியும் உண்டே இடம்.

ஆற்றுநீர் ஓட்டம் அடிக்கின்ற காற்றெல்லாம்
போற்றியென்றும் மக்கள் பொதுவென்று – நேற்றொருநாள்
சொல்லித் திரிந்தார்கள்; சொற்பப் பொழுதுக்குள்
எல்லாமும் மாறியதே இங்கு.

விற்பனைக்குத் தண்ணீர்; விளம்பரங்கள்; போட்டிகள்;
சொற்புனைந்து காசாம் சுவர்ப்பரப்பு – நிற்பதற்குள்
மூச்சுவிடக் காசு; முனகுதற்கும் காசினிமேல்
பேச்செடுத்தால் காசொன்றே பேச்சு.

தொட்டதெல்லாம் காசாக்கும் சூக்குமம் கற்றபின்னும்
விட்டுவிட்டார் உன்னை விழிதப்பி – முட்டாள்கள்!
அப்பா ஒளிக்கலனே, ஆதிநாள் சூரியனே
எப்போது காசாவாய் இங்கு.

(முதல் நான்கு படங்கள் திரு.ஹரி கிருஷ்ணன் எடுத்தவை)

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...