25.11.13

எனது நாட்குறிப்புகளில் இருந்து...



















#
கடந்த பத்து ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு நேரத்தையோ, நீட்டல், முகத்தல், நிறுத்தல் அளவைகளையோ, எண்களையோ தமிழில் சொன்னால் புரிவதில்லை.

தமிழில் எண்ணுருக்களை உபயோகப்படுத்துவது நூறு ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தை இழந்ததை விடவும், பொது இடங்களில் தமிழில் நாம் பேசிக் கொள்வதை அகௌரவமாக நினைக்கிறோம் என்பதையும் விட, இது மிகவும் ஆபத்தான அகௌரவமான தருணம். 

ஆனால் இதை நாம் ரசித்துக் கொண்டிருக்கிறோம்.


#
நவீனம் என்பது எழுதும் காலத்தால் அல்ல. நிலைக்கும் காலத்தால், உட்பொருளால் தீர்மானமாவது. நவீனத்தின் மொழியோ கைக்கெட்டாத தொலைவு அதன் சிறகடித்துப் பறக்கிறது. 

இன்றைக்கும் வாசிக்குபோது கிளர்ச்சியூட்டும் இதிகாசங்களான ராமாயணம், மஹாபாரதம் தொடங்கி, அளவில் சிறிய திருக்குறள், சிலப்பதிகாரம் வழியே உட்புகுந்து, கடைசியாய் பாரதியுடன் அது முடிகிறது.

பாரதிக்குப் பின் நவீனமான எழுத்து எது? என்பதை முடிவு செய்யக் காலத்தின் எடைக்கற்கள் போதுமானதாக இல்லை. அதைக் காலம் உருவாக்கிகொள்ளும்.

தீவிரமான நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும், யானைகள் உலவும் காட்டில் நாமும் உலவுகிறோம் என்ற வகையில் அதே காட்டின் வன விலங்குகள்தான்.


#
ஒரு இலையை விட எளிமையாய் வாழ்வையும், சாவையும் போதித்து விடக் கூடிய ஆசான் இருப்பதாகத் தோன்றவில்லை. முளைக்கும்போது உற்சாகம் மிக்க தலையசைப்பில் தோய்ந்த நிசப்தம்; உதிரும் போது ஆரவாரமற்ற பேரமைதி. சருகான பின்பும் உதவும் பொதுநலம்.

#
செடி கொடிகளும், நதியும், பறவைகளும், காற்றும், விலங்கும் பேசுவதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தால், அது புரியத் துவங்கும்போது, நம்முடைய மொழி எத்தனை அகம்பாவமும், சுயநலமும் சார்ந்தது என்பது நமக்குப் புரிவதுடன், உண்மையான விலங்கு யார்? என்பதும் புரியக்கூடும்.

#
செடி கொடிகளுக்குத் தினமும் நீர் பாய்ச்சினாலும் அதுவாக மலர்களை மலர்த்தும் வரை காத்திருக்கிறோம். தினமும் இலைகளின் வளர்ச்சியையோ, மொட்டின் உயரத்தையோ அளப்பதில்லை. நம் குழந்தைகளிடமும் நாம் அவர்களாகவே மலரும் வரை காத்திருக்க வேண்டும்.

#
வாங்கும் கவளத் தொருசிறிது வாய்தப்பின்
தூங்கும் களிறோ துயர் உறா - ஆங்கு அது கொண்டு
ஊரும் எறும்புஇங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும் கிளையோடு அயின்று.
-குமரகுருபர சுவாமிகள்

[யானைக்கு அளிக்கும் கவளத்தில் ஒரு சிறு பாகம் தவறினாலும், தூங்கும் யானைக்குப் பெரிய துயர் எதுவும் இல்லை. உதிர்ந்த அந்த சிறு கவள உணவை, ஒரு கோடி எறும்புகள் தன் சுற்றத்தோடு உண்டு பசியாறும்.]

’ அரசனின் வருவாய் சிறிது குறைந்தாலும் அரசனுக்குத் துன்பம் உண்டாகாது; அதனால் பலரும் பிழைப்பர்’ என்று குமரகுருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டில் டாக்டர். உ.வே.சா. கூறுகிறார்.

”உலகமறிந்த ஒருவனை மீண்டும் மீண்டும் பொன்னாலும், பொருளாலும் கௌரவித்து அவனிடம் செல்வம் குவிவதை நிறுத்தி, திரைமறைவில் யாரின் அங்கீகாரத்தையும் கருதாது தொடர்ந்து அயராது இயங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான பிறரையும் அங்கீகரி” என்று சொல்வதாகவே எனக்குப் படுகிறது.


#
”கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்’ - இந்த மகா வாக்கியம் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் உபயோகப்படுத்தப்படுகிறது.

’தோற்றத்தின் மூலமாகவும், கேள்விகள் மூலமாகவும் ஒருவன் மெய்ஞ்ஞானத்தை அடைய முடியாது; தீவிர ஆராய்ச்சியால் மட்டுமே மெய்ஞ்ஞானத்தை அடைதல் சாத்தியம்” என்பதையே அந்த வாக்கியம் நமக்கு போதிக்கிறது.


#
காப்பீடு செய்யத் தேவையில்லாத இருபது வருஷப் புராதன
டிவிஎஸ் 50க்குப் பெட்ரோல் போடுவதன் மூலம் தங்களுக்குத் தெரியாமலே வரி கட்டும் சாமான்யர்கள், வரி ஏய்ப்பு செய்த பின்னும் தண்டிக்கப்படாமல் பிரபலங்களாகவே இருப்பவர்களின் முகத்தில் தங்களை அறியாமலே காறி உமிழ்கிறார்கள். அதைத் துடைக்காமல் மற்றொரு விழாவில் கையசைத்தபடியே புன்னகைக்கிறார்கள் மேற்படி பிரமுகர்கள்.


#
ஒரு குழந்தை பிறந்த இரண்டு வருடங்களுக்குப் பின் தோராயமாக இருபது வருடங்கள் தனக்காகவும் பின் பத்து வருட இடைவெளியில் வேலை அல்லது தொழில் திருமணம் இவையெல்லாம் கடந்து அதற்கடுத்த பதினைந்து வருடங்கள் தன் ஒரு அல்லது இரு குழந்தைகளுக்காகவும் பின்பு அடுத்த இருபது வருடங்களுக்குப் பிறகு தன் பேரக் குழந்தையின் விரல்களைப் பிடித்துக் கொண்டு அதே மக்குப் பிளாஸ்திரிக் கல்விமுறையின் ப்ரீ.கே.ஜி. வகுப்பின் கதவுகளைத் தட்டுவதை மூதாதையரின் சாபம் என்கிறேன்.

#
கடந்த நாற்பது வருஷங்களாக எல்லா மொழி தினசரிகளும் பத்தாம் பனிரெண்டாம் வகுப்பில் தேறிய மாணவ மாணவியர்கள் பெற்றோர்களால் கேக் ஊட்டிவிடப்பட்டு, அடுத்து தன்னுடைய இலக்கு என்ன? என்பதையும், யாரால் தான் இத்தனை மதிப்பெண்கள் பெற்றார்கள் என்பதையும் நிழற்படத்தோடு வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு ஆய்வுக்காகவாவது இந்த நாற்பதாண்டு மாநில முதல் மாணவர்களும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்பதையும், அவர்களின் இலக்கை அவர்கள் அடைந்தார்களா? என்பதையும் வெளியிடட்டும். மதிப்பெண்களோடும், கேக்கோடும் செய்தித் தாளில் இடம் பெற்ற வெளிச்சம்தான் அவர்களின் வாழ்வில் இறுதியாகப் பெற்ற பிரபலம் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன்.


#
வழக்கமான வாழ்க்கைமுறையைத் துறந்து, தன்னை அறியும் தேடலில் அமைந்திருக்கிறது சித்தர்களின் வாழ்க்கை. இவர்களின் பார்வையும் பாதையும் அறிவால் அறியப்படும் பகுத்தறிவிற்கும், உணர்வால் உணரப்படும் ஆன்மீகத்துக்கும் இடைப்பட்ட யாரும் அதிகம் பயணிக்க முயலாத வனங்களில் செல்கிறது. என்றோ செய்து முடித்த இவர்களின் பல ஆராய்ச்சிகளின் வாசலுக்கு வந்து இன்றைய விஞ்ஞானம் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது.

#
தன்னைச் சுற்றி நடக்கும் அநியாயங்களையும் அக்கிரமங்களையும் தூசு போல் தட்டிவிட்டு, தினந்தோறும் தான் ஏமாற்றப் படுவதையும், அலைக்கழிக்கப்படுவதையும் தனக்குள்ளேயே பூட்டிவைத்துக் கொண்டு அலைபாயாமல் எண்பது வயதிலும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு கிராமத்தில் கீரையோ வெண்டையோ பயிரிட்டு அதைத் தெருத் தெருவாக விற்றுத் தன் குடும்பத்துக்குத் தன் பொறுப்பை நிறைவேற்றும் மூதாட்டியும், கடலோர கிராமங்களில் இன்றும் தன் குடும்பத்தின் வயிற்றுப்பிழைப்புக்காக வலை வீசிக்கொண்டிருக்கும் முதியவனும்தான் நம் முன்னோடிகள். அம்பானியும் டாட்டாவும் நாராயணமூர்த்திகளும் அல்ல.

#
சூர்யோதயங்கள்
நிற்பதுமில்லை.
சப்தமெழுப்புவதுமில்லை.
கவனிக்கப்படுவதுமில்லை.

20.11.13

முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.

புகைப்படம்: முந்நூறு ஒட்டகங்களும், ஒரு நாயும்.
==============================
கொரேசான் நாட்டின் அரசன் அமீர். அவன் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அவன் போருக்குப் புறப்பட்டால் அவனுடைய சமையலறைக்கு வேண்டிய பாத்திரங்கள், தட்டுகள் முதலியவை முன்னூறு ஒட்டகங்களில் போகும்.

ஒரு சமயம் அவன் கலீபா இஸ்மாயிலால் சிறை செய்யப்பட்டான். துரதிர்ஷ்டம் வந்தவனுக்கும் பசி இருக்கிறதே! ஆகவே, அமீர் பக்கத்தில் இருந்த தன்னுடைய தலைமைச் சமையற்கானைக் கூப்பிட்டுத் தனக்கு உணவு தயாரிக்கும்படிச் சொன்னான்.

சமையலறையில் ஒரே ஒரு துண்டு இறைச்சி மட்டும் இருந்தது. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தான் சமையற்காரன். பிறகு கறிக் குழம்பிற்குச் சிறிது சுவையூட்ட ஏதாவது காய்கறி கிடைக்குமா என்று பார்க்க வெளியே சென்றாஆன்.

அந்த வழியாகப் போன நாய் ஒன்று இறைச்சியின் மணத்துக்கு அங்கு வந்து, சட்டியினுள் தலையை விட்டது. சட்டி சுடவே, உடனே தலையை வெளியே இழுத்தது. பரபரப்புடன் தலையை இழுத்தபோது சட்டி தலையில் மாட்டிக்கொண்டது. நாயினால் சட்டியை உதற முடியவில்லை. அது கலவரமடைந்து சட்டியோடு ஓடியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீர் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போது அங்கு அவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த அதிகாரி,” நீர் வருத்தப்படுவதற்கு எவ்வளவோ காரணமிருக்க, இப்போது ஏன் சிரிக்கிறீர்?” என்று கேட்டான்.

அமீர் அவனுக்கு ஓடுகிற நாயைக் காட்டி, ’இன்று காலையில்தான் என்னுடைய சமையல் சாமான்களைச் சுமக்க முன்னூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது ஒரே ஒரு நாய் என் மடப்பள்ளி முழுவதையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்”, என்றான்.

அவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் அவனால் சிரிக்க முடிந்தால், அதை விடச் சிறிய கவலைகளின் போது, நம்மால் ஒரு கீற்று புன்னகைக்க முடியாதா?
கொரேசான் நாட்டின் அரசன் அமீர். அவன் மிகுந்த ஆடம்பரமாக வாழ்ந்து வந்தான். அவன் போருக்குப் புறப்பட்டால் அவனுடைய சமையலறைக்கு வேண்டிய பாத்திரங்கள், தட்டுகள் முதலியவை முன்னூறு ஒட்டகங்களில் போகும்.

ஒரு சமயம் அவன் கலீபா இஸ்மாயிலால் சிறை செய்யப்பட்டான். துரதிர்ஷ்டம் வந்தவனுக்கும் பசி இருக்கிறதே! ஆகவே, அமீர் பக்கத்தில் இருந்த தன்னுடைய தலைமைச் சமையற்கானைக் கூப்பிட்டுத் தனக்கு உணவு தயாரிக்கும்படிச் சொன்னான்.

சமையலறையில் ஒரே ஒரு துண்டு இறைச்சி மட்டும் இருந்தது. அதை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்தான் சமையற்காரன். பிறகு கறிக் குழம்பிற்குச் சிறிது சுவையூட்ட ஏதாவது காய்கறி கிடைக்குமா என்று பார்க்க வெளியே சென்றாஆன்.

அந்த வழியாகப் போன நாய் ஒன்று இறைச்சியின் மணத்துக்கு அங்கு வந்து, சட்டியினுள் தலையை விட்டது. சட்டி சுடவே, உடனே தலையை வெளியே இழுத்தது. பரபரப்புடன் தலையை இழுத்தபோது சட்டி தலையில் மாட்டிக்கொண்டது. நாயினால் சட்டியை உதற முடியவில்லை. அது கலவரமடைந்து சட்டியோடு ஓடியது.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அமீர் விழுந்து விழுந்து சிரித்தான். அப்போது அங்கு அவனைக் காவல் காத்துக் கொண்டிருந்த அதிகாரி,” நீர் வருத்தப்படுவதற்கு எவ்வளவோ காரணமிருக்க, இப்போது ஏன் சிரிக்கிறீர்?” என்று கேட்டான்.

அமீர் அவனுக்கு ஓடுகிற நாயைக் காட்டி, ’இன்று காலையில்தான் என்னுடைய சமையல் சாமான்களைச் சுமக்க முன்னூறு ஒட்டகங்கள் தேவைப்பட்டன. ஆனால், இப்போது ஒரே ஒரு நாய் என் மடப்பள்ளி முழுவதையும் தூக்கிக் கொண்டு ஓடுகிறது. இதை நினைத்துத்தான் சிரிக்கிறேன்”, என்றான்.

அவ்வளவு கஷ்டங்களுக்கும் இடையில் அவனால் சிரிக்க முடிந்தால், அதை விடச் சிறிய கவலைகளின் போது, நம்மால் ஒரு கீற்று புன்னகைக்க முடியாதா?


============================

புகைப்படம்: காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
===============================

கவிஞன் அபு சையத், கடும் நோயுடன் படுத்திருக்கிறான் என்று கேள்விப்பட்ட அவனுடைய நண்பர்கள், அவனுடைய உடல் நலனைப் பற்றி விசாரித்துப் போக வந்தனர். வாசலில் அவனுடைய மகன் அவர்களை வரவேற்றான்.அவனுடைய உதட்டில் குறுநகை தெரிந்தது. நோயாளிக்குக் கொஞ்சம் சுகம் ஏற்பட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

நண்பர்கள் எல்லாரும் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞனின் அறைக்குள் வந்தார்கள். எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள். அன்று நல்ல வெயில்; அதனால் கவிஞனுக்கு உறக்கம் வந்துவிட்டது. மற்றவர்களும் உறங்கினார்கள். 

மாலை நெருங்கியதும் எல்லாரும் எழுந்தார்கள். அபு சையத் நண்பர்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவித்தான். அறையில் ஊதுவத்தி கொளுத்தி வைக்கச் சொன்னான். அறையில் நறுமணம் கமழ்ந்தது.

அபு சையத் சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்து விட்டுத் தானே இயற்றிய இந்தப் பாடலைப் பாடினான்.

துயரம் வந்த போது உளந்தளறாதே முற்றிலும்
மகிழ்ச்சியான நேரம் வந்து அதை மாற்றிடும்;
எரிக்கும் அனற்காற்று வீசலாம்.
ஆனால் அதுவும் தென்றலாக மாறும்;
கரிய மேகம் எழலாம், ஆனால்
அதனால் வெள்ளம் வராது;
தீப்பிடித்துக் கொண்டாலும் பேழையையும்
பெட்டகத்தையும் தொடாமலேயே வந்து போகலாம்.
வேதனை வரும், போகும்.
துன்பம் வந்தபோது பொறுமையோடிரு,
ஏனெனில் காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
இறைவனது சாந்தியிலிருந்து எத்தனையோ
ஆசீர்வாதங்கள் வரும்.

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நம்பிக்கயூட்டும் இந்தப் பாடலைக் கேட்டு புதிய மகிழ்ச்சியும், பலமும் பெற்று அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இவ்வாறு நோயாளி ஒருவன் உடல் நலத்துடன் இருந்த தப்னது நண்பர்களுக்கு உதவினான்.

ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.

[ஸ்ரீ அன்னை, புதுச்சேரி]

கவிஞன் அபு சையத், கடும் நோயுடன் படுத்திருக்கிறான் என்று கேள்விப்பட்ட அவனுடைய நண்பர்கள், அவனுடைய உடல் நலனைப் பற்றி விசாரித்துப் போக வந்தனர். வாசலில் அவனுடைய மகன் அவர்களை வரவேற்றான்.அவனுடைய உதட்டில் குறுநகை தெரிந்தது. நோயாளிக்குக் கொஞ்சம் சுகம் ஏற்பட்டிருந்ததுதான் அதற்குக் காரணம்.

நண்பர்கள் எல்லாரும் நோய்வாய்ப்பட்டிருந்த கவிஞனின் அறைக்குள் வந்தார்கள். எப்பொழுதும் போல் மகிழ்ச்சியாக அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கண்டு அவர்கள் வியப்படைந்தார்கள். அன்று நல்ல வெயில்; அதனால் கவிஞனுக்கு உறக்கம் வந்துவிட்டது. மற்றவர்களும் உறங்கினார்கள்.

மாலை நெருங்கியதும் எல்லாரும் எழுந்தார்கள். அபு சையத் நண்பர்களுக்கெல்லாம் சிற்றுண்டி தருவித்தான். அறையில் ஊதுவத்தி கொளுத்தி வைக்கச் சொன்னான். அறையில் நறுமணம் கமழ்ந்தது.

அபு சையத் சிறிது நேரம் ப்ரார்த்தனை செய்து விட்டுத் தானே இயற்றிய இந்தப் பாடலைப் பாடினான்.

துயரம் வந்த போது உளந்தளறாதே முற்றிலும்
மகிழ்ச்சியான நேரம் வந்து அதை மாற்றிடும்;
எரிக்கும் அனற்காற்று வீசலாம்.
ஆனால் அதுவும் தென்றலாக மாறும்;
கரிய மேகம் எழலாம், ஆனால்
அதனால் வெள்ளம் வராது;
தீப்பிடித்துக் கொண்டாலும் பேழையையும்
பெட்டகத்தையும் தொடாமலேயே வந்து போகலாம்.
வேதனை வரும், போகும்.
துன்பம் வந்தபோது பொறுமையோடிரு,
ஏனெனில் காலம் அற்புதங்களை நிகழ்த்தும்.
இறைவனது சாந்தியிலிருந்து எத்தனையோ
ஆசீர்வாதங்கள் வரும்.

அவனுடைய நண்பர்கள் எல்லாரும் நம்பிக்கயூட்டும் இந்தப் பாடலைக் கேட்டு புதிய மகிழ்ச்சியும், பலமும் பெற்று அவரவர் வீடு போய்ச் சேர்ந்தார்கள். இவ்வாறு நோயாளி ஒருவன் உடல் நலத்துடன் இருந்த தப்னது நண்பர்களுக்கு உதவினான்.

ஒரு தீபத்தின் சுடர் இன்னொரு தீபத்தை ஏற்றுவது போல், துணிவுடைய ஒருவன் பிறரிடத்தில் துணிவை உண்டாக்குகிறான்.


======================

12.11.13

விவேகானந்தரின் முடிவுறாக் கவிதை.

விவேகானந்தரின் கவிதைகளை வாசித்து வந்தபோது, என்னை உலுக்கியது விவேகானந்தரின் முடிவு பெறாத ஒரு கவிதை.

அவரின் சொற்களிலோ, எழுத்துக்களிலோ கண்டிராத ஒரு அதிர்ச்சியூட்டும் அவநம்பிக்கை தொனிக்கும் பாடல் . ஒருவேளை, அவர் சிகாகோவில் சமய மாநாட்டில் பேசுவதற்கு முந்தைய கட்டத்தில் அமெரிக்காவில் யார் உதவியுமற்றுத் தெருக்களில் திரிந்தபோதோ அல்லது அவர் இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் பயண நிதி போதாமையால் கைவிடப்பட்ட போதோ எழுதப்பட்டிருக்கலாம் என யூகிக்கத் தோன்றுகிறது.

அந்த முடிவுறாத கவிதை:

எத்தனை எத்தனை வாழ்க்கை தோறும்
வாசலில் நான் காத்துக் கிடக்கிறேன்;
ஆனால் அவை திறக்கவில்லை;

இடைவிடாத ப்ரார்த்தனைகள் செய்துசெய்து
என் நாக்கு வறண்டு விட்டது;

ஒளிக்கிரணம் ஒன்றைத் தேடி
இருளின் ஊடே பார்த்துப்பார்த்துப்
என் கண்கள் சோர்ந்து விட்டன;

இதயம் இருளில் பயந்து தடுமாறுகிறது;
நம்பிக்கை எல்லாம் பரந்து விட்டது.

வாழ்க்கையின் கூரான உச்சிமுனையில்
நின்றுகொண்டு பள்ளத்தை நான் பார்க்கிறேன்;

அங்கே-
வாழ்க்கை, மரணம் இவற்றின்
துன்பமும், துயரமும்,
பைத்திய வெறியும், வீண் போராட்டங்களும்,
முட்டாள்த்தனங்களும் எல்லாம்
கட்டற்று உலவுகின்றன.

காண நான் நடுங்குகின்ற இந்தக் காட்சி
இருட்பள்ளத்தின் ஒருபுறம் தெரிகிறது;

சுவரின் மறுபுறமோ...........

[முடிவுறவில்லை]

######

விவேகானந்தர் இயற்றிய இன்னொரு பிரபலமான பாடல் ”சமாதி” என்ற தலைப்பில் அமைந்திருப்பது. வங்காளி மொழியில் ஜேசுதாஸ் சலீல் சௌத்ரியின் இசையில் பாடியிருக்கும் அந்தத் தருணம் அற்புதமானது.

தவிரவும் விவேகானந்தர்-ஜேசுதாஸ்-சலீல் சௌத்ரி என்ற அபூர்வமான முக்கோணத்தின் அதிசயக் கலவை இது. தாய்மொழி மலையாளம் என்பதால், வங்காளி உச்சரிப்பில் பிழை இருப்பதாய் பாரம்பர்யமாய் விவேகானந்தரின் பாடல்களைப் பாடுவோரும், கேட்போரும் குறை சொன்னபோதும், எனக்கு இந்தப் பாடல் கேட்க உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது.


விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றி ஜீ.வி.ஐயர் இயக்கிய “விவேகானந்தா” திரைப்படத்தில் வந்த பாடல் இது.

ஸ்ரீமதி. சௌந்தரா கைலாசம் அவர்களின்  மொழிபெயர்ப்பைத் தேடி எடுத்தேன்.

சூரியன் இல்லை; சந்திரன் இல்லை;
சுடரும் ஒளியும் மறைந்ததுவே!
பாருலகத்தின் சாயலை ஒத்தவை
பரந்த வெளியில் மிதந்ததுவோ!

உள்முகமொடுங்கிய உளத்தின் வெறுமையில்
ஓடும் அகிலம் மிதக்கிறதே!
துள்ளி எழும்பிடும்; மிதக்கும்; அமிழ்வுறும்;
தொடரும் மறுபடி ’நான்’ அதனில்!

மெல்லவே மெல்லவே சாயைகள் பற்பல
மீண்டன மூலக் கருப்பையுளே!
‘உள்ளேன் நான்! உள்ளேன் நான்!’ எனும் நீரோட்டமே
ஓடியதே தொரு முடிவின்றி!

ஒழுகலும் நின்றிட வெறுமையுள் வெறுமையாய்
உலகம் அடங்கிக் கலந்ததுவே!
மொழிவதும் இல்லை; நினைப்பதும் இல்லை;
முற்றும் உணர்பவனே உணர்பவன்.

#####

7.11.13

யாத்திரைப் பட்டியல்


விவேக சிந்தாமணி படித்திருப்பீர்கள்.

யாரால் இயற்றப்பட்டது என்று கண்டுகொள்ள முடியாத பொக்கிஷங்களில் இதுவும் ஒன்று. "அமரம்பேடு கிருஷ்ணசாமி முதலியார் அவர்களாற்றமது, கிருபாலக்ஷ்மி விலாச அச்சுக்கூடத்திற் கலர் டயிட்டில் பேஜ் மாத்திரம் பதிப்பிக்கப்பட்டது - 1914; அணா 3"  என்ற முகாந்திரத்தோடு மூலமும், உரையும் இணைந்த பதிப்பு. அற்புதம் இது. 


யாத்திரைக்கு அவசியமானவை எவையெவை என்று பட்டியலிட்டிருக்கும் முகம் தெரியாத அந்தக் கவிஞர் ஒரு ரசிகர். 


தண்டுல மிளகின் றூள்புளியுப்பு தாளிதம் பாத்திரமிதேஷ்டம்

தாம்புநீர் தேற்ற மூன்றுகோலாடைசக்கிமுக்கி கைராந்தல்
கண்டகங் காண்பான் பூஜைமுஸ்தீது கழல்குடையேவல் சிற்றுண்டி
கம்பளியூசி நூலடைக்கா யிலையை கரண்டகம் கண்ட மேற்றங்கி
துண்டமூறியதாய் கரண்டிநல் லெண்ணெய் துட்டுடன் பூட்டுமே கத்தி
சொல்லிய தெல்லாங் குறைவறத் திருத்தித் தொகுத்து பற்பலவினு மமைத்துப்
பெண்டுகடு ணையோ டெய்து வாகனனாய் பெருநிலை நீர்நிழல்விறகு
பிரஜையர் தங்குமிடஞ் சமைத்துண்டு புறப்படல் யாத்திரைக் கழகே.

பாடலின் பட்டியலில் இடம்பெற்றவை: [அந்த 1914ம் ஆண்டின் உரையில்]


அரிசி, மிளகுப்பொடி, புளி, உப்பு, மிகுதியான தாளித பதார்த்த கறிவடகம், கயிறு, தண்ணீர் அளவறிய ஊன்றுகோல், வஸ்திரங்கள், சக்கிமுக்கிக் கல் அல்லது நெருப்பு உண்டாக்கும் கருவி, கை ராந்தல், அறிவான் கண்ணாடி, பூஜைக்குரிய சாமான்கள், பாதரட்சை, குடை, ஏவலாள், சிற்றுண்டி அல்லது பலகாராதிகள், கம்பளி, ஊசி நூல், வெற்றிலையாதி வைக்கும் பை, கரண்டகம், எழுத்தாணி, ஊறுகாய்த் துண்டுகள், கரண்டி, நல்லெண்ணெய், துட்டு, பூட்டு, கத்தி, இலை முதலாகச் சொல்லப்பட்ட வகைகளெல்லாம் குறைவில்லாமல் திருத்தத்தோடு பலவகைகளுஞ் சேகரித்து ஸ்திரீகள் துணையோடு சரியான வாகனத்தோடு பெருத்த நிலைமையான ஜலம், நல்ல நிழல், விறகு, ஜனங்கள் தங்கும் இடம் கண்டு சமைத்துண்டு, பிரயாணஞ் செய்தல் யாத்திரைக் கழகாகும் என்றவாறு.  


இதுபோல பாரதிதாசனும், இந்தப் பாடலின் உந்துதலால் எழுதியிருக்கக் கூடிய பாடலை முன்னமேயே பகிர்ந்திருக்கிறேன் என ஓர் நினைவு. இப்போது பொருத்தமாய் இருக்கலாமென மீண்டும் இணைக்கிறேன்.


சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்

சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக்கூஜா தாள்பென்சில்
தீப்பெட்டி கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்டபெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.

காலங்கள் செல்லச் செல்ல பயணங்களுக்கான ஆயத்தங்கள் வெகுவாக மாறிவிட்டன. விவேக சிந்தாமணியின் பாடல் எழுதப்பட்டது பணமிருந்தும் எதையும் நினைத்தவுடன் வாங்க முடியாத, திட்டமிடலின் கூர்முனை வெளிப்பட்ட, திட்டமிடலை மீறிய தடங்கல்களை சாதுர்யமாகக் கடந்து அதன் பயனை ருசிக்க வைத்த காலம். இன்றைக்கு எதையும் நம்மால் பிளாஸ்டிக் அட்டையால் வாங்க முடியுமென்னும் லாவகம் வந்துவிட்டது. ஆனாலும் பயணங்களின் ருசி அதில் இல்லை. எதிர்பாராதவைகளை எதிர்பார்க்க, சமாளிக்க, பின் அசை போட்டு மகிழ எதுவும் மிஞ்சுவதில்லை.  

5.11.13

பாவங்களின் பட்டியல்

'மனுமுறை கண்ட வாசகம்' மற்றும் 'ஜீவ காருண்ய ஒழுக்கம்' இவை இரண்டும் ராமலிங்க சுவாமிகள் எழுதிய உரைநடை நூல்கள். இதில் 'மனுமுறை கண்ட வாசகம்' அவரின் வாழ்நாளிலேயே 1854ல் வெளியானது. மற்றது அவர் முக்தி அடைந்த பின் 1879ல் அச்சானது.

பாடல்கள் மட்டுமே அச்சுக்கண்டு கொண்டிருந்த அந்தக் காலத்தில், உரைநடை என்பதை ஒரு புரட்சி என்று சொல்ல வேண்டும். மொத்தம் 48 பக்கங்கள் கொண்ட 'மனுமுறை கண்ட வாசகம்' உரைநடையின் மெருகுக்காக நிச்சயம் படிக்கப்பட வேண்டிய புத்தகம்.

மனுநீதிச் சோழனின் வரலாற்றைச் சொல்கிறது இந்த நூல். கன்றைத் தன் மகன் கொன்றான் என்றறிகிறான் மன்னன். 'மாதாபிதாக்கள் செய்தது மக்களுக்கு ' என்றெண்ணி மருகுகிறான். இப்பிறவியில் மனமறிந்து ஒரு தவறும் இழைக்கவில்லை. ஒருக்கால் முற்பிறவியில் தான் செய்த தீவினையால் இது நேர்ந்திருக்குமோ என்றெண்ணி அப் பாவங்களை மனதில் பட்டியலிடுவதாக ராமலிங்க சுவாமிகள் அடுக்கும் பட்டியல் இது.

அடுக்கப்பட்ட பாவங்களின் பட்டியல் மனதைக் கலக்குகிறது.     

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!
மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி உயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!
மண்ணோரம் பேசி வாழ்வழித் தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ! 
ஆசை காட்டி மோசம் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத் தேனோ!
வேலையிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாரா திருந்தேனோ!
இரப்போர்க்குப் பிச்சை இல்லை யென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் கலைத்தேனோ!
நட்டாற்றில் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!
கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை யழித்தேனோ!
கணவன் வழி நிற்போரைக் கற்பழித் தேனோ! 
கருப்ப மழித்துக் களித்திருந் தேனோ!
குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத் தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!
பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலுட்டாது - கட்டி  வைத்தேனோ!
ஊன்சுவை உண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லுங் கலந்து விற்றேனோ!
அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ! 
குடிக்கின்ற நீருள்ள குளந் தூர்த்தேனோ! 
வெய்யிலுக் கொதுங்கும் விருஷ மழித்தேனோ!
பகைகொண்டு அயலோர் பயிரழித்தேனோ!
பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ! 
சிவனடி யாரைச் சீறி வைத்தேனோ! 
தவஞ் செய்வோரைத் தாழ்வு சொன்னேனோ! 
சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தை தாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வம் இகழ்ந்து செருக்கடைந் தேனோ! 
என்ன பாவம் செய்தேனோ இன்னதென் றறியேனே!

3.11.13

பரஸ்பர சாபங்கள்


கௌதமாரால் சபிக்கப்பட்ட அகலிகை, ராமனின் பாதங்கள் பட்டு சாபவிமோசனம் பெற்றது வரையிலான இதிஹாசம் நமக்குத் தெரியும். அகலிகை கௌதமருக்குக் கொடுத்த சாபம் அநேகர் கேள்விப் பட்டிராதது. சமஸ்க்ருதத்தில் உள்ள திருசூலபுர மாகாத்மியத்தில் இல்லாது, தமிழில் உள்ள திருச்சுழித் தல புராணத்தில் மட்டும் கிடைப்பது. அந்தப் புராண வரலாறு இதுதான்.

ந்திரன் கௌதமரைப் போல உருமாறி, அவர் ஆச்ரமத்தில் இல்லாதபோது அகல்யையை அணுகி அவளுடன் இன்புற்றிருக்குங் கால், கௌதமர் ஆச்ரமம் திரும்பி விட்டார். இந்திரன் பூனை வடிவு கொண்டு வெளிப்படவே, விஷயமுணர்ந்த முனிவர் அவனைச் சபித்தார். பிறகு தன் மனையாளையுங் கல்லாய்ப் போகுமாறு சபித்தார். 

இந்திரன் தன் கணவனென்றே கருதி ஏமாறித் தழுவியதை யுணராது முனிவர் வெகுள்வதைக் கண்ட அகல்யை, "அறிவற்ற முனியே! நிலமையையுணர்ந்து அதற்கேற்ற பரிகாரஞ் செய்யாது இங்ஙனம் சபித்தீரே! எப்போது எவ்வாறு எனக்கு விமோசனம்?" என்று வினவ, "ஸ்ரீராமாவதாரத்தின் போது பரந்தாமனின் பாததூளியின் பரிசத்தால் உனக்கு விமோசனம் உண்டாகும்" என்று முனிவர் அருளினார். அகல்யை உடனே கல்லாய்ச் சமைந்தாள்.

முனிவர் அங்கிருந்து அகன்று தமது தினசரியையில் ஈடுபடுங்கால் அவரது புத்தி நிலைகொள்ளாது பலவாறு தடுமாறத் தொடங்கியது. அத்தடுமாற்றம் மேன்மேலும் அதிகமாவதைக் கண்ட முனிவர் சிறிது ஆலோசித்தலும் அதன் காரணம் அவருக்கு விளங்கியது. 

உண்மையில் குற்றமறியாத் தன் மனையாளைத் தாம் சபித்தபோது, தம்மை தபஸ்வினியான அவள் "அறிவற்ற முனியே" என்றழைத்ததே சாபம் போலாயிற்று என்றுணர்ந்து, அதற்குப் பரிகாரம் ஈசனது தாண்டவ தரிசனமொன்றேயாகும் என்றறிந்து, கௌதமர் சிதம்பரஞ் சென்றார். 

அங்கே "திருச்சுழியலில் ஆடல் காண்பிப்போம்" என்னும் அசரீரியைக் கேட்ட முனிவர் அவ்வாறே அத்தலத்தை நாடிச் சென்றார். சுழியற்பதியைக் கண்டதுமே கௌதமரின் உள்ளம் தெளியத் தொடங்கியது. அத்தலத்தில் அவர் நீண்ட காலம் தவத்திலாழ்ந்தார். இறைவனும் அவரது தவத்திற் கிரங்கி, மார்கழித் திருவாதிரை யன்று தனது திவ்யானந்த தாண்டவக் கோலத்தை அவருக்குக் காண்பித்தருளினான். கௌதமர் ஈசனை மனமாரத் துதித்து மகிழ்ந்து விடை பெற்றுச் சென்றார்.

உரிய காலத்தில் அகல்யையும் ஸ்ரீராமனது பாத தூளியால் மீண்டும் கன்னிவடிவுற்று கௌதமரை வந்தடைந்தாள். முனிவர் மகிழ்ச்சியுடன் அவளை நோக்கி, "கண்ணுதலின் மணக் கோலத்தை நாமிருவரும் கண்டு களி கூர்ந்து இல்லறந் தொடங்குவோம்" எனப் பகர்ந்து, அகல்யையுடன் சுழியலுற்றுத் திருமேனிநாதனை வேண்ட, கருணாநிதியாம் சிவபெருமான் அவ்வாறே அவ்விருவர்க்கும் தனது திருமணக் கோலக்காட்சியை அளித்தருளினான். கௌதமர் ஈசனைப் புகழ்ந்து பூஜித்து விடைபெற்று, இடர் யாவும் விலகப் பெற்றவராய்த் தமது மனையாளுடன் என்றும் போல் அமைதியாய்த் தவவாழ்வு தொடர்ந்தார்.

ஸ்ரீ ரமணாச்ரமத்திலிருந்து கடிதங்கள் - பாகம் 2ல் 14.01.1949 பக்கம் 257ல் 85ஆவது கடிதமாய்த் தொகுக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் ரமண மகர்ஷி, தன்னிடம் சந்தேகம் கேட்கும் ஒரு பக்தருக்கு, இப்புராணத்தைப் பற்றிக் கூறி இப்படி முடிக்கிறார்.

'கௌதமருக்கு சாபம் கிடைத்த கதையொன்று இருக்கிறதா? நான் இதுவரை கேட்டதில்லை' என்கிறார் சூரிநாகம்மா.

"இந்த பரஸ்பர சாபக்கதை திருச்சுழித் தலபுராணத்தில் மாத்திரம்தான் இருக்கிறது. ராமாயணத்தில், ஜனகரின் சபையில் புரோகிதராக இருந்த சதானந்தர், தன தாயார் அகலிகை தந்தையின் சாபத்தினால் மனோதைர்யமிழந்து தன் நிலை தெரியாமல் விழுந்து கிடக்க, ராமரின் பாததூளியினால் சின்மய ஸ்பூர்த்தியடைந்து ராமனைத் துதித்து, தன் தகப்பனாரிடம் திரும்பிச் சென்ற விஷயத்தை விசுவாமித்திரர் சொல்லக் கேட்டு ஆனந்தப் பட்டாரென்று சொல்லியிருக்கிறதே தவிர இதெல்லாம் அதிலிலில்லை" என்றார் பகவான்.

'ஆனால், அகலிகை கல்லாய் இருந்தாள் என்பது அவளுடைய மனநிலையைத்தான் குறிக்கிறதா?' என்றொருவர்.

"ஆமாம், கல்லானாள் என்பது மனதிற்கு அல்லாமல் பின்னே சரீரத்திற்கா? சரீரம் கல்லாய் மாறிக் காட்டில் கிடந்ததென்றும், ராமர் கால் வைத்துக் கல்லை ஸ்திரீயாக மாற்றினாரென்றும், சாதாரண ஜனங்கள் நினைக்கிறார்களே தவிர அது நடக்கிற காரியமா? மனம் ஆத்மா ஞானத்தை மறந்ததோடில்லாமல், ஒன்றும் தோன்றாமல் கல்போல் ஜடத்துவம் அடைந்ததென்று அர்த்தம். மகா புருஷனின் தரிசனத்தினால் அந்த ஜடத்துவம் விலகியது. அவள் மகா தபஸ்வினியானதினால் உடனே சின்மய ஸ்பூர்த்தி அடைந்து ஸ்ரீராமரை தத்வமயனாக அறிந்து துதித்தாள். இந்த சூக்ஷ்மார்த்தம் ராமாயணத்தில் இருக்கிறது. ஸ்ரீராமர் கௌதமாச்ரமத்தில் அடி வைத்ததும் அகலிகையின் மனமலர் விரியலாயிற்றாம்" என்றார் பகவான்.

கவித்துவம் சொட்டும் இந்த இன்னொரு பக்க சாபக் கதையினால், நம் மனங்களின் அறியாமையின் மொட்டுக்களும் மலர்ந்து மணக்கின்றன என்பதும், கல்லான நம் மனங்களிலிருந்து கதையாய் உறைந்திருக்கும் அகலிகை மீண்டும் விமோசனம் பெறுகிறாள் என்பதும்  நிதர்சனம்.  

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...