7.11.12

செல்லம்மாள் பாரதியின் இரு வானொலி உரைகள் - I


செல்லம்மாள் பாரதி. 

7ஆம் வயதிலேயே 14 வயது பாரதியுடன் திருமணம். நிலையான வருமானம் இல்லாத கவிஞனாய் மட்டுமே வாழத் தெரிந்த பாரதியுடன் 25 வருட வாழ்க்கை - பதினைந்து வயதில் முதல் குழந்தை - நாளெல்லாம் துரத்திய வறுமையின் பரிதவிப்பு - உற்றார் உறவினர்களின் பகிஷ்கரிப்பு - கணவனின் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய நிறைவேறாத பேராசைகள் - இரு பெண் குழந்தைகளுடன் குடும்ப நிர்வாகம் - கணவனின் அகால மரணத்தோடு 32 வயதிலேயே தனிமரமான வாழ்வு.

செல்லம்மாளின் வானொலி உரையிலேயே சொல்வது போல பாரதி போன்ற -யுகத்துக்கு ஒரு முறை உதிக்கும் ஒரு மஹாகவிஞனின் மனைவியாய் வாழ்வது லௌகீகமான வாழ்வை மட்டுமே அறிந்த ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு அத்தனை சாமான்யமான விஷயமல்ல.

ஆனாலும் பாரதியின் ஆளுமை தெரியும் இந்த இரு உரைகளையும் படித்து அதன் பின் மெல்லிய குரலில் கேட்பதாய்க் கற்பனை செய்து பாருங்கள். பாரதியின் மறைவுக்குப் பின் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன இந்த உரைகள். 

தன் 62 வயதில் ஆற்றிய உரைகளில்தான் ஒரு கவிஞனின் மனைவியாக எத்தனை பெருமையும், ஒரு குடும்பத் தலைவியாக எத்தனை ஆதங்கமும் : 

திருமதி செல்லம்மாள் பாரதி தில்லி வானொலியில் ”பாரதி அறியாத கலை” என்ற தலைப்பில் ஆற்றிய  முதல் உரை.

எனது அன்பான சகோதரர்களே, குழந்தைகளே! 

என்னை எங்களது வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படிக் கேட்கிறீர்கள். மானிடச் சாதிக்கு அமரவாழ்வு தரவேண்டும் என்ற உணர்ந்த நோக்கத்துடன் உழைத்தவர் என் கணவர். நான் படித்தவளல்ல. ஆயினும் மகாகவியுடன் எனது ஏழு வயது முதல் முப்பத்திரண்டு வயது வரை வாழும் பாக்கியம் பெற்றிருந்தேன். 

சில அன்பர்கள் என்னிடத்தில் சில கேள்விகள் கேட்கிறார்கள்; அதாவது, பாரதியார் தம் கொள்கைகளை நாட்டிற்கு உபதேசிப்பதோடு, நாட்டில் பரப்புவதோடு நிறுத்திக்கொண்டாரா, அல்லது வீட்டிலும் பின்பற்றி நடத்திக் காட்டினாரா என்று கேட்கிறார்கள். ஆம். தம் கொள்கைகளை வீட்டிலும் நடத்திக் காட்டினார் பாரதியார் என்று சந்தோஷமாகச் சொல்லுகிறேன்.

என் கணவர் இளம் பிராயத்தில் கரைகடந்த உற்சாகத்தோடு தேச சேவையில் இறங்கினார். சென்னையில் அதற்கு விக்கினம் ஏற்படும் என்று அவருக்குத் தோன்றியபடியால் புதுவை சென்றார். அந்தக் காலத்துத் தேசபக்தருக்குப் புதுச்சேரி புகலிடமாயிருந்தது. 

புதுவையில் பத்து வருஷம் வசித்தோம். அரசியலில் கலந்துகொள்ள அவருக்கு அங்கு வசதியில்லாதிருந்தும், அவர் எப்போதும் நாடு சுதந்திரம் பெறுவதற்கு என்ன வழி என்பதை யோசிப்பதிலும், பாரத நாடு எவ்விதமான சுதந்திரம் பெற வேண்டும் என்று கனவு காணுவதிலும் பொழுதைச் செலவிடுவார். 

பாரதியார் அறியாத கலை, பணமுண்டாக்கும் கலை. என் கணவர், வயிற்றுப் பாட்டுக்காகத் தமிழ்த் தொண்டு செய்யவில்லை. அவர் எழுதிய பாடல்களை விற்று ஒரு லாபமும் அவர் பெறவில்லை. ஆற அமர உட்கார்ந்து யோசித்துக் கவிதை எழுதமாட்டார். இரவோ பகலோ, வீட்டிலோ வெளியிலோ, கடற்கரையிலோ, அவ்வப்பொழுது தோன்றும் உணர்ச்சிப் பெருக்கிற் பிறந்தவையே அவர் கவிதைகள்.

ஒரு சம்பவம் - என்னால் மறக்க முடியாது. 

மத்தியானம் ஒரு மணி ஆகிவிட்டது. சாப்பிடுவதற்கு அவர் இன்னும் வரவில்லை. மெதுவாகச் சென்று, தூரத்திலிருந்து எட்டிப் பார்த்தேன். என் கணவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது. "இனி மிஞ்ச விடலாமோ?" என்ற அவர் உதடுகள் முணுமுணுத்தன. அருகில் போய் என்னவென்று கேட்க என் மனம் துடிதுடித்தது. ஆனால் பயமும் ஒரு புறம் ஏற்பட்டது. 'ஏதோ மகத்தான துயரம் ஏற்படாவிட்டால் அவர் கண்களிலிருந்து நீர் வராது. என்ன விஷயமோ?' என்ற திகில் கொண்டேன். 

கணவர் திடீரென நிமிர்ந்து பார்த்தார். 'செல்லம்மா, இங்கே வா' என்றார். சென்றேன். கீழேயிருந்த எங்கள் குழந்தைகளையும் அழைத்தார். 'நமது இந்திய மாதர்கள் அந்நிய நாட்டில் படும் பாட்டைக் கேளுங்கள்' என்றார். "கரும்புத் தோட்டத்திலே" என்ற பாட்டை அவர் பாடியதைக் கேட்ட நாங்களும் விம்மி விம்மி அழுதோம். 

மறுநாள் அந்தப் பாட்டு சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் பாடப்பட்டது. அதைக் கேட்ட ஜனங்கள் எவ்விதத்திலும் ஒப்பந்தக் கூலி முறையை ஒழிக்கவும், அந்நிய நாடு சென்ற நமது நாட்டுத் தொழிலாளரின் குறைகளைத் தீர்க்கவும் கங்கணம் கட்டிக் கொண்டார்கள்.

இன்னுமொரு மறக்க முடியாத ஞாபகம். 

அவர் மண்ணுலகை விட்டு நீங்குவதற்குச் சில நாட்கள் முன்னதாக, ஹிரண்யனுக்கும் பிரஹலாதனுக்கும் நடந்த சம்வாதமாக, சில வரிகளே கொண்ட ஒரு பாடல் எழுதினார். அந்தப் பாட்டை அவர் பாடிய விதத்தை எவ்விதம் வருணிப்பது! 


நாராயண நாமத்தை அவர் உச்சரிக்கும் பொழுதும், பாடும் பொழுதும் உடல் புல்லரிக்கும். அவர் பூத உடல் மறையும் வரை, இறுதிவரை நாராயண நாமத்தை ஜபித்தார்.


(இரண்டாவது உரை நாளை)

5 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


இன்றும் பலரும் எழுப்பும் கேள்வி, பாரதியார் பாடியபடி வாழ்ந்தாரா என்பது. மேலும் அவரது சில பலகீனங்களை பூதக் கண்ணாடியில் கண்டு பெரிது படுத்தி தங்களது மேதாவிலாசத்தை வெளிப் படுத்திக் கொண்டு திரிகின்றனர். உணர்வு பூர்வமான ஒரு கவிஞனின் உள்ளக்கிடக்கைகளை புரிந்து கொள்ள முடியாத வர்களைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே.

மோகன்ஜி சொன்னது…

சுந்தரா! நம் உணர்வில் கலந்த மஹாகவி செல்லம்மாளின் உணர்வுகளைப் புரிந்து கொண்டாரா ? ஒரு கணவனாய் குடும்பத்துக்கான கடமைகளை செய்தாரா எனும் விவாதம் வெகுகாலமாய் நடந்து வருகிறது. அந்த பாக்கியவதியின் பேச்சு அவையெல்லாம் வெறும் கூச்சல் என்று மெய்ப்பிக்கும் பத்தினிவாக்கு.

இந்தப் பதிவை எழுதிய கைகளுக்கு என் விழிஉகுத்த கண்ணீர்துளிகள் காணிக்கை.

Mani sethuraman சொன்னது…

பாரதிக்கு காணும் உலகம் ஒரு காட்சிப்பிழை. செல்லம்மாளின் பொறுமை பூமி அளவு பெரியது. வறுமைக்கு வாக்கப்பட்ட கணவனை இவ்வுலகம் கொஞ்சம் சீக்கிரமே மகாகவியாக்கியிருந்தால் இருள் சூழ்ந்த இல்லறம் செல்லம்மாளுக்கு வாய்த்திருக்காது. சரஸ்வதி இருக்கும் இடத்தில் லக்ஷ்மி இருக்கமாட்டாள் என்பது சத்தியம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெகிழ வைத்தது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பாரதியின் பாடல்கள் பற்றி அவரது செல்லம்மாவின் மூலம் தெரிந்து கொள்வதில் மகிழ்ச்சி.

பொக்கிஷங்களை தேடிக் கண்டுபிடித்து எங்களுக்குத் தரும் உங்களுக்கு பூங்கொத்து....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...