7.4.11

பரிவின் மடி


















மன்னிப்புக்காய் மன்றாடும்
ஒரு தொலைபேசி அழைப்பு
ஏற்கப்படாதிருக்கையிலும்-

திறந்திருக்க வேண்டிய கதவுகள்
அறைந்து மூடப்படும் போதும்-

குறுஞ்சிரிப்பு படர
வேண்டிய கண்களில்
உக்கிரம் பரவியிருக்கையிலும்-

அக்கறையும் பரிவும்
உதாசீனத்துக்கு உள்ளாகும் போதும்-

மொட்டுக்குள்ளிருந்து
மலர்களுக்குப் பதில்
துருவுடன் ஆணிகள்
மலர்கையிலும்-

தலைமுடி கோதும்
கருணையின் கைகளில்
விலங்குகள்
பூட்டப்பட்டிருக்கும்போதும்-

வாய்விட்டுக் கதற வழியின்றித்
துயரின் கசப்பை கோப்பை நிரம்பப்
பருகுகையிலும்-

பிறக்கும் ப்ரார்த்தனைகளை

உங்களுக்காய் நான்
ஏந்திக் கொள்கிறேன்.

எந்தச் சபையிலும் நிறைவேறாத
கண்ணீரால் கோர்க்கப்பட்ட
ப்ரார்த்தனைகளின் ஈரத்தை

என் கவிதைகளில்
ததும்பும் பரிவு துடைத்தெடுத்து 
துயரினின்று மீட்கட்டும்.

17 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//என் கவிதைகளில்
ததும்பும் பரிவு
துடைத்தெடுக்கட்டும்.//

ஆஹா அப்படியே ஆகட்டும், துடைக்கட்டும்.
அதென்ன தலைப்பு
“மடி” ஆச்சாரமாக
என்பது தான்
எனக்குப்புரியவில்லை.

கவிஞர் கால் கவிஞருக்கு மட்டுமே தெரியுமோ?

எல் கே சொன்னது…

எனக்கும் தலைப்பின் காரணம் புரியவில்லை

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மலர்களுக்குப் பதில்
துருவுடன் ஆணிகள்
மலரும் போதும்-//
அன்னையின் மடியாய் பரிவுடன் ததும்பும் அன்பு துடைத்தெடுத்தால் சுகமே!

சுந்தர்ஜி சொன்னது…

கோபு சார் சொன்னபோது வேடிக்கை செய்கிறார் வழக்கம் போல என்று விட்டுவிட்டேன்.

எல்.கே.யும் சொன்னபின்னால் மடியை விளக்க அவசியமிருப்பதாய் உணர்ந்தேன்.

lap என்று அர்த்தப்படும் மடியைத்தான் நான் குறித்தேன்.

ஆச்சாரம்-செத்துப்போ-மடித்துவை-(பசுவின்)மடி என்று எத்தனை அர்த்தங்கள் நம் மொழியில்?

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி...நீங்க அர்த்தம் சொன்னப்புறம் கவிதை இன்னும் தெளிவாய் இருக்கிறமாதிரி இருக்கு !

Nagasubramanian சொன்னது…

superb!

சுந்தர்ஜி சொன்னது…

தலைப்பையும் ”மடி”க்குப் பதிலாக ”பரிவின் மடி” என்று மாற்றிவிட்டேன்.

குழப்பம் ஏற்படுத்தியமைக்கு வருத்தம்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மடியிலே கனமிருந்தால் வழியிலே பயமிருக்கும். [ஆங்காங்கே திருச்சியில் பல இடங்களில் கோடிக்கணக்கில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.]

தாயின் மடி குழந்தைக்கு

பசுவின் மடி கன்றுக்கு

ஆம்னி பஸ்ஸின் மடி ஆர்.டி.ஓ மூலம் அரசாங்கத்திற்கு

மடியப் பார்க்குது வோட்டுக்கு துட்டு

மடியப்போவது வாங்கிப்பழகிய ஆட்கள்

மடியட்டும் அனைத்து அராஜகங்களும்

கவிதை இப்போது கச்சிதமாகப் புரிந்து விட்டது, மடி வேஷ்டிபோல மடித்து மடிசிஞ்சியில் வைத்துக்கொள்கிறேன்.

அன்புடன் vgk

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மடியை இப்படி அநியாயமாக
“பரிவின் மடி” ஆக்கி எல்லோருக்குமே எளிதில் புரியும்படியாக ஆக்கிவிட்டீர்களே!

பாம்பின் கால் பாம்புக்கு மட்டுமே தெரிய வேண்டும், கவிஞர் ஐயா.

பொதுவாக ‘மடி’ என்றாலே எனக்கு மிகவும் பிடித்த அந்த மடி தான் ஞாபகத்துக்கு வரும், அதான் ம(கு)டி.

மோகன்ஜி சொன்னது…

மடி எனும் மாயச்சொல் பரிவை மட்டுமா குறிக்கும்? ஆதூரம்,நம்பிக்கை,தாய்மை என்று எத்தனை உணர்வுகளை உள்ளடக்கிய சொல். உங்கள் கவிதை வெளிப்படுத்தும் அத்துணை காருண்யத்தையும்,ஆதரவையும் ' மடி' எனும் தலைப்பே மடியேந்துகிறது.

'மடி'யே போதுமெனக்கு. பரிவை நீரே வைத்துக் கொள்ளும்!

manichudar சொன்னது…

ததும்பும் பரிவுடன் ஏந்துகிற பிரார்த்தனைகள் நான் உங்களுக்காக, என்பதில் தான் கவிதையின் அமுத வைப்பு இருக்கிறது, {அமுத வைப்பு தஞ்சை பிரகாஷ் உபயம்}

சிவகுமாரன் சொன்னது…

தாயுள்ளம் மிளிர்கிறது வார்த்தைகளில். இப்போது கூட ஊருக்குச் செல்கையில் என் தாயின் மடியில் தலைவைத்து படுப்பேன். நான் ஏதாவது மூட் அவுட் ஆகி இருந்தால் " வேண்டுமானால் உங்க அம்மாவை வரச் சொல்லட்டுமா, மடியில் சாச்சுக்க " என்று என் மனைவி கேலி செய்வாள்.
என் தாய் மடியின் பரிவையும் சுகத்தையும் ஒரு சேரத் தந்தது இந்தக் கவிதை. தங்கள் கவிதைகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த படைப்பு இது.

Ramani சொன்னது…

மிக அருமை
துன்பக் கடலை தாண்டும்போது
தோணியாவது கீதம் என
பட்டுக்கோட்டையார் பாடியதைப்போல
நல்ல கவிதைகள் பல சமயங்களில்
ரணம் ஆற்றிப்போவதை
மிக அழகாகச் சொல்லிப்போகிறீர்கள்
மலருக்குள் ஆணிகள் மலர்தல் என்பது
கொஞ்சம் கூடுதல் நெருடலாகப் பட்டது
(மற்ற ஒப்பீடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்)
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

அற்புதம் ஜி! மடி பரிவின் மடியான கதையும் நன்றாக இருந்தது.
எப்படி ஜி ஒவ்வொரு முறையும் இருபது முப்பது வார்த்தைகளில் அசத்துகிறீர்கள்? நல்ல கவிதை. நன்றி. ;-)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அசத்தலான கவிதை. பணிச்சுமை காரணமாய் பொறுமையாய் ஒவ்வொன்றாய் படித்துக் கொண்டு இருக்கிறேன்.. :)

G.M Balasubramaniam சொன்னது…

கண்ணீர் பிரார்த்தனைகளை ஏந்திக்கொண்டு, கவிதைகள் பரிவால் துடைக்க முயலும் எண்ணமே உங்களை அடையாளம் காட்டுகிறது. வாழ்க, வளமுடன்.

உதிரிலை சொன்னது…

மனசு நிறைகிறது. பரிவு ததும்புகிறது உங்கள் மேல்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...