1.9.11

தரிசனம்




1.

நீ பிரிந்து செல்கையில்
எழுதிய கடிதத்தை விடவும்
துயரூட்டுகிறது
அதனடியில் எழுதாது விடப்பட்ட
வெற்றுத்தாளின் நிச்சலனம்.

2.
என்றோ வசித்த
ஒரு தெருவைக் கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக் கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.

3.

நீ எழுதுவது
மிகவும் எளிமையாய்
இருக்கிறது என்றான் அவன்.
அவன் சொன்னதை
என்னால் எளிதில் புரிந்து
கொள்ளமுடியவில்லை.

4.

சிறைக்குள்
இருப்பவனைப்
பார்த்து வரப் போனேன்.
கம்பிகளுக்குப்
பின்னே நானா? அவனா?

-நன்றி- கல்கி

14 கருத்துகள்:

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

எனக்கு மூன்றாவது கவிதை ரொம்ப பிடித்திருக்கிறது... மற்ற மூன்று கவிதைகளும் நீங்கள் ஏற்கனவே எழுதி இருப்பது போல தோன்றுகிறது... அல்லது தத்துவகொக்கிகளில் தொங்கும் எல்லாக் கவிதைகளும் ஒரே சாயலில் இருக்கிறதோ? எனக்குத்தெரியவில்லை... வெற்றுக்காகிதம்... சிறைக்கு உள்ளும் வெளியும்... ஒரு தெருவைக் கடப்பது... எல்லாமே!

நீங்கள் நீள்கவிதை எழுதவேண்டும்... உங்களுக்கு மட்டும் படங்கள் எங்கிருந்து தான் கிடைக்கிறதோ சுந்தர்ஜி?

அன்புடன்
ராகவன்

Nagasubramanian சொன்னது…

//என்றோ வசித்த
ஒரு தெருவைக்
கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக்
கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.//
அருமை சுந்தர்ஜி. நாடோடிகள் போல வாழ்பவர்களின் வாழ்க்கையை படம்பிடித்து உள்ளீர்

ரிஷபன் சொன்னது…

ஒரு தெருவைக்
கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.

waw... just thrilled.

டி.கே.தீரன்சாமி. சொன்னது…

கவிதையின் நிறம் அற்புதம்!வாழ்த்துக்கள் இதோ ஒரு ஓட்டு!வாங்க எங்க பக்கம்!
தீரன்சின்னமலை-புலனாய்வு செய்தி ஊடகப்பதிவு-theeranchinnamalai.blogspot.com-

இரசிகை சொன்னது…

m..nallaayirukku sundarji!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

யோசிக்க வைக்கும் கவிதைகளுக்கு நன்றி.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

எளிய இனிய கவிதை
வணக்கம் ஐயா
வாருங்கள் வலைப்பக்கம்

புலவர் சா இராமாநுசம்

காமராஜ் சொன்னது…

என்றோவசைத்த தெருவைக்கடப்பது அவ்வள்வு எளிதல்ல.
எவ்வளவு கனமான உண்மையை ரொம்பச்சின்ன வரிகளில் தெரியவைத்துவிட்டீர்கள் சுந்தர்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கவிதைகள்...

”கம்பிக்குள் இருப்பது அவனா, நானா?” என்ன ஒரு யோசனை....

Vel Kannan சொன்னது…

என்னை இழுத்து பிடித்து நிற்கவைக்கிறது ஜி
முக்கியமாக 3 வது கவிதை
'எளிமை' இதன் அர்த்தம் என்ன ... ?
ஆழம் என்ன ?

A.R.ராஜகோபாலன் சொன்னது…

அருமையான வரிகளில்
வழிந்தோடுகிறது உங்களின்
கவிதாஞானம்
அமர்க்களம் அண்ணா

G.M Balasubramaniam சொன்னது…

I am happy that at least you are able to publish your posts. Best wishes.

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

//என்றோ வசித்த
ஒரு தெருவைக்
கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக்
கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல//

நேற்று முன்தினம் தற்செயலாக வாசிக்கக் கிடைத்த மேலே உள்ள கவிதை, திரும்பத் திரும்ப வாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் அடிநாதமாக இருப்பதை உணர்ந்து லயித்துப் போனேன்.

வசித்த தெரு மட்டிலுமல்ல, நாளிதழின் ஒற்றை வரி செய்தி கூட ஒரு பெரிய வாழ்வனுபவத்தைத் தன்னுள் சுமந்திருப்பது தொடர்புள்ளவர்களுக்குப் புலப்படும். எப்போதோ கேட்ட பழைய பாடல் ஒன்றை நீண்ட நாள் கழித்து நீங்கள் கேட்க நேரும் போது, அது உங்களுக்குள் எழுப்பும் சங்கிலித் தொடரான நினைவுகள் சமயத்தில் பாடலைக் கூட நழுவ வைத்துவிட்டுப் பிறகு ஒரு பெருமூச்சோடு அடுத்த வேலைக்கு நகர்த்தும். மரக் கிளையிலிருந்து கண்ணுக்குச் சட்டென்று தெரியாத வெள்ளிக் கம்பியாகத் தொங்கும் இழையில் ஒரு புழு சர்க்கஸ் வேலை செய்து தப்பிக்கத் துடிப்பதை சிறுவர்கள் சட்டென்று கண்டுபிடித்துத் துருவ ஆரம்பித்துவிடுவார்கள். தாத்தா பாட்டி சொன்ன புராணக் கதையோ, சரித்திர சங்கதியோ கூட திரும்ப அசை போடுகிற போது, மேகத் திரளை உற்றுப் பார்த்தால் அது பஞ்சுப் பொதியாய்ச் சிதறிப் பிரிந்து இணைந்து வேறு வேறு சித்திரங்களை அடையாளப் படுத்துவது போல புதிய தேடல்களை உருவாக்கக் கூடும்.


சாதாரண, அசாதாரண என்றெல்லாம் பிரிப்பானேன் வாழ்க்கையை, அவரவர் அனுபவங்கள் அவரவர்க்கு மகத்தானவை. அதை உங்கள் உள்ளங்கையில் ஏந்திப் பார்க்கும் பாக்கியம் உங்களுக்கு வாய்க்கவேண்டும். அவ்வளவு தான். அந்த வேலையை எழுத்தின் சித்தர்கள் சிலர் பளீரென்று வடித்து உங்கள் உள்ளங்கையில் எடுத்து வைக்கும்போது அடடா..அதற்கு மேல் என்ன வேண்டும் ரசனையோடு அலையும் பிறவிகளுக்கு?

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

2.
என்றோ வசித்த
ஒரு தெருவைக்
கடப்பது
அத்தனை எளிதல்ல.
ஒரு தெருவைக்
கடப்பது
சமயங்களில்
ஒரு வாழ்வைக்
கடப்பது போல.

யார் படித்தாலும் சொல்வார்கள் இதை சிறந்த கவிதையென!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...