23.4.12

3.சுக்ல- தக்ஷிணாயனம்


3.சுக்ல

எந்த மாதத்தில் பௌர்ணமி, அமாவாஸ்யை இரண்டும் இல்லையோ அந்த மாதத்துக்கு விஷமாசம் என்று பெயர்.

எந்த மாதத்தில் இரண்டு பௌர்ணமி அல்லது இரண்டு அமாவாஸ்யை வருகிறதோ அதற்கு மலமாசம் என்று பெயர்.

விஷ மாசத்திலும்மல மாசத்திலும் சுபகார்யங்களை விலக்க வேண்டும்.

ஆனால் சித்திரைவைகாசி மாதத்தில் இவை நிகழுமானால் அந்த இரு மாதங்களுக்கும் இந்த தோஷம் கிடையாது.

---------------------------------------------------------

யில் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலை விட வேகமான கதியில் ராகவனின் மனம். அவன் போய்ச் சேரும் போது கண்டிப்பாய் தாமஸ் ஊரில் இருக்கவேண்டும். தாமஸ் தொலைபேசி எதுவும் வைத்துக்கொள்ளாத புராதன மனிதர். இன்னமும் கடிதப்போக்குவரத்தை நம்பியே தகவல் பரிமாற்றம் நிகழ்த்துபவர். அவருக்கு தான் வரப் போவதாகவும், அவரின் சம்மதம் கேட்டும் எழுதியிருந்த கடிதத்திற்கு எந்த பதிலும் வராததால் கடிதம் கிடைத்திருக்குமா என்ற உபரி சந்தேகமும் நியாயமாய் எழுந்தது ராகவனுக்கு. 

தாமஸ் கல்லிடைக்குறிச்சி பக்கத்தில் ஒரு சின்ன கிராமத்தில் தபால்நிலைய அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தபால்துறையைத் திருமணம் செய்துகொண்டு விட்டதாக ஊர் மக்கள் பேசிக்கொள்வதுண்டு. அவர் சதா சர்வகாலமும் தபால்துறையின் மேன்மைகளையும், அந்தத் துறை அனுபவித்து வரும் கஷ்டங்களையும் மக்கள் தபால் துறையைப் புறக்கணிக்கத் துவங்கியிருப்பதன் ஆபத்தையும் வாய் ஓயாமல் புலம்பிக்கொண்டிருப்பார். 

முந்தைய பத்தியைப் படித்த உங்களுக்கு அரைத்த மாவையே அரைக்கும்  தாமஸிடம் ராகவனுக்கு என்ன புதிதாகக் கிடைத்துவிடப் போகிறது என்று தோன்றலாம். தாமஸ் பற்றி ஊர்மக்களுக்கு என்ன தெரியுமோ அதுவல்ல அவரின் பிம்பம். அவரின் வீட்டுக்குள் யாருக்கும் அனுமதி இருந்ததில்லை. தபால் நிலையத்தில் தொங்கும் “அந்தர் ஆனா மனா ஹை” பலகையைப் போலவே வீட்டிலும் ரத்தச் சிவப்பில் ஒரு அறிவிப்புப் பலகையைத் தயார் செய்து வெளியில் தொங்கவிட்டிருப்பார். 


வீட்டு வாசலில் நிற்கும் வாதா மரத்தின் நிழலில் நின்றபடிதான் யாரோடும் அவர் உரையாடுவது வழக்கம். வீட்டைச் சுற்றிலும் வேலியமைத்து உள்ளே நுழைய மூங்கில் பிளாச்சுகளாலான படல் கதவுதான் உண்டு. அதற்குள் யாரும் நுழைந்து பார்த்ததில்லை. அதிக பட்சம் அவ்வீட்டின் முன்னால் இருக்கும் மரத்தடி கல்பென்ச்சில் அபூர்வமாக யாராவது பத்திரிகை, அழைப்பிதழ் என்று கொடுக்கவந்தால் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கலாம். 

இப்போது யாருமே நுழையாத அவரின் வீட்டிற்குள்ளே நாம் நுழையப் போகிறோம். உள்ளே நுழைந்ததுமே ஒரு கூண்டில் விதவிதமான பறவைகளின் சப்தம். எல்லாமே லவ் பேர்ட்ஸ். மற்றொரு கூண்டில் நீளமான கட்டுவிரியன் ஒன்று. வலது மூலையில் ஒரு தொட்டியில் வண்ணமான மீன்கள் நீந்திக்கொண்டிருக்கின்றன. அதுபோக வீட்டுக்குள்ளேயே வந்து தானியங்களைக் கொத்திப்போகும் சிட்டுக்குருவிகள், மைனாக்கள், புறாக்கள். இவர்களின் முறை முடிந்ததும் உள்ளே வந்து தனக்கு வேண்டிய பழங்களை எடுத்துக்கொண்டு போகும் அணில்பிள்ளைகள். வெள்ளை எலிகள். இவற்றிற்கு நடுவே விதவிதமான செடிகள். பூக்கள். இப்படி இருக்கிறது முன்னறை.

அடுத்த அறைக்குள் நுழைந்தால் ஏராளமான புத்தகங்கள். விதவிதமான சஞ்சிகைகள். உலகத்தின் எல்லா மொழிகளிலும் எழுதப்பட்ட புதினங்கள். கவிதைகள். ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் வெளிப்பட்ட கதாபாத்திரங்கள் அந்த அறைக்குள் நடமாடுவதற்கும் பேசிக்கொள்வதற்கும் வசதியாக நல்ல வேலைப்பாடுடன் கூடிய நாற்காலிகள் போடப்பட்டிருக்கின்றன. அவர்களின் தாகம் போக்க பெரிய மண்பானை நிறைய தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும். மறுநாள் காலையில் காலியான மண்பானையைக் கழுவி மீண்டும் நீர் நிரப்பி வைப்பதை நான் பார்க்கமுடிந்தது. 


அலெக்ஸாண்டர் டூமா, வில்லியம் ஃபாக்னர், தாமஸ் மன், காஃப்கா, மற்றும் இளங்கோவடிகளின் பாத்திரங்கள் எல்லாம் ஒரு நாளைக்கு என்றால் சரத் சந்திரர், வைக்கம் பஷீர், தாராசங்கர், ப்ரேம் சந்த் என்று இன்னொரு நாள். தாஸ்தயேவ்ஸ்க்கியின் நாஸ்தென்காவும் நளவெண்பாவிலிருந்து இறங்கிவந்த நளமஹாராஜனும் ஒரு நீண்ட இரவு முழுவதும் இசைத்துக்கொண்டிருந்ததும், விதவிதமான சமையல் செய்து சாப்பிட்ட அனுபவத்தையும் இன்னொரு நாள் பார்க்கமுடிந்தது.

வீட்டைச் சுற்றிலும் அபூர்வமான பல செடி கொடிகளும், வேர்களும், அடர்ந்த கோரைப்புற்களும், நான்கைந்து மரங்களும் ஒரு நீர்ச்சுனையும் அமைந்திருந்தன. அந்த நீர்ச்சுனையின் சுவையான நீரைப் போல அமிர்தம் இருக்குமா தெரியாது.  அந்த நீரை எந்தக் காயத்தின் மீது ஒரு துளி சொட்டினாலும் -காயத்தை விடுங்கள்- அது இருந்த சுவடு கூடத் தெரியாது.   எப்பேர்ப்பட்ட வியாதிக்கும் இது ஒரு சர்வரோக சஞ்சீவினி என்று தாமஸ் சொல்வதுண்டு. தாமஸின் கையில் இருக்கும் ஒரு குடுவையில் எப்போதும் இந்தச் சுனை நீர் நிரம்பியிருக்கும். நல்ல ஆன்மாவைச் சுமக்கும் தேகத்தைப் போல அந்தக் குடுவைதான் பார்க்கச் சகிக்காது. 


காலை எழுந்தவுடன் நீர்பாய்ச்சுவதும், பூக்களோடும் செடிகளோடும் பேசுவதும்தான் தாமஸின் முதல் வேலை. காலை என்பது அதிகாலை மூன்று மணி. கடைசி ஜாமத்தின் இறுதி நிழல் விழத் தொடங்கியிருக்கும்போதே அவர் செடி கொடிகளிடம் வந்துவிடுவார். குறைந்தது ஐந்து மணி நேரமாவது அவற்றோடு செலவிட்டபின்புதான் அவருக்கு நிறைவு பிறக்கும். 

தாமஸ் இரவுகளில் உறங்குவதில்லை. அவர் கடைசியாக எமெர்ஜென்சி ப்ரகடனப் படுத்துவதற்கு முந்தைய நாள்- அதாவது 1975ல்- இரவுதான் கடைசியாக உறங்கியது. இந்திரா காந்தியின் ஆயுதம் தன் உறக்கத்தைப் பறித்துவிட்டதாகவும், ஒரு வேளை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆவி இந்திராவின் உடலுக்குள் புகுந்துவிட்டதாகச் சந்தேகம் கொள்வதாயும், அப்படிப்பட்ட ஒரு சந்தேகத்தோடு உறங்குவது சிலாக்கியமில்லை என்றும் தன் நாட்குறிப்பில் அவர் எழுதியிருக்கிறார். 


ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் ஆசார்ய வினோபா பாவே வசம் இந்திராவின் ஆயுதத்தைப் பிடுங்ககூடிய ஆயுதத்தைக் கண்டதாக அவர்களை நேரில் சந்தித்துவிட்டு வந்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில் எழுதி இருக்கிறார். அவர்கள் மரணமடைந்தபின் ஆட்சியாளர்களின் மீதும் தலைவர்களின் மீதும் தான் நம்பிக்கை இழந்துவிட்டதைத் துயரூட்டும் தொனியில் எழுதியிருந்ததை என்னால் மறக்க இயலாது. 


இரவு நேரங்களில் முன்னறையின் செல்லப் பிராணிகள் உறக்கத் துவங்கியவுடன் பின்னறைக்கு வந்து அன்றைய அட்டவணைப்படி புத்தகங்களிலிருந்து வெளிவந்து உரையாடிக்கொண்டிருக்கும் கதாபாத்திரங்களைக் கவனித்தபடியும், அவற்றிற்கு ஏதாவது உதவி தேவையென்றால் அதை நிறைவேற்றவுமே விருப்பத்துடன் தன் நேரத்தைச் செலவிட்டு வந்தார். 

இது இப்படியிருக்க ராகவன் வந்திறங்கியதை நான் கவனிக்கவே இல்லை. ரயில் நிலையத்துக்கு வெளியே வந்து ஒரு குதிரை வண்டியில் ஏறி தாமஸின் வீட்டிற்குப் புறப்பட்டதை, தன் தலையை ஆட்டியபடி செல்லும் அந்த சோனிக்குதிரையின் க்ளப்டப் க்ளப்டப் குளம்படியைக் கவனித்தால் உங்களால் யூகிக்க முடியும். இரண்டுபுறமும் அறுவடை செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் நெற்கதிர்கள் சாலையில் குவிக்கப்பட்டிருந்தன. குதிரையின் சாணம் போல இந்த நெற்கதிர்களின் பச்சை மணமும் அலாதியானதுதான் என நினைத்த ராகவனுக்கு யானை, பசு, ஆடு, அணில் என்று தொடர்ந்து இலைதழைகளைச் சாப்பிட்டு சாணி போடும் எல்லா மிருகங்களின் சாணத்தின் மணமும் வரிசையாக நினைவுக்கு வந்தது. 


மிருகங்களைப் போல மனிதனின் சாணம் தெருவுக்கு வர லாயக்கற்றது எனவும் இலைதழைகளைச் சாப்பிட்டு சாணமிடும் விலங்குகளினுடையதை விட மனிதனின் மலம் அருவறுப்பானது எனவும் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. ”நீங்க நினைக்கிறது சரிதான் ஐயா! மனுஷங்களோட மலம் தான் உலகத்துலேயே துர்நாற்றம் புடிச்சது” என்றது குதிரை. தான் எதுவும் பேசாமலேயே தன் மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை அந்தக் குதிரை பேசியது குறித்து அந்தக் குதிரையோட்டிக்கு ஆச்சரியமாக இல்லை. ”ரொம்ப அதிசயமா சில பேருங்க கிட்ட மட்டும் நம்ப குதுர பேசுங்க சாமி” என்றார் குதிரையோட்டி. 

ராகவனுக்கும் அது இதற்கு மேல் எதுவும் பேச ஆரம்பித்தால் தாமஸுடன் தான் பேசுவதற்கான வார்த்தைகள் செலவழிந்து போய்விடுமோ என்ற பயம் தொற்றிக்கொண்டது.நல்லவேளையாக அதற்குப் பின் குதிரை எதுவும் பேசவில்லை. காய் காய் க்ள க்ள என்று குதிரையோட்டி சொன்னவுடன் குதிரை நின்றது. 


”தபாலாபீஸ் ஐயா வூடுன்னு சொல்லிருந்தீங்கன்னா நான் இல்லாட்டாலும் இந்தக் குதுரயே ஒங்கள இங்க கொண்டாந்து சேத்துடுமுங்க ” என்றார். சிரித்துக்கொண்டே ”அது பேசுறதுக்கும் சேத்து பணம் கேக்காம இருந்தா சரிதான்” என்றார் ராகவன். ”ஐயா ஐயா! ஒங்க வீட்டுக்கு விருந்தாளி வந்துருக்காங்கோ” என்று தாமஸின் வீட்டை நோக்கிக் குரலெழுப்பினார் குதிரையோட்டி. வீட்டிலிருந்து எந்த அசைவும் இல்லை. 


”நீங்க போயிட்டு வாங்க. நாம் பாத்துக்கறேன்” என்ற ராகவனை ”அப்ப சரீ. நா வரேனுங்க” என்ற குதிரையோட்டியைத் தொடர்ந்து குதிரையும் ”போயிட்டு வரேன் ராகவன்” என்றது. ”ஐயாமாருகிட்ட பேசும்போது மருவாதை கொடுத்துப் பேசக் கத்துக்கடா பாண்டியா” குதிரையிடம் செல்லமாக அலுத்துக்கொண்டே புறப்பட்டார் குதிரையோட்டி.

வீட்டின் முன்படலைத் தள்ளி, ”தாமஸ் ஐயா. தாமஸ் ஐயா” என்று ராகவன் குரலெழுப்ப எந்த சப்தமும் திரும்பக் கேட்காதிருந்தது. ராகவனின் காலடி பட்டுக் காய்ந்த வாதாமரச் சருகுகள் எழுப்பிய சப்தம் நிசப்தமான குளத்தில் எறியப்பட்ட கல்லைப் போல சலனமெழுப்பியது. தன் பையைக் கீழே வைத்துவிட்டு பென்ச்சில் உட்கார்ந்த ராகவனுக்கு பசிக்க ஆரம்பித்திருந்தது. சிறிது தொலைவில் வாதாங்கொட்டைகள் கண்ணில் பட்டன. 

எத்தனை நாளாயிற்று வாதாம் பருப்பைச் சாப்பிட்டு? என்ற எண்ணத்துடன் குனிய ”வாப்பா ராகவா. பயணமெல்லாம் நல்ல படியா இருந்துதா?” என்ற தாமஸின் குரல் நிமிர்த்தியது ராகவனை. 


”நல்லா இருந்துது ஐயா. நீங்க எப்பிடி இருக்கீங்க? என்னோட கடிதம் கிடைச்சுதா? உங்ககிட்ட இருந்து பதில் வராம எனக்கு ரொம்ப சஞ்சலமா இருந்துது. ஆனா நீங்க எங்கயும் இப்பல்லாம் போறதுல்லங்கற நம்பிக்கையோட கெளம்பிட்டேன். உங்களயும் பாத்துட்டேன்” என்ற ராகவனைப் பார்த்து “ இப்பல்லாம் ஒரு தபால் கார்ட் எழுதக் கூட சோம்பலாயிருக்கு ராகவன். ஆனா நீயா வந்துடுவங்கற நம்பிக்கை எனக்குள்ளயும் இருந்தது. ரெண்டு பேருக்கும் நடுவுல சங்கிலி மாதிரி ஒரே மாதிரி நம்பிக்கை இருந்துதுன்னா அதப் பிடிச்சுக்கிட்டே எங்க வேணாலும் போயிடமுடியும். என்ன நாஞ் சொல்றது?” என்று சிரித்தார் தாமஸ். 


தாமஸின் அநேகமான வாக்கியங்கள் ‘என்ன நாஞ் சொல்றது?’ என்ற கேள்வியோடுதான் முடியும்-பதிலுக்கு நீங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லாவிட்டாலும்.

”குளிச்சுட்டு வரியா ராகவன்?” 

”கொஞ்ச நேரம் நாம பேசிக்கிட்டு இருக்கலாம் ஐயா! அதுக்கப்புறம் குளிக்கலாம்”  

“உள்ள போலாமா?”

“வேணாங்க. அப்புறம் உங்க வீட்டுப் பாம்பு, பறவை எல்லாம் நம்மகூடப் பேச ஆரம்பிச்சுடும்”

“எல்லாம் இன்னும் எழுந்திருக்கலை. சரி. இப்படியே ஒக்காருவோம்”

“அந்த வேர் கிடைச்சிடுச்சா ஐயா?”

“கிட்டத்தட்ட என்னோட ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சிடுச்சு ராகவன். ஆனா இதையெல்லாம் இப்ப வெளீல சொல்ல பயமாயிருக்கு. இப்ப இருக்கிற அரசாங்கமும், தலைவர்களும், அவங்கள ஆட்டிப் படைக்கிற கொழுத்த நிறுவனங்களையும் நினைக்கிறப்ப நம்ம நாட்டோட ஆதாரமான செல்வங்களையே இழந்திடுவோமோன்னு பயமாயிருக்கு ராகவன்”

“உங்க பயம் நியாயமானதுதான். ஆனாலும் உங்க ஆராய்ச்சி இப்படி யாருக்கும் தெரியாத ஒரு நாலு சுவத்துக்குள்ள முடிஞ்சு போயிடக்கூடாதேன்னும் ஆதங்கமாயிருக்கு ஐயா”

“நான் பேரு புகழை நினைச்சு இதைச் செய்யல. ஆனா நம்ம நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய எல்லாம் இன்னொருத்தன் கைக்குப் போயிடுமேன்னுதான் தினம் தினம் பயப்படறேன். சொல்லப் போனா இதுக்குள்ளல்லாம் ஏன் நான் நொழஞ்சேன்னும் சலிப்பா இருக்கு ராகவன்”

“மரணத்தையே ஜெயிக்கற அந்த வேரை நான் பாக்கலாமா?”

“பாக்கலாம். பாக்கலாம். ஆனா இப்போத் தோணுது மரணத்தையே ஜெயிச்சுட்டா அப்புறம் வாழ்க்கைக்கு என்ன சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இருக்கும்னு? மிச்ச ஆராய்ச்சியெல்லாம் கூட பரவாயில்லை. ஆனா இந்த வேர் பத்தின விஷயம் மட்டும் உன்னோட இருக்கட்டும். செய்வியா ராகவன்?”

சொல்லிவிட்டு தன் வீட்டுக்குள் நுழைந்து அந்த வேரை வெளியில் கொண்டுவந்தார் தாமஸ்.

( தொடரும்)

12 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

// திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் தபால்துறையைத் திருமணம் செய்துகொண்டு விட்டதாக ஊர் மக்கள் பேசிக்கொள்வதுண்டு.//

;)) சபாஷ்

தொடர்வேன்

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அவர் கடைசியாக எமெர்ஜென்சி ப்ரகடனப் படுத்துவதற்கு முந்தைய நாள்- அதாவது 1975ல்- இரவுதான் கடைசியாக உறங்கியது. இந்திரா காந்தியின் ஆயுதம் தன் உறக்கத்தைப் பறித்துவிட்டதாகவும், ஒரு வேளை ப்ரிட்டிஷ் ஆட்சியாளர்களின் ஆவி இந்திராவின் உடலுக்குள் புகுந்துவிட்டதாகச் சந்தேகம் கொள்வதாயும், அப்படிப்பட்ட ஒரு சந்தேகத்தோடு உறங்குவது சிலாக்கியமில்லை என்றும் தன் நாட்குறிப்பில் அவர் எழுதியிருக்கிறார்.//

அருமை நிஜமாகவே எழுதியிருந்தாரோ, அல்லது அவர் எழுதியிருந்ததாக எழுதி, நீங்கள் சந்தோஷப்பட்டுக்கொள்கிறீர்கள்.

எப்படியிருப்பினும் அருமையான வரிகளே!

எமெர்ஜென்ஸியால் அதைப்பற்றி சிறிதேனும் அனுபவப்பட்டவன் என்ற முறையில் என் ஸ்பெஷல் பாராட்டுக்கள், இந்த வரிகளுக்கு.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//குதிரையோட்டியைத் தொடர்ந்து குதிரையும் ”போயிட்டு வரேன் ராகவன்” என்றது. ”ஐயாமாருகிட்ட பேசும்போது மருவாதை கொடுத்துப் பேசக் கத்துக்கடா பாண்டியா” குதிரையிடம் செல்லமாக அலுத்துக்கொண்டே புறப்பட்டார் குதிரையோட்டி. //

ஜோர் ஜோர் .... குதிரை போலவே டக்டக்கென்று செல்லுகிறது இந்தப்பதிவும்.

தொடர்வேன்....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//“மரணத்தையே ஜெயிக்கற அந்த வேரை நான் பாக்கலாமா?”
“பாக்கலாம். பாக்கலாம். ஆனா இப்போத் தோணுது மரணத்தையே ஜெயிச்சுட்டா அப்புறம் வாழ்க்கைக்கு என்ன சுவாரஸ்யமும் விறுவிறுப்பும் இருக்கும்னு? மிச்ச ஆராய்ச்சியெல்லாம் கூட பரவாயில்லை. ஆனா இந்த வேர் பத்தின விஷயம் மட்டும் உன்னோட இருக்கட்டும்.//

அந்த வேரைக்காணமுடியாமல் ‘தொடரும்’ போட்டுட்டீங்க.

பரவாயில்லை.

இன்னும் கூட சிறுசிறு பகுதிகளாகவே கொடுங்கோ!

அவைதான் படிக்க சுவாரஸ்யமாகவும் Strain இல்லாமலும் இருக்கும்.

அன்புடன் vgk


[ஏனோ இது என் டேஷ் போர்டில் தெரியவில்லை, சார்.

நானாக என் பதிவுக்கு நீங்கள் வந்து கொடுத்திருந்த பின்னூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து, அகஸ்மாத்தாக வந்து இதைப் படித்தேன்.]

vasan சொன்னது…

/கிட்டத்தட்ட என்னோட ஆராய்ச்சி எல்லாம் முடிஞ்சிடுச்சு ராகவன். ஆனா இதையெல்லாம் இப்ப வெளீல சொல்ல பயமாயிருக்கு. இப்ப இருக்கிற அரசாங்கமும், தலைவர்களும், அவங்கள ஆட்டிப் படைக்கிற கொழுத்த நிறுவனங்களையும் நினைக்கிறப்ப நம்ம நாட்டோட ஆதாரமான செல்வங்களையே இழந்திடுவோமோன்னு பயமாயிருக்கு ராகவன்”/

இந்திராவின் எம‌ர்ஜென்ஸி ஒருவ‌கை ச‌ர்வாதிக‌ர‌மெனில், இந்த‌ நாட்டின் இய‌ற்கை வ‌ள‌ங்க‌ளை அந்நிய‌ருக்கு விற்று நாட்டைக் கொல்லைய‌டிப்ப‌து ஈன‌த்த‌ன‌ம். நாம் வீணாய் க‌ண்ணிருந்தும் குருட‌ராய் வாலா(ழா)விருக்கிறோம் சுந்த‌ர்ஜி.

G.M Balasubramaniam சொன்னது…

பல நாட்கள் இணையத்திலிருந்து விலகி இருக்க வேண்டிய சூழ்நிலை. இப்போது வந்து படிக்கத் துவங்கினால், உண்மையைச் சொல்லட்டுமா சுந்தர்ஜி, ABSTRACT எண்ணங்கள் விளங்குவது கடினமாயிருக்கிறது. தொடர்ந்து படித்தால்,( பலமுறை )புரியுமோ என்னவோ.

அப்பாதுரை சொன்னது…

interesting

Ramani சொன்னது…

வெகு சுவாரஸ்யம்
தொடர வாழ்த்துக்கள்

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள சுந்தர்ஜி...

மூன்று அத்தியாயத்தையும் வாசித்துவிட்டேன். ஒருமுறையல்ல. இருமுறை. சரியான இலக்கில் நாவல் தொடங்கப்பட்டிருக்கிறது. நான் சிலவற்றை யூகம் செய்து சிந்தனையில் இருக்கிறேன். எனவே நாவலைத் தொடர்ந்து வாசித்துவிட்டு ஒரு சரியான வாய்ப்பில் எழுதுவேன் என் ஊகத்தையும் ஒப்பிட்டு. இப்போது மௌனமான வாசிப்போடு. தமிழுக்கு நல்ல சோதனையான ஒரு நாவலின் வெளிச்சத்தை உங்கள் நாவல் அடையாளமிட்டிருக்கிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எதை விடுவது எதைச் சொல்வது. அருமை. கதாபாத்திரத்தின் மூலம் நீங்கள் சொல்லும் கருத்துகளும் வெகுவாகக் கவர்ந்தன.

டேஷ்போர்டில் தெரியாததால் உங்கள் வரமா? சாபமா? அறிவிப்புப் பார்த்து வந்தேன்.

தொடருங்கள்.

எஸ்.கணபதி கிருஷ்ணன் சொன்னது…

Sir,

Today morning while searching some of the information about ramana maharishi visited your blog. some of the writing amazing one
especially "sithar yar","thattaraya".

Just to say hallo only send this mail.

Thanks & Regards,

S Ganapathi Krishnan

மோகன்ஜி சொன்னது…

மிக நுட்பமாக செதுக்கி வருகிறீர்கள்.. இப்பவே உச்சி முகர்ந்துட்டா வரப் போற அத்யாயங்களுக்கு என்ன செய்வேனாம்? கொஞ்சம் போல் பாரா பிரிக்கவும். நாலு விரக்கடை நீளத்தைக் குறைச்சிக்குங்கோ!
இந்தப் பதிவு உங்கள் பெயர் சொல்லும் என்று தெரிகிறது.. எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது எனக்குள். சொதப்பினா கொன்னுடுவேன்!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...