14.2.14

நானும் நீங்களும்


உங்களுக்கு
மிகப் பரிச்சயமான 
மலையடிவாரத்தின் 
அண்மையில்தான் நிற்கிறேன்.
இப்போது ஓலமிடும் காற்றை 
நீங்கள் கேட்கமுடியும்.
ஓடிக்கொண்டிருக்கும் நதியில் 
இதோ கால் நனைக்கிறேன் 
என்ற இந்த வரியில் 
உங்கள் பாதங்களும் நனைகின்றன.
வேறெங்கோ பார்த்துக்கொண்டே 
எதிர்பாரா பள்ளத்தில் தடுக்கி விழுகிறேன்.
மன்னியுங்கள். என்னால் 
நீங்களும்தான் விழுந்து எழுகிறீர்கள்.
கண்ணில் பட்ட ஆட்டுக்குட்டியை 
அதன் அச்சத்துடன் தூக்கியணைத்துக் 
கொஞ்சி முத்தமிடுகிறேன்.
உங்கள் நாசியிலும் 
கிளர்வூட்டுகிறது தோல் மணம்.
உங்களுக்குத் தெரியாத 
ஒரு மூன்றாம் மனிதருடன் 
நிகழ்த்தும் உரையாடல் 
என்னைப் போலவே 
உங்களுக்கும் அலுப்பூட்டுகிறது.
இதோ நான் போக வேண்டிய இடம் வந்து 
உங்களுடன் சேர்ந்து உள்ளே நுழைகிறேன்.
கவிதை வெளியே காத்து நிற்கிறது.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இப்போது நானும்
உங்களோடு சேர்ந்து ரசிக்கிறேன்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...