8.2.15

ஓர் உரையாடல்


ஒரு தாயின் கருவில் இரு குழந்தைகள். அவற்றின் இடையே நிகழ்ந்த ஓர் இயல்பான உரையாடல் இது.

அ: நாம் இந்த இருண்ட அறையை விட்டு வெளியேறிய பின் நமக்கு வாழ்க்கை உண்டென்று நம்புகிறாயா?

ஆ: அதில் என்ன சந்தேகம்? நிச்சயமாக நம்புகிறேன். இங்கிருந்து வெளியேறிய பின் வாழ இருக்கும் வாழ்க்கையின் ஒத்திகை என்றே இதை நம்புகிறேன்.

அ: உன் நம்பிக்கை முட்டாள்த்தனமானது. இங்கிருந்து வெளியேறி நாம் எங்கும் செல்லப் போவதில்லை. இதுதான் நம் இறுதிப் பயணம். சரி. ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். இங்கிருந்து வெளியேறிய பின் என்ன நடக்கும்? உன் கற்பனையையும் கேட்கலாம்.

ஆ: எனக்குத் தெரியவில்லை. ஆனாலும் இங்கே இருப்பதை விட அதிக வெளிச்சம். அதிகக் காற்று. நிச்சயம் கால்களால் நடக்கவும், வாயினால் உண்ணவும் நாம் கற்றுக் கொள்வோம் என நம்புகிறேன். நம்மால் இப்போது யூகிக்க முடியாத பிற புலன்களின் உதவியும் நமக்குக் கிட்டலாம்.

அ: சரியான வேடிக்கைதான். கால்களால் நடப்பதாம். வாயினால் உண்பதாம். முட்டாள். தொப்புள் கொடியில்லாமல் எப்படி உண்பதாம்? நமக்கு உணவளிக்கும் அதுவும் சிறிதாகிக் கொண்டே வருவது உன் கண்ணில் படவில்லை? நம் வாழ்க்கை இங்கேயே முடிந்து போய் விடும். புரிந்து கொள்.

ஆ: அப்படி இல்லை. இங்கே நாம் வாழும் வாழ்க்கையை விட அது வேறுபட்டதாக ஒருவேளை இருக்கலாம். தொப்புள் கொடி இனி நமக்குத் தேவையற்றதாய் மாறலாம்.

அ: பிதற்றல். அப்படி இங்கிருந்து வெளியேறிய பின் வாழ்க்கை உண்டு என்றால், இங்கிருந்து சென்ற ஒருவர் கூட இங்கு ஏன் திரும்பி வரவில்லை? என்னைப் பொருத்தவரை இங்கேயே நம் வாழ்க்கை முடிந்தது. வெளியே சென்ற பின் மேலும் அடர்த்தியான இருள். மேலும் அடர்த்தியான நிசப்தம். கூடுதலான மறதி.

ஆ: எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் நிச்சயமாக நம் அன்னையைச் சந்திப்போம் என நம்புகிறேன். அவள் நம்மை கவனித்துக் கொள்வாள் எனவும் நம்புகிறேன்.

அ: ஹாஹாஹா! அன்னையா? யாரவள்? அப்படி ஒருத்தியை நம்புகிறாயா? அவள் இருப்பது உண்மையானால் இப்போது எங்கே இருக்கிறாள்?

ஆ: நம்மைச் சுற்றி இருப்பது அவள்தான். அவள் இன்றி நாம் இல்லை . அவளால்தான் நாம் இருக்கிறோம். அவளில்தான் நாம் வாழ்கிறோம். அவளின்றி எதுவும் இல்லை . இருக்கவும் முடியாது .

அ: என்னால் காண இயலாத ஒன்றை இருப்பதாக என்னால் ஏற்றுக் கொள்ள இயலாது. ஆகவே அவள் இல்லை என்றே தர்க்க ரீதியாக நான் கருதுகிறேன்.

ஆ: அப்படி இல்லை. சில சமயங்களில் நாம் மிகுந்த  அமைதியில், மிகுந்த தியானத்தில்  தோய்ந்திருக்கும் போது, மிகுந்த நுட்பத்துடன் செவிமடுக்கும் போது அவள் இருப்பை உணர நேரலாம்.அவளின் அன்பில் நனைந்த குரலை மேலிருந்து கேட்க வாய்க்கலாம். நம்பிக்கையுடன் மட்டும் இரு. அது நம்மை சரியான பாதையில் செலுத்தும்.

முதன்முறையாக 'அ' வால் உரையாடலைக் கொண்டு செல்ல வார்த்தைகள் இல்லை. இருப்பதை விரும்பவும் இல்லை.

(வெய்ன் டயரின் Your sacred self ல் இருந்து நெடிய ஆழங்களைத் தொடும் இந்தக் குட்டிக் கதை.)

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இருக்கு... ஆனா இல்லை... உள்ளுக்குள்ளே இருக்கும் போதே தர்க்கமா...?

நிலாமகள் சொன்னது…

இப்பிரபஞ்சமாகிய கருவறையில் நம் உரையாடலும் இதுபோன்றே...!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...