
என் வாகனத்தைப் பழுது பார்த்தபோது
நீ மல்லிகை மொட்டுக்கள் வாங்கியபடி இருந்திருக்கலாம்.
பரபரக்கும் சாலையைத் தட்டுத் தடுமாறி
வசவுகள் வாங்கிக் கடக்கையில்
நம் மகன்களிடம் உன் இளம்பருவக் குறும்புகளை
விவரித்துக்கொண்டிருந்திருக்கலாம்.
பொழுது சாய்ந்தபின்னும் திரும்பமுடியாது வழி மறந்து
தேடிக்கொண்டிருக்கையில்
என்னை நீயும் தேடத்துவங்கியிருக்கலாம்.
ஒரு கனரக ஊர்தியின் சக்கரங்களுக்கு இடையே
மெல்ல மெல்ல அறைபட்டதைக்
கேள்வியுற நேர்கையில்
நான் பார்த்திராத கண்ணீரை நீ வடித்திருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக