29.12.10

காலம்



I
இழந்தவன்
இன்றை மறக்கிறான்.
நாளையை நினைக்கிறான்.

இருப்பவன்
இன்றை நினைக்கிறான்.
நாளையை மறக்கிறான்.

நிலைப்பவன்
நேற்றை மறக்கிறான்.
நாளையைத் துறக்கிறான்.
இன்றில் வாழ்கிறான்
என்றும்.


II
சில நேரம் கோபப்பட
வேண்டியதிருக்கிறது.
சில நேரம் கடந்து செல்ல
வேண்டியதிருக்கிறது.
கோடைகாலத்து வெயிலையும்
குளிர்காலத்து மழையையும் போல.


III
நிழலின் அருமை வெயிலிலும்
வெயிலின் அருமை மழையிலும்
மழையின் அருமை வெயிலிலும் என
இருப்பதிலிருந்து இல்லாததிற்கும்
இல்லாததிலிருந்து இருப்பதற்கும்
பாய்ந்தபடியிருக்கிறது
வாழ்க்கை.

24 கருத்துகள்:

Matangi Mawley சொன்னது…

:) that's very less words.. but a very pregnant poetry! Couldn't think how to write that in tamil.. a delightful read...!

மிருணா சொன்னது…

//சில நேரம்/கோபப்பட/வேண்டியதிருக்கிறது./சில நேரம்/கடந்து செல்ல/வேண்டியதிருக்கிறது.கோடைகாலத்து/வெயிலையும்/குளிர்காலத்துமழையையும் போல//
- இயல்பான, மனதை தொட்டுச் செல்கிற வரிகள். எப்போது மழை, எப்போது வெயில் என்பதுதான் பருவம் தப்பி விடுகிறது சில நேர இயற்கை போல.

க ரா சொன்னது…

நிதர்சனம் சுந்தர்ஜி

ரிஷபன் சொன்னது…

இன்றில் வாழ்கிறான்
என்றும்.
இது வாய்த்தால் போதுமே.. இன்றைத் தொலைப்பதால்தான் பிரச்னைகள் எல்லாம்.

காமராஜ் சொன்னது…

தறியிலோடும் ஓடம் போல இங்கும் அங்கும் அலைகிற
ஏக்கங்கள்.ரொம்ப இலகுவாகச் சொல்லிவிட்டீர்கள்.

ஹேமா சொன்னது…

அழுதாலும் சிரித்தாலும் வாழ்வு கடந்தபடிதானே.சுகமாய் இருக்கிறது என்று அந்த இடத்திலேயே நிலைத்திருக்க முடியாதே !

வினோ சொன்னது…

/ நிலைப்பவன்
நேற்றை மறக்கிறான்
நாளையைத் துறக்கிறான்.
இன்றில் வாழ்கிறான்
என்றும். /

இதமாய் பல உண்மைகள் சொல்கின்றன கவிதைகள்.. நன்றி அண்ணா...

பத்மா சொன்னது…

இருப்பதிலிருந்து
இல்லாததிற்கும்
இல்லாததிலிருந்து
இருப்பதற்கும்
பாய்ந்தபடியிருக்கிறது
வாழ்க்கை.

இருப்பதை ருசிக்கத் துவங்கும் நேரம்தான் நாம் வாழத் துவங்குகிறோம்
இல்லையா ஜி ?
அனைத்தும் அருமை

திருநாவுக்கரசு பழனிசாமி சொன்னது…

இழந்தவன், பெற்றவன் என அனைவருக்கும் பொதுவாக காலம்

G.M Balasubramaniam சொன்னது…

நேற்றென்பது திரிந்தபால்; நாளையென்பது மதில்மேல் பூனை; இன்றென்பது கையில் வீணை. அழகாக மீட்டி வாழ்ந்தால் இல்லை இனி கேள்வி. இது இன்னொரு பரிமாணம் சுந்தர்ஜி.

vasan சொன்னது…

/இருப்பதிலிருந்து
இல்லாததிற்கும்
இல்லாததிலிருந்து
இருப்பதற்கும்
பாய்ந்தபடியிருக்கிறது
வாழ்க்கை./
இதைவிட‌ எப்ப‌டி வாழ்க்க‌யை சுருக்க‌மாய் சொல்வ‌து?
எழுத எழுத‌ இய‌ல்பாய் வ‌ழிகிற‌து எண்ண‌ங்க‌ள்.
இல்லாத‌வ‌ன், இருப்ப‌வனுக்கும்.
இருப்ப‌வ‌ன், இல்லாத‌வ‌னுக்கும்
ப‌ய‌ந்த‌ப‌டியும், ப‌ல‌ர‌து வாழ்வு.

சுந்தர்ஜி சொன்னது…

உங்களின் பாராட்டுக்குரியவனாக என்னை எப்போதும் தக்கவைத்துக் கொள்வேன் மாதங்கி.

தமிழில் யோசித்து தமிழில் நீங்கள் எழுதுவதே அபாரமாக இருக்கும்போது தமிழில் பாராட்டவா வார்த்தையில்லை மாதங்கி?

முயலுங்கள். பெறுவீர்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

உங்கள் கவிதைக்குப் பின்னூட்டமிடும்போது பிறந்த வார்த்தைகள் இவை.

எப்போது எப்படி என்பதுதான் தீர்மானிக்கமுடிவதில்லை.

நன்றி சைக்கிள்.

சுந்தர்ஜி சொன்னது…

இன்றைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் ரிஷபன்.நாளை ப்ரச்சினையில்லை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ராமசாமி வருகைக்கும் கருத்துக்கும்.

சீக்கிரம் உங்கள் தளத்துக்கும் வருவேன்.

சுந்தர்ஜி சொன்னது…

ஒங்கள மாதிரி வராதுங்ணா காமராஜ் அண்ணா.

சுந்தர்ஜி சொன்னது…

வாழ்வு கடக்கலாம் ஹேமா.இன்று என்பது மட்டுதான் நிலையானது என்பதுதான் என் வார்த்தைகளின் பொருள்.சரிதானே?

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வினோ முதல் வருகைக்கும் வார்த்தைக்கும்.

பார்க்க அசப்பில் நடிகர் வினீத் மாதிரி இருக்கீங்க.

சுந்தர்ஜி சொன்னது…

//இருப்பதை ருசிக்கத் துவங்கும் நேரம்தான் நாம் வாழத் துவங்குகிறோம்//

உங்களிடம் குழப்பங்களில்லாத தெளிவான பார்வையிருக்கிறது பத்மா.

சுந்தர்ஜி சொன்னது…

நிதானமான பார்வை உங்களோடது திருநாவுக்கரசு.நன்றி.

அதுசரி திருநா நீங்க கொஞ்சம் சீரியஸான ஆசாமியோ?ஜூடு சீரிஸ்லாம் பாக்கவேயில்லையே?

சுந்தர்ஜி சொன்னது…

நேற்றென்பது திரிந்த பால்.
நாளையென்பது கபால்.
இன்றென்பது கையில் தபால்.

இன்னோரு கவிதை வரதுக்கு ஹெல்ப் பண்ணிட்டீங்க பாலு.

ஜோக்ஸ் அபார்ட் உங்க பார்வை எங்களுக்குப் பாடம்.

நன்றி பாலு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

புள்ளியிலிருந்து எல்லாவற்றையுமே விரித்து பார்க்கிற அபூர்வ ரசனை வாசன் உங்களுடையது.

என்னை நீங்கள் படிப்பது எனக்குப் பெருமை.

vasan சொன்னது…

/என்னை நீங்கள் படிப்பது எனக்குப் பெருமை./
உங்க‌ளைப் ப‌டிப்ப‌த‌னால், ப‌ல‌ புது உல‌க‌ங்க‌ள் பார்க்கின்றேன்.
உங்க‌ள் க‌ண்ணாடியில் குருட‌னுக்கும் பார்வை வ‌ருமோ?

சுந்தர்ஜி சொன்னது…

வாசன்!இதில் எனக்கு உடன்பாடில்லை.

இருபுறமும் பார்க்கக் கூடிய கண்ணாடியில் ஒரு புறம் நான் மறுபுறம் நீங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...