9.3.11

ப்ரவாஹம்


அடர் கானகத்தின் நடுவே யாருமற்ற இரவில் முழு நிலவின் விழு ஒளியில் நனைந்தபடியே
பாலையின் பரந்த வெளியில் அதே முழு நிலவு கொட்டியபடி இருக்க பாதங்கள் மணலுக்குள் புதைவதும் மீள்வதுமாய்
குளத்தின் தாமரை சூழ் மேற்பரப்பில் மீன்கள் மட்டுமிருந்து எழுப்பிய க்ளக் ஒலியைப் படித்துறையின் மேலமர்ந்து ரசித்தபடியுமாய்
எதிரே யாரென்று தெரியாது மறைக்கும் மாமழையின் கடும் பிடியில் சிக்கி முகத்தில் தாரை தாரையாய்ச் சரமிறங்கும் மழைத்தேனை நாவால் நக்கி ருசித்தபடியுமாய்
வீறிடும் ஏதோ ஒரு சிசுவின் குரலுக்காய் ஸ்தனங்கள் சுரந்து கசிந்து துணி நனைக்கும் தாயன்பாயும்
கண்ணெல்லாம் நிரம்பிவழியும் படியான நீலத்தை வெட்டவெளியில் மல்லாந்துபடுத்தபடி மிதக்கும் படகின் குலுக்கலில் எந்த ஒரு நினைவுமின்றிக் கடப்பதாயும்
எப்படிச் சொல்வேனடி இந்த மூன்றே முக்கால் நிமிடத்து சுகானுபவத்தை?
இரக்கத்தையும் பரிவையும் அதன் வழியே பேரன்பையும் பாத்திரம் கொள்ளாத மிகுதியாய் மிகுந்த பின்னும் விடாது ஊட்டிக் களிக்கும் ஆனந்தப் பேரானந்தத்தை என்ன சொல்லியும் தீராது இந்த இடத்தில் கையாலாகாத மொழியைத் தூக்கி விசிறியடிக்கிறேன்.
மேற்கத்திய சங்கீதத்தின் பிதாமகன் யெஹுதி மெனுகினும் இந்திய சாஸ்த்ரீய சங்கீதத்தின் கௌரவம் பண்டிட் ரவிஷங்கரும் (நான் பெண்ணாயிருந்திருந்தால் ரவியைத்தான் மணந்திருப்பேன்) லய சாம்ராட் அல்லா ராகாவும் இணந்து 60களில்” வெஸ்ட் மீட்ஸ் ஈஸ்ட்” என்ற ஒரு ஆல்பத்துக்காக ஒன்று சேர்ந்து மெய் மறக்க வைத்த அபூர்வமான ஒரு ப்ரவாஹத்தின் காட்சி வடிவம்.
இந்த ஆல்பத்தில் இன்னும் ஆறு பாடல்கள் உண்டு. ஆனாலும் டெண்டெர்னெஸ் என்ற தலைப்பிட்ட இந்த இசைத் துளி கடலாய் என்னை அடித்து வீழ்த்தியது.
80களில் முதன்முறை கேட்ட பின் எத்தனை முறை கேட்டிருப்பேனோ தெரியாது.ஆனால் எப்போது கேட்டாலும் வாசல்வரை சென்றவனைப் பின்னிருந்து காலைப் பிடித்திழுக்கும் ஒரு மழலையாய் இதை உணர்வேன்.
நான்கு நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் ஒரு தடவை சொர்க்கத்துக்குப் போய் வர விருப்பமுள்ளவர்களுக்கான நுழைவுச் சீட்டு இது.

18 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

இசை இன்பத்தில் மூழ்கி குளிக்கும் உங்களை ,ஐ மீன் ,உங்கள் எழுத்தை படிக்கும்போது பொறாமையாக இருக்கிறது, சுந்தர்ஜி..

சிவகுமாரன் சொன்னது…

கடந்த சில நாட்களாய் இணையக் கோளாறால் வலைப்பக்கம் வர முடியவில்லை சுந்தர்ஜி. விடுபட்ட எல்லாவற்றையும் படித்துக் கொண்டிருக்கிறேன்

Harani சொன்னது…

மூழ்கித் திளைத்தேன். களித்தேன். இன்னும் கிறங்கிப்போயிருக்கிறேன் சுந்தர்ஜி.

ரிஷபன் சொன்னது…

இசைகிறது என் மனசும்.

Matangi Mawley சொன்னது…

Sir-ji-- Neengalum oru 'Degree Coffee' series onnu start pannunga, please. What words! Sheer Poetry! vimarsanangalukku appaarpatta ezhuththu... I am not sure if i can even comment on such words... music has sprinkled it's magic on you; the words were as mesmerizing as the music, itself!

"Voice of the Moon" nu Anoushka Sharma voda oru 'piece'. When I listen to it-- I feel 'exactly', as you say... infact, that's more like a breeze-less night. Not sultry, either. cool. but no breeze. And moon. It had my companion on lonely roads... No wonder, they say music is the 'Universal Language'! But now, I get the 'inspiration' part of the Anoushka Sharma version! What flow! But who am I to pass verdicts on Ravi Shankar-Yehudi Menuhin-Allah Rakha Combo? I must be crazy to do so.

Thanks a ton to Ravi Shankar--- had he not done this piece of symphony, we'd probably not have had such a piece of literature...

PS: neenga 'Voice of the Moon' kettathilla-nnaa please listen to it... I'm sure you'll appreciate it.. (http://www.youtube.com/watch?v=zPRQk7rhPM4)

Matangi Mawley சொன்னது…

sorry sir, Anoushka Shankar... Didn't realize i'd typed out 'sharma...'.. sorry...

ஹேமா சொன்னது…

நான் இப்பவே 2 தரம் சொர்க்கம் போய் வந்திட்டேன்.நன்றி நன்றி சுந்தர்ஜி !

RVS சொன்னது…

ஒன்று...
//எதிரே யாரென்று தெரியாது
மறைக்கும் மாமழையின் கடும் பிடியில் சிக்கி முகத்தில் தாரை தாரையாய்ச் சரமிறங்கும் மழைத்தேனை நாவால் நக்கி ருசித்தபடியும்//
இரண்டு...
//வெட்டவெளியில் மல்லாந்துபடுத்தபடி மிதக்கும் படகின் குலுக்கலில் எந்த ஒரு நினைவுமின்றிக் கடப்பதாய்//
இப்படி பட்டியலிட முயற்சித்தேன்.. மொத்த பதிவும் பின்னூட்டத்திற்கு வந்துவிடும் போல ஆகிவிட்டது... இத்தோட நிறுத்திக்கிறேன்..
ப்ரவாஹம் என்ற தலைப்புக்கு தக்கபடி வார்த்தை'கள்' வந்து விளையாடியிருக்கிறது இந்த பதிவில்... அந்த இசையோடு கலந்தேன்.. நன்றி.. ;-))

சுந்தர்ஜி சொன்னது…

இது ஒன்றும் பெரிய விஷயமில்லை பாலு சார்.

தொடர்ந்து இதற்கும் நேரமொதுக்கி வர்ஜியாவர்ஜியமில்லாமல் எல்லா சங்கீதத்தையும் ஒரு வருஷம் சகிப்புடன் கேளுங்கள்.

அதற்குப் பின் இசை குறித்து நீங்கள் எழுத ஆரம்பித்துவிடுவீர்கள் என்னையும் விட மிக அழகாய்.

சுந்தர்ஜி சொன்னது…

பொறுமையாய் வாசியுங்கள்.

ஆனல் எப்போது வாசிக்கிறீர்களோ அப்போது உங்கள் கருத்துக்களையும் எழுதுங்கள் சிவா.

சுந்தர்ஜி சொன்னது…

கிறக்கம் தீர்வதற்குள் ஒரு இடுகையை இடுங்கள் ஹரணி.

கிறக்கத்தின் மொழியைப் படிக்க ஆவல்.

சுந்தர்ஜி சொன்னது…

இசைந்த வரிகளுக்கும் உணர்விற்கும் நன்றி ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

அனுஷ்கா சங்கரின் voice of the moon கேட்டதில்லை மாதங்கி.

கேட்டுவிட்டு எழுதுகிறேன்.

உங்களின் இசையும் எழுத்தும் உயர்வானது மாதங்கி. பொறாமைப் படுகிறேன்.

சுந்தர்ஜி சொன்னது…

சொர்க்கத்திலிருந்து சொர்க்கத்துக்குப் போன முதல் மனுஷி நீங்கள்தான் ஹேமா.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஆர்.வி.எஸ் நீங்கள் சொன்ன வார்த்தைகளுக்கு.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

// நான்கு நிமிடத்துக்கும் குறைவான நேரத்துக்குள் ஒரு தடவை சொர்க்கத்துக்குப் போய் வர விருப்பமுள்ளவர்களுக்கான நுழைவுச் சீட்டு இது.//
ப்ரவாஹம் – தலைப்புக்கேற்றவாறு உங்கள் எழுத்தும் இருக்கிறது ஜி! ரசித்தேன்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வெங்கட் தவறவிடாமைக்கும் வார்த்தைகளுக்கும்.

vasan சொன்னது…

சுந்த‌ர்ஜி, என்னே ஒரு தொடர் துய‌ர்!

உங்க‌ள் ப‌திவில் இதை இன்று தான்
பார்த்து கேட்டு நெக்குறுக‌ விதித்திருக்கிற‌து.
அந்த ஆளுமையும் அட‌க்க‌மும் வ‌சிக‌ர‌மும்
வ‌ணக்க‌த்துக்குரிய‌வை.

இழப்பை யாரிட‌ம் பகிர்வ‌து சுந்த‌ர்ஜி?
அன்னாரின் ம‌றைவுக்கு குறுங்செய்தி அனுப்பிய‌ பின்.
உங்க‌ளின் வ‌லைக்கு வ‌ந்து இந்த‌ ப‌திவு யாரைப்ப‌ற்றி
என‌த் தெரியாது திற‌ந்து பார்த்து விய‌ந்தது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...