29.10.13

ஒரு ரயில் நிலையம்.

கடந்த வாரத்தின் இறுதியில் மூன்று நாட்களை நானும், கோபாலியும் [தஞ்சாவூர்க்கவிராயர்] இருவருக்கும் பொதுவான, எங்களை யாருக்கும் தெரியாத ஓர் ஊரில் செலவிட்டோம். சென்னையிலிருந்து அவர் ரயிலில் வந்து சேரும் வரை இரண்டு மணி நேரம் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன்.

ஒரு பின்மதியச் சோர்வுடன் ரயில் நிலையம் களைத்திருந்தது. ஓர் இருக்கையில் சாய்ந்து இளைப்பாற நினைக்கையில், அவரிடமிருந்து ஒரு கவிதை.

கண்ணைச் சுருக்கிக்
கரை காண முயல்வோர்
உளர்.
படகில் லயித்துக்
கடலை அடைவோர்
சிலர்.

ஒரு கச்சேரிக்கு முந்தைய தம்புராவின் ஸ்ருதி கூட்டலாய் ரசித்தேன். அனேகமாக அவர் செங்கல்பட்டை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று யூகிக்க மேலே கண்ட கவிதை உதவியது. எனக்குள் சில வார்த்தைகளை அது கோர்க்கத் துவங்கியது.

நிலையங்கள்
எவ்வளவு அழகாய் இருப்பினும்
நிற்காமல் செல்கிறது
இந்த ரயில்
ஒரு துறவியைப் போல.

என்று அனுப்பினார் அடுத்த கவிதைத் துண்டை.

நான் பதில் சொன்னேன் -

துறவியைப் போல்
நிலையங்களை
ரயிலால் கடக்க முடிந்தாலும்
இது போன்ற கவிதைகளைக்
கடக்க முடிவதில்லை.

என்று.

சற்றைக்குப் பின் -

மலைகளை
நகர்த்தும் சக்தி
ரயிலுக்கு உண்டு என்பதைக்
குழந்தைகளே அறியும்

என்று மலையை என்னுள் நகர்த்தினார் ஓர் குழந்தையாக.

எந்த
மூட்டை முடிச்சுகளும் இன்றி,
பயணிக்கும்
ஆர்வமும் இன்றி
ஒரு ரயிலை
அலட்சியம் செய்யக்
குடும்பத்துடன் காத்திருக்கின்றன
குரங்குகள்

என்று எழுதத் துவங்கிய நான்-

====
சப்தம் கேட்டு அரக்கப் பறக்கத்
தயாராகும் பயணிகளை
ஏமாற்றியதை எண்ணிச்
சிரித்தபடிக் கடக்கிறது
வெறும் என்ஜின்.

====
காலம் காலமாய்
பயணிகளை ரயில் சுமக்க,
ரயிலைச் சுமக்கிறான்
கவிஞன்.

====
பலரின் உணர்வுகளைச்
சுமக்கிறது பயணிகள் ரயில்.
பலருக்கான உணவுகளைச்
சுமக்கிறது சரக்கு ரயில்.

====
நிலையத்தில்
ரயில் நிற்கும் வேளை
இன்னொரு கவிதை எழுத
முயற்சிக்காதே.

====
இடி மின்னலுடன்
பெருமழை போல நுழைந்து
கோயில் யானை போல் இளைப்பாறி
திருவிழா முடிந்த கிராமமாய்
மனதைச் சூறையாடி
தொலைவுக்குச் செல்கிறது ரயில்.

====
சிவப்புக்கு ஒரு ரயிலும்,
பச்சைக்கு ஒரு ரயிலும்
பணிகின்றன.
எந்த நிறத்தை நான் கொள்ள?

====
ஒரு காலி இருக்கையை
மட்டுமே
பயணி நிரப்புகிறான்.
நிலையத்தை
அதன் கொள்ளளவைக்
காட்டிலும்
அதிகமாய் நிரப்புகிறது ரயில்.

====
தண்டவாளத்துடன்
காத்திருக்கிறேன்.
விரைந்து
ரயிலுடன் வரவும்.

என்று முடித்த போது, கோபாலி 'சுந்தர்ஜி' என்று கூவியபடி ரயிலில் இருந்து இறங்க, இரண்டு மணி நேரம் எனக்குப் புகலளித்த ரயில் நிலையத்தை விட்டு வெளியேற மனமின்றி இருவரும் வெளியேறினோம்.

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயணத்தை ரசித்தேன்... இனிமை... வாழ்த்துக்கள்...

ரிஷபன் சொன்னது…

ரயில் பயணமே சுவாரசியம் அதிலும் கவிராயர்.. மற்றும் உங்கள் கவிதைகளுடன் கை கோர்த்தால் இன்னும் சுவாரசியம்..

நீள்கின்றன
தண்டவாளக் கைகள்
ஓடும் ரயிலைப் பிடிக்க !

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கரடி, யானை, ரயில் போன்றவற்றை பார்ப்பதே சுகம்..அதிலும் ரயிலைப் பார்ப்பது பரமசுகம்..அதிலும் ரயில் பற்றிய கவிதை பரமார்த்த சுகம்..அதிலும் கவிராயர் கவிதை என்பது பரமேஷ்டி சுகம் ....

G.M Balasubramaniam சொன்னது…

ரயில் பற்றிய கவிதைகளைப் படித்துக் கொண்டிருக்கும்போதெ எனக்கு N.S.கிருஷ்ணனின் எவ்வித பேதமுமின்றி எல்லோரையும் எற்றிச் செல்லும் ரயில் பாட்டு நினைவுக்கு வந்தது.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ரயிலைப்போலவே
ரயில் கவைதைகளும் ரசிக்கவைத்தன..!

vasan சொன்னது…

ரயிலில் பயணி சுருதி சேர்க்க
நிலைய வித்வான் காத்திருக்க
ஒரு காம்போதியாய், கருவாகிறது
இனியும் காத்திருப்போருக்கு போதியாய்...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...