12.10.13

சிப்பிக்குள் முத்து

















எங்கிருந்து, எப்போது எடுத்துக்கொண்ட குறிப்பென்று தெரியவில்லை. இன்றைக்கு  எதேச்சையாய்க் கண்ணில் பட்டுச் சிலிர்க்க வைத்தது. 

ஹைதராபாத் சென்று திரும்புகையில், ஒரு ரயில் பயணத்தின்போது முத்து வியாபாரி ஒருவருடன் நடந்த உரையாடலின் போது எடுக்கப்பட்ட குறிப்பாய் இருக்கலாம் என்று மங்கலாய் ஒரு நினைவு.


இந்தக் குறிப்புகளைத் தொடர்ந்து ஸ்ரீராஜ் ரூப் தன்க் [Shri Raj Roop Tank] எழுதிய " Indian Gemology" யை வாசிக்கும் போது இந்த வகைகள் அத்தனையும் தான் பார்த்திருப்பதாகவும், அவை அஜ்மீரில் உள்ள ஸ்ரீ தன்ரூப் மாலில் இருப்பதாகவும் படிக்கும்போது, நான் முதல் பத்தியில் உண்டான சிலிர்ப்பை மீண்டும் உணர்ந்தேன்.


மேக முக்தா / ஆகாஷ் முக்தா: (மேக முத்து/ ஆகாய முத்து)
ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் வரக் கூடிய பூசம் அல்லது திருவோணம் நட்சத்திரத்தில் பெய்யக்கூடிய மழையின் முதல் துளிகளோடு பூமியை அடையக் கூடியவை. 

மேகத்திலேயே உருவாகக் கூடிய இவை பளிச் மஞ்சளோ அல்லது வானக் கருப்புடன் கலந்த மஞ்சள் நிறத்துடனோ இருக்கும்.வடிவம் வட்டமாக இருக்கும் இவை, மின்னல் மின்னுவது போன்ற ஒளியை வெளியிடும். 


மேகத்திலிருந்து வீழும் வழியில் இவை கடவுளால் எடுத்துக் கொள்ளப்படும்.தனக்குப் பிரியமானவர்களைக் கடவுள் காண்கையில் அவற்றை பூமியைத் தொட அனுமதிப்பார். அந்த முத்து கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒருவரின் கையில் போய்ச்சேரும். அந்த முத்தை அடைந்தவர் வாழ்நாளில் பலமுறை பூமிக்கு அடியில் புதைந்திருக்கும் பொக்கிஷங்களை அடைவார் என்று நம்பப் படுகிறது.    

சர்ப் முக்தா/ சர்ப் மணி: (நாக முத்து / நாக மணி) 

ஸ்வாதி நட்சத்திரத்தன்று பெய்யும் மழையின் முதல் துளிகள் ராஜ நாகத்தின் வாயில் வீழும் போது உருவெடுக்கிறது. நூறாண்டுகள் வாழ்ந்த ராஜநாகத்தின் உடலில் மட்டுமே இந்த முத்து உருவெடுக்கும். இந்த முத்தை அடைந்த நாகம் தான் விரும்பிய உருவை எடுக்கமுடியும். 

அளவில் பெரிதாக, நீல நிறத்தில் ஒளிரும் இந்த முத்தை நாகம் தன் வாயில் ஒதுக்கி வைத்திருக்கும். இருளில் அதன் வெளிச்சத்தைக் கொண்டு இரை தேடவும், விளையாடவும் வெளியே உமிழும்.இந்த முத்தைப் பிரிந்தால் நாகம் இறந்து விடும்.இந்த முத்தை அடைந்தவர் வாழ்வில் செல்வம் மிகுந்து விரும்பியதை எல்லாம் அடைவர்.எதிர்மறையான ஆளுமையை இந்த முத்து முறியடிக்கும் என நம்புகின்றனர். 


பன்ஷ் முக்தா (மூங்கில் முத்து ):

ஸ்வாதி, பூசம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தன்று மூங்கிலுக்குள் வீழும் மழைத் துளியில் உருவெடுக்கும் இந்த முத்து பச்சை நிறத்துடன் கிரஹண நிலவின் வடிவத்தில் இருக்கும்.இந்த முத்தைத் துளைக்க முடியாததால் கழுத்தில் அணிய முடியாது.

இந்த முத்தைக் கொண்டிருக்கும் மூங்கிலின் உட்புறமாகக் காற்று ஊடுருவும்போது கீழ் ஸ்தாயியில் மந்திர உச்சாடனம் செய்யும் ஒலியை எழுப்பும். மிக அபூர்வமான இந்த முத்தை அடைந்தவர்  பேர்,புகழ்,சமூகத்தில் மரியாதை, நிம்மதி மற்றும் வளத்தை அடைவர்.   


ஷுகர் முக்தா: (பன்றி முத்து) 

பன்றியின் தலையில் உருவாகும் முத்து; உருவத்தில் மூங்கில் முத்தைப் போலப் பெரிதாகவும், வட்ட வடிவும், மஸ்டர்ட் மஞ்சள் நிறமும் கொண்டது.
முந்தைய மூன்று முத்துக்களைப் போல மிக அபூர்வமானது. 

இந்த முத்தை அடைந்தவர்கள் வாக்கு பலிதமும் (சொன்னது பலிக்கும்),ஸ்வர சித்தியும் (இசையில் மேதமையும்) அடைவர். சில ராகங்களை இவர்கள் பாடினால் மேகங்களை, மழையை, நெருப்பை உருவாக்க முடியும்.இந்த முத்தை கருத் தரித்த பெண்கள் அணிந்தால் மேன்மையான குணநலன்களோடு ஆண் குழந்தை பிறக்கும்.நினைவுத் திறன் அதிகரிக்கும். 


கஜ முக்தா ( ஆணி முத்து):

ஞாயிறு அல்லது திங்கள் கிழமைகளில் பூசம் அல்லது திருவோண நட்சத்திரங்களில் பிறக்கும் ஐராவத யானைகளின் மத்தகத்தில் உருவாகும் இந்த முத்துக்கள் நிலவின் பால் நிறத்தில் ஒரு பெரிய நெல்லிக்காயின் வடிவில் இருக்கும். சிப்பி முத்தை விட மங்கலான ஒளி கொண்டது. கண்களுக்கு இதம் கொடுக்கும் இந்த முத்தை அடைந்தவர் எந்தத் தடைகளையும்  கடப்பர். நிம்மதியும், வளமும் இதன் சிறப்பம்சங்கள்.

ஷன்க் முக்தா ( சங்கு முத்து ): 
ஓவல் வடிவத்தில் வடிவில் பெரிதாக இருக்கும் இவை சங்கினுள் காணப்படும். பழுப்பு, வெளிர் மஞ்சள், இள ஊதா நிறங்களில் இருக்கும். சமயங்களில் மூன்று வரி வடிவங்கள் இதன் உடலின் தென்படும்.இந்த முத்து, ஜெய்ப்பூரின் பெரிய முத்து வியாபாரி ஸ்ரீ.ராஜ் ரூப் டன்க்கின் சேகரத்தில் இருக்கிறது. இது வறுமையையும், பாவங்களையும் போக்கி வளத்தையும், நிம்மதியையும் தரும்.இந்த முத்தைத் துளைக்க முடியாது.  

மீன் முக்தா (மீன் முத்து):

மீனின் வயிற்றிலோ கருப்பையிலோ கிடைக்கும் இந்த முத்து உருவில் சிறியது; நிறத்தில் மஞ்சளில் தோய்ந்த வெண்மையில் காணப்படும் இந்த முத்து காச நோய் உட்பட பல நோய்களைப் போக்குகிறது. நீருக்கடியில் ஊடுருவிப் பார்க்கும் சக்தியைக் கொடுக்கிறது. 

ஷுக்தி முக்தா / ஸ்வாதி முக்தா (சிப்பி முத்து):

ஸ்வாதி நட்சத்திரத்தில் சிப்பிக்குள் வீழும் முதல் மழைத்துளியில் உருவாகும் இந்த முத்து, முத்துகளிலேயே சிறந்தது. 

இன்னொரு கவிதையாய் ஒரு தகவல் உபரியாய். ஸ்வாதி நட்சத்திரத்தின் முதல் மழைக்காய் நத்தைகள் தங்கள் வாயைத் திறந்து காத்திருக்குமாம். அப்படித் துளிகளைப் பருகிய நத்தையின் உள்ளும் முத்துக்கள் பிறக்கின்றன.

இன்னும் இது குறித்த தகவல்களத் தேடியபடி இருக்கிறேன்.

இதே போல அர்த்தசாஸ்திரத்தின் இரண்டாம் பாகத்தில் 11ம் அத்தியாயத்தில் முத்துக்கள் பற்றிய குறிப்பு இருக்கிறது.


தாம்ரபர்ணிகம் பாண்ட்யகவாடகம் பாஷிக்யம்

காலேயம் சௌர்ணேயம் ப்ராஹேந்திரம் கார்தமிகம்
ஸ்ரோதஸீயம் ஹ்ரதீயம் ஹைமவதம் ச மௌக்திகம்
ஷங்க: ஷுக்தி: ப்ரகீர்ணகம் ச யோநய:

[தாமிரபரணி நதியில் பிறந்தவை, மலய பர்வதத்தில் பிறந்தவை, பாட்னாவின் பாஷிகா நதியில் பிறந்தவை, சிங்களத் தீவில் மயூர கிராமத்தில் குலா நதியில் பிறந்தவை, கேரளாவின் சூர்ணீ நதியில் பிறந்தவை, மகேந்திர பர்வதத்துக்கு அருகிலுள்ள சமுத்திரத்தில் பிறந்தவை, பாரசீகத்தில் உள்ள கர்தம நதியில் பிறந்தவை, ஸ்ரோதசீ என்னும் நதியில் பிறந்தவை, ஸ்ரீகண்டம் என்னும் ஏரியில் பிறந்தவை, இமயத்தில் பிறந்தவை என்று முத்து பத்து இடங்களில் கிடைக்கும்.


சங்கு, முத்துச் சிப்பி, சில யானைகளின் மத்தகத்திலும் முத்துக்கள் பிறக்கும்.]

   
வானிலிருந்து நேரடியாகவோ, தாவரத்திலோ, விலங்குகளிலோ, குறிப்பிட்ட நாளில் வீழும் மழைத்துளியிலோ, அல்லது குறிப்பிட்ட நாளில் பிறக்கும் யானைகளிலோ, நதிகளிலோ, சமுத்திரங்களிலோ, ஏரிகளிலோ விலை மதிப்பற்ற முத்துக்களை அந்த ஈசனால் விளைவிக்க முடியுமானால், மனிதர்களில் மாணிக்கமாய் ஒவ்வொரு யுகங்களிலும் நம்மிடையே தோற்றுவிக்கும் மாமனிதர்களுக்கும் காரணம் இல்லாது போகுமோ?

5 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வியக்கவைக்கும் முத்தான தகவல்கள்..பாராட்டுக்கள்..!

'பரிவை' சே.குமார் சொன்னது…

முத்தான தகவல்கள்...
வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

சிப்பிக்குள் உருவாகும் முத்து பற்றியே ஓரளவு கேள்விப் பட்டிருக்கிறேன். இத்தனை வகைகளா.? காணக் கிடைக்கக் கூடியவையா இவை.?

vasan சொன்னது…

ஆணி முத்து வாங்கி வந்தேன் ...என்று கவியரசன்
ஒரு பாடல் அமைத்திருப்பார்.
என் தந்தை பெயர் 'முத்துக்கனி'
தாயாரின் பெயர்' முத்தம்மாள்'.
என் தந்தை பிரியமாக இருக்கும் போது
அம்மாவை 'முத்து'ன்னு அழைப்பதை
எத்தனை முறை வேண்டுமாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு அன்பு தழும்பும்.
எங்கள் வீட்டிற்கு "முத்துக்களின் முற்றம்"
என்றே பெயரிட ஆசை.
கடைசி பாராவில் மனிதர்கள் மீதான தங்களின்
நம்பிக்கையை விதைத்திருக்கிறீர்கள்.
இதுவரை முத்து சிப்பியில் மட்டுமே தோன்றும்
என்ற நம்பிக்கையிலும், நாக முத்து ஒரு இதிகாச நம்பிக்கை என்று மட்டுமே என்றிருந்த அறிவை
உயர்த்தி இருக்கிறீகள்.

Iniya சொன்னது…

சிப்பியில் முத்துக்கள் என்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன் இத்தனை முத்துக்களா. நாகரெத்தினக் கல்லென்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன் அதுவும் முத்து என்று இப்போ தான் அறிகிறேன். நல்ல பயனுள்ள பதிவு சுவாரஸ்யமாக இருந்தது. மிக்க நன்றி தொடருங்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...