30.11.10

ஆசான்

எழுபதுகளின் இறுதி வருடங்களில் என் ஒன்பதாவது, பத்தாவது வகுப்புகளின் தமிழ் ஆசிரியராக என்னை ஆசீர்வதித்த திரு.ஆரோக்கியசாமி ஐயா.

அவர் மாதிரித் தமிழாசிரியர்களைப் பார்ப்பதும், அவர் கற்றுத்தர தமிழ் கற்பதும் பெரும் பேறு. அல்லது முந்தையப் பிறவியில் என் புண்ணியம்.

கம்பராமாயணமும், பாஞ்சாலிசபதமும் அவர் வாயால் கேட்க மணக்கும்.

பகுபத உறுப்பிலக்கணம் அவர் நடத்தி அந்த வகுப்பில் புரியாத மாணவர்கள் இருக்க வாய்ப்பிலை.

ஒரு கணித வகுப்பின் சுவாரஸ்யம் தமிழ் வகுப்பில் பரவும் ஆச்சர்யமும் நிகழும்.

அசை, சீர், நேர் நேர்- தேமா, நிறை நேர்-புளிமா என்று தொடங்கி கூவிளம்,கருவிளம் தேமாங்கனி,புளிமாங்கனி என்று அந்த வாய்ப்பாடு, எப்போது தமிழ் இலக்கண வகுப்புத் துவங்கும் என்ற பரபரப்பை விதைக்கும்.

சீதாப்பிராட்டியாகவும், சகுந்தலையாகவும், திரௌபதியாகவும் பெண்கள் பாத்திரங்களில் அவர் புகுந்து வெளிப்படுவதைக் கண்ட என் கண்கள்தான் எத்தனை பேறு பெற்றவை?

என் எதிர்காலம் குறித்தும், என் நாளையக் கல்வி குறித்தும் திட்டமிடுதல் குறித்தும், என் மகனின் முதிர்ச்சி எனக்கு அப்போது இருந்திருக்குமானால் தமிழை நான் இன்னும் அதிகமாய் உணர்ந்திருக்கும் பேறு கிடைத்திருக்கும்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியனாய் நான் ஒரு நாளேனும் வாழவேண்டுமென்கிற என் இன்றை ஏக்கம் தீர்ந்திருக்கும்.

இரு ஆண்டுகள் மட்டுமே - மணிக்கணக்கில் அதிகம் போனால் எழுபத்து ஐந்து மணிநேரங்கள் மட்டுமே நிகழ்ந்த அவரின் உறவால், என்னால் தமிழில் சிந்திக்கவும், எழுதவும், பிழையின்றிப் பேசவும், விடாப்பிடியாய்த் தமிழைப் பிடித்துத் தொங்கவும் முடியுமானால் அவரின் ஆளுமை குறித்து நான் வகுப்பெடுக்கத் தேவையில்லை.

அவரைத் தேடிப் போய்ப் பார்த்து, அவரை ஆரத் தழுவி தமிழின் மேல் எனக்கு இத்தனை ஈடுபாடும் ஆனந்தமும் ஏற்படக்காரணமாயிருந்த போதிப்பின் பாதங்களில் வீழ்ந்து கிடக்க விரும்புகிறேன்.

நான் எழுதிய கவிதைகளைக் காட்டி அதில் திக்குமுக்காடி என்னை உச்சிமுகர விழைகிறேன்.

எனக்குத் தெரியும் எப்போதாவது இப்படி வருவாயென்று அலட்சியமும் பெருமையும் ததும்ப அவர் என்னைப் பார்க்கத் தாகம் கொள்கிறேன்.

இன்று அவரின் கீழ் அமர்ந்து ஒன்பதாம் வகுப்பு மாணாக்கனின் கூச்சங்களை உதறி மறுபடியும் அவரின் தமிழில் குளிக்க நினைக்கிறேன்.

வேப்பமரங்கள் சூழ, இரவின் மடியில் உறங்கிக் கொண்டிருக்கும் பாளையங்கோட்டை தூய யோவான் மேல்நிலைப்பள்ளிக்குள், என் வகுப்பறைக்குள் நுழைகிறேன்.

இன்று அவர் அங்கில்லை. என் தமிழில் நிறைந்து என்னை ஆசிர்வதித்துக் கொண்டிருக்கிறார்.

எனக்கு மீனைத் தராது, மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்த -
என்னைக் காலத்தின் கைகளில் பாறையாய் அல்லாது கூழாங்கல்லாய் மாற்றக் காரணமாயிருந்த -
அந்த மஹானுபாவனுக்காய் -

நான் பரவசம் தோய்ந்த கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறேன்.

7 கருத்துகள்:

சைக்கிள் சொன்னது…

மனம் தொடுவதாய் இருந்தது எழுத்து.. இது போல வேலை கிடைத்ததும் பார்க்க நினைத்த ஆசிரியர் இறந்து போன துயரம் எனக்கும் உண்டு.

நிலாமகள் சொன்னது…

அற்புதமான நினைவஞ்சலி! நெகிழ வைத்த எழுத்துகள். சில சமயம் சிலரை சந்தித்தால் பரவாயில்லை என்ற பேரவா எழும்போதே காலன் நம்மை முந்திக்கொண்டு அங்கு சென்று விடுவது பெருஞ்சோகம்.ஆரோக்கிய சாமி ஐயா உங்களுள் தமிழ் விதைத்த வகுப்பறை நோக்கி மானசீகமாய் வணங்கி நிற்கிறேன்...

ரிஷபன் சொன்னது…

நல்லாசிரியருக்கு என் அஞ்சலியும்.
சந்தோஷமாய் இருக்கிறது ஒரு விதத்தில்.. நல்ல விஷயங்களைப் பற்றி படிக்கவே முடியாதோ.. என்கிற குறை தீர்ந்தது.. கூடவே அகக்கண்ணும் திறந்தது.. நல்லவர்களை இருக்கும் போதே சிலாகிக்க வேணுமாய்..

vasan சொன்னது…

மாண‌க்க‌ன் த‌யாராகும் போது குரு கிடைக்கிறார்.
குரு தேடி மாணாக்க‌ன் கிடைப்ப‌தில்லை எனக் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.
அன்றைய குரு, மாணாக்க‌ர்க‌ளின் ப‌ர‌ந்த‌ உற‌வு ம‌காபார‌த்தைப் போல் எங்குமில்லை.
ஒரே குரு, ப‌ல‌ப்ப‌ல‌ வ‌கையாய் மாண‌வ‌ர்க‌ள். மானசீக‌மாய் க‌ற்ற‌வ‌னுக்கு
வ‌லக்கை பெருவிர‌ல் காணிக்கையாய் போன‌ துய‌ர‌ம். குருவின் தூக்க‌ம்
க‌லைய‌க் கூட‌தென‌ தொடை வ‌லி தாங்கிய‌‌வ‌னுக்கு, க‌ற்ற‌ வித்தை அகால‌த்தில் வில‌க‌ச் சாப‌ம் ப‌ரிசாய். க‌ற்பித்த‌வ‌னையே, த‌ரும‌ம் த‌வ‌றிக் கொன்ற‌ த‌ர்ம‌ன். இன்று ஆசிரிய‌ர்க‌ளில் ப‌ல‌ர் க‌ட‌மைக்காய், க‌ட‌னுக்காய், கூலிக்காய், குடுப‌த்திற்காய் தொழில் புரிகின்றன‌ர்.
உங்க‌ளின் தேட‌லுக்கு உக‌ந்த‌ குரு கிட்டியிருக்கிறார்.
"தீதும் ந‌ன்றும் பிற‌ர் செய்ய‌ வாரா

Vel Kannan சொன்னது…

குருவுக்கும் உங்களுக்கும் வந்தனம்

MANIAJITH007 சொன்னது…

நிச்சயமாக எனது ஆசிரியர்களை நினைக்கயில் இப்போது மிஞ்சுவது நினைவுகளும் கண்ணீரும்

ஹேமா சொன்னது…

குருவை நினைக்கும் மனிதிற்கே
என் வணக்கங்கள் !

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...