9.5.11

நூற்றாண்டுத் தூக்கம்



அதோ அந்த ஓவியத்தின்
சுமைதாங்கியில் முதுகு காட்டி
ஒருக்களித்துத் தூங்குகிறான்
என் நண்பன்.

மடக்கிய கையிலும்
கால் விரலின் இறுக்கத்திலும்
ததும்பிக் கசிகிறது
கனவுகளற்ற அவன் உறக்கம்.

அவன் சாப்பிட்டானா?
தாகத்துடன் உறங்குகிறானா?
குடும்பத்தைப் பிரிந்து
வெகு தொலைவு வந்துவிட்டானா?
அவன் கவலைகள் எந்த மாதிரி?
அவன் முதுகிலிருந்து
கண்டு கொள்ள முடியவில்லை
எதையும்.

ஆனாலும்
கனவுகளும் நம்பிக்கைகளும்
நிரம்பிய அவன் கூடையை
அது களவாடப்படாதிருக்க
எதனோடும் இணைத்துக் கட்டாது
ஆழ்ந்து உறங்குகிறான் அவன்.

சக மனிதர்கள் மேல்
அவன் நம்பிக்கை
அவன் உறக்கத்தைப் போல
அற்புதமானதாக இருக்கிறது.

நிச்சயம்
அவன் பல நூற்றாண்டுகளுக்கு
முந்தையவனாகத்தான் இருக்க வேண்டும்.
சக மனிதர்கள் பால்
அன்பையும் நம்பிக்கையையும்
விதைப்பதற்காக
அவன் உறக்கம் கலைத்து
மீண்டும் எழக்கூடும்
சில நூற்றாண்டுகள் தாண்டி.

(ஓவியர் திரு.சந்தானராஜின் ஓவியம் தஞ்சாவூர்க் கவிராயரின் இரண்டாவது இதழின் அட்டைப்படமாக வெளியானது. அந்த ஓவியம் கிளரச் செய்த கவிதை இது.) 

1 கருத்துரை:

சைக்கிள் said...
(ஓவியம் இணைக்கப்படவில்லை.தேவையும் இல்லை) 

கவிதை தீட்டுகிறது நம்பிக்கையின் சாயல்களை, எழுத்தின் சாயங்களால் வாழ்வை வம்புக்கிழுத்து.

இப்போது இணைக்கப்பட்டு விட்டது.

15 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

சக மனிதர்கள் மேல்
அவன் நம்பிக்கை
அவன்
உறக்கத்தைப் போல
அற்புதமானதாக
இருக்கிறது.

அவன் சீக்கிரமே எழுந்துவிட்டால் அவனுடன் வந்திருக்கும் நம்பிக்கைகளை பார்ப்பவர் மனதில் விதைத்துப் போகலாம்.. உங்கள் கவிதைகள் எப்போதும் செய்வது போல.

RVS சொன்னது…

மேலே மழையில் நனையும் அந்த இயற்கை காட்சி..
பார் கோடில் கடியாரம்...
நூற்றாண்டுக்கும் நிலைக்கும் ஒரு அற்புதமான கவிதை....
சபாஷ் ஜி!! ;-))

A.R.ராஜகோபாலன் சொன்னது…

உங்களின் இந்த கவி ஓவியம்
கண்கள் உணரும் எழுத்தோவியம்
உங்களின் எழுத்துக்கள் உங்களின் எண்ணங்களை மட்டுமல்ல
எழுத்துக்களின் வழியே வசீகர வண்ணங்களையும் வரிசைப்டுத்துகிறது

அந்த ஓவியத்தை பற்றிய உங்களின் எழுத்துக்களால்
அந்த ஓவியம் மனத்தால் ஓவியமாய் ஒருமுகப்படுத்தப்படுகிறது

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//அவன் சாப்பிட்டானா?
தாகத்துடன்
உறங்குகிறானா?
குடும்பத்தைப் பிரிந்து
வெகு தொலைவு
வந்துவிட்டானா?
அவன் கவலைகள்
எந்த மாதிரி?
அவன் முதுகிலிருந்து
கண்டு கொள்ள
முடியவில்லை
எதையும்.//

நானும் தினமும் பலபேர்களை ஆங்காங்கே எண்ணெய்காணாத பரட்டைத்தலையுடன், ஈ மொய்த்த உடம்புடன், ஏதோவொரு கிழிந்த அழுக்குத்துணியுடன் காண்கிறேன்.
யார் பெத்த பிள்ளையோ எனக் கண் கலங்குகிறேன்.

ஆனால் எனக்கு உங்களைப்போல நம்பிக்கையும் பிறக்கவில்லை, கவிதையும் பிறக்கவில்லை.

நம்பிக்கையுடன் கூடிய தங்கள் கவிதை வெகு அருமை. பாராட்டுக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

சில நூற்றாண்டுகள்தாண்டி அவன் எழக்கூடிய பட்சத்தில்நம்பிக்கை விதைக்கப்படலாம் என்பதும் நம்பிக்கையே. களைத்துப்போய் உறங்குபவன்கவலைகளற்று இருப்பது போல் தோன்றலாம். கால் விரல்கள் இறுக்கத்தில் இருப்பது, அவன் ஆழ்மனம் ரிலாக்ஸ்டாக, இல்லை என்பதைக் காட்டலாம். அவன் உறக்கம் என் சிந்தனைக்கு இப்படி தோன்றுகிறது. பார் கோட் போல் தோன்றுவதில் நேரம் மாத்திரம் சரியாக வருகிறது. தேதி, வருடம்...?

சுந்தர்ஜி சொன்னது…

பாலு சார் தேதி மாதம் வருடத்தை வலமிருந்து இடமாகப் பாருங்கள்.

சரியாக இருக்குதானே?

Vel Kannan சொன்னது…

//...
உறக்கம் கலைத்து
மீண்டும் எழக்கூடும்
சில நூற்றாண்டுகள்
தாண்டி.// எழுவான என்பதே எனக்கு சந்தேகம் தான்
(சரி, ஜி படம் எங்கே ? )

santhanakrishnan சொன்னது…

எல்லா நூற்றாண்டுகளிலும்
சக மனிதர்கள் பால்
அன்பையும்
நம்பிக்கையையும்
விதைத்தவர்களும்,
சக மனிதர்கள் மேல்
வெறுப்ப கக்கியவர்களும்,
அவநம்பிக்கையை
விதைத்தவர்களும்
இருந்து கொண்டுதானே
இருக்கிறார்கள்.
அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு
சுந்தர்ஜி?

சுந்தர்ஜி சொன்னது…

அது சரி. உங்க உரைநடையை நான் நேசிப்பது போல.

நன்றி ரிஷபன்.

சுந்தர்ஜி சொன்னது…

ரசனைக்கு நன்றி ராஜு.

சுந்தர்ஜி சொன்னது…

ஆதி முதல் அந்தம் வரை ரசிக்கும் ஆர்விஎஸ் போல வருமா?

நன்றி ஆர்விஎஸ்.

சுந்தர்ஜி சொன்னது…

கோணம் மாறுகையில் காட்சியும் மாறும்தானே பாலு சார்?

சுந்தர்ஜி சொன்னது…

//நானும் தினமும் பலபேர்களை ஆங்காங்கே எண்ணெய்காணாத பரட்டைத்தலையுடன், ஈ மொய்த்த உடம்புடன், ஏதோவொரு கிழிந்த அழுக்குத்துணியுடன் காண்கிறேன்.
யார் பெத்த பிள்ளையோ எனக் கண் கலங்குகிறேன்.//

இந்த ஈரம்தான் மனிதனைக் கலைஞனாக்குகிறது.

நெகிழ்ந்தேன் கோபு சார்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

அப்படி ஒரு மனிதனாய் எனக்குத் தோன்றியமையால், இவன் என்னால் பாராட்டப்படுகிறான் மது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

கண்ணா!ஓவியத்த சேத்துட்டோம்ப்பு.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...