9.10.12

கதிர்பாரதியின் ’என் தெய்வமே தேவதையே மோகினியே’

சமீபத்தில் என்னை அயர அடித்த அபாரமான கவிதை இது.

இந்த ஒரு வாரத்தில் திரும்பத் திரும்ப பலமுறை வாசித்து விட்டேன்.


ஒருவேளை நான் எழுதியிருக்கவேண்டிய கவிதையோ என்று பொறாமையுடன் என்னை மோகிக்க வைத்த கவிதை.


இந்த வருடத்தில் தொடர்ந்து பல அற்புதமான கவிதைகளை எழுதி வாசிப்பனுபவத்தைக் கிள்ர்ச்சியுர வைக்கும் கதிர்பாரதிக்கு என் அன்பு முத்தங்கள்.


கதிர்பாரதியின் வலைப்பூ: http://yavvanam.blogspot.in/2012/10/blog-post.html

என் தெய்வமே... தேவதையே... மோகினியே



என் மோகினிக்குப் பித்தவெடிப்புகள் மலர்ந்திருக்கின்றன

அதிலென் கனவினை இட்டு நிரப்புகிறேன்.

ஏனெனில் அவற்றிலிருந்து கவிதைகள் முளைக்கின்றன.

வழியும் மூன்றே மூன்று நரைமுடிகளில் 

பால் பௌர்ணமி இறங்கி வருகிறது

அதை வணங்கி ஆராதனை செய்கிறேன்.

ஏனெனில் அவற்றில் வெளிச்சம் பெறுகின்றன கண்கள்.



காற்றுக்கு அசையும் கூந்தல் கீற்றுகள் முன்
முழந்தாழிடுகிறேன்
அவைதாம் மனதை மேலெழும்பச் செய்கின்றன.


சரியும் சதையமுதங்களுக்கு என் இளமை சமர்ப்பணங்கள்
ஏனெனில் அவை குழந்தையாக்கி உறங்க வைக்கின்றன.


அவளருகே முத்தமாகிக் கிடந்த நான்
சுழன்றடிக்கும் அவள் வாசனையைப் பூசிக்கொண்டு
ருத்ரமூர்த்தியாக ஆடுகிறேன்.
என்னோடு சேர்ந்தாடுகிறது காதல்.


அவள் வதனத்தில் அரும்பியிருக்கும் பருவின் கூர்முனை ஏறி
உயிரைப் பலிபொருளாக்குகிறேன்.
அப்போது என் தெய்வமாகத் தரிசனமாகிறாள்.


என் தெய்வமே
என் தேவதையே
என் மோகினியே

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... அவர் தளத்திலும்...

நன்றி...

கதிர்பாரதி சொன்னது…

நன்றி சுந்தர்ஜி :)

ஆ.செல்லத்துரை. சொன்னது…

அற்புதமான கவிதை. தனித்துவமான மொழிநடை. லைலா ஒன்றும் பேரழகி இல்லையாம்..இது குறித்து யாரேனும் இளப்பமாக வினவினால் "நீங்கள் லைலாவை எனது கண்கொண்டு பர்க்கவேண்டும்".என்பானாம் மஜுனு. அதுபோலவே உருகிறார் கதிர்பாரதி.வழ்த்துக்கள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...