7.10.12

ஒரு கல்வெட்டும் சில பெருமூச்சுக்களும்.



சென்னைக்குப் பக்கத்தில் மறைமலைநகர். 
அதன் பக்கத்தில் நந்திவரம் நகராட்சி கடம்பூர் கிராமம். 
அதன் பக்கத்தில் ஒரு சிவன் கோவில். 
500 வருஷப் பழமை வாய்ந்த விஜய நகர மன்னர் காலத்துக் கல்வெட்டு. 
எப்படிப்பட்ட அமர்க்களமான விஷயம்? 

இந்தக் கோவில் கருவறையின் தெற்குச் சுவரில், விஜயநகர மன்னர் க்ருஷ்ண தேவராயரின் (கி.பி.1509-1530) கல்வெட்டு எழுதப்பட்டுள்ளது. எட்டு வரிகளில் ஆங்கீரஸ வருஷம் எழுதப்பட்ட இக்கல்வெட்டின் காலம், கி.பி. 1512. 

சரியாக 500 வருஷங்கள். 

ஊரின் பெயரைக் கடம்பூர் என்றும், இது நந்திபுரம் சீர்மையில் அமைந்த கிராமம் என்றும், சிவன் கோவிலை உடையார் கயிலாயமுடையார் கோவில் என்றும் குறிப்பிடுகிறது.

கடம்பூர் செல்லும் வழியில் இருக்கிறது நந்திபுரம். நந்திபுரம் என்ற பெயர், காஞ்சிபுரத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த, இரண்டாம் நந்திவர்மன் (732-796) அல்லது மூன்றாம் நந்திவர்மன் (846-869) என்ற பல்லவ மன்னர் காலத்தில் ஏற்பட்ட பெரிய வணிக நகரமாக இருந்திருக்கிறது. 

கடம்பூர் கீழத் தெருவில், மடவிளாகமும், நஞ்சைப் பற்றில் கோவிலைப் புதுப்பித்துக் கட்ட, 2,000 குழி நிலமும் இறையிலியாகக் கொடுக்கப்பட்டதை கல்வெட்டு சொல்கிறது. 


மடவிளாகம் என்பது கோவிலைச் சுற்றி, ப்ராமணர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் வசிப்பதற்கு உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதி. இந்நிலக் கொடையை, கிருஷ்ண தேவ மகாராயரின் வாசல் அதிகாரியாகப் பணியாற்றிய, நாகண்ண நாகம நாயக்கரின் தம்பி கொடுத்துள்ளார். 


கல்வெட்டின் கடைசிப்பகுதி உருத் தெரியாமல் சிதைந்துள்ளதால், நாகண்ண நாகம நாயக்கரின் தம்பியின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இவருக்கு, நாயக்கத்தானமாக நந்திவரம் சீர்மை, மன்னரால் கொடுக்கப்பட்ட பிரதேசம் என்பதையும் கல்வெட்டு சொல்கிறது. 


இது தவிர, நாகம நாயக்கர் மகன் லிங்கப்ப நாயக்கர், கொண்டம நாயக்கர், கப்பு நாயக்கர் ஆகியோருக்கும், இவர்களின் கோத்திரத்துக்கும் புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, இக்கோவிலில் ஐப்பசி, தை மாத அமாவாசை நாட்களிலும், சோமவாரத்திலும் பூஜை வழிபாடு நடத்த தேவதானமாக, நாட்டேரி புதுக்குளம் என்ற கிராமமும் கொடுக்கப்பட்டுள்ளது. 


கிராமத்தில், ஏற்கனவே ஒச்சிலமத்தான் எல்லய சோமாசியார் என்ற பிராமணருக்கும் நிலம் கொடுக்கப் பட்டிருந்தது. அந்த நிலம் நீங்கலாக, மீதியுள்ள நிலங்கள் இக்கோவில் பூஜை வழிபாட்டுக்குக் கொடுக்கப்பட்டது என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வாறு கொடுக்கப்பட்ட நிலங்களுக்கும், ஊருக்கும் கூடுதலாக வரி வசூலிக்கக் கூடாது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. 


கல்வெட்டின் இறுதிப்பகுதியில், ”இந்து தர்மத்துக்கு அகிதம் பண்ணினவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவர்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


சென்னை அருங்காட்சியகத்தில் உள்ள கற்பலகை ஒன்றில், எழுதப்பட்டுள்ள  கி.பி. 1531ம் ஆண்டு அச்சுதராயரின் கல்வெட்டு, கடம்பூருக்கு அருகில் உள்ள நந்திபுரம் பற்றிக் கூறுகிறது. 

நந்திபுரம் புதுப்பாக்கிழார் ஏகாம்பநாதர் என்பவர், மன்னருக்கு புண்ணியம் ஏற்பட வேண்டுமென்று வேண்டிக் கொண்டு, தீராவினை தீர்த்த தம்பிரானார் கோவில் திருப்பணிக்கு தண்டல் பற்றுச்சீர்மை, பச்சல் சீர்மை ஆகிய இரண்டு சீர்மைகளை, இறையிலியாகக் கொடுத்துள்ளார். 


இதிலிருந்து, நந்திவர்ம பல்லவர் காலம் முதல், விஜய நகர காலம் வரை, நந்திபுரம் ஒரு அரசியல், நிர்வாக முக்கியத்துவமிக்க ஊராக தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது என்று புரிந்துகொள்ள முடிகிறது. கடம்பூரின் அருகில் காயரம்பேடு என்ற கிராமம் உள்ளது. சோழர் காலத்தில், இவ்வூர் காசிரம்மேடு நாடு என்ற நாட்டுப்பிரிவின் தலைநகரமாக இருந்துள்ளது. 


கடம்பூர் சிவன் கோவிலில், பல்லவர் காலத்துப் பாணியில் வடிக்கப்பட்ட ஜேஷ்டா தேவியின் சிற்பம் இருப்பதைக் கொண்டு பல்லவர் காலத்திலேயே இவ்வூரும், கோவிலும் இருந்துள்ளது என்பது புலனாகிறது. 


காலங்கள் செல்ல அந்தக்கோவில் சிதிலமடைந்து போய், விஜயநகர மன்னர் க்ருஷ்ணதேவராயரின் காலத்தில் புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ளது. இப்போதுள்ள கோவில், கி.பி. 1512ல் கிருஷ்ணதேவராயரின் காலத்தில் புதுப்பித்து கட்டப்பட்டதாகும். 


கல்வெட்டுக்கள், சிற்பங்கள் போன்றவை அந்தத் திருப்பணியின் போது மறைந்திருக்கலாம் அல்லது அழிந்து போயிருக்கலாம். எஞ்சி இருப்பவை நந்திவரமாகி விட்ட நந்திபுரம் என்ற ஊரின் பெயரும், ஜேஷ்டா தேவியின் சிற்பமும், நமது புராதனத்தைப் பாதுகாக்கத் தெரியாது நாம் விடும் பெருமூச்சுக்களும்தான் .


(நன்றி- சென்னை அருங்காட்சியகம் மற்றும் பேராசிரியர்.தியாகராஜன், அரசு கலைக் கல்லூரி, அரியலூர்). 


(க்ருஷ்ணதேவ ராயரின் படத்தை கூகுளில் தேடினால் முதல் படம் சிரஞ்சீவியுடையதுதான். என்னத்தச் சொல்ல?)   

5 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


அந்த இடங்களுக்குச் சென்று கல்வெட்டுக்களைப் பார்த்தீர்களா.? படித்தீர்களா.?பல இடங்களில் கல்வெட்டில் எழுதி இருப்பது படிக்க முடிவதில்லை. எந்த மொழி என்று அறிவதே சிரமமாயிருக்கிறது சுந்தர்ஜி. தமிழ் எழுத்துக்கள் கூட வெகுவாக மாறி இருப்பது போல் தெரிகிறது. நம் காலத்திலேயே கொம்பு போட்ட லை காணாமல் போய்விட்டதே.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவலுக்கு நன்றி சார்... பேராசிரியர்.தியாகராஜன் அவர்களுக்கும்...

/// (க்ருஷ்ணதேவ ராயரின் படத்தை கூகுளில் தேடினால் முதல் படம் சிரஞ்சீவியுடையதுதான். என்னத்தச் சொல்ல?) ///

safe search வைத்துள்ளீர்கள்... நன்றி...

vasan சொன்னது…

பாலா சார், அர‌சிய‌லுக்காக‌ (பெரியார் பிரிய‌ர் என எம்ஜியார் காட்டிக்கொள்ள‌ விடுத‌லை இத‌ழ் த‌மிழாய், எழுத்து சீர்திருத்த‌ம் என்ற‌ பெய‌ரில்), "கொம்பை" சீவி எழுத்தை மொட்டையாக்கி விட்டார்க‌ள். யானை இப‌ப்டித்தான் "துதிக்கை தூக்காத‌" யானையாய் மாறிப் போன‌து.

சுந்த‌ர்ஜி, க‌ங்கைகரையில் காராம் ப‌சுவைக் கொன்ற‌ பாவ‌ம் இந்த‌ எழுத்து புர‌ட்சியாள‌ர்க‌ளுக்கு பொருந்துமா? அவ‌ர்க‌ள் க‌ட‌வுள்க‌ளையும் சாப‌த்தையும் ந‌ம்பாத‌வ‌ர்க‌ள் என்ப‌தால் இதை பொருட்ப‌டுத்த‌மாட்டார்க‌ள் தானே! 'பொருள்'ப‌டுத்த‌மாட்டார்க‌ள் என்று சொல்ல‌வில்லை!!

ரிஷபன் சொன்னது…

நந்திபுரத்து நாயகி சரித்திர நாவல் படித்தது ஞாபகம் வந்தது

நிலாமகள் சொன்னது…

என்ன‌த்த‌ச் சொல்ல‌?! எங்கிருந்தோம், எங்கே போகிறோம்...?!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...