5.10.12

கடவுளைத் தேடி- விவேகானந்தரின் அபூர்வமான கவிதை

விவேகானந்தரின் ஒட்டுமொத்த எழுத்துக்களையும் தொடர்ந்து வாசித்து வருகிறேன். கடந்த இரு நூற்றாண்டுகளில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் முதன்மையானர் விவேகானந்தர்.

அரசியல் தளத்தில் காந்தியும், ஆன்மீகத் தளத்தில் விவேகானந்தரும் நமக்குக் கிடைத்த பெருங்கொடைகள். மிகவும் துரதிர்ஷ்டவசமாக அவர்கள் விட்டுச் சென்ற சுவட்டை நாம் தவறவிட்டு, கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறோம்.  


போன வாரம் ராமக்ருஷ்ணா மிஷன் நூலகத்தில் புத்தகங்கள் வாங்கிய பின்னால், வீடு திரும்பி வாசிக்கும்போது, 1894 செப்டெம்பர் 4ம் தேதியிட்ட, பேராசிரியர் ஜே.ஹெச்.ரைட்டுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதை கண்ணில் பட்டது. மொத்தம் 35 கவிதைகள் எழுதியிருக்கும் விவேகானந்தரின் ஒவ்வொரு கவிதையும் ஒரு பாடல். ஒவ்வொரு பாடலும் ஒரு புதையல்.


துறவிக்கான பாடல் ஒன்றும் மிக எளிமையும் ஆழமும் கொண்டது. அது இன்னொரு பதிவில்.


சௌந்தரா கைலாசத்தின் அருமையான மொழிபெயர்ப்போடு உருவான கவிதை இது.


மலைமேலே பள்ளத்தே மாமலையின் தொடரினிலே

கலைநிறையும் கோயிலிலே கவின்பள்ளி வாசலிலே
கிறித்தவநற் சபையினிலே கீர்த்திமிகும் மறைகளிலே
சிறப்புயரும் பைபிளிலே சீரார் குரான் அதிலே

ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன்

இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப் போல்
யார்துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன்
பேரன்பே என் இறைவா பிறிதெங்கு சென்றாய் நீ?

எழுந்துவந்த எதிரொலியோ இயம்பியது சென்றதென

இரவினிலும் பகலினிலும் எத்தனையோ ஆண்டுகளாய்
அரியவொரு சுடர் என்றன் அறிவில் நிலவியது
எப்பொழுது பகல்மாறி இரவுற்றதென அறியேன்

செப்பமுள நூலறுந்து சிதைந்ததுபோல் இருந்ததுளம்

பொங்குமொளி வெய்யிலிலும் பொழியும் மழைதனிலும்
கங்கைக் கரையதனில் கால்நீட்டி நான்படுத்தேன்
எரிகின்ற கண்ணீரால் எழுந்த துகள் நானடக்கி

அழுதோலம் இட்டேன்யான் ஆர்ப்பரிக்கும் கங்கையுடன்

இருக்கும் நிலம் யாவும் எச்சமயக் கோட்பாடும்
உரைக்கும் பெயர்களினால் உனைக்கூவி நான்அழைத்தேன்
உயர்ந்தவர்கள் குறிக்கோளை உற்ற வழியதனைத்

தயவோடு நீ எனக்குச் சற்றே தெரியவுரை

என்றன் அலறலுக்கும் ஏங்கொலிக்கும் மத்தியிலே
நின்றொருவன் எனைக்கூவும் நிலைதெரியும் நாள்வரையில்
கணங்கள் யுகங்களெனக் காட்சிதர துன்பத்தின்

உணர்வு பெரிதலற ஓடியன பல்லாண்டு.

‘என் மகனே, என் மகனே’ என்றுமிக மேலான
மென்மைக்குரல் எழுந்து வேதனையை ஆற்றியது
என்றனுயிர் நரம்பெல்லாம் இணைந்திசைக்கும் இசையதனில்

நன்றுவரும் சிலிர்ப்பாக நற்காட்சி தந்தது

எந்த இடத்திலிருந்து எழுந்ததந்தக் குரல் என்று
கண்டுகொள முயன்று காலூன்றி நான் நின்றேன்
எனைச்சுற்றி என்முன்னே என்பின்னே அதைக்காண

முனைப்போடு நான் நோக்கி முயன்றுமிகத் தேடி நின்றேன்

மறுபடியும் மறுபடியும் மாண்புடைய குரலதுவோ
உரையாடி நின்றதுபோல் உளத்தினிலே தோன்றியது
ஆனந்த வெள்ளத்தில் ஆன்மா அமைதியுற்று

மோனப்பரவசத்தில் முற்றும் மயங்கியது

மின்னலொன்று ஆன்மாவில் மிக்கஒளி சேர்த்தது காண்
என்னிதய உள்ளுக்குள் எழிற்கதவம் திறந்ததுகாண்
இன்பமே பெருமகிழ்வே எதனைநான் காண்கின்றேன்

என் அன்பே என் அன்பே இங்கேதான் நீ உள்ளாய்

இங்கேயே உள்ளாய் நீ என் அன்பாய் எல்லாமாய்
உன்றனையான் தேடிநின்றேன் ஒருநாளும் இறவாமல்
நின்று நிலைத்திருந்த நேர்த்திப் பொருள்களிலே

பெருமிதத்தில் முடிபுனைந்து பெருமையுடன் இருந்தாய் நீ

அந்தநல்ல நாள் முதலாய் அலையும் இடங்கள் எலாம்
வந்தருகில் இறைநிற்கும் வண்ணத்தை நான் உணர்ந்தேன்
மேடதனில் பள்ளத்தில் மிக உயர்ந்த மலைமுகட்டில்

ஓடிவரும் கால்வாயில் உயரத்தில் வெகுதொலைவில்

என்றலையும் இடங்கள் எலாம் இறையருகில் நின்றிருந்தான்
வெண்மதியில் தண்ணொளியில் விண்மீனின் மின்னொளியில்
நண்பகலின் வளையத்தில் நாதன் ஒளிர்கின்றான்

அவன் அழகும் ஆற்றலதும் ஒளியின் ஒளி ஆனவையே

புவனஎழில் இயற்கையதில் பொங்குபெருங் கடலதனில்
மேன்மைமிகு காலைதனில் மெலிந்துருகும் மாலைதனில்
வான்பறவைத் தேனிசையில் வள்ளலினைக் கண்டுகொண்டேன்

பெருந்துயரம் பற்றிப் பிடிக்கையிலே என் இதயம்

வருந்தி மயக்கமுற்று வலிமை இழக்கிறது
என்றும் வளையாமல் இயங்கும் விதிமுறையால்
நன்றாய் எனையழுத்தி நசிக்கும் உலகியற்கை.

உன்னருகே நிற்கின்றேன் உன்னருகே நிற்கின்றேன்

என்னன்பே என்றெந்தன் காதுகளில் சொல்கின்றாய்
துயரந்தரு மரணங்கள் ஆயிரமாய் வந்தாலும்
உயிர்த்தலைவா அதையஞ்சேன் உன்துணையால் வென்றிடுவேன்

தாலாட்டித் தூங்கவைக்கும் தாயின் மடித்தலத்தின்

மேலாக நீ நின்று மென்குரலில் பேசுகிறாய்
துள்ளி விளையாடிச் சூதின்றி நகைசிந்தும்
பிள்ளைகளின் பக்கத்தில் பிரியமுடன் நிற்கின்றாய்

நட்பில் புனிதமிக்கோர் நற்கரங்கள் குலுக்குகையில்

கிட்டத்தில் இடையினிலே கேண்மையிறை நிற்கின்றான்
அன்னைதரும் முத்தத்தில் அமுதத்தைப் பொழிகின்றான்
சின்னவொரு மதலைக்குச் சீர்மைதரும் மாமனவன்.

மூத்தமுனிவருடன் முதல்வன் நீ சென்றுவிட்டாய்

பூத்துவரும் கோட்பாடு புறப்படுவதுன்னிடமே
மறைகளுடன் பைபிளதும் மாண்புடைய குரானும்
இறைவன் உனைத் தெளிவாக இசைத்து மகிழ்ந்திருக்கும்

விரைகின்ற வாழ்க்கை வியன்புனலில் ஈசன் நீ

நிறைந்தொளிரும் ஆன்மாவின் ஆன்மாவாய் நிற்கின்றாய்
உன்னவன்நான் உன்னவன்நான் உண்மையில்நீ என் இறைவன்
என் அன்பே இயம்புகின்றேன் ஓம் தத் ஸத் ஓம் தத் ஸத்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கிட்டத்தட்ட இதே அலைவரிசையில் நான் எழுதிய ஒரு பாட்டு. அப்பாதுரை எழுதிய ஒரு பதிவின் (http://moonramsuzhi.blogspot.in/2012/09/blog-post_21.html) பின்னூட்டத்துக்காய் இடம்பெற்றது. பாடுபொருள் ஒன்றாய் இருப்பதால் மட்டுமே இதை இங்கு மிகுந்த கூச்சத்துடன் வெளியிடுகிறேனே தவிர வேறெந்த ஒப்பீடும் கருதி அல்ல.இதில் இலக்கணப் பிழையும் இருக்கலாம். பொருளுக்காக அதைப் பொருட்படுத்தாமல் பொறுத்தருளுங்கள்.

கடலுக்குள் உப்புண்டு பாப்பா - இதைக்
கருத்தில் நீகொள்ள வேணும் பாப்பா!
உடலுக்குள் உயிரது போலே - இதை
ஒரு நாளும் மறவாதே பாப்பா!


பாலுக்குள் நெய்யுண்டு பாப்பா - அதைப்
பக்குவமாய்ப் பெற்றிடலாம் பாப்பா!
நாலுக்குள் இரண்டதனைப் போலே
அது நாசூக்காய் நின்றிருக்கும் பாப்பா!


விதைக்குள்ளே வீற்றிருக்கும் வனமாய்
துளிக்குள் மறைந்திருக்கும் கடலாய்
கதைக்குள் நிறைந்திருக்கும் கருவாய்
மறைபொருள் தேடியெடு பாப்பா!

தோற்றமது உண்மையில்லை பாப்பா!
மனமாற்றமது சொல்லித்தரும் பாப்பா!
போற்றினாலும் தூற்றினாலும் பாப்பா!
பணிந்துசாலப் பகுத்தறிவாய் பாப்பா!

தாய்க்குள் தெய்வந்தன்னைக் கண்டால்
வேறேது தெய்வம் வேணும் பாப்பா!
நோய் துரத்தும் மருந்து தெய்வம்
சேய் உதிர்க்கும் மழலை தெய்வம்!

பசி விரட்டும் கைகளுக்குப் பின்னே
பதுங்கி நிற்கும் மனமே தெய்வம்!
நிசிக்கொதுங்க இடம்தேடும் நாய்க்கும்
குடை பிடிக்கும் தயவே தெய்வம்!

ஓடும் ரயிலில் உருகும் பாடலின் 
ஏழ்மை விரட்டும் அரசே தெய்வம்!
நாடெங்கும் நாறும் ஊழல் பாம்பின்
பல்லுதிர்க்கும் அரசின் ஆண்மை தெய்வம்!

போதிமரத்தடி போதனை தெய்வம்!
பொறாமை எரிக்கும் அக்னி தெய்வம்!
நீதி புகட்டும் சாஸ்திரம் தெய்வம்!
பயிர்கள் காக்கும் மழையும் தெய்வம்!

தோண்டியும் மூடியும் இடித்தும் உடைத்தும்
பொறுத்துச் சகிக்கும் பூமியும் தெய்வம்!
வேண்டாது பாயும் சாக்கடை சகதியும் 
சிரித்து ஏற்கும் கடல்நீர் தெய்வம்! 

காலுக்கே இடமற்ற பஸ்ஸின் நெருக்கடியில்
சூல்கொண்டு இடமளிக்கும் பரிவே தெய்வம்!
பால்கறவாப் பசுவின் கனக்கும் மடிபோலே
நாலு போகமீட்டும் பசும்வயலும் தெய்வம்!

காட்டில் இல்லை மலையில் இல்லை
ஏட்டில் இல்லை சிலையில் இல்லை - 
நாட்டில் இல்லை இல்லை எனும் 
பாட்டுப் பாடும் பாடல் தெய்வம்.

எல்லாம் எல்லாம் அறிந்துகொள் பாப்பா!
ஏற்காது போனால் வெளித்தள்ளும் குடலாய்
நல்லதும் அல்லதும் பிரிக்கும் அன்னமாய்
வாழ்ந்தால் தெய்வம் நீயே பாப்பா!

7 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…


எங்கெங்கு காணினும் சக்தியடா......!

மீனாக்ஷி சொன்னது…

சௌந்திரா அவர்களின் மொழி பெயர்ப்பு அருமை.
//அவன் அழகும் ஆற்றலதும் ஒளியின் ஒளி ஆனவையே
புவனஎழில் இயற்கையதில் பொங்குபெருங் கடலதனில்
மேன்மைமிகு காலைதனில் மெலிந்துருகும் மாலைதனில்
வான்பறவைத் தேனிசையில் வள்ளலினைக் கண்டுகொண்டேன்//

படிக்கவே இனிமையாய் இருக்கிறது.

இரண்டு கவிதைகளுமே பிரமாதம். மூன்றாம் சுழியிலே உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன். இப்பொழுது மீண்டும் ரசித்து படித்தேன்.

சக்தி சொன்னது…


எழுந்துவந்த எதிரொலியோ இயம்பியது சென்றதென
இரவினிலும் பகலினிலும் எத்தனையோ ஆண்டுகளாய்
அரியவொரு சுடர் என்றன் அறிவில் நிலவியது
எப்பொழுது பகல்மாறி இரவுற்றதென அறியேன்

சக்தி சொன்னது…

ங்கள் வாசகர்களுக்கு உங்கள் மனப்போக்கு தெரியுமே சுந்தர்ஜி
எதற்கு அருமையான கவிதைக்கு ஒரு முன்குறிப்பு

அப்பாதுரை சொன்னது…

பின்னூட்டத்தை விட இங்கே சிறப்பாகத் தோன்றுகிறது.
விவேகானந்தரின் கவிதையை விட உங்கள் கவிதை எளிமையாகவும் பரந்த வீச்சாகவும் இருக்கிறது. அவர் எழுதியது ஆங்கிலத்திலா?

நிலாமகள் சொன்னது…

அறிந்'தேன்'!

சுந்தர்ஜி சொன்னது…

ஆமாம் அப்பாதுரை.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...