30.4.13

அகமும், புறமும் - I


சொன்னபடி “பஜகோவிந்தம்” முதலில்.

எம்.எஸ்.சுப்பலக்ஷ்மியின் குரலில் பிரபலமான பாடல் இது என்று ஆயிரத்தில் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றி ஒன்பது பேருக்குத் தெரியும். ஆனால் எம்.எஸ். பாடியிருப்பது மொத்தம் 32ல் 10 ச்லோகங்கள் மட்டுமே. 

இதை இயற்றியது ஆயிரத்து இருநூறு வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதிசங்கரர் என்றும், கேட்பதற்கு அத்தனை இனிமையான தேனில் குழைத்த பாடலின் பொருள் இத்தனை ஆழமானதும், வாழ்க்கையின் சாரத்தைப் புட்டுப்புட்டு வைக்கும் வெளிப்படையான தன்மை கொண்டதும் என்பதும் அதே ஆயிரத்தில் ஒருவருக்குத் தெரியாதிருக்கலாம்.

பஜகோவிந்தத்தின் கட்டமைப்பு இருபாகங்களாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரரால் இயர்றப்பட்டவை த்வாதசமஞ்சரி என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இதில் 12 ச்லோகங்கள் அமைந்திருக்கின்றன.

இதற்கடுத்த பகுதி சர்ப்படபஞ்சரிகா என அழைக்கப்படுகிறது. இது அவரின் சீடர்களால் இந்தப் பகுதி இயற்றப்பட்டிருக்கிறது. பத்மபாதர் ஒன்றும், தோடகாசார்யர் ஒன்றும், ஹஸ்தாமலகர் ஒன்றும், ஸுபோதர் ஒன்றும், வார்த்திககாரர் ஒன்றும், நித்யானந்தர் ஒன்றும், ஆனந்தகிரி ஒன்றும், த்ருடபக்தர் ஒன்றும், நித்யநாதர் ஒன்றும், யோகானந்தர் ஒன்றும், சுரேந்திரர் ஒன்றும், மேதாதிதி இரண்டும், பாரதீ வம்சர் ஒன்றும், ஸுமதி ஆறும் என மொத்தம் 20 ச்லோகங்கள் அமைந்திருக்கின்றன.

ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்ன மாலா, விவேக சூடாமணி இவற்றையெல்லாம் விட எளியாமையானதும், கடல் போல ஆழமுடையதும் இந்த பஜகோவிந்தம் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஓஷோ அவரைக் கவர்ந்த 169 புத்தகங்களில் 32 ஸ்லோகங்கள் மட்டுமே கொண்ட பஜகோவிந்தத்துக்கு ஓரிடம் கொடுத்திருக்கிறார்.

இது என்னுடைய மொழிபெயர்ப்பில். முப்பத்தொன்றையும் ஒன்றாகப் பதிவிட்டால் கண்டுகொள்ள மாட்டார்களோ என்ற பீதி எனக்கு உண்டானதால் மூன்று பகுதிகளாகப் பிரித்திருக்கிறேன்.

இனி பஜ கோவிந்தத்துக்குப் போய்விடலாம்.

பஜகோவிந்தம்
=============
1. ஏ மூட மனமே! கோவிந்தனைத் துதிப்பாயாக. அந்திமப்பொழுது நெருங்கும்போது இலக்கணத்தை ஒப்பிப்பது உன்னைக் காவாது.

2. ஏ மூட மனமே! செல்வத்தைச் சேர்க்கும் பேராசையை விட்டுவிடு. இச்சையற்ற மனதுடன் இரு. உன் உழைப்பினால் கிடைத்தவற்றில் நிறைவு கொள்.

3. யுவதியின் தோற்றம், மார்பு, நாபி இவையெல்லாம் கண்டு மோகாவேசம் கொள்ளாதே. அவை வெறும் மாமிசத்தின் திரிபுகளே.

4. தாமரை இலை மேல் நீர் போன்றது வாழ்க்கை. சபலமும் நிலையாமையும் உடையது. அகங்காரத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்பட்டது. இதைப் புரிந்து கொள்.

5. சம்பாதிக்கும் வரைதான் உன் குடும்பம் அன்பு காட்டும். உன் முதுமையில் உன்னிடம் பேசக்கூட மாட்டார்கள்.

6. உடலில் மூச்சுள்ள வரை உறவும் சுற்றமும் நலம் விசாரிக்கும். நீ சவமாகி விட்டால் உன் உடலைக் கண்டு உன் மனைவி கூட பயப்படுவாள்.

7. செல்வம் அர்த்தமற்றது. அதில் துளியும் சுகமில்லை. செல்வந்தர்களுக்குத் தன் பிள்ளைகளிடம் கூட அச்சம் உண்டாகிறது. இதுவே உலக இயல்பு.

8. குழந்தைப் பிராயத்தில் விளையாட்டிலும், வாலிபப் பிராயத்தில் பெண்களிடமும், கிழப் பருவத்தில் கவலைகளிலும் மட்டுமே பற்று உண்டாகிறது. ப்ரும்மத்திடம் பற்றுக் கொண்டவர் எவருமில்லை.

9. மனைவி யார்? மகன் யார்? இந்த வாழ்க்கை விசித்ரமானது. நீ யார்? எங்கிருந்து வந்தாய்? இந்தத் தத்துவங்களை சிந்தனை செய்.

10. நல்லவர்கள் உறவால் பற்றின்மை உண்டாகும். பற்றின்மையினால் மதிமயக்கம் விலகும். மதிமயக்கம் விலக மாறாத உண்மை விளங்கும். மாறாத உண்மை விளங்க ஆன்ம முக்தி உண்டாகும்.


(தொடரும்)
____________

புறநானூறு:

முதலில் 255வது பாடல் கண்ணீர் வரவழைத்தது. இந்தப் பாடல் போரில் உயிர் நீத்த தன் கணவனைக் கண்ட பெண்ணொருத்தி பாடுவதாக அமைகிறது.

பாடியவர்: நெடுங்களத்துப் பரணர். (நெடுங்களம் திருச்சி அருகே உள்ளது)

ஐயோ எனின்யான் 
புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே 
அகன்மார்பு எடுக்கவல்லேன்
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடத்தி சின்சிறிதே!

ஐயோ!
என்று கதறினால்
புலி வந்து விடுமோ
என அஞ்சுகிறேன்.
அகன்ற மார்பை
உடையவனாதலால்
உன்னைச் சுமக்கவும்
என்னால் இயலாது.
உன்னைக் கொன்ற எமனும்
என்னைப் போல் ஒருநாள்
அனுபவித்து நடுங்கட்டும்.
என் வளைக்கரம் பிடித்து
நீ எழ மாட்டாயா?
மெதுவாய் நடந்து
அந்த மலை நிழலை அடையலாம்.

அடுத்தது பாடல் 276.

இந்தப் பாடலை எழுதியவர் மதுரைப் பூதன் இளநாகனார்.

இந்தப் பாடலை இதில் வரும் பால் தயிராகும் உவமைக்காக முதலில் தேர்வு செய்தேன். ரசியுங்கள்.

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலம் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்உறைப் போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே!  

வாசமற்ற 
தைலம் துறந்த
நரைத்த கூந்தல்.
இரவமர விதை போலச்
சுருங்கித் தொங்கும்
வறண்ட மார்பு.
முதியவள் பெற்ற அன்புமகன்
-ஒரு இளம் ஆய்ச்சி
தன் சிறுவிரல் நகநுனியால்
தெறித்த ஒரு துளிமோர்
குடப் பாலையும்
தயிராக்கி விடுவதைப் போல-
எதிரிப் படையின் கூட்டத்துக்கு
நோயாய் மாறினான்.

எழுதும் ஆசுவாசம் இன்னும் கிட்டவில்லை. இதை கிடைத்த ஒரு அரைமணி நேர இடைவெளியில் எழுதினேன்.

ஆலாபனை பின்னால் தொடரும்.

7 கருத்துகள்:

bandhu சொன்னது…

பஜகோவிந்தம் பிரமிக்க வைக்கிறது. எவ்வளவு தெரியாமல் இருக்கிறோம் என்று நினைத்தால் ஆயாசமாக இருக்கிறது!

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுந்தரா! அஞ்ஞாத வாசம் முடிந்து மீண்டும் நான். ஐந்து மாத இடுகைகளை ஒரு மூச்சில் படித்தேன்.. இப்போது கருத்து சொல்வது இயலாத ஒரு குற்ற உணர்வில்..நேரில் பார்த்தும் பலவும் பேசிக்கொள்ள வில்லை நாம்.. விட்ட இடத்திலிருந்து தொடருவோம்..

கோவை2தில்லி சொன்னது…

பஜ கோவிந்தத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களும், புறநானூறு பாடல்களும் அருமை.

சரியான அர்த்தத்தை தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி.

நிலாமகள் சொன்னது…

வடமொழிச் சுலோகங்கள் அனைத்தையும் தமிழ்ப் படுத்திப் பார்த்தால் மிரட்சி போய் மகிழ்ச்சி நிலைக்கிறது.

முன் உங்க தயவில் ருத்ரம். இப்போது பஜகோவிந்தம். சேமித்துக் கொண்டேன். நன்றி.

புறநாநூற்று எளிமையாக்கம் அழகு.

பாலா சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது.

மனதைப் பிழிகிறது முதல் கவிதை.

இரா.முருகன் சொன்னது…

நன்றி சுந்தர்ஜி. மிக நன்றாக உள்ளது. நீங்கள் பூரண உடல் நலம் பெற அம்பலப்புழை பகவான் கிருஷ்ணனை பிரார்த்திக்கிறேன்.

சித்தன் பிரஸாத் சொன்னது…

தேர்ந்த ரசனைக்குரிய சிறப்பான முயற்சி. தொடரட்டும் சுந்தர்ஜி! வாழ்த்துகள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...