6.12.13

”அகம் விரும்புதே புறம்” - 1

பாடல் - 255.
=============
போரில் இறந்து கிடக்கிறான் கணவன். போரில் உயிர் நீத்த தன் கணவனைக் கண்டு புலம்புகிறாள் பெண்ணொருத்தி. அவன் இறந்த பின்னும் மரணத்தை ஏற்காது அவனுடன் அவள் உரையாடும் இந்த 255ஆவது பாடல் கண்களைக் கசிய வைக்கிறது. மனதை அசைத்து நெகிழ்த்துகிறது.

எழுதியவர்: நெடுங்களத்துப் பரணர். (நெடுங்களம் தற்போதைய திருச்சி அருகே உள்ளது)

ஐயோ எனின்யான்
புலி அஞ்சுவலே
அணைத்தனன் கொளினே
அகன்மார்பு எடுக்கவல்லேன்
என்போல் பெருவிதிர்ப்பு உறுக நின்னை
இன்னாது உற்ற அறனில் கூற்றே
நிரைவளை முன்கை பற்றி
வரைநிழல் சேர்கம் நடத்தி சின்சிறிதே!

என் கவிதை :
===========
ஐயோ!
என்று கதறினால்
புலி வந்து விடுமோ
என அஞ்சுகிறேன்.
அகன்ற மார்பை
உடையவனாதலால்
உன்னைச் சுமக்கவும்
என்னால் இயலாது.
உன்னைக் கொன்ற எமனும்
என்னைப் போல் ஒருநாள்
அனுபவித்து நடுங்கட்டும்.
என் வளைக்கரம் பிடித்து
நீ எழ மாட்டாயா?
மெதுவாய் நடந்து
அந்த மலை நிழலை அடையலாம்.

வெண்பா: [திரு.க்ரேஸி மோகன்]
==========================
அய்யோ எனநான் அழுதால் புலிவரும்உம்
மெய்யோ சுமக்க முடியாது -அய்யோவின்
கற்புக்(கு) அரசன் கதறட்டும் என்போல்
வெற்பு நிழல்போவோம் வா.


புறநானூற்றுப் பாடல் 276.
=====================

இந்தப் பாடலை எழுதியவர் மதுரைப் பூதன் இளநாகனார்.

இந்தப் பாடலில் பால் தயிராகும் உவமை, ஒரு வீரனின் வீரத்துக்காகப் பொருத்தப்பட்டமை அபாரம்.

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலம் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
குடப்பால் சில்உறைப் போலப்
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே!

என் கவிதை:
============
வாசமற்ற
தைலம் துறந்த
நரைத்த கூந்தல்.
இரவமர விதை போலச்
சுருங்கித் தொங்கும்
வறண்ட மார்பு.
முதியவள் பெற்ற அன்புமகன்
-ஒரு இளம் ஆய்ச்சி
தன் சிறுவிரல் நகநுனியால்
அலட்சியமாய்த்
தெறித்த ஒரு துளிமோர்
குடப் பாலையும்
தயிராய் உறைத்திடுதல் போல-
பகைவர் கூட்டத்தை
அச்சமெனும்
நோயால் உறைய வைத்தான்.

வெண்பா [ க்ரேஸி மோகன்]
=======================
வாசமற்ற கூந்தல் வறண்ட முலையுற்ற
பாசமுற்றோள் பிள்ளை படையெதிரி-நாசமுற
நோயானான் ,ஆய்ச்சி நகவிரல் மோர்துளியால்
தோயவைத்த பால்தயிரொத் து.

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...