11.12.13

பாரதி சில சிந்தனைகள்

பாரதி பிறந்து 131 ஆண்டுகளும், இறந்து 92 ஆண்டுகளும் ஆகின்றன. இன்று வரை அவருடைய எழுத்துகள் முழுமையாய்ப் படிக்கப்படவுமில்லை. கடைப்பிடிக்கப்படவுமில்லை. 

அவருடைய அடித்து நைந்து போன கவிதை வரிகளுக்கப்பால் அவரை விசாலமாகப் படித்தவர்களை - அவரை ஒரு சிறுகதாசிரியராக, கட்டுரையாளராக, யோகியாக, மொழிபெயர்ப்பாளராக, பத்திரிகையாசிரியராக, தேசியவாதியாக அவரின் பன்முகங்களையும் உணர்ந்தவர்களையும் - விரல் விட்டு எண்ணி விடலாம். இது என் அனுபவம். 

சிமிழுக்குள் அடங்கும் அடிமையில்லை அவன். காற்றாய், கதிரவனாய், நீராய், நிழலாய் ஊடுருவி நிற்கும் சர்வ வியாபி அவன்.

சிலைக்குக் கடனே என்று மாலையிடுபவர்களுக்கும், அந்தச் சிலையின் மீது எச்சமிடும் காக்கைகளுக்கும், குளிரூட்டப்பட்ட அறைகளில் பாரதியின் வரிகளை ஜீவன் இல்லாமல் ஒப்பிப்பவர்களுக்கும், சொல் ஒன்று; செயல் ஒன்று என்று வாழ்பவர்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. அவர்கள் பாரதியை அறிய மாட்டார்கள்.

***********

[செல்லம்மா பாரதியார் - “பாரதியார் சரித்திரம்”.]
=========================================

”சுதேசமித்திர”னில் சேர்ந்ததும் நுனி நாக்கினால் பேசுபவர்கள், பொய் வேஷக்காரர்கள் முதலியவர்களைத் தாக்கியும், தேச கைங்கர்யம் செய்யும் உண்மைத் தியாகிகளைப் பூஷித்தும், அவர்களுக்கு உற்சாகமூட்டியும் கவிகள் புனைந்தார்.

நாட்டின் வறுமை அவருடைய உள்ளத்தில் கொதிப்பை உண்டாக்கிற்று. தமிழர்கள் கல்வியறிவு இல்லாமல், “அ” எழுதச் சொன்னால் தும்பிக்கை யொன்று வரைந்து யானை போடக்கூடிய நிலையிலிருப்பதை நினைத்து வருந்தி அவர்களை இடித்துக் கூறி அறிவு பெறக்கூடிய அனேக பாடல்களும், கட்டுரைகளும் எழுதிக் குவித்தார்.

*******

சில சமயம் அரிசி இராது. பாரதியார் மாடியில் பத்துப் பேர்கள் சிஷ்யர்களோடு, “பூணூல் வேண்டுமா? வேண்டாமா?” என்று வாதம் செய்து கொண்டிருப்பார். ‘யாகம்’ செய்யும் கருத்து என்ன? என்ற சர்ச்சை பலமாக நடக்கும்.

ஹோட்டல் சாப்பாடு சாப்பிட மாட்டார். கையில் 4 அணா இருந்தால் வாழைப்பழம் வாங்கி வந்து எல்லோரும் பசியாறுவது வழக்கம். பால்காரி கடனாகப் பால் விடுவாள். அந்தப் பாலைக் குடித்து விட்டுச் சும்மா இருப்போம். இப்படியும் சில நாட்கள் கழிந்ததுண்டு.

“ அரிசி இல்லையென்று சொல்லாதே.’அகரம் இகரம்’ என்று சொல்லு” என்று சொல்லுவார். “ இல்லையென்ற கொடுமை உலகில் இல்லையாக வைப்பேன்” என்ற வார்த்தை அவரது புன்பட்ட ஹிருதயம் கொதித்துப் புறப்பட்டதாகும்.

**********

’புதியதில் ஆசை; நைந்ததில் வெறுப்பு; பேசும்போது கிளி போலக் கொஞ்ச வேண்டும்; கர்ண கடூரமாகப் பேசுவது கூடாது; பேச்சே ஒரு சங்கீதம் போல அமைய வேண்டும்” என்பது பாரதியாரின் தனிப் போக்குகள்.

*********

பெண்கள் யாருக்கும் அஞ்சித் தலையைக் கவிழக் கூடாது. “ யாரேனும் விடர்கள் கெட்ட ஹிருதயத்தோடு உன்னை நோக்கினால், நீ அவனைத் தைரியமாகப் பத்து நிமிஷம் உற்றுப்பார். அவன் வெட்கித் தலை குனிந்து விடுவான். அல்லது அவன் முகத்தில் திடீரென்று உமிழ்ந்து விட்டு அப்பால் செல்” என்று குழந்தைகளுக்கு உபதேசம் செய்வார்.

*********

”கல்யாண பந்தம் செய்து கொள்வது எளிது; ஆனால் அதை அறுக்க இருபது யானைகள் வந்தாலும் முடியாது”

*********

அப்போதுதான் உலக மகாயுத்தமும் முடிவடைந்த சமயம். புஸ்தகங்கள் அச்சிட்டு வெளியிடுவதற்கான முயற்சிகள் கூடப் பலிக்கவில்லை. பொருளாதார நிலை ஒரு காரணம். மற்றொன்று ‘கலையுணர்ச்சி’ நாட்டில் சிறிதளவேனும் இல்லாதது. மூன்றாவது மக்களைப் பிடித்திருந்த ஆங்கிலக் கல்வி மோகம்.

**********

ஏழைக் குடியானவச் சிறுவர்கள் தினந்தோறும் அதிகாலையில் வந்து வேப்பம்பழம் பொறுக்கிக் கொண்டும், அடுப்பெரிக்கப் புளிய இலைச்சருகுகள் அரித்துக்கொண்டும் செல்லுவார்கள்.

ஒருநாள் பாரதியார் அவர்களிடன் சென்று,”சிறுவர்களே! எதற்காக வேப்பம்பழம் பொறுக்குகிறீர்கள்?” என்றார்.

“சாமி! வயிற்றுக்கில்லாததால் வேப்பம்பழத்தைத் தின்கிறோம்” என்றார்கள். அவர்களுடன் தாமும் சேர்ந்து வேப்பங்காயையும், புளியங்காயையும் பறித்துத் தின்றார்.

“பகவானது சிருஷ்டிப் பொருள்கள் யாவும் அமிர்தம் நிறைந்தவை. ‘வேப்பங்காய் கசக்கும்’ என்று மனத்தில் எண்ணுவதனால்தான் கசக்கின்றது. ‘அமிர்தம்’என்று நினைத்தால் தித்திக்கின்றது’ என்று சொல்லி, அன்று முதல் நாவின்பத்தைத் துறந்தார்.

சின்ன வயதில் நெய் சற்று நாற்றமடித்தாலும் அவர் பாத்திரத்தோடு எடுத்துச் சாக்கடையில் ஊற்றி விடுவார். அதிருசியான உணவும், நேர்த்தியான புதிய புதிய ஆடையும் வேண்டுபவரான பாரதியார், மனத்துறவு ஏற்பட்டு ஹரிஜனச் சிறுவர்களுடன் சேர்ந்து வேப்பங்காய் தின்னவும், இடுப்பில் நாலு முழ வேஷ்டி அணியவும் ஆரம்பித்தார்.

**********

நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி. காளிதாசன் சாகுந்தலத்தை அனுபவிப்பார்கள்; புத்தபிரானது அன்பு உபதேசத்தையும் ரஸிப்பார்கள்; அர்ச்சுனனது வீரத்தையும், கர்ணன் கொடையையும், தருமரின் சத்தியத்தையும் புராணத்தில் வாசித்துப் புகழ்வதோடு சரி. யாரேனுமொரு மனிதன் தற்சமயம் அதே தருமத்தை நடத்திக் காண்பித்தால், அவனைப் பைத்தியமென்றுதான் மதிப்பார்கள்.

**********

ஒருநாள் தெருவில் நடக்கும்பொழுது பாரதியார் கைவிரல்களை மடக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி விரைவாக நடந்தாராம். அதைக் கண்டு அவரது தோழர் ஒருவர், “என்னடா! கையை இப்படி வைத்திருக்கின்றாய்” என்றாராம்.

ஒரு சின்ன விஷயத்துக்குக் கூடக் கட்டுப்பாடும், அடக்குமுறையுமா என்று பாரதியார் கோபங்கொண்டார். ஆனால் பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார்.

மறுநாள் அதே நண்பரின் எதிரில் கை விரலை விரைப்பாக நீட்டிக்கொண்டு நடந்தார். அவர், ”என்னடா, கையை நீட்டிக்கொண்டு நடக்கின்றாய்?” என்று கேட்டதுதான் தாமதம்.

உடனே பாரதியார், “தம்பி! உன் ஆசீர்வாதத்தினால் எனக்கு எவ்வித வியாதியும், ரோகமும் கிடையாது. ஒரு மனிதன் தன் கையை நீட்டவோ, மடக்கவோ கூடச் சுதந்திரமில்லையென்று நினைக்கும் உன்னைப் போன்ற மடையருடன் குடியிருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு நரகம் வேண்டாம்” என்று சுடச்சுடப் பதில் உரைத்தாராம். நண்பருக்கு வெட்கித் தலைகுனிவதை விட வேறு என்ன வழி இருந்திருக்கும்?

********************

அவர் ஒரு புதுமைப் பித்தர்; அவருடைய நோக்கங்களெல்லம் உயரிய நோக்கங்கள். சமுத்திரக் கரைக்கு எல்லோரும் செல்வது வழக்கம்.

பெண்கள் பர்தா வழக்கம் அவருக்குப் பிடிக்காது; ஆனால் பெண்கள் வரம்பு மீறி நாகரிகமென்று சொல்லிக்கொண்டு நடப்பதும் பிடிக்காது.

பெண்களை உள்ளே அடக்கிவைக்கக் கூடாது என்பது அவருடைய சித்தாந்தம். வீட்டினுள்ளே பெண்களைப் பூட்டி வைப்பதால் பிரயோஜனமில்லை. மனத்தில் களங்கமின்றி ஆண் மக்களோடு பழக வேண்டும்.

அங்ஙனமே ஆடவர்களும், ஸ்த்ரீகளும் மத்தியில் உள்ளத்தில் மாசின்றி உறவாட வேண்டும். இப்படி ஜாக்கிரதையுடன் சிறிது காலம் நடந்தால் தனியே ஒவ்வொருவர் மனமும் பரிசுத்தமாகி விடும்.

மூடி மூடி வைப்பதால் புருஷர்களுக்குப் பின்னும் பெண்களைப் பார்ப்பதில் ஆசை அதிகமாக வரம்பு மீறியும் ஹேது உண்டாகின்றது. இத்தகைய கொள்கையை உடையவர் பாரதியார்.

*******************

”மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும், வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகிறார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருத்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும்படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா” என்றார் பாரதி.

என்ன ஆச்சர்யம்! உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும் வரை அரை மணி நேரம் மிருகேந்திரனைப் பிடரி, தலை, காது எல்லாம் தடவிவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல், அதனிடம் விடை பெற்றுக் கொண்டார்.

**********

பாரதியாருக்கு வேண்டியவை நல்ல எழுதுகோல், வெள்ளைக் கடுதாசி, தனிமை. அச்சடிப்பது போல் வேகமாக எழுதிக் குவிப்பார். ஒரு நிமிஷமேனும் தொழிலின்றியிருப்பதை விரும்பார்.

உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அவருக்கு ஆவல் உண்டு. சரீரம் இடம் கொடுக்கவில்லை. ஒரு நண்பர் வீட்டில் கத்தி வீச்சுப் பழகல் ஆறுமாத காலம் நடைபெற்றது.

***********

[ செல்லம்மாவின் கடிதம் ]
======================
[அப்போது செல்லம்மாவின் வயது 12]

க்ஷேமம்.

கடையம்.

அநேக நமஸ்காரம். கடையத்தில் எல்லோரும் க்ஷேமம். இங்கு நம்ப விசுவநாத அத்திம்பேர் வந்திருக்கார். அவர் என்கிட்டே ஒரு சமாசாரம் சொன்னார்.

நீங்கள் ஏதோ தேச சுதந்திர விஷயமாகப் பாடுபடுவதாகச் சொன்னார். அதுக்காக ஏதோ ஓயாமல் எழுதிக் கொண்டிருக்கிறீர்களாம். சட்டத்துக்கு விரோதமாயிருந்தால் தீவாந்திரத்திற்குக் கொண்டு போய்விடுவாளாம்.

எனக்கு இதையெல்லாம் கேட்க ரொம்ப பயமாயிருக்கு. அதனால் நான் சொல்றதை ஒரு பொருட்டாய் மதிச்சுப் புறப்பட்டு வந்துவிடுங்கள். உங்களை மன்றாடிக் கெஞ்சுகிறேன். இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

உங்களுக்கு என்மேல் அன்பிருந்தால் புறப்பட்டு வந்து விடுங்கள். எந்த நிமிஷத்தில் உங்களுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று எப்பொழுதும் தவித்துக் கொண்டிருக்கிறேன். கெடுதல் ஒன்றும் ஏற்படக்கூடாதென்று ஸ்வாமியை வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

செல்லம்மா.

**************************

[பாரதியின் கடிதம்.]
================

[1901ல் எழுதப்பட்டபோது பாரதியின் வயது 19]
========================================

ஓம்

ஸ்ரீகாசி
ஹனுமந்தக்கட்டம்

எனதருமைக் காதலி செல்லம்மாளுக்கு- 

ஆசீர்வாதம். உன் அன்பான கடிதம் கிடைத்தது. நீ எனது காரியங்களில் இத்தனை பயப்படும்படியாக நான் ஒன்றும் செய்யவில்லை.

விசுவநாதன் அனாவசியமாக உனக்குப் பயத்தை விளைவித்திருக்கிறான். நான் எப்போதுமே தவறான வழியில் நடப்பவனல்ல. இதைப் பற்றி உன்னைச் சந்திக்கும் சமயங்களில் விவரமாகக் கூறுகிறேன்.

நீ இந்த மாதிரி கவலைப்படும் நேரங்களில், தமிழை நன்றாகப் படித்து வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்.

உனதன்பன்,
சி.சுப்பிரமணிய பாரதி.

*********************

[”மகாகவி பாரதியார்” - வ.ரா.]
==========================
பாரதியாரை நமஸ்கரித்த என்னை, அவர் தூக்கி நிறுத்தியதும், ‘யார்?’ என்று கேட்டார்.

தமிழில் பதில் சொல்லி இருக்கலாமே! இங்கிலீஷ் படித்த கர்வம் ஆளை எளிதிலே விட்டுவிடுமோ? நான் இங்கிலீஷைப் பொழிய ஆரம்பித்தேன்.

“அடே, பாலு! வந்தவர் உனக்கு இணையாக இங்கிலீஷ் பொழிகிறாரடா! அவரிடம் நீ பேசு; எனக்கு வேலையில்லை” என்று உரக்கக் கத்தினார். அப்பொழுதுதான் அவருடைய மனவேதனை எனக்கு ஒருவாறு அர்த்தமாயிற்று.

“ஒரு தமிழன் மற்றொரு தமிழனோடு இன்னும் எவ்வளவு காலம் ஆங்கிலத்திலேயே பேச வேண்டும்?” என்று வருத்தக் குரலுடன் என்னைக் கேட்டார். எனக்கு அழுகை வந்துவிட்டது. நேரே பதில் சொல்ல நா எழவில்லை.

அப்பொழுது அவர் பாடிய பாட்டு, ‘மறவன் பாட்டு’ என்று பாடியிருக்கிறாரே, அதுதான்.

***********

”தமிழ்நாட்டுத் தேச பக்தன்” என்று என்னை பாரதியார் அரவிந்தருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ”சர்க்காருக்கு மனுப்பண்ணிக் கொள்ள அவருக்குத் தெரியுமல்லவா?” என்று அங்கிருந்த வங்காளி இளைஞர்களில் ஒருவன் சொல்லிவிட்டுச் சிரித்தான்.

பாரதியாரைத் தவிர மற்றெல்லாரும் சிரித்தார்கள். நான் அசட்டுச் சிரிப்புச் சிரித்தேன். பாரதியாரின் முகத்தில் ஈ ஆடவில்லை.

“அடிமைகளிலே, வங்காளி உயர்த்தி, தமிழன் தாழ்த்தியா?” என்று அவர் படீரென்று போட்டார். தலைநிமிர்ந்து கொள்வதற்கு எனக்கு தைரியம் உண்டாயிற்று.

*********

பாரதியாருக்குச் சீட்டு ஆடுவதிலும், சதுரங்கம் ஆடுவதிலும் நிரம்பப் பிரியம். ஆனால் இவ்விரண்டு ஆட்டங்களிலும் அவருக்குப் பாண்டித்தியம் கிடையாது. சதுரங்கத்தில் வ.வே.சு. ஐயர் திறமை வாய்ந்தவர். அவர் பாரதியாரின் காய்களை நிர்த்தாட்சண்யமாய் வெட்டித் தீர்த்து விடுவார்.

‘ஐயரே! இவ்வளவு கடுமையாகக் கொலைத் தொழில் செய்யாதேயும். உமக்குக் குழந்தை, குட்டிகள் பிறக்கா” என்று அழாக்குறையாகப் பாரதியார் சொல்லுவார்.

ஐயருக்குக் காய்கள் வெறும் சதுரங்கக் காய்கள்; பாரதியாருக்கோ காய்கள் குழந்தைகள் மாதிரி.

***********

சீட்டிலே , கர்நாடக ஆட்டமான ஓர் ஆட்டந்தான் பாரதியாருக்குத் தெரியும். 304 என்கிறார்களே, அதுதான். அதுவும் நன்றாக ஆடத் தெரியாது. பாரதியார், என்னைத் தவிர வேறு யாரையும் தமது கட்சியில் வைத்துக் கொள்ளப் பிரியப்படுவதில்லை.

தமக்கு வந்த சீட்டுகளில் குலாம் என்ற ஜாக்கி ஒன்றோ, இரண்டோ இருந்தால், பாரதியார் குதூகலப் படுவார்; கையைத் தூக்கித் தமது கட்சிக்காரனுக்கு ஜாடை காண்பிப்பார். சதுரங்கத்தில் ஐயரிடம் தோற்கும் படுதோல்வியை, எப்படியாவது சீட்டாட்டத்தில் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று பாரதியார் மிகுதியும் ஆசைப்படுவார்.

************

போய்க்கொண்டிருக்கும்பொழுது, பலர் பயபக்தியுடன் நின்றுகொண்டு பாரதியாரை நமஸ்கரிப்பதைக் கண்டேன். யார் நமஸ்கரித்தாலும் உடனே தமது இரண்டு கைகளையும் நன்றாய்ப் பொருத்தி இசைத்து, முகத்துக்குக் கொண்டுபோய், பாரதியார் கும்பிடுவார்.

சில சமயங்களில் சிலரிடம், சிறிது பேசவும் செய்வார். நடந்துகொண்டே கும்பிடுவதில்லை; நின்று விடுவார். ஆனால், பேசினவர் எல்லோரும் பாரதியாருக்குக் காண்பித்த மரியாதை அளவு கடந்ததாயிருந்தது.

ஏழை பாரதியாருக்கு எப்படி இவ்வளவு மரியாதை கிடைத்தது என்பது அப்போது சிறிதும் விளங்கவேயில்லை. பாரதியாருடைய பாட்டின் மகிமையை அவர்கள் தெரிந்துகொண்டு கும்பிட்டார்களா? என்பது சந்தேகம். ஆனால், புதுச்சேரியில் பலருக்குப் பாரதியார் குருவாக விளங்கினார் என்பது உண்மை.

******************

பாரதியார் உயரத்தில் பெரியவர்; அரவிந்தர் உருவத்தில் சிறியவர்.

பாரதியார் ஸங்கோசி; அரவிந்தரும் ஸங்கோசிதான்.

பாரதியாரின் சொற்கள் முல்லை மலரின் தாக்கும் மணம் கொண்டவை; அரவிந்தரின் சொற்கள் செந்தாமரை மலரின் பரந்து விரிந்த அழகைத் தாங்கியவை.

இருவருக்கும் புதிய புதிய கருத்துகளும் சித்திரச் சொற்களும் திடீர்த் திடீரென்று புதைவாணங்களைப் போலத் தோன்றும். பாரதியார் ஆகாயத்தில் ஓடுவதை எட்டிப் பிடித்து வந்ததாகச் சொற்களைப் பொழிவார். அரவிந்தர், பூமியைத் துளைத்துத் தோண்டி, பொக்கிஷத்தைக் கொணர்ந்ததாகப் பேசுவார்.

இருவரின் சொற்களிலும் கவிச்சுவை நிறைந்திருக்கும். பாரதியாரைப் போலவே, அரவிந்தரும் கலகலவென்று விடாமல் சிரிப்பார்.

****************

வீதியிலே, ஒரு குழந்தையைத் தாயில்லாப் பிள்ளை என்று எவரேனும் சுட்டிக்காட்டி விட்டால், பாரதியார் அந்த இடத்திலேயே ஸ்தம்பித்து நின்று விடுவார். அவர் மனதில் என்னென்ன எண்ணங்கள் தோன்றி மறையுமோ, அவைகளை நான் அறிந்ததில்லை.

“என்ன ஓய்! எனக்கு அம்மா மயக்கத்திலிருந்து ஒரு நாளும் விடுதலை இல்லையா?” என்று பக்கத்திலிருக்கும் நண்பரை வினவிவிட்டுச் சிறிது நேரத்துக்கெல்லாம், “அம்மா, அம்மா” என்று இசையிலே கூவுவார்.

******************

தம் தாயைப் பற்றிப் பாரதியாருக்கு நல்ல ஞாபகம் இருந்ததில்லை. அந்த வகையில் தமது அனுபவம் நிறைந்த பூர்த்தியாக இருக்கவில்லையே என்று அவர் மனம் வருந்துவார்; அண்டை வீட்டுக் குழந்தைகளுக்கு இருந்த தாயின் சலுகை தமக்கு இருந்ததில்லையே என்று மனம் வாடுவார்.

தாயார் இந்த உலகத்தை விட்டுச் சீக்கிரம் அகன்றதாலேயே, பாரதியார் சாகுமளவும் குழந்தையாயிருந்து வந்தார். நேற்றைய தினம் பிறந்த பெண் குழந்தையும் பாரதியாருக்கு அம்மாதான்.

வயதுக் கணக்கு அவருக்குத் தொந்தரவு கொடுத்ததே இல்லை. “அம்மா, அம்மா” என்று அவர் தமது பாட்டுகளில் கூவி அழைத்திருப்பதை நீங்கள் எல்லோரும் படித்திருப்பீர்கள்.

********************

”நாட்டின் விடுதலைக்கு முன், நரம்பின் விடுதலை வேண்டும்; நாவுக்கு விடுதலை வேண்டும்; பாவுக்கு விடுதலை வேண்டும்; பாஷைக்கு விடுதலை வேண்டும்...” இவ்வாறு அடுக்கிக் கொண்டே போனார்.

வெறும் சொல்லடுக்காகச் சொன்னதல்ல என்று இப்பொழுது நன்றாக எனக்குப் புலனாகிறது. விடுதலை என்ற சொல்லை நாட்டிற்கு உபயோகப்படுத்தி நான் முதலிலே கேட்டது பாரதியாரிடந்தான்.

************

தமிழனைத் தட்டி எழுப்பி, அவனை முன்னேறச் செய்பவர் திடசங்கற்பமுள்ளவராக இருக்க வேண்டும்; தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலேயே நித்தியானந்தத்தை நாடு என்று சொல்லி வழிகாட்டியாக அதற்கு இருக்க வேண்டும்.

கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்காத கலைஞனாக இருக்க வேண்டும். அவர், கவிதை வெள்ளத்தில் மிதந்து விளையாட வேண்டும்.

குழந்தைக்குத் தோழனாகவும், பெண்மைக்குப் பக்தனாகவும், அரக்கனுக்கு அமுக்குப் பேயாகவும், சுதந்தரத்துக்கு ஊற்றுக் கண்ணாகவும், சுற்றி நில்லாதே போ பகையே என்னும் அமுத வாய் படைத்த ஆண் மகனாகவும், கவிதைக்குத் தங்குமிடமாகவும், உள்ளத்தில் கனலும் கருணையும் ஒருங்கே எழப் பெற்றவனாகவும்-

எவன் ஒருவன் இருக்கிறானோ, அவன்தான் தூங்கும் தமிழ்நாட்டைத் தட்டி எழுப்பி, தலை நிமிர்ந்து நடக்கச் செய்யும் வல்லமை படைத்தவன்.

அப்பேர்ப்பட்ட மூர்த்திகரம் வாய்ந்த பாரதியார், தமிழ்நாட்டில் தோன்றியிராவிட்டால் என்ன ஆகியிருக்கும் என்று சிந்தனை செய்வதே சிரமமான வேலையாகும்.

************
1919 பெஃப்ருவரி மாதம்.

பாரதியார்:
மிஸ்டர் காந்தி! இன்றைக்குச் சாயங்காலம் ஐந்தரை மணிக்கு நான் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் ஒரு கூட்டத்தில் பேசப் போகிறேன். அந்தக் கூட்டத்துக்குத் தாங்கள் தலைமை வகிக்க முடியுமா?

காந்தி:
மகாதேவபாய்! இன்றைக்கு மாலையில் நமது அலுவல்கள் என்ன?

மகாதேவ்:
இன்றைக்கு மாலை ஐந்தரை மணிக்கு, நாம் வேறோர் இடத்தில் இருக்க வேண்டும்.

காந்தி:
அப்படியானால், இன்றைக்குத் தோதுப்படாது; தக்களுடைய கூட்டத்தை நாளைக்கு ஒத்திப் போடமுடியுமா?

பாரதியார்:
முடியாது. நான் போய் வருகிறேன். மிஸ்டர் காந்தி! தாங்கள் ஆரம்பிக்கப்போகும் இயக்கத்தை நான் ஆசீர்வதிக்கிறேன்.

பாரதியார் வெளியே போனதும், “ இவர் யார்?” என்று காந்தி கேட்டார்.

தாம் ஆதரித்துவரும் பாரதியாரைப் புகழ்ந்து சொல்வது நாகரிகம் அல்ல என்று நினைத்தோ என்னவோ, ரங்கசாமி ஐயங்கார் பதில் சொல்லவில்லை.

காந்தியின் மெத்தையில் மரியாதை தெரியாமல் பாரதியார் உட்கார்ந்து கொண்டார் என்று கோபங்கொண்டோ என்னவோ சத்தியமூர்த்தி வாய் திறக்கவில்லை.

ராஜாஜிதான், “அவர் எங்கள் தமிழ்நாட்டுக் கவி” என்று சொன்னார்.

இதைக் கேட்டதும், “இவரைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். இதற்குத் தமிழ்நாட்டில் ஒருவரும் இல்லையா?” என்றார் காந்தி.

எல்லோரும் மௌனமாக இருந்து விட்டார்கள்.

************

[ என் தந்தை பாரதி - சகுந்தலா பாரதி]
================================

பராசக்தீ, இந்த உலகத்தின் ஆன்மா நீ. உனக்கு அறிவில்லையா? உனக்குக் காது கேட்காதா? நாள்தோறும் உன் மீது பாட்டுப் பாடுகிறேன். நான் கேட்கும் வரங்களையெல்லாம் கொடுத்துவிடக் கூடாதா?

முதலாவது, எனக்கு என்மீது வெற்றி வர வேண்டும். குழந்தைக்கு ஜ்வரம் வந்தது. நினது திருவருளால் குணமாய் விட்டது. இரண்டு மாத காலம் இரவும், பகலுமாக நானும் செல்லமாளும் புழுத் துடிப்பது போலத் துடித்தோம். ஊண் நேரே செல்லவில்லை இருவருக்கும். எப்போதும் சஞ்சலம், பயம், பயம், பயம்! சக்தீ! உன்னை வாழ்த்துகிறேன்.

கடன்காரர் தொல்லையும் அத்துடன் வந்து கலந்தது. வைத்தியனுக்குக் கொடுக்கப் பணமில்லை. குழப்பம், குழப்பம், தீராத குழப்பம்! எத்தனை நாட்கள்! எத்தனை மாதங்கள்! எத்தனை வருஷங்கள்!

பராசக்தீ! ஓயாமல் கவிதை எழுதிக் கொண்டிருக்கும்படி திருவருள் செய்யமாட்டாயா? கடன்களெல்லாம் தீர்ந்து தொல்லையில்லாதபடி என் குடும்பத்தாரும், என்னைச் சார்ந்த பிறரும் வாழ்ந்திருக்க. நான் எப்போதும் உன் புகழைஆயிர விதமான புதிய புதிய பாட்டுகளில் அமைக்க விரும்புகிறேன். உலகத்தில் இதுவரை இல்லாதபடி அற்புதமான ஒளிச் சிறப்பும், பொருட் பெருமையும் உடைய பாட்டு ஒன்றை என் வாயிலே தோன்றும்படி செய்ய வேண்டும்.

தாயே, என்னைக் கடன்காரர் ஓயாமல் வேதனைப் படுத்திக் கொண்டிருந்தால், நான் அரிசிக்கும், உப்புக்கும் யோசனை செய்துகொண்டிருந்தால், உன்னை எப்படிப் பாடுவேன்? - பாரதி

***********

[பாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்]
=================================

வீட்டின் தலைவி எல்லாவற்றையும் திருத்திக் கொண்டு போனால், தலைவன் கவலையில்லாமல் நோயில்லாமல் இருக்கலாம். தலைவிக்கு முக்கியமாக வேண்டியது பணம். பணம் இருந்து விட்டால் என் செல்லம்மா உலகத்தையே ஆண்டு விடுவாள்.

அது இல்லாததால் என்னைக் கட்டுப்படுத்துகிறாள்; கேட்கிறாள்; சண்டை பிடிக்கிறாள்; எனக்கு வருந்திச் சாதம் ஊட்டுகிறாள்; இதை உலகம் அறிய வேணும். நம் கஷ்டம் விடிய வேணும்.

சென்று போன விஷயத்தை யோசிப்பவன் மூடன். தினமும் நான் துணியை வெளுத்து உலர்த்துவதைப் போல நம்முடைய அழுக்குகளை, தொல்லைகளைத் தினம் கழுவி விட வேணும்.

புதிதாகச் சூரியன் வருவதைப் போல் புதிய புதிய விஷயங்களைப் பார்த்து மகிழ வேணும். என் செல்லம்மா முக்கியப் பிராணன்! என் செல்வம்! எல்லாம் எனக்கு அவள்தான். அவள் பாக்கியலக்ஷ்மி. - பாரதி.

*************

மூன்று மாதக் குழந்தை கைகால்களை ஆட்டி ஆவ், ஆவ் என்னும்போது, பாரதியார், “ஆவோ, ஆவோ, ஆவோ, ஸகலபாரத குமார்” என்று பாடுவார். “சின்னக் குழந்தை எல்லாரையும் அழைத்து ஒன்றாக இருக்கும்படி சொல்லுகிறது. நமது மூடத்தனம், நாம் கவனிப்பதில்லை” என்பார்.

*****************

மூவரும் பாட்டின் ஓசை வந்த திக்கை நோக்கிச் சென்றோம். அங்கே ஒரு கட்டுமரத்தின் மேல் பாரதியார் அமர்ந்திருந்தார். கறுப்புச் சொக்காய். கச்சை போட்ட வேஷ்டி. கூப்பிய கரங்கள். கடலில் உதயமாகும் பால சூரியனை நோக்கியபடி பாடிக் கொண்டிருந்தார் அவர். வெளிச்சம் நன்றாகப் பரவவில்லை; மங்கலாக இருந்தது. கம்பீரமான பாட்டு. உள்ளத்தைக் கவரும் ராகம். பாட்டின் உன்னதமான பொருள் எல்லாம் சேர்ந்து உண்மையில் தெய்வத்தை எதிரில் காண்பது போல் மயிர்கூச்செரியச் செய்தன. உள்ளம் குளிர்ந்தது.

******************

பாரதியார் வீட்டிலோ அல்லது மடுகரை ஏரிக்கரை முதலிய இடங்களிலோ பந்தி போஜனம் நடக்கும்போது எவ்வித வித்தியாசமும் இல்லாது பறையன், பள்ளி, பார்ப்பனன் என்று சொல்லப்படும் அனைவரும் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடுவோம்.

இது இன்று சகஜமாய்த் தோன்றலாம். அன்றோ எங்களில் பலர் இப்படி நடந்ததை வீட்டில் சொல்லவே மாட்டோம். எங்களுக்கு இந்த மாதிரியான காரியம் நடக்கும் போதெல்லாம் உள்ளுக்குள் யாராவது வீட்டார் பார்த்து விட்டால் என்ன செய்வது என்னும் திகில்.

[ ஸ்ரீ அரவிந்த தரிசனம் - அமிர்தா ]

கருத்துகள் இல்லை:

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...