8.7.11

நாகரத்னப் பாம்பு


ஹரிதாஸ் சினிமா பார்க்கும் அடுத்த தலைமுறையினர் சொல்லிக்கொள்ளும் தவறாத கமெண்ட் இது. நின்னாப் பாட்டு-உக்காந்தாப் பாட்டு.

ஆனா நம்ம பாரம்பரியமே இசையாலதான் கட்டுண்டு கெடந்தது. எந்த வேல செஞ்சாலும் பாட்டு. எந்த விளையாட்ட விளையாடினாலும் பாட்டு. இசையில்லாம எதுவுமில்லங்கிற காலம் போயி இப்போ சினிமாப் பாட்டை விட்டா பாட எதுவுமில்லங்கற லெவல்ல இருக்கறத வேறென்ன சொல்ல?

ரைட்டிங் ஆன் தெ ஃபோர்ஹெட்தான்.

கீழ இருக்கற பாட்டையெல்லாம் பாடிப் பாருங்களேன். ஏதோ ட்யூன்ல ஏதேதோ நேரங்கள்ல பாடியிருக்கேன். இன்னிக்கு ஒரு தடவை பாடிப் பாத்தேன். மனசு ரொம்ப உற்சாகமா துள்ளிக் குதிக்கிறது உங்க கண்ணுக்குத் தெரிய நியாயமில்லீங்க.

1.
திங்கள்கிழமை
திருடன் வந்தான்.
செவ்வாய்க்கிழமை
ஜெயிலுக்குப் போனான்.
புதன்கிழமை
புத்தி வந்தது.
வியாழக்கிழமை
விடுதலை ஆனான்.
வெள்ளிக்கிழமை
வீட்டுக்கு வந்தான்.
சனிக்கிழமை
சாப்பிட்டுப் படுத்தான்.
அப்புறம் அவன்கதை
யாருக்குத் தெரியும்?

2.
வரகரைக்கறதும்
அம்மா வந்து நிக்கறதும்
சுக்காங் குத்துறதும்
சோறு கொதிக்கிறதும்
பிள்ளை அழுகிறதும்
பேசாதே எங்கிறதும்
வாடி எங்கிறதும்
வம்புக்கு நிக்கிறதும்
போடி எங்கிறதும்
புடிச்சுத் தள்ளுறதும்.
(வரகு என்பது ஒரு வகை அரிசி. சுக்கான் என்பது உரல்)

3.
ஒன்னர டூவர
டக்கரடன்
யார் காவல்
முஸ்தீபன்
கள்ளன் குள்ளன்
ட்வெண்டிஒன்.
யா யூ மே ப்ளக்
ப்ளக்கத் தூக்கி
மேலே போட்டா
செட்டியார் வீட்டு நண்டு
நண்டைத் தூக்கி
மேலே போட்டா
நாகரத்னப்பாம்பு
பாம்பைத் தூக்கி
மேலே போட்டா
பாளையங்கோட்டை ராஜா
ராஜாவைத் தூக்கி
மேலேபோட்டா ராணி
ராணியத் தூக்கி
மேலேபோட்டா சாணி.

4.
தென்னைமரத்துல
ஏறாதே.
தேங்காயைப் பறிக்காதே.
மாமரத்துல
ஏறாதே.
மாங்காயைப் பறிக்காதே.
ஆத்துல விழறியா?
சேத்துல விழறியா?
ஐய்யனார் கோயில்
குளத்துல விழறியா?

5.
டப்பா டப்பா
வீரப்பா
எப்படாப்பா
கல்யாணம்
மாசம் பொறக்கட்டும்
மல்லியப்பூ பூக்கட்டும்
எம்.ஜி.ஆர். சண்டை
பானுமதி கொண்டை
கொளத்துல கொக்கு
கோழிப்பீய நக்கு.

6.
ஒன் டூ த்ரீ ஃபோர்
ஃபைவ் சிக்ஸ்ஸன்னா
நீலகிரி ரோட்டு மேலே
நிக்க வெச்சானா
ஒங்கப்பா எங்கப்பா
கப்பல் ராஜா
ஒங்கம்மா எங்கம்மா
கப்பல் ராணி
ஒங்கண்ணே எங்கண்ணே
வெளக்கெண்ணே
ஒங்கக்கா எங்கக்கா
ஏலக்கா
ஒங்க தங்கச்சி எங்க தங்கச்சி
கொட்டாங்கச்சி
ஒங்க தம்பி எங்க தம்பி
தங்கக் கம்பி.

விடுபட்ட பாட்டையெல்லாம் நெனச்சு மண்டைய ஒடச்சுக்கிட்டு இருக்கேன். மறந்து போனாலும் பல்லுல மாட்டுன மாம்பழ நார நாளைக்குள்ளாறத் தொளாவி எடுத்துருவேம்ல.

ஒங்களுக்கும் ஞாபகத்துல இருந்தா பாட்டு எதாச்சும் கெடச்சா எசப்பாட்டு பாடுங்க.

25 கருத்துகள்:

RVS சொன்னது…

பச்சக் குதிர தாண்டும் போது பாடும் பாட்டெல்லாம் போட்ருக்கீங்க...
கொஞ்சம் முதுகைக் குனிஞ்சா ஏறிக் குதிக்கலாம் போலருக்கு ஜி! இப்ப யார் விளையாட வருவா?
;-))

சுந்தர்ஜி சொன்னது…

ஆர்.வி.எஸ்! முதுகைக் குனிஞ்சா உங்களால ஏறிக்குதிக்க முடியுமானால் குனிய நான் ரெடி.

தவிர-இது பச்சக் குதிரை தாண்டும் போது மட்டும் பாடப்படுபவை அல்ல.சமையல் தயாராகும்போது பிள்ளையழுதால்-பௌர்ணமியன்று பெண்பிள்ளைகள் தெருக்களில் ஆடுகையில்-சிறு குழந்தையை பாதங்களில் ஏந்தியபடி இருகால்களையும் ஆட்டியபடி-கள்ளன் போலீஸ் துவங்கும் முன்னால் என்று பல தருணங்களிலும் பாடப்படுபவை.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

வாலு போச்சு கத்தி
வந்துது டும் டும் டும்!
கத்திப்போச்சு மாங்கா
வந்துது டும் டும் டும்!
மாங்காப்போச்சு சாதம்
வந்துது டும் டும் டும்!
சாதம் போச்சு எண்ணெய்
வந்துது டும் டும் டும்!
எண்ணெய் போச்சு தோசை
வந்துது டும் டும் டும்!
தோசை போச்சு டமாரம்
வந்துது டும் டும் டும்!
டமாரமும் இப்போ உடைஞ்சு போச்சு
டும் டும் டும் டும் டும் டும் டும் !

இந்தப்பாட்டை மறந்துட்டீங்களே!

நல்ல பழங்கால நினைவுகள் தான்.
அந்த நாள் இனி வரப்போவதில்லை.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

[வெளியூர் போகிறேன், மீண்டும் வர 10 நாட்கள் கூட ஆகலாம் Bye Bye]

Rathnavel சொன்னது…

வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

முதல் மூன்றும் கேட்ட நினைவில்லை. கடைசி மூன்றும் நான் கேட்டும், பாடியும் இருக்கிறேன்... அப்பப்பா.... தோண்டித்தோண்டி முத்துகளாகத் தருகிறீர்க்ள் ஜி! Hats Off to you!

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…

யாருக்கும் இப்போது விளையாட நேரமில்லை என்பதே சுடும் உண்மை.

மனோ சாமிநாதன் சொன்னது…

சின்னஞ்சிறு வயதில் தோழிப்பெண்களுடன் ஓடி விளையாண்டபோது பாடிய பாடல்கள் இவை!
ம‌ல‌ரும் நினைவுக‌ளைத் திரும்ப‌க் கொன்டு வந்து விட்டீர்க‌ள்!
அருமையான‌ ப‌திவு!

ரிஷபன் சொன்னது…

பால்யத்திற்கே மனசு போனது நிஜம்.
மறந்து போன பாடல்களை நினைவு படுத்தியதற்கு தேங்க்ஸ்.
தோசை அம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்து மாவும் அரைச்சு
சுட்ட தோசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அண்ணனுக்கு ரெண்டு
தம்பிக்கு ஒண்ணு
ஆக மொத்தம் பத்து

தோசையுடன் கணக்கும் கலந்த சுவாரசியம்!

சுந்தர்ஜி சொன்னது…

கோபு சார்!நீங்க தெருவுல போய் வெளையாட மாட்டீங்களோ?

வாலு போயி பாட்டு தமிழ் டெக்ஸ்ட் புக்ல உள்ள பாட்டு சார்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரத்னவேல் ஐயா.

சுந்தர்ஜி சொன்னது…

நீங்க ரசிக்கறதாலதான் வெங்கட் எழுதறதும் எடுபடறது. நன்றி தொடர்வத்ற்கும் வாசிப்புக்கும்.

சுந்தர்ஜி சொன்னது…

கோபு சார்! விட்டுப் போச்சு.

உங்க பயணம் சிறப்பாக மகிழ்ச்சியாக அமைய உடல்நலம் சிறக்க வாழ்த்துக்கள்.

சுந்தர்ஜி சொன்னது…

நேரமிருக்கிறது வித்யா. விளையாட குழந்தைகளுக்கு மனமில்லை.ஊக்குவிக்கப் பெற்றோர் தயாரில்லை என்பதே சுடும் உண்மை.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மனோ அக்கா.இந்தப் பதிவுக்கு என் 65வயசு அம்மாவும் உதவினாங்க.அதுதான் பரம ரகஸ்யம்.

சுந்தர்ஜி சொன்னது…

அருமை ரிஷபன். பாட்டு நல்ல பாட்டுத்தான்.பாட்டும் கணக்கும் கலந்த அற்புதம்.

இருந்தாலும் கோபு சார் மாதிரி நீங்களும் தமிழ் டெக்ஸ்ட் புக்ல இருந்து ஒரு பாட்டை எடுத்துவிட்டதை ஒத்துக்க மாட்டேன்.

வேறேதாவது பாட்டு வேணும்.

Matangi Mawley சொன்னது…

நீங்க சொல்லிருக்கற அந்த 3rd பாட்டு-- எங்க அம்மா எனக்கு சொல்லிருக்கா... கொஞ்சம் வேற மாதிரி இருக்கும்...

ஒன்னர டூவர யார் காவல்
முஸ்தீபன்
கள்ளன் குள்ளன்
ட்வெண்டிஒன்.
மே மே ப்ளக்கத் தூக்கி
மேலே போட்டா
செட்டியார் வீட்டு நண்டு
எங்க மாடு எளச்சு போச்சு
கொல்ல பக்கம் தள்ளு...

அப்புறம்-- ஒரு மலையாள பாட்டு கூட சொல்லுவா-- சரியா ஞாபகம் இல்ல... தீவிண்டி ஓடுன்னு... மணிகளடிச்சு... குழலும் ஊத்தி.. யாத்ரக்காரன் விளிக்குன்னு... --அப்டீன்னு-- train பத்தி பூரா வரும்... இந்த post அம்மா கிட்ட படிச்சு காட்டினப்போ-- almost நிறையா பாட்டு-- நான் சொல்றதுக்கு முன்னாடி அம்மாவே சொல்லிட்டா... :) எனக்கு இதெல்லாம் அம்மா சொல்லலேன்னா தெரிஞ்சிருக்க chance இல்ல... நாங்கல்லாம்- o pillar - caterpillar தான்... :)
absolutely enjoyed reading this ...:)

PS : இந்த "ஹரிதாஸ்" சமாசாரம்-- classical music ல கொஞ்ச நஞ்ச ஆர்வம் இருக்கரவாளால மட்டுமே ரசிக்க முடியும்... அத retain பண்ணனும் னா-- அது entirely parents கைல தான் இருக்கு... I was lucky ... can't say the same about many others... but these films/songs deserve a space in future...

PPS:
"நாகரத்ன பாம்பு"- கத என்னோட favourite ... :) அத remind பண்ணினதுக்கு ரொம்ப thanks ! இன்னிக்கு அப்பாவ இழுத்து பிடிச்சு அந்த பாம்பு கதைய சொல்ல சொல்லி கேக்கணும்...

Matangi Mawley சொன்னது…

அம்மா உபயம் ஒண்ணு, இப்போ தான் சொன்னா-- அதனால முன்னாடி add பண்ண முடியல... :)

பரங்கிக்காய பறிச்சு,
பட்டையெல்லாம் சீவி,
பொடிப் பொடியா நறுக்கி,
உப்பு காரம் போட்டு,
எண்ணையிலே தாளிச்சு,
இன்பமாக தின்னுவோம்...
இன்னும் கொஞ்சம் கேப்போம்,
தந்தா பாப்போம்,
தராங்காட்டி அழுவோம்...

தக்குடு சொன்னது…

கல்லிடை தெரு வீதிக்கு இழுத்து செல்கிறது உங்கள் பதிவு! வாழ்த்துக்கள்!..:)

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி.

உங்களின் விரிவான பின்னூட்டங்கள் பெரும் ஊக்கம்.

அந்தப் பாடலை நினைவுபடுத்தியமைக்கு நன்றி.

என் அம்மா அதைப் பாடிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்படி.

//பரங்கிக்காய பறிச்சு,
பட்டையெல்லாம் சீவி,
பொடிப் பொடியா நறுக்கி,
உப்பு காரம் போட்டு,
எண்ணையிலே தாளிச்சு,
இன்பமாகப் புசிப்போம்...
இன்னும் கொஞ்சம் கேப்போம்,
தந்தா சிரிப்போம்,
தராங்காட்டி அழுவோம்...

சின்ன விஜயராணி என்ற மற்றொரு பாடலும் இன்று நினைவுக்கு வந்தது. உங்கள் அம்மாவிடமும் கேட்டு பாருங்கள். அடுத்த பதிவுக்கு வேண்டிய அளவு பாட்டுக்கள் சேர்ந்தபின் அத்தோடு சின்ன விஜயராணி இடம் பெறுவார்.

மறுபடியும் உங்கள் ஆர்வத்துக்கு நன்றி மாதங்கி.

சுந்தர்ஜி சொன்னது…

அப்பாடி!இந்தப் புள்ளையாண்டன் தக்குடு வரலையேன்னு இப்பத்தான் ஜாரிச்சுண்டிருந்தேன்.

தெரட்டிப்பாலும் தச்சு மம்முவும் வெச்சுருந்தேனே அடுக்களைல எடுத்துச் சமத்தாத் சாப்டுட்டுப் போடா கொழந்தே.

(ஸ்வாரஸ்யத்துக்காக இப்படியே தவிர உங்களை வாங்கோ வாங்கோ தக்குடு என்று வரவேற்பதுவே என் பாணி. முதல் வருகையின் பின்னால் தொடரட்டும் உங்கள் வருகைகள்.நன்றி சகோதரரே.)

கோவை2தில்லி சொன்னது…

நல்ல பகிர்வு சார். அழகாக தொகுத்துள்ளீர்கள்.

”மழை வருது மழை வருது
நெல்லு குத்துங்க
அரிசிமாவும் உளுந்து மாவும்
போட்டு முறுக்கு சுத்துங்க”

”இட்லிக்கும் சட்னிக்கும்
சண்டை வந்துச்சாம்
ஈரோட்டு மாபிள்ளைக்கு
கொண்டை வந்துச்சாம்”

இதெல்லாம் நாங்கள் சிறுவயதில் சொல்லியிருக்கோம்.

பத்மா சொன்னது…

டூ டூ டுப்பாக்கி
போலீஸ்காரன் பொண்டாட்டி
கோதுமை ரொட்டி
கொண்டுவாடி குட்டி.

பத்மா சொன்னது…

வட்டமான தட்டு
தட்டு நிறைய லட்டு
லட்டில் பாதி பிட்டு
போட்டான் வாயில் கிட்டு
மீதமுள்ள லட்டு
முழுதும் தங்கை பட்டு
போட்டாள் வாயில் பிட்டு
பட்டு நான்கு லட்டு
கிட்டு நான்கு லட்டு
மீதம் காலி தட்டு



ஒரு குடம் தண்ணி ஊத்தி ஒரே பூ பூத்துதாம்
ரெண்டு குடம் தண்ணி ஊத்தி ரெண்டே பூ பூத்துதாம் ...
(மாட்டிகொண்ட பின்)
இது மட்டும் வரம் தரேன் விடுடா கிறுக்கா
விடமாட்டேன் பலுக்கா

பத்மா சொன்னது…

கொழக்கட்டை கொழக்கட்டை ஏன் வேகலே
அடுப்பு எரியல நா வேகலே
அடுப்பே அடுப்பே ஏன் எரியலே
புல்லு மொளச்சுது நா எரியலே
புல்லே புல்லே ஏன் மொளைச்சே
மாடு திங்கலே நா மொளச்சேன்
மாடே மாடே ஏன் திங்கலே
கொழந்தை அழுதுது நா திங்கலே
கொழந்தே கொழந்தே ஏன் அழுத
எறும்பு கடிச்சுது நான் அழுதேன்
எறும்பே எறும்பே ஏன் கடிச்சே
பொந்துக்குள்ள கைய விட்டா சும்மா இருப்போமா?ஹிஹிஹி

பத்மா சொன்னது…

தாரமையா
ரகு குல ரவிகுல
ராம சந்த்ரையா
சின்னி கிருஷ்ணையா ....
சீதா ராமையா...
இது குழந்தைகள் கையை திருப்பி அழகு பார்க்கும் போது பாடுவது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...