30.3.12

ரமேஷ்கல்யாணின் ஒரு சிறந்த கவிதை.

அருவி

நம்பிக்கையின் விளிம்பில் பயணித்தவன்
இந்த நீரூற்றின் மேல் விளிம்பில் நின்றபடி
யோசித்தான்

மலையின் வெடிப்பில் பாய்ந்து
விழுந்துகொண்டிருக்கும் அருவி
எழுந்துகொண்டிருக்கும் திவலை

ஒரு நீரால் எவ்வளவு ஆனந்தமாக
விழ முடிகிறது இவ்வளவு உயரத்திலிருந்து!

கரையின் விளிம்பில் இவ்வளவு ஒட்டில்
முளைத்து வளர்ந்திருக்குமிம் மரத்திற்கு
என்றாவது விழுந்துவிடுவோம்
என்ற பயம் இருக்கிறதா?
அதல பாதாளத்தை எட்டிப்பார்ப்பதுபோல்
தன் கிளைகளை நீட்டி பார்க்கிறது.

கவலைகளைக் கல்லென உருவகித்து
ஒவ்வொன்றாக நீர்ப்பள்ளத்தாக்கில் வீசுகிறான்.
ஒரு சிறு கல்லை எடுத்து
பள்ளத்தாக்கில் போடும் அந்த நொடியில்
இக்கரையிலிருந்து கிளம்பி
மறுகரையின்  முனையிலுள்ள மரத்திற்கு
சாவதானமாக பறந்து செல்கிறதொரு காகம்.

கல் தன் ஆழம் கடந்து நீரில் மூழ்கும் நொடியில்
இந்த காகம் மறுமுனயிலுள்ள மரத்தில் சென்று அமர்கிறது.
இரு பயணங்கள் நீள ஆழ பரிமாணங்களில்.

துயரின் கனங்கள்
துயரின் கணங்கள்
ஒவ்வொரு கல்லாக எடுத்து போட்டுக்கொண்டேயிருக்கிறான்

ஒரு யதேச்சையான நொடியில் பார்க்கிறபோது
ஒரு காகம் மறுமுனைக்கு பறக்கிறது
கற்களெல்லாம் கரையில் மீந்திருக்க.

நேற்று யதேச்சையாய் இந்தக் கவிதையை ரமேஷ்கல்யாணின் மனதோடு எனும் வலைப்பூவில் வாசித்தேன். என்ன அற்புதமான கவிதை? ஒவ்வொரு கல்லாக நீர்ப்பள்ளத்தாக்கில் அவர் வீசவீச ஒவ்வொரு சொல்லும் அனுபவமாக மனதின் ஆழ்பள்ளத்தாக்கில் மூழ்கி மறைகிறது. காகம் கடக்கும் தொலைவுக்கு மனதும் கடந்து செல்ல விழைகிறது. நல்ல கவிதைக்கு இவர் எழுதிய இந்த ஒரு கவிதை போதும்-இவர் இனிக் கவிதைகள் எழுதாது போனாலும்.

நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர்களுக்கு இந்தக் கவிதை நீச்சல்வித்தை தெரிந்தவன் ஓர் ஆழ்கடலில் நீந்தித் திளைக்கும் சாகசத்தைத் தருகிறது. மிகக் கொஞ்சமாக தேர்ந்தெடுத்தாற்போல எழுதும் ரமேஷ்கல்யாணிடம் நான் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறதாய் உணர்கிறேன். 

இவருடைய இன்னொரு வலைப்பூ Prides of Penuparthy.இந்த வலைப்பூ இவரது முன்னோர்களிடம் இவர் பார்த்த பகிர்ந்துகொண்ட கேட்ட அபூர்வமான செய்திகளை மிக நெருக்கமான மொழியில் சிக்கனமாக ஆனால் சுவாரஸ்யமாகச் சொல்கிறது.

இனி நான் போக நினைக்கும் பாதையில் ஏற்கெனவே பன்.இறையின் கவிதைகளைச் சொன்னது போல் ரமேஷ் கல்யாணும் தடம் பதிப்பதாய் உணர்கிறேன். இவர்களைப் போல் நான் கவிதைகள் எழுத ஆசைப்படுகிறேன்.

நல்ல எழுத்தை வாசிக்க நினைப்பவர்கள் தவறவிடக்கூடாத எழுத்து ரமேஷ்கல்யாணுடையது.

வாழ்த்துக்கள் ரமேஷ்கல்யாண்.

1 கருத்து:

ரிஷபன் சொன்னது…

ஒரு நீரால் எவ்வளவு ஆனந்தமாக
விழ முடிகிறது இவ்வளவு உயரத்திலிருந்து!

ஆனந்தமான அறிமுகம்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...