4.3.12

ஃபோர்மனெக்கும் தமிழ்ப்பெண்டிரும்


யாரொஸ்லாவ் ஃபோர்மனெக்- 
jaroslav Formánek 

மேலே இணைத்திருப்பது 
ஃபோர்மனெக்கின் படம் அல்ல.

சத்தியம். ஃபோர்மனெக் சுவாரஸ்யமான ஒரு கேரெக்டர் என்பது சத்தியம். நான் தஞ்சாவூரில் ப்ரகாஷின் வட்டத்தில் இருந்த 80களில் தமிழ் கற்றுக்கொள்ள வந்த செக் நாட்டு மாணவன். கோபாலியின் தயவால் கிடைத்த கொடை. ப்ராக் நகரத்தில் ஒரு பூங்காவின் பாதுகாப்பாளனாக இருந்த ஃபோர்மனெக் ப்யானோ வாசிப்பதிலும் பாடுவதிலும் அற்புதமான கலைஞன்.

தமிழ் அவன் பார்வையில் பட்டது தமிழுக்கு ஒரு அனுபவம்.( இந்த ஒருமை ஏக வசனம் நான் பொதுவாகப் பயன்படுத்தத் தயங்குவது.அன்பின் நெருக்கத்தால் அவன்.தவறென்று ஒருவேளை இதைப் படிக்கும் ஃபோர்மனெக் கருதக்கூடுமானால் ஸாரிபா ஃபோர்மனெக்) பல விஷயங்களை எப்படி இன்னொரு கோணத்தில் பார்ப்பது என்பதைக் கற்றுக் கொடுத்த வ்யக்தி. 

கழுத்தில் சிவப்பு அரைஞாண் கயிற்றில் கோர்த்த ருத்ராக்ஷம்.இடுப்பில் நாலு முழ வேஷ்டி.ஒரு பழைய ஹெர்குலிஸ் சைக்கிள். வாயுசாந்திக்கு அவ்வப்போது கணேஷ் அல்லது சொக்கலால். பல ஊர்களுக்கு ஃபோர்மனெக்கோடும் அவனுடைய தோழி எவ்லினோடும் சுற்றிய நாட்கள் இப்போது த.க.வின் இந்த அற்புதமான சிறுகதையின் மூலமாக என்னைச் சுற்றுகின்றன.

இந்தச் சிறுகதை தஞ்சாவூர்க்கவிராயரின் தேர்ந்த எழுத்துக்கும் பற்களையும் மனதையும் குலுங்கவைக்கும் சிரிப்புக்கும் மற்றுமொரு உரைகல். மூழ்கி முத்தெடுக்க உங்களை அழைக்கிறேன்.

இனி இச்சிறுகதை உங்களுக்காக-

                              ஃபோர்மனெக்கும் தமிழ்ப்பெண்டிரும்.  

ரு வெள்ளைக்காரனுடன் ஒரே வீட்டில் குடியிருந்த அனுபவம் எத்தனை பேருக்குக் கிடைத்திருக்கும்? எனக்குக் கிடைத்தது. 25 வருடங்களுக்கு முந்தைய கதையைச் சொல்கிறேன்.

தஞ்சாவூர் மேல வீதியில் பாலோபா சந்தில் குடியிருந்தோம். தஞ்சாவூர் சந்துகள் பிரசித்தி பெற்றவை. புராதனத் தன்மை கொண்டவை. விசித்திரமான மராட்டியப் பெயர்களுடன் கூடிய தஞ்சாவூர் சந்துகளில், தலைமுறை தலைமுறையாக மனிதர்களும் மாடுகளும் வசித்து வருகிறார்கள். அழகான பெண்களும், அசிங்கமான சாக்கடைகளும், தண்ணென்ற குளிர்ச்சியும் கொண்ட திண்ணைகளும் எந்தச் சந்தில் நுழைந்தாலும் ஒரே மாதிரி தோற்றத்துடன் திகைப்பை உண்டு பண்ணும்.

வேடிக்கையாக ஒரு கதை சொல்வதுண்டு. சந்துக்கு வெளியே தெருவில் ஒரு மாமி கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அந்த வழியே ஒரு ஆசாமி கையில் ஒரு துண்டு பேப்பருடன் முகவரி விசாரித்து இருக்கிறார். மாமி கோலம் போடுவதை நிறுத்திவிட்டு அவருக்கு வழி சொல்லி அனுப்பியிருக்கிறார். அடுத்த வ்ருடம் அதே தெரு அதே சந்து. அதே மாமி கோலம் போடுகிறார். ஒரு ஆள் முகவரி கேட்டு துண்டுச் சீட்டை நீட்டுகிறார். மாமி அமைதியாகக் கேட்டாராம். “ இன்னுமா அந்தச் சந்தைக் கண்டுபிடிக்க முடியலை?”.

அதற்காகத் தஞ்சாவூர்ச் சந்துகளை இளக்காரமாக நினைத்துவிடாதீர்கள். பெரிய எழுத்தாளர்கள், சங்கீத வித்வான்கள், பண்டிதர்கள், கலைஞர்கள் எல்லாம் இங்கே வந்திருக்கிறார்கள். அது சரி. வெள்ளைக்காரன் விஷயம் என்ன என்றுதானே கேட்கிறீர்கள்? கொஞ்சம் இருங்கள். ஒரு வாய் வெற்றிலை போட்டுக் கொண்டு வந்துவிடுகிறேன். வெற்றிலை போடாமல் கதை சொல்வதாவது?

அப்போது பல்கலைக்கழகத்தில் நான் ஒரு பொறுப்பான பதவியில் இருந்தேன். வெளிநாடுகளில் இருந்து ஆய்வின் நிமித்தமும் தமிழ் படிக்கவும் வெள்ளைக்காரர்கள் நிறையப் பேர் வருவார்கள். அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்கும் பொறுப்பைத் துணைவேந்தர் (வாட் எ நேம்!) என்னிடம் ஒப்படைத்து விடுவார்.

ஒரு நாள் நல்ல வெயில். செகோஸ்லோவாகியாவில் இருந்து ஒரு இளைஞன் வந்து சேர்ந்தான். பால் வடியும் முகம் அப்படியே தக்காளி போல் கன்றிப் போயிருந்தது. துணைவேந்தரிடம் என்ன சொன்னான் என்று தெரியவில்லை. 

“அவன் பெயர் யாரொஸ்லாவ் ஃபோர்மனெக். அவனுக்கு விடுதி வாழ்க்கை வேண்டாமாம். ஏதாவது ஒரு தமிழ்க் குடும்பத்துடன் வாடகை விருந்தாளியாகத் தங்கிக்கொள்ள விரும்புகிறான். பேசாமல் ஒரு பெரிய வீடாகப் பார்த்து அவனை உன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொள்ளேன். ஒரு வருஷம்தானே?”

நான் தலையாட்டினேன். என் மனைவிக்கு இந்த ஏற்பாடு பிடித்திருந்தது. ஐயங்கடைத்தெரு அருகிலேயே ஒரு தனி வீடு கிடைத்தது. 500 ரூபாய் வாடகை. திண்ணை. திண்ணையை ஒட்டி ஒரு தனி அறை. பெரிய கூடம். இரண்டு படுக்கை அறைகள். ஸ்டோர் ரூம். பூஜை அறை. பின்புறம் கிணறு. திண்ணையை ஒட்டிய தனி அறையை ஃபோர்மனெக்குக்கு ஒதுக்கிவிட்டோம்.

“ஒண்டிக்கட்டை தானே? அந்த ரூம் போதுங்க அவனுக்கு. அவன் முந்நூறு ரூவா கொடுக்கட்டும். நாம எரநூறு கொடுப்போம்” என்றாள் என் மனைவி.

”இது அநியாயம்” என்றேன்.

ஆனால் இதற்கு ஃபோர்மனெக் மறுபேச்சு இன்றி ஒப்புக்கொண்டான். மீந்து போன குழம்பு, சட்னி வகையறாக்கள், ஆறிய சாதம், கூட்டு எல்லாம் எடுத்து வைத்து ஃபோர்மனெக்குக்குப் பரிமாறினாள். 

“எப்படி இருக்கு எங்கள் வீட்டுச் சமையல்?” என்று கேட்டாள் என் மனைவி.

ஃபோர்மனெக் படு கூர்மையானவன். என்னைப் பார்த்துக் கண் சிமிட்டியபடி “நான் ஒங்க வீட்டுத் தோத்தோ” என்றானே பார்க்கலாம்.

என் மனைவி முகம் போன போக்கு!

ஃபோர்மனெக்கின் அறை புத்தகங்களாலும் இசை ஆல்பங்களாலும் நிரம்பி வழிந்தது. அலுவலகத்தில் இருந்து வந்த்தும் அவன் அறைக்குள் போய்விடுவான். அகநானூறு, புறநானூறு போன்ற பழைய தமிழ் இலக்கியங்களில் இருந்து பெண்களைப் பற்றிய குறிப்புகள் சேகரிப்பான். 

”காக்கைப்பாடினியார் ஆணா? பெண்ணா?” என்று கேட்டான் ஒரு நாள்.

காக்கையாவது பாடுவதாவது? எனக்கென்ன தெரியும்?

வாசல் பக்கம் ஜன்னலைச் சாத்தியே வைத்திருந்தான். ”குழந்தைகள் மட்டுமல்லாமல் சில சமயம் பெரியவர்கள் கூட அதன் வழியே எட்டிப் பார்க்கிறார்கள். எனக்கு சங்கோஜமாக இருக்கிறது” என்றான்.பிறருடைய அந்தரங்கத்தைத் திருட்டுத் தனமாகப் பார்ப்பது எங்களது பிறவிக்குணம் என்று எப்படிச் சொல்வது?

ஃபோர்மனெக் வந்துவிட்டால் திண்ணைகளில் உட்கார்ந்திருக்கும் பெண்கள் பேச்சை நிறுத்திவிட்டு அவனையே பார்த்துக் குசுகுசுவென்று பேசிக்கொள்வார்கள். ஃபோர்மனெக் யாரையும் ஏறிட்டுக் கூடப் பார்க்க மாட்டான். முகத்தில் நாணம் கலந்த சிரிப்புடன் தன் அறைக்குள் புகுந்துகொள்வான். அங்கே அவனுக்காகப் பழந்தமிழ்ப் பெண்டிர் கூட்டம் காத்திருக்கும்.

“பழங்காலத்துத் தமிழ்ப் பெண்ணொருத்தி முறத்தால் புலியை விரட்டினாளாமே? முறம் எப்படி இருக்கும்? அது பயங்கரமான ஆயுதமா?” என்று கேட்டான். முறத்தைக் கொண்டு வந்து காட்டினேன். ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டான்.

”அடடே! இதை வைத்துப் புலியை எப்படி விரட்டியிருப்பாள்?”

“விரட்டியது முறமல்ல. அவள் வீரம்” என்றேன்.

என் மனைவிக்குத்தான் கோபம். ”ஐயோ! அது அழுக்கு முறமாச்சே! அதைக் கொண்டு போய் அவனிடம் காட்டினீர்களாக்கும்! என்னைப் பற்றி என்ன நினைப்பான்?”

பீத்தோவனின் இசை சிம்ஃபனியை ஃபோர்மனெக் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். தியாகையரின் கீர்த்தனைகளைக் கேட்கும்போது எனக்கு ஏற்படும் அதே பரவசம் பீத்தோவனிடமும் கிடைத்தது. ஃபோர்மனெக்கின் அறை எனக்குப் பொழுதுபோக்கு மட்டுமன்றி மனைவியிடமிருந்து தப்பிக்கும் உபாயமாகவும் மாறியது.

“எப்பப் பாத்தாலும் என்ன அவன் ரூமிலேயே பழியாக் கெடக்கறீங்க? ம்யூஸிக் வால்யூமைக் குறைச்சு வெக்கச் சொல்லுங்க. ஒரே இரைச்சல்”

இசை என்னை வேறு ஓர் உலகுக்கு இழுத்துச் சென்றது. அந்த உலகத்தில் ரேஷன் கடை இல்லை. அலுவலகம் இல்லை. சின்னக் கவலைகள் இல்லை. மனைவியில்லை. ஒரே சமயத்தில் நூறு வயலின்கள் உச்சத்தைத் தொட்டன. ஃபோர்மனெக் ஆட ஆரம்பித்து விட்டான். நானும் ஆட ஆரம்பித்திருந்தேன்.

திடீரென்று கதவை யாரோ இடிக்கும் சப்தம். கோபத்துடன் திறந்தேன். என் மனைவியின் கண்களில் பொறி பறந்தது. 

“மணி என்ன தெரியுமா?”- அவள்.

“தெரிய வேண்டியதில்லை”-நான்.

“ஒங்களுக்கு வேண்டாம். அக்கம்பக்கத்துல இருக்கறவங்க தூங்க வேண்டாமா? ராத்திரி ஒரு மணிக்கு இப்படி அவனோட சேர்ந்துக்கிட்டு கூத்தடிக்கிறீங்களே? இது நியாயமா?”

சாதுவான நாய்க்குட்டி மாதிரி போய்ப் படுத்துக் கொண்டேன்.

பூட்டப்பட்ட அறைக்குள் இருந்து பூம் பூமென்று இசையின் நீர்வீழ்ச்சி இடுக்கு வழியே கசிந்துவந்து என்னை நனைத்தது. என் மனைவிக்கு அவன் மீது எரிச்சல் அதிகமாகிக் கொண்டே வந்தது.

ஃபோர்மனெக்குக்குப் புரிந்தது. ஆனால் ஏதோ பரீட்சைக்குப் படிப்பவன் போல் தமிழ்ப் புத்தகங்களை விழுந்து விழுந்து வாசித்துக் கொண்டிருந்தான். 

”இவ்வளவு தூரம் கடல் கடந்து வந்து தமிழ் படிக்கறதுல உனக்கு என்ன பிரயோஜனம்?” என்று ஒரு நாள் கேட்டேன்.

“உங்கள் நாட்டில்தான் படிப்புக்கும் வேலைக்கும் முடிச்சுப் போட்டு வைத்திருக்கிறீர்கள். எங்கள் ஊரில் மனசுக்குப் பிடிக்கிறதைப் படிப்போம். ஏதோ ஒரு வேலை. கொஞ்சம் பணம். கொஞ்சம் புத்தகம். நிறையப் பயணம். பணம் சேர்ந்ததும் மறுபடி ஊர்சுற்றக் கிளம்பி விடுவோம்?”

ரு நாள் சாயங்காலம். எங்கள் வீட்டில் எரிமலை வெடித்தது. ”ஒங்க ஃப்ரெண்டால் எனக்கு இன்னிக்கு மானம் போச்சு” என்று குதித்தாள் என் மனைவி.

”என்னாச்சு சொல்லு.”

”ஃபோர்மனெக் மத்தியானம் வீட்டுக்கு வரும்போது கூடவே ஒரு காதல் ஜோடியைக் கூட்டிக்கிட்டு வந்துட்டான். ரெண்டும் ஒண்ணோட ஒண்ணா ஒட்டிக்கிட்டே வருதுங்க. அதுங்க ரெண்டும் நம்ம வீட்டுக்கு முன்னாடியே ஒருத்தர ஒருத்தர் கட்டிப் பிடிச்சு வாயைக் கவ்விக்கிட்டு அப்டியே.. சீச்சீ1 எவ்வளவு நேரம்? சரிதான் விலகிடிச்சுங்கன்னு பாத்தா மறுபடியுங் கட்டிப் புடிச்சு...கண்றாவி. தெருவே வேடிக்கை பாக்குது. வாயைப் பொத்திக்கிட்டு சிரிக்கிதுங்க”.

“இலவசமா ஒரு சினிமா” நான் பாடினேன்.

“ஏங்க ஒங்களுக்கு வெட்கம் மானமே கெடையாதா?”

“பப்ளிக்ல சண்டை போடலாம். முத்தம் கொடுக்கக் கூடாதா? நாம வெளீல போகும்போது சில சமயம் நீ ரொம்ப அழகா இருப்ப. மஞ்சள் வெய்யில் காயும். எனக்கு உன்னை அப்படியே கட்டிப் பிடிச்சு முத்தங் குடுக்கணும்னு தோணும்”

“சீ! வெட்கங் கெட்ட மனுஷன்!”

நினைத்தபோது எல்லாம் பறவைகள் முத்தம் கொடுத்துக் கொள்வது இல்லையா? மனிதர்களுக்கு மட்டும் ஏன் இந்த ஹிப்பக்ரஸி? முத்தத்தைப் பாலியல் சமாச்சாரத்தோடு முடிச்சுப் போடுவது முட்டாள்த்தனமல்லவோ? ஒருவரை ஒருவர் நேசிக்கும் ஆணும், பெண்ணும் தங்களை கௌரவித்துக் கொள்ளும் உயர்ந்த செயல் அல்லவா அது?

“ என்ன யோசனை?” என்று கேட்டான் ஃபோர்மனெக். நடந்ததைச் சொன்னேன். 

“முத்தம் என்பது ஒரு மொழி. அதை எங்கு பேசினால் என்ன?” என்றான் சுருக்கமாக.

“கோபால்! உடுக்கு எங்கே கிடைக்கும்?” என்று கேட்டான் ஒரு நாள்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

“என்னது உடுக்கையா?”

“அதுதான் உங்கள் சிவபெருமான் கையில் வைத்திருக்கிறாரே! அது அந்தக் கால இசைக்கருவியாம். நான் பார்க்க வேண்டும் அதை”.

அவன் கண்களில் ஆர்வம் பளபளத்தது.

“ரொம்பப் பழங்காலத்து இசைக்கருவியாச்சே அது? இப்பக் கிடைப்பது கஷ்டம்” என்று மழுப்பித் தட்டிக் கழித்துவிட்டேன்.

ஒருவாரம் கழிந்திருக்கும். கூடத்தில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

“கோபால்!” 

உற்சாகமாகக் கூவியபடியே உள்ளே நுழைந்தான் ஃபோர்மானெக். நேராக நான் சாப்பிடும் இடத்துக்கே வந்துவிட்டான். என் மனைவி முகம் சுளித்தாள். 

“கோபால்! இதோ பார். “

தன் கைப் பையில் இருந்து எதையோ எடுத்தான். உடுக்கை. நிஜமான உடுக்கை.

“சாப்பிட்டுவிட்டு என் அறைக்கு வா”

“கர்மம்! யாரோ பேய் விரட்டும் பூசாரிகிட்ட இருந்து வாங்கி வந்திருப்பான் போல” என்றாள் என் மனைவி.

நான் ஃபோர்மனெக் அறைக்குள் நுழைந்தேன். அங்கே செக்கச்செவேலென்று வெற்று உடம்போடு நின்றுகொண்டிருந்தான். இடுப்பில் புலித்தோல் மாதிரி வண்ணம் தீட்டிய துண்டு. காலில் சலங்கை. கையில் உடுக்கை. ரிகார்ட் ப்ளேயரிலிருந்து பீத்தோவனின் அற்புதமான இசை பீறிடுகிறது.

“கோபால்! கவனி. எங்கள் இசையோடு உடுக்கை ஒலியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்? என்று சோதனை செய்யப் போகிறேன்”

உடுக்கை ஒலித்தது. வயலின்கள் வீறிட்டன. கால் சலங்கை ஒலிக்க ஃபோர்மனெக் ஆடலானான். மெல்ல மெல்ல இசையின் ஸ்தாயி உயர உயர அவன் ஆட்டத்தின் வேகம் கூடிக்கொண்டே போயிற்று. அவனுடைய தலைமுடி சுழன்றது. சிவனின் ஊழித் தாண்டவம்.

”தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!” என்று கைகூப்பி வணங்கினேன். கதவு இடிபடும் ஓசை. திறந்தேன். பத்ரகாளியாக என் மனைவி. அவளுக்குப் பின்னால் எதிர்வீட்டு-பக்கத்து வீட்டு மனிதர்கள்.

“கொழந்தைங்க பரீட்சைக்குப் படிக்கறாங்க. இங்க என்ன கூத்தடிக்கிறீங்க? ஒண்ணு இந்த வீட்டுல அவன் இருக்கணும். இல்லன்னா நான் இருக்கணும். சார்! நீங்கல்லாம் போங்க. நான் கவனிச்சுக்கறேன்”.

அவர்கள் வெளியேறினார்கள். என்ன நடந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. என்ன உலகமடா இது? தினசரி ராத்திரி குடித்துவிட்டு வந்து பெண்டாட்டியை உதை உதையென்று உதைக்கிறான் ஒருத்தன். இந்தத் தெருவில் ஒரு பயல் அவனைக் கேட்டது கிடையாது. நாங்கள் இசை கேட்பது இடைஞ்சலாகப் போய்விட்டதா?

ஃபோர்மனெக் பிடிவாதம் பிடித்தான். விடுதி வேண்டாமாம். நல்ல வேளை அரண்மனையின் ஒரு பகுதியில் சிதிலமடைந்த பழைய கட்டிடத்தில் ஓர் அறை இருந்தது. அது மன்னர் பரம்பரையின் நிர்வாகத்திலிருந்தது. கேட்டதும் கொடுத்து விட்டார்கள். பகலில் கூட இருட்டாக இருந்த அந்த அறைக்குக் குடி பெயர்ந்தான் ஃபோர்மனெக். உடைந்த பல்லக்குகள். நூலாம்படை தொங்கும் பழங்கால ஓவியங்கள் மாட்டிய சுவர்கள். அங்கே நிலவிய அமைதியில் காலம் நகராமல் நின்று போயிருந்தது.

“ஆஹா பிரமாதம்” என்றான் ஃபோர்மனெக். அங்கே இருந்த வாட்ச்மேன் என் காதில் கிசுகிசுத்தான். “சார்! செத்துப் போன ராஜா ராணிங்களோட ஆவிங்கயெல்லாம் இஞ்சதான் அலையுதுங்க.”

நான் ஃபோர்மனெக்கைப் பார்க்கப் போவதைக் குறைத்துக் கொண்டேன். 

ஃபோர்மனெக்கைப் பார்த்து இரண்டு மாதங்களாகி விட்டன. நானும் என் மனைவியும் ஷாப்பிங் போய்விட்டுக் கீழ ராஜ வீதியிலிருந்த டாக்டர் நரேந்திரன் க்ளினிக் நோக்கி சென்று கொண்டிருந்தோம். போகிற வழியில் ப்ரகாஷ் கடையில் ஒரே சிரிப்பு. கூத்து. சுந்தர்ஜி-முத்து-விச்சு-செல்லத்துரை-கவிஜீவன் .....நடுநாயகமாக ஃபோர்மனெக்.

எங்களைப் பார்த்து எழுந்து வந்தான். 

“எப்படி இருக்கீங்க? “என் மனைவியைப் பார்த்து மழலைக் குரலில் கேட்டான்.

என் மனைவி அவனைப் பார்த்து சிநேகமாகச் சிரித்தாள்.

“நீங்க எப்படி இருக்கீங்க ஃபோர்மனெக்? ஒரு நாள் எங்க வீட்டுக்கு வாங்க” என்றாள்.

அவள் கண்கள் கலங்கி விட்டன. 

ஃபோர்மனெக்கின் விழிகள் வியப்பால் விரிந்தன. துரத்தாத குறையாக ஃபோர்மனெக்கை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு என்ன உருக்கம்?

என்னை நெருங்கிக் காதருகில் கிசுகிசுத்தான் ஃபோர்மனெக்.

“இந்திய மனைவிகள் பற்றிய ஆய்வுக்கு எனக்கு விஷயம் கிடைத்து விட்டது”   

நன்றி- ஆனந்தவிகடன் -23-06-2010.

3 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல கதை ஜி....

தஞ்சாவூர் கவிராயர் பக்கத்திற்கு நீங்கள் கொடுத்த லிங்க் வேலை செய்ய வில்லை. Blog Not Found என வருகிறதே....

வெங்கட் நாகராஜ் சொன்னது…

திரும்பவும் முயற்சித்தேன். வேலை செய்கிறது......

நட்புடன்

வெங்கட்.

நிலாமகள் சொன்னது…

ஆன‌ந்த‌ விக‌ட‌னில் பிர‌சுர‌மான‌போதே ர‌சித்துப் ப‌டித்து க‌விராய‌ருட‌ன் ப‌கிர்ந்திருக்கிறேன்.

ச‌ங்க‌ப் புல‌வ‌ர்க‌ளின் 'ஆற்றுப்ப‌டுத்த‌ல்' போல் க‌விராய‌ர் ப‌க்க‌ம் அறியாத‌வ‌ர்க‌ளை திருப்பும் த‌ங்க‌ள் ந‌ட்பின் உன்ன‌த‌ம் ம‌கிழ்த‌ற்குரிய‌து ஜி!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...