2.8.12

இன்றைய விகடனில் “என்ன சொல்ல வருகிறார் கடவுள்?”



நகரத்தின் ஓசை
மெல்ல அடங்கத் துவங்குகையில்

மூடப்படும்
ஒரு ரயில் நிலையத்தின்

ஆளற்ற படிக்கட்டுக்களில்
தொழுநோயாளி
நாணயங்களை எண்ணிக் கொண்டிருக்க-

தண்டவாளங்களில்
சிதறிக் கிடந்தவற்றை
முகர்ந்து சோம்பலுடன்
நகர்கிறது நாய்.

யாரிடமும்
பகிர வழியற்ற துயரத்தைக்
கண்ணீருடன் தணித்துக் கொள்கிறான்
அந்த இளைஞன்.

விற்காத பழங்களின் சுமையோடு
நாளையின் மீதான நம்பிக்கையையும்
சுமந்து கடக்கிறாள் பழக்காரி.

சாப்பிட எதுவுமற்றுக்
குழாய்த் தண்ணீரில்
பசியை அலசுகிறான்
ஊரை விட்டு ஓடி வந்த சிறுவன்.

கடவுள் என்ன சொல்ல வருகிறார்?
என்றெண்ணியபடி
காலி சிகரெட் பெட்டியை
உதைத்தபடி நடந்து செல்கிறேன் நான்.

நன்றி- ஆனந்தவிகடன் - 08.08.2012

24 கருத்துகள்:

கோவை மு சரளா சொன்னது…

வரிகள் கொடுக்கும் வலியை
படம் அதிகரிக்கிறது ..............

படித்து முடித்ததும்
கனத்து போனது மனது ...........

சங்கவி சொன்னது…

படமும், வரிகளும் கணக்கிறது...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வரிகளும், படமும் மனதைக் கலங்கடிக்கிறது....

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நெகிழ்ச்சியான பதிவு...

கே. பி. ஜனா... சொன்னது…

வலிமையான வார்த்தைகளில் வலியை காட்டும் கவிதை!

கீதமஞ்சரி சொன்னது…

காட்சிகளைக் கொண்டு உணர்வுகளைக் காட்டி, கண்களில் நீர்துளிக்கச் செய்துவிட்டீர்கள். கடவுள் என்ன சொல்ல வருகிறார்?

தாய் சுரேஷ் சொன்னது…

வாழ்த்த வயதில்லை எனக்கு.இருப்பினும் மனம்
வலித்தது.அழுதேன்.என் அம்மாவிடமும் படித்து
காட்டினேன்.

அவர்களுக்கு ஓரளவு புரிந்ததும் உங்களை மனம் மகிழ வாழ்த்தினார்கள்.

யாருப்பா இவரு உன் ப்ரண்டா?
என்றார்.

இல்லமா,இவரு ரொம்ப பெரிய கவிஞர்னு
சொன்னேன்.

ஏன் பா இந்த மாதிரி உனக்கு எழுத வரதா? என அம்மா கேட்டதும் சிறிது நேரம் மௌனம் காத்து, எழுதுறேன் மா என்றேன்.

இத்தனையும் உங்களது இந்த வார விகடன் கவிதைக்கு நடந்த உரையாடல் சார்.

சுந்தர்ஜி. சுந்தர்ஜி தான்.

சுந்தர்ஜி சொன்னது…

என் பாசத்துக்குரிய தாய் சுரேஷ்-

உங்களுக்கும் உங்கள் அன்னையாருக்கும் இடையே நடந்த உரையாடலில் நெகிழ்ந்தேன்.

முகம் பார்த்திராத உங்கள் அன்னையின் பாதங்களில் நமஸ்கரித்து அவர்களின் ஆசிகளை ஏற்றுக்கொள்கிறேன்.

வாழ்த்த வயது தேவையில்லை. மனமும் வாயும் போதும். அது உங்களிடம் இருக்கிறது. ஆனந்தமாக ஏற்றுக்கொள்கிறேன் எதிர்பாராதபோது தூவும் மழைத் துளிகளை ஏந்தும் சிலிர்ப்போடு.

உங்கள் உரையாடலில் இரு திருத்தங்கள்.

1. நான் பெரிய கவிஞன் இல்லை. (உங்கள் பெரிய சகோதரன்.)

2. உங்கள் நண்பனும் கூட.(ஏம்ப்பா இவரு உன் ஃப்ரெண்டா?)

என் கண் ஓரங்களிலும் கசிகிற்து உங்கள் அன்பு.

அம்மாவிடமும் இந்த மகனின் அன்பைச் சொல்லி நீங்களும் இதைவிடச் சிறந்த கவிதைகளை எழுதமுடியும் எனச் சொல்வீர்களா?

காமராஜ் சொன்னது…

மிகத்துல்லியமான காட்சி.வாவ்.கைகுடுங்க சுந்தர்ஜீ.

நம்பிக்கை பாண்டியன் சொன்னது…

அழகிய காட்சிபடுத்துதல் கவிதை!

கதிர்பாரதி சொன்னது…

உங்களுடைய கவிதைகள் புதிர்நிறைந்த வாழ்வின் முடிச்சுகளை அவிழ்த்துக்கொண்டு ஓடுகின்றன.

இரசிகை சொன்னது…

nallaayirukkunga sundarji...

nellai ram சொன்னது…

பாராட்டுக்கள்.

வாசன் சொன்னது…

எட்டி உதைப‌ட்ட‌ காலி பெட்டிக்குள் ஒளிந்திருந்த‌ க‌ட‌வுளைப் பார்த்திருப்பானோ?ஊரைவிட்டு ஓடி வ‌ந்திருந்த‌ சிறுவ‌ன்.

வேல்கண்ணன் சொன்னது…

வேதனையான வரிகள் சுந்தர்ஜி. நகரத்தில் பல இடங்களில் எந்நாளும் பார்க்க முடிகிற காட்சி இது. (தண்ணிரை குடித்து வயிற்றை நிரம்பும் சிறுவனுக்கு அப்படியான அபத்தமான கேள்வியெல்லாம் எழும்பாது என்று (?) நம்புகிறேன்)

ரிஷபன் சொன்னது…

ஊரடங்கிப்போனதும் ரயில்வே ஸ்டேஷன் எப்படி இருக்கும் என்று பார்க்க எனக்கும் ஆசை. காட்பாடி ரெயில்வே ஸ்டேஷனில் இப்படித்தான் கோவை செல்ல காத்திருந்த நேரம். தூங்கி வழிந்த நானும் ஸ்டேஷனும். இந்தக் கவிதை நானும் கிளம்பிப் போனபின்பான காட்சியின் பதிவு போல..

வை. கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அன்றாட யதார்த்த விஷயங்களை அழகாகக் கவிதையாக்கி,காலி அட்டைப்பெட்டியை அந்தப்பையன் தெருவில் உதைத்துச் செல்வது போலவே, எங்களை நோக்கி ஒரு பதிவாக உதைத்து அனுப்பியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்.

தினேஷ்குமார் சொன்னது…

ஆழமான வலிகள் அண்ணா.

வலிகள் அறியா பலர் வழிகள் அறிந்துள்ளோர் வழிகள் தெரியாமல்வலிகள் மட்டுமே சுகமான சுமையாக கண்ணில் படராதவாச முல்லை நம்தேசத்துள் எத்துனையோ.........

rathnavel சொன்னது…

அழகு கவிதை.வாழ்த்துக்கள்.

எஸ்.வி.வேணுகோபாலன் சொன்னது…

கவிதை அருமை.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை ஐயா

அப்பாதுரை சொன்னது…

'well deserved' என்கிறாரோ ஒரு வேளை எல்லாமறிந்தவர்??

தனலக்ஷ்மி பாஸ்கரன் சொன்னது…

எல்லோரையும் விட உன்னை நல்ல நிலையில்தான் வெச்சுருக்கேன். பார்த்து நடந்துக்கோன்னு சொல்றார் (கடவுளின் குரல் தனலக்ஷ்மி வழியாய்...ஹா).

விகடன் கவிதை செம்ம்...ம!

நாணற்காடன் சொன்னது…

விகடன் கவிதை அழகு ஐயா.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...