20.5.13

நிர்வாண ஷட்கம் - ஆதிசங்கரர்



வீட்டைத் துறந்து தன் குருவைத் தேடிப் பயணித்த இளம் சங்கரன், இமாலயத்தின் அடியில் பத்ரிநாத்தை அடைந்தபோது எட்டே வயது பாலகன். 

ஆச்சார்யர் கோவிந்தபாதரைச் சந்தித்த சங்கரன் அவர் பாதாரவிந்தங்களில் வீழ்ந்து தன் பணிவைச் சமர்ப்பித்தபோது “நீ யாரப்பா?” என்று கேட்ட ஒரு கேள்விக்கு, அந்தச் சீடனே ஒரு குருவோ என்ற தோற்ற மயக்கத்தை உண்டாக்கிய அந்த ஆறு ச்லோகங்களும் “நிர்வாண ஷட்கம்” என்று பெயர் பெற்றன.

ஆறு ச்லோகங்களும் ஒரு துள்ளும் இளங்கன்றின் வேகத்துடனும், முதிர் ஞானம் பெற்ற ஒரு துறவியின் ஆழத்தோடும், ஓடும் நதியாய்ப் பெருக்கெடுத்துச் செல்கிறது.   

நிர்வாண ஷட்கத்தை இதற்கு முந்தைய தலைமுறையினர் கோயில்களில் பாடக் கேட்டிருக்கலாம். வீடுகளில் பாடப்பட்டன. பிறகு இசைக் கருவிகள் பாடின. இப்போதோ நிர்வாண ஷட்கம் இயற்றப்படுவதற்கு முந்தைய பெருத்த நிசப்தம் நம் ஆலயங்களை,வீடுகளைப் பீடித்திருக்கின்றன. 

பற்றையும், பற்றின்மையையும் போதனையாய் ஒருங்கே நினைவுறுத்தும் இந்தப் பொக்கிஷத்தை நம் வீடுகளில் ஒலிக்கச் செய்வோம். குழந்தைகளின் காதுகளில் இவை ஒலிக்கட்டும். இவற்றின் பரிச்சயம் அவர்களின் செவிகளுக்கு உண்டானால், அதன் பொருளை எதிர்காலத்தில் தெரிந்து கொள்வார்கள்.

இனி நிர்வாண ஷட்கம்:

1.
மனோ புத்யஹங்கார சித்தா நினாஹம்,
ந ச ச்ரோத்ர ஜிஹ்வே, ந ச க்ராண நேத்ரே,
ந ச வ்யோம பூமிர், ந தேஜோ நவாயு:
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு
கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;
வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

2.
ந ச ப்ராண சங்க்யோ, ந வை பஞ்சவாயு: 
ந வாக் சப்த தாதுர், ந வா பஞ்சகோச: 
ந வாக் பாணி பாதம், ந சோப ஸ்தபாயு: 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்! 

உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை; 
எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை; 
கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை; 
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

3.  
ந மே த்வேஷ ராகௌ, ந மே லோப மோஹௌ, 
மதோ நைவ, மே நைவ மாத்ஸர்ய பாவ:  
ந தர்மோ ந சார்த்தோ, ந காமோ ந மோக்ஷ:  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;  
சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;  
அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

4.  
ந புண்யம் ந பாபம், ந சௌக்யம் ந துக்கம்!  
ந மந்த்ரோ ந தீர்த்தம், ந வேதா ந யக்ஞ:  
அஹம் போஜனம் நைவ, போஜ்யம் ந போக்தா,  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;  
மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;  
உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!   
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

5.  
ந ம்ருத்யுர் ந சங்கா, ந மே ஜாதி பேத:  
பிதா நைவ, மே நைவ மாதா, ந ஜன்மா  
ந பந்துர் ந மித்ரம், குருர் நைவ சிஷ்யா:  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;  
தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;
உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

6.  
அஹம் நிர்விகல்போ, நிராகார ரூபோ,  
விபுத் வாச்ஸ, சர்வத்ர, சர்வேந்த்ரி யானாம்  
நச சங்கடம் நைவ, முக்திர் ந மேயா  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!  

மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;  
எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;  
தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;  
சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

6 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

“நிர்வாண ஷட்கம்” விளக்கத்துடன் அருமை...

நன்றிகள் பல...

வாழ்த்துக்கள்...

V Mawley சொன்னது…

எனக்கு மிகவும் பிடித்த ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று ..மாலி

G.M Balasubramaniam சொன்னது…

நீ யாரப்பா என்ற கேள்விக்கான பதிலா இந்த நிர்வாண ஷட்கம்? சம்ஸ்கிருத மொழி கற்றவரா நீங்கள் சுந்தர்ஜி.? என்ன சொல்ல. நம் துரதிர்ஷ்டம் தான் இந்த மொழி வழக்கில் இல்லாதது. பல விஷயங்கள் உங்கள் இடுகைகளைப் படிப்பதில் கற்கிறேன் நான். நன்றி மட்டுமே சொல்ல முடியும்.

அப்பாதுரை சொன்னது…

எத்தனை ஆழம்! இதை என் இளமையில் வீட்டிலோ வெளியிலோ எங்கேயுமே கேட்டதில்லை.
GMB அவர்கள் சொன்னதே எனக்கும் தோன்றியது.

kashyapan சொன்னது…

சுந்தர்ஜி அவர்களே! மிக உயர்ந்த தளத்தில் உள்ளோருக்கான தத்துவ விசாரனை! சமணர்களிடையே ஒரு தர்க்கவியல் போக்கு உண்டு! ஒரு பொருளை விளக்குவதற்கு அது எதெல்லம் இல்லை என்று கூறி அது எது என்பதை விளக்குவார்கள்! ஆதி சங்கரர் அதே யுக்தியை பயன்படுத்தி உள்ளது வியப்பக உள்ளது!---காஸ்யபன்.

சிவகுமாரன் சொன்னது…

என்னைப் போன்ற சாமான்யர்களுக்கும் இந்த ஸ்லோகங்களை சேர்ப்பித்த தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...