27.6.11

காதற்ற ஊசி























பட்டினத்தார் 11ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கள் காலத்தைய மிக முக்கியமான இந்து சமயத் துறவி.

சிவநேசர்-ஞானகலை இவரின் பெற்றோர்கள். ஊர் காவிரிப்பூம்பட்டினம். திருவெண்காட்டின் கடவுளான ஸ்வேதாரண்யப்பெருமாளைக் குறிப்பதாய் சிறுவயதில் ஸ்வேதாரண்யன் என்று பெற்றோர்கள் பெயரிட்டனர்.

வணிகக் குடும்பத்தில் பிறந்த இவர் கடல்கடந்தும் பொருளீட்டி மன்னரின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். இவரின் செல்வாக்கைக்கருதி மரியாதை நிமித்தமாய் காவிரிப் பூம்பட்டினத்தைக் குறிக்கும் வகையில் மக்கள் இவரைப் பட்டினத்தார் என்றழைத்தனர்.

சிவகலை எனும் பெண்ணை மணந்த ஸ்வேதாரண்யனுக்கு நீண்ட நாட்கள் குழந்தைப் பேறின்றி வருத்தம் கொண்டிருந்தார். திருவிடைமருதூர் சென்று இறைவனை வழிபடும்போது ஓர் ஆண்குழந்தையை சிவசருமர் என்ற சிவபக்தர் ஒருவர் குளக்கரையில் கண்டெடுத்து அதை பட்டினத்தாரிடம் கொடுக்க அவரும் அக்குழந்தைக்கு மருதபிரான் என்ற பெயரிட்டு வளர்த்துவந்தார்.

மகன் வளர்ந்து பெரியவனானதும் வணிகத்துக்காக அவனைத் தயார் செய்து கடல் கடந்து வியாபாரம் செய்ய அனுப்பினார். அவனோ திரும்பிவரும்போது எருவரட்டியும் தவிட்டு மூட்டைகளுமாய் வந்திறங்கவே மிகுந்த கோபமுற்றார்.

மருதபிரானோ பதிலேதும் சொல்லாது ஒரு ஓலைத் துணுக்கையும் காதற்ற ஊசி ஒன்றையும் ஒரு பேழையில் வைத்துக் கொடுத்துவிட்டு வீட்டைவிட்டு எங்கோ சென்று விட ஓலைத் துணுக்கைப் பட்டினத்தார் எடுத்துப் படித்துப்பார்த்தார்.

 அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.

அந்த வாக்கியமே அவரின் வாழ்வில் திருப்புமுனையாய் அமைந்தது. தன் ஒப்பற்ற செல்வம் பொருள் அனைத்தையும் துறந்து ஒரு கோவணம் மட்டுமே தரித்துத் துறவு பூண்டார். அவரின் இந்தத் துறவு புத்தரின் துறவுநிலைக்கு இணையான துறவாகக் கருதப்படுகிறது.

அவர் துறவிக் கோலம் தம் குடும்ப கௌரவத்துக்கு அவமானம் உண்டாக்குவதாய் எண்ணிய அவருடைய மூத்த சகோதரி விஷம் தோய்த்த அப்பத்தை உண்ணுவதற்குக் கொடுத்தார்.

அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள். அவரை ஒரு சித்தராகக் கருதி பட்டினத்தடிகள் என்று எல்லோரும் மதிக்கத் தொடங்கினார்கள்.

பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னை மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.

அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதையை அடுக்கிப் பற்றச் செய்தார். அன்னையை எண்ணி கொழுந்துவிட்டெரியும் சிதையின் முன்னே பத்துப் பாடல்களைப் பாடினார்.

பெரும் புகழ்பெற்றவையாயும் கேட்பவரின் மனதை உருக்குவதாயும் இருக்கின்றன. அந்தப் பத்துப் பாடல்களும்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
          வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
          நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
          எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
          எல்லாம் சிவமயமே யாம்
பொறுமையாய் இந்தப் பத்துப் பாடல்களையும் வாசிக்க அவற்றின் பொருள் மிக எளியதாய் விளங்கும். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு.

பட்டினத்தார் குறித்த இன்னுமொரு இடுகை பின்னுமொரு நாளில்.

19 கருத்துகள்:

எல் கே சொன்னது…

நல்ல இடுகை சார். இன்னும் நல்ல விஸ்தாரமா எழுதணும்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அருமை..அருமை..அருமை..
இந்த பாடல்களைத் தான் நான் தேடிக் கொண்டு இருந்தேன்,சுந்தர்ஜி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

கொப்பூழ் கொடி உறவு கொண்ட மட்டும்,
கூடிக் கலந்த உறவு வரும் வீதி மட்டும்,
தப்பாமல் பிறந்த பிள்ளை காடு மட்டும்,
ஓடி வருது பாடையுடன் தர்மம் மட்டுமே

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்//

//ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் எத்தனை எளியதாய் எத்தனை ஆழமானதாய் இருப்பது பெரும் வியப்பிலும் வியப்பு.//

//"தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' // என்ற பழமொழிக்கான விளக்கம் இன்று தான் இந்தத்தங்கள் இடுகை மூலம் தெரிந்து கொண்டேன். நன்றி.


உண்மையில் மிகவும் வியப்பளிக்கிறது சுந்தர்ஜி, சார். அருமையா இடுகை. தொடருங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

குணம்குடி மஸ்தான் பற்றி
சுணங்காமல் நீர் எழுத,அதனை
அறிந்திடும் ஆவலுடன்,
அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.!!

மிருணா சொன்னது…

இந்த தமிழும் வியப்புதான், ஒரு துறவியின் உணர்வு வெளிப்பாடும் வியப்புதான். மறக்கக் கூடாத இந்த சிறப்பான வரிகளைப் பதிவிட்டதற்கு நன்றி திரு.சுந்தர்ஜி.

கருணாகார்த்திகேயன் சொன்னது…

இன்னும் நிறைய எழுதவும் ... ஆவலாக இருக்கிறது ....

அன்புடன்
கருணா கார்த்திகேயன்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பட்டினத்தார் பாடல்கள் மிகவும் பிரபலம். பல கோவில்களுக்குச் சென்று ஈசன் மேல் அவர் பாடிய பாடல்கள் அத்தனையும் நன்றாக இருக்கும்… நல்லதோர் பதிவுக்கு நன்றி ஜி!

காதறுந்த ஊசி என்று ஆரம்பிக்கும் தலைப்பிலேயே நானும் என்னுடைய ஒரு அனுபவம் பற்றி எழுதி வைத்து இருக்கிறேன். நாளை வெளியிடுவேன்…

G.M Balasubramaniam சொன்னது…

பட்டினத்தார் பாடல்களில் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுவது”முன்னை இட்ட தீ முப்புரத்திலே...........யானும் இட்ட தீ மூள்க மூள்கவே”என்பதாகும். இவ்வளவு விவரமாகப் பட்டினத்தாரைப் படித்ததில்லை.கண்ணதாசன் பாடல்களில் பலவற்றின் கருத்தும் இவரிடமிருந்து சுடப்பட்டதே என்ற குற்றச்சாட்டும் உண்டு. காளமேகம் பட்டினத்தார் என்று கலக்குகிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுந்தர்ஜி! பட்டினத்தார் கதையை சிக்கனமாய் சொல்லிவிட்டீர்கள்..
நீங்கள் குறிப்பிட்ட பத்து பாடல்களும் படிக்கும் தோறும கண்ணீர்மல்க வைக்கும்...

உங்கள் பழகு தமிழில் பத்து பதிவாவது பட்டினத்தார் பற்றி எழுதும்... எங்களுக்கு புண்ணியம் உண்டு.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

மனம் நெகிழ்ந்த பதிவு அண்ணா

சு.சிவக்குமார். சொன்னது…

நன்றி நேயர் விருப்பத்திற்காகவெனினும்..உங்கள் விருப்பத்திற்காகவெனினும்..

//முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ //

மேற்க்கண்ட வரிகளில் முப்புறத்திலே..தென் இலங்கையில் இதற்கு ஏதேனும் கதை இருக்க வேண்டுமே...அப்படியா...ஜீ

RVS சொன்னது…

ஜி நான் மட்டும் வித்தியாசமா என்ன கேட்கப் போறேன்... பத்தையும் பத்து பதிவா பொத்து பொத்துன்னு வெளியிடுங்க.. நாங்கள் படித்து இன்புறுகிறோம். நன்றி. ;-))

சுந்தர்ஜி சொன்னது…

வாசிப்பிற்கு நன்றி சிவக்குமார்.

முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென்இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

முதல்வரி முப்புறம் எரித்தவன் சிவன்.
இரண்டாம் வரியில் தென் இலங்கையில் எரித்தவன் அனுமன்.
மூன்றாம் வரியில் அன்னை இட்ட தீ என்பது பசியைக் குறிக்கும்.
கடைசி வரியில் நானும் இட்ட தீ என்று சிதைக்குத் தீ மூட்டியதைக் குறிக்கிறார்.

Harani சொன்னது…

வணக்கம் சுந்தர்ஜி. மனசு நிறைவாக இருக்கிறது தங்களின் தமிழ்ப் பகிர்வால். தங்கள் பதிலில் முப்புறம் என்பது முப்புரம் (திரிபுரம் எரித்தவன் சிவன்) என்று இருக்கவேண்டும். அப்புறம் அன்னை இட்ட தீ என்பது அன்னையின் மறைவால் எழுந்திருக்கும் மிதமிஞ்சிய ஈடுகட்டமுடியாத நெருப்பைப்போன்ற துயரம் என்பது அடிவயிற்றில் என்று ஆய்வாளர்கள் எழுதுகிறார்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் தற்போது பிற வலைப்பூக்களை மட்டும் படித்து எழுதுவது என்பதோடு சுருக்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய வலைப்பூவில் எழுதுவதை சற்று தள்ளி வைத்திருக்கிறேன். காரணம் இதழ்களுக்கு அனுப்புவதும் கையால் எழுதுவதும் குறைந்துவிட்டது அதனை ஈடுகட்ட மறுபடியும் முனைப்பாக பத்திரிக்கைகளுக்கு எழுதத் தொடங்கியிருக்கிறேன். வாய்ப்பமைவில் வருவேன். நன்றி.

சுந்தர்ஜி சொன்னது…

திருத்திக்கொண்டு விட்டேன் ஹரணி. எழுத்துப்பிழை பிறரிடம் இருப்பதை நான் நேசிக்காதவன்.ற வை ர ஆக்கிவிட்டேன்.

எனக்கானால் இன்னமும் அணையாத தீயாகத் தெரிவது பசி மட்டுமே.கோணங்கள் காட்சிகளை மாற்றுகின்றன.

நன்றி ஹரணி.

சிவகுமாரன் சொன்னது…

நான் அடிக்கடி விரும்பி படிக்கும் பாடல்கள் இவை தங்கள் பார்வையில் அற்புதம்.

kavithai (kovaikkavi) சொன்னது…

OH! my god!... எவ்வளவு அமைமையான பதிவு! இதை நான முன்பு வாசிக்கவில்லையே! .மகிழ்வும், நிறைவும். சகோதரர் மகேந்திரனுக்கு நன்றி. உங்களுக்கு வாழ்த்துகள். இறை அருள் கிட்டட்டும்.
வேதா. இலங்காதிலகம்.
http://.www.kovaikkavi.wordpress.com

Eazhisai Radhakrishnan சொன்னது…

மிக்க நன்றி ஐயா

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...