20.7.12

பேச்சு




எல்லா இடங்களிலும் 
ஒருவனால் பேச முடிவதில்லை.

பேச நினைக்கும் இடங்களில்
இரைச்சல் மிகுந்தோ
பேரமைதியாகவோ
தடை செய்யப்பட்டோ 
பேச முடியாது போகிறது.

பேச ஆசைகொள்ளும்
நிலா கசியும் நள்ளிரவில் -

நிசப்தம் பாயும்
நூலக அலமாரிகள் இடையே - 

கிளர்ச்சியில் தோய்ந்த 
கலவிக்குப் பின்னே -

கண்ணீர் நனைத்த 
ஒரு சாவின் வலியால் -

ஏதோ ஓர் ஆசிரமத்தின்
தியானத்தின் பரவசத்தில் -

பேச முடியாது போகிறது.

யாருமற்ற தனிமையிலோ -
அவமானத்தின் பெரும் பளுவால் -

பதட்டத்தாலோ தயக்கத்தாலோ -
வசீகரத்தாலோ மறதியாலோ -
பேசமுடியாது போகிறது.

ஒரு தோல்விக்குப் பின்னே -
ஏதோ காரணமற்ற சினத்தால் - 
நியாயமற்ற சில பொய்களால் -
பல நேரங்களில் பேச முடிவதில்லை.

எல்லாம் அமையும்போது 
பேச எதுவுமில்லாது போய்விடுகிறது 
இறுதியாய்.

16 கருத்துகள்:

ராஜி சொன்னது…

சமயத்தில் பேச முடியாத அந்த அமைதியே பெருமூச்சுடன் கூடிய நிம்மதியை தந்து விடுகிறதும் உண்டு.மனம் அந்த சமய்ங்களில் அதையே விரும்பிவிடுகிறது. நல்ல பகிர்வு.

வேல்கண்ணன் சொன்னது…

அருமை ஜி.

பேசமுடியாத வார்த்தைகளை எழுத முற்படும் போதும், அதில் எழுத முடியாத சொற்களும் உணர்வுகளும் தான் எத்தனை ?

பேச முடியாதவைகளும் எழுத முடியாதவைகளையும் பற்றி பேசிக்கொண்டும் எழுதி கொண்டும் இருப்போம்

ஜி.எம்.பாலசுப்ரமண்யம் சொன்னது…

பேசாமல் இருப்பதே நிசப்தம் என்கிறீர்களா சுந்தர்ஜி.

எல்லா சப்தங்களுக்கு இடையிலும் நிசப்தத்தின் ஒலியைக் கேட்க முனைவதே தியானத்தின் முதல்படி எனலாமா?

எனக்கு என்னவோ நீங்கள் எழுதுவதில் சொல்லாத கருத்தும் விரவி இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ரமணி சொன்னது…

பல சமயங்களில் பேசவேண்டியது தேவை இல்லாமலும் கூடப் போய்விடுகிறது.

மனம் கவர்ந்த பதிவு தொடர வாழ்த்துக்கள்.

நிலாமகள் சொன்னது…

பேச‌ முடியாம‌ல் போக‌ ப‌ல‌ப்ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளிருக்க‌லாம்.

சில‌ப‌ல‌ க‌ண‌ங்க‌ளில் சுதாரித்து விட‌ முடியும்.

வெறுப்பு, கோப‌ம், இய‌லாமை, புற‌க்க‌ணிப்பு என‌ எதேனுமொன்றால் பேச‌ எதுவும‌ற்று ச‌க‌ ம‌னித‌ருட‌ன் நிற்கும் க‌ண‌ம் வெகு க‌ன‌மான‌து.இல்லையா?

நாகசுப்ரமணியன் சொன்னது…

//எல்லாம் அமையும்போது பேச எதுவுமில்லாது போய்விடுகிறது.//

உண்மை!

vasan சொன்னது…

..........................

ஜே.ஃப்ராங்க்ளின் குமார். சொன்னது…

அத்தனை யதார்த்தங்களையும் தவிப்புகளையும் தாகங்களையும் அழகாய்ப் பதிவு செய்திருக்கிறீர்கள். மகிழ்ச்சி அந்தியூரில் விநாயகமூர்த்தியால் வாசிக்கப்பட்டபோதும்.

ப.உஷாராணி சொன்னது…

கவிஞனுக்கும் கவிதைக்கும் நிஜம்தான் கம்பீரம் என்பார் வைரமுத்து.

அவ்வாறான நிஜம் செங்கோல் ஏந்தி இக்கவிதையில் வீற்றிருக்கிறது. ஒரு தோல்விக்குப் பின்னே -வரிகள் ஜீவனுடன் கூடிய யதார்த்தம்.

பேச எதுவுமில்லாது போகும் விந்தை எனக்குமானது.அது நிறைவா?துரதிர்ஷ்ட்டமா?

ஸ்ரீமதி சொன்னது…

என்னாலும் பேசமுடியவில்லை.

திருமதி.மீனாதேவி. சொன்னது…

பேசியது கவிதை.

மதுமிதா சொன்னது…

பேச்சு குறித்து பேசுவதற்கு
நிறையத்தானிருக்கு சுந்தர்ஜி.

பனித்துளி சங்கர் சொன்னது…

புகைப்படமும் கவிதையும் மிகவும் அருமை

ஹேமா சொன்னது…

சுந்தர்ஜி.உங்கள் முன்னால்
நானும் ஊமை!

ரிஷபன் சொன்னது…

ஒரு நல்ல கவிதை வாசித்து முடித்தபின்னும் பேச இயலாது போய் விடுகிறது.

இரசிகை சொன்னது…

nallaayirukku...

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...