3.7.12

ஸ்ரீருத்ரம்- யஜூர் வேதத்தின் சாரம்- I


 ரிக் யஜூர் சாம அதர்வண வேதங்கள் நான்கு.

அதில் யஜூர் வேதத்தின் மிக முக்கிய பகுதியாகக் -ஹிருதயம் போல- கருதப்படுவது ஸ்ரீருத்ரம்.

வருஷஸ்ய மூலஸேகேன சாகா:புஷ்யந்தி வை யதா
சிவேருத்ர ஜபாத் ப்ரீதே ப்ரீதா ஏவாஸ்ய தேவாதா:
அதோ ருத்ர-ஜபாதேவ புக்தி-முக்தி ப்ரஸித்யத:

- ஸூதஸம்ஹிதை

(ஒரு மரத்தின் வேரில் நீரூற்றினால் கிளைகளும் மரமும் செழிப்பது போல ஸ்ரீருத்ர ஜபத்தால் எல்லா தேவதைகளும் த்ருப்தியடைகின்றனர். இந்த ஜபமே பாவங்களுக்குச் சிறந்த ப்ராயச்சித்தமாகவும் விதிக்கப்பட்டுள்ளது.)

”ய: சதருத்ரீய-மதீதே ஸோSக்னி-பூதோ பவதி, ஸ வாயு பூதோ பவதி, ஸ ஆத்ம- பூதோ பவதி, ஸ ஸுராபானாத பூதோ பவதி, ப்ரஹ்மஹத்யாத் பூதோ பவதி”

-கைவல்யோபனிஷத்

ஆகையால் யார் யார் எந்தப்பயனை விரும்பினாலும் இதை ஜபித்துக் கார்யஸித்தி பெறலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

ஸ்ரீ ருத்ரம் மொத்தம் 11 அனுவாகங்களாக இருக்கிறது.

முதலாவது அனுவாகம் ஈஸ்வரனின் கட்டளையை மீறி நடந்தவர்களிடம் கோபம் கொண்ட அவர் இறங்கியருள வேண்டுவதாகவும், இரண்டு முதல் ஒன்பது வரை அவர் எல்லாவற்றிலும் வியாபிக்கும், நிறைந்திருக்கும், மறைந்திருக்கும் (ஸர்வேஸ்வரத்வம், ஸர்வஸரீரத்வம், ஸர்வாந்தர்யாமித்வம்) தன்மையைக் குறிப்பதாகவும், பத்தாவதில் காட்சியளிக்கும் இறைவனிடம் இஷ்டப்ராப்தி அனிஷ்ட நிவர்த்திக்காகப் (விரும்பியவை கிட்டுதல்-விரும்பாதவை விலகுதல்) ப்ரார்த்திப்பதாகவும், பதினொன்றில் ருத்ரகணங்களை நமஸ்கரித்தும் பூர்ணம் அடைகிறது. 

’நமோ ஹிரண்ய பாகவே ஸேனான்யே திஸாஞ்ச பதயே நமோ நமோ” எனத் துவங்கும் இரண்டாவது அனுவாகத்திலிருந்து  ”நம ஆநிர்ஹதேப்யோ நம அமீவத்கேப்ய:” வரையிலான ஒன்பதாவது அனுவாகம் வரையிலானவையெல்லாம் யஜூர் மந்திரங்கள். எட்டு அனுவாகங்களின் ஸ்லோகங்களும் ஒரு கவிதை. ஆன்மீகக் கவிதை.

ஸ்ரீராமக்ருஷ்ண மடத்தின் வெளியீடான ஸ்ரீருத்ரத்தின் உரையாசிரியர் அண்ணாவின் உழைப்பு அசாத்யமானது. நான் அதை ஒரு கவிஞனின் பார்வையில், சொற்களில் மானஸீகமாக இறைவனின் அருளுடன், அண்ணாவின் அனுமதியுடன் இதை சற்றுச் சுருக்கித் தந்திருக்கிறேன். சமஸ்க்ருத விற்பன்னர்களும், பெரியோர்களும் இந்தச் சிறியேனின் முயற்சியில் ஏதேனும் குற்றம் காண்பார்களாயின் அவர்களின் பெருந்தன்மையால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


பொன்னிறத் தோள்களையுடைவரும், 
சேனாதிபதியும், 
திசைகளின் பதியானவரும், 
பச்சிலைகளைக் கூந்தலாயுடைய மரங்களின் வடிவானவரும், 
பிராணிகளின் ரக்ஷகரும், 
இளம்புல்லையொத்த மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தின் 
காந்தி பொருந்தியவருமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.

காளையின் மேல் வீற்றிருப்பவரும், 
விரோதிகளுக்கு நோயை ஏற்படுத்துபவரும், 
உணவுப் பொருட்களுக்கதிபதியும், 
நரையற்றிருப்பவரும், பூணூல் மார்பினரும், 
குணசீலர்களின் தலைவரும், 
சம்சாரம் எனும் மரத்தைக் காக்கும் ஆயுதம் போன்றவரும், 
உலக நாயகனும், துன்பத்தைத் துடைப்பவரும், 
நாணேற்றிய வில்லைத் தாங்கி உலகைக் காப்பவரும், 
உடல்களுக்கெல்லாம் அதிபதியுமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.

தேரோட்டியானவரும், இம்சிக்க முடியாதவரானவரும், 
காட்டரசரும், சிவந்த நிறத்தினரும், 
எங்குமிருந்து எல்லாவற்றையும் ரக்ஷிக்கும் பிரபுவானவரும், மரங்களுக்கெல்லாம் பதியானவரும், மந்திரியானவரும், வியாபாரியானவரும், அடவிகளுக்குப் பதியானவரும், 
போஷித்து வளர்ப்பவரும், பக்த பராதீனரும், 
செடிகொடிகளின் பதியானவருமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.

உறக்கக் கூவுகிறவரும், அழ வைப்பவரும், 
காலாட்படையின் தலைவரும், 
சேனைகள் சூழப் பெற்றவரும், 
பக்தர்களைக் காக்க விரைபவரும், 
ஸாதுக்களின் தலைவரும், விரோதிகளை அடக்குகின்றவரும், 
எதிரிகளைத் தாக்குகின்றவரும், சிறந்தவரும், 
வாளேந்தியவரும், கள்வர்களின் தலைவரும், 
வில்லில் தொடுக்க அம்பை வைத்துகொண்டிருப்பவரும், 
அம்பறாத் துணியை உடையவரும், 
கொள்ளைக்காரர்களின் தலைவரும், வஞ்சகரும், 
படுவஞ்சகரும், நயவஞ்சனையால் திருடுபவர்களின் 
தலைவருமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம். 

திருடுவதற்காக உள்ளேயும் வெளியேயும் சஞ்சரிப்பவரும்,
வனங்களில் வழிப்பறிசெய்பவர்களின் தலைவராயும், 
ஆயுதங்களால் தங்களை காத்துக்கொள்பவர்களுக்கும், 
பிறரை இம்சிப்பவர்களுக்கும், 
உளவாளியாய் இருந்து யஜமானரின் 
தானியங்களைத் திருடுபவர்களுக்கும் தலைவராக இருப்பவரும், வாளேந்தியவர்களுக்கும், 
திருடுவதற்காக இரவில் சஞ்சரிப்பவர்களுக்கும், 
பிறரைக் கொன்று பொருளை அபகரிப்பவர்களுக்கும் 
தலைவரானவருமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.   

தலைப்பாகை அணிந்தவராகவும், மலைவாசியாகவும், 
வயல்கள்-வீடுகளில் திருடுபவர்களின் தலைவராக உள்ளவரும், 
அம்புகளை ஏந்தியவராகவும், வில்லாளியானவரும், 
வில்லில் நாணேற்றுபவரும், அம்பைத் தொடுக்கின்றவரும், 
நாணை இழுக்கின்றவரும், அம்புகளை எய்பவராயிருப்பவரும், 
இலக்கை நோக்கி பாணத்தைச் செலுத்துபவரும், 
இலக்கைப் பிளக்கக் கூடியவருமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம். 

உட்கார்ந்துகொண்டிருப்பவர்களாயும், 
படுத்துக்கொண்டிருப்பவர்களாயும், தூங்குகின்றவர்களாயும், விழித்துக்கொண்டிருப்பவர்களாயும், 
நின்று கொண்டிருப்பவர்களாயும், ஓடுகின்றவர்களாயும், 
சபையில் உள்ளவர்களாயும், சபாநாயகராகவும், 
குதிரைகளாயும், குதிரை சவாரி செய்பவர்களாயும், 
நாற்புறமும் சூழ்ந்து துன்புறுத்தும் சக்திவடிவினராகவும், 
பலவிதமாய்த் தாக்கிக் கொல்லும் சக்திவடிவினராகவும், 
ஸப்தமாதர்களான சிறந்த சக்திகணங்களானவரும், 
உக்ரதேவதைகளான துர்க்கை முதலான 
வடிவங்களுமானவருமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.

விஷயப்பற்றுள்ளவர்களாயும், அவர்களின் தலைவர்களாயும், 
பல வகுப்பினர்களின் கூட்டமாகவும், அவற்றின் தலைவர்களாயும், 
முன்னணி கணங்களாகவும், அவற்றின் தலைவர்களாயும், 
விகார வடிவங்களை உடையவர்களாயும், 
எல்லாவிதமான வடிவங்களை உடையவர்களாயும், 
மஹான்களாயும், அற்பசக்தியுடையவர்களாயும், 
தேரில் செல்பவர்களாயும், தேரற்றவர்களாயும், தேர்களாயும், 
தேர்களின் தலைவர்களாயும், சேனைகளாயும், சேனாதிபகளாயும், 
தேர்களை ஒழுங்காய் ஓட்டுபவர்களாயும், இழுத்துப்பிடித்து நிறுத்துபவர்களாயுமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.

தச்சர்களாயும், தேர் செய்கிறவர்களாயும், 
குயவர்களாயும், கருமார்களாயும், 
வலைகளால் பறவைக் கூட்டங்களைப் பிடிக்கும் வேடர்களாயும், 
மீன் பிடிக்கும் செம்படவர்களாயும், அம்பைத் தயாரிப்பவர்களாயும், 
வில்லைத் தயாரிப்பவர்களாயும், 
மிருகங்களை வேட்டையாடுபவர்களாயும், 
நாய்களின் கழுத்தில் கயிற்றை மாட்டி இழுப்பவர்களாயும், 
நாய்களாகவும், நாய்களைப் பாதுகாப்பவர்களாயும், 
உலகின் உற்பத்திக்குக் காரணராயும், உலகைக் கண்ணீர் சிந்த வைக்கும் துன்பத்தைப் போக்குபவராயும், பாபத்தை நாசம் செய்பவராயும், உயிர்வாழ்பவைகளின் நாயகராகவுமான பரமேஸ்வரனுக்கு 
முன்னும் பின்னும் வணக்கம்.

விஷம் பருகியதால் கண்டம் கருத்தவராயும், 
விபூதியால் கண்டம் வெளுத்தவராயும், 
சடை முடியுடையவராயும், முடி துறந்த துறவியாயும், 
கணக்கற்ற கண்களையுடையவராயும், 
கணக்கற்ற விற்களை உடையவராயும், 
கயிலை மலையில் உறைபவராயும்,
 ஒளிக்கிரணங்களால் வியாபிக்கப் பெற்ற விஷ்ணு வடிவினராயும், 
அளவற்ற மழைபொழியும் மேக வடிவினராயும் உள்ள 
உமக்கு வணக்கம்.

அம்புகளைத் தாங்குபவராயும், குள்ள வடிவினராயும், 

குறுகிய வடிவினராயும், பெரிய உருவினராயும், 
நற்குணங்கள் நிறைந்தவராயும், வயோதிகராயும், 
புகழ் மிக்கவராயும், உலக உற்பத்திக்கு முன்பே இருப்பவராயும், 
தேவர்களில் முதல்வராயும், எங்கும் வியாபித்தவராயும், 
வேகமாய்ச் செல்பவராயும், பாய்ந்தோடும் அருவியில் இருப்பவராயும், பெருவெள்ளத்தில் இருப்பவராயும், அலைகளில் இருப்பவராயும், அமைதியான நீர்நிலைகளில் இருப்பவராயும், 
ஓடையில் இருப்பவராயும், தீவில் இருப்பவராயும் விளங்கும் 
உமக்கு வணக்கம். 

( இரண்டு முதல் ஐந்து அனுவாகங்கள் நிறைவடைந்தது. 

ஆறு முதல் ஒன்பது அனுவாகங்கள் வரையிலான பொருள் குறித்து அடுத்த இடுகையில்.)

இந்த இடுகையின் தொடர்ச்சியை வாசிக்க இந்த இணைப்பைச் சுட்டவும்.


http://sundargprakash.blogspot.com/2012/07/ii.html

11 கருத்துகள்:

vasan சொன்னது…

புண்ணிய‌மா ஆ(போ)கட்டும். என்னைய‌ மாதிரி சாம‌னிய‌ர்க‌ளுக்கும் துளியேனும் புரிய‌வைக்கிற‌ மஹா காரிய‌த்தை செய்றிங்க‌. ரெம்ப‌ ச‌ந்தோச‌ம்.

நிலாமகள் சொன்னது…

அடேய‌ப்பா! எத்த‌னை பெரிய‌ வேலை! எவ்வ‌ள‌வு அனாய‌ச‌மான‌ ஆக்க‌ம்!

முன்னும் பின்னும் வ‌ண‌க்க‌ம்' என்ப‌து குறிப்ப‌தென்ன‌? விழுந்து வ‌ண‌ங்குவ‌தைக் குறிக்கிற‌தா?

கே. பி. ஜனா... சொன்னது…

நல்ல சேவை. நன்றி ஐயா.

சுந்தர்ஜி சொன்னது…

பெரிய வார்த்தைகள் வாசன்.

என் 10 வயது முதலே ருத்ரத்தைப் பயின்றிருந்தாலும் ஒரு சாமான்யனாய் இன்னும் இன்னும் அதில் பல திரைகள் விலகுவதாய்த்தான் தோற்றமளிக்கிறது.

அல்லது எழுதிப் பார்ப்பதன் மூலம் நானும் புரிந்துகொள்ள முயல்கிறேன்.

இம்மாதிரியான முயற்சிகளுக்கு அம்பு போன்ற வேகத்தில் பாயும் உங்களின் ஆதரவுக்கு நான் என்ன கைம்மாறு செய்யட்டும்?

சுந்தர்ஜி சொன்னது…

ரொம்ப நன்றி நிலாமகள். பெரிய அனாசமான புதையல் இது. என் பணி மிகவும் சிறியது.உங்கள் வார்த்தைகள் என்னைக் குறுகவைக்கிறது.

முன்னும் பின்னும் என்பதை மீண்டும் மீண்டும் எனலாம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ஜனா சார்.நேரம் கிடைக்கும்போது உங்களைப் போன்றவர்கள் வாசிப்பது என் பாக்யம்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மிகவும் நன்று சுந்தர்ஜி.... எனக்கு ருத்ரம் கற்றுக்கொடுத்த குரு, ஒவ்வொரு வரிக்கும் தமிழ் அர்த்தம் சொல்லி, பிறகு ஜபிக்கச் சொல்லிக் கொடுத்தார். ஆனாலும் ஏனோ மனத்தில் பதியவில்லை. மேலோட்டமாக புரிந்ததே தவிர இப்படி தெளிவாய் விளங்கவில்லை. தங்களுடைய அனுமதியில்லாமலே, உங்களது இப்பகுதியை கணினியில் சேமித்துக்கொண்டேன்.

தொடருங்கள்.....

மாதங்கி சொன்னது…

My father use to say that the Vedic/Upanishadic/scriptural beauty is quite unique , simple and yet inimitable ; to illustrate the point, he use to quote the portion you have rendered and say how the two opposite poles ( ?) are juxtaposed with poetic-ease, thereby signifying that in the ultimate analysis ,there is only 'one' and not two, or many... I am eagerly awaiting your ultimate ' interpretation'....

vasan சொன்னது…

"முன்னும் பின்னும் வ‌ணக்க‌ம்" என்ப‌தை உன்னைச் சுற்றிச்(வ‌ல‌மாய்)சுற்றி வ‌ண‌ங்குகிறேன் என‌ அர்த்த‌ப்ப‌டித்திக் கொண்டேன். அது ச‌ரி இல்லையா?

Ganapathi krishnan சொன்னது…

excellant guruji. Navukarasar rudram pondre urathira thandagam ondru padiyadhaga kelvipattuullen. Mudinthal adaiyum pattri sattru vilakavum mikka nandri ellam valla siva arul ungalku kitta andha rudranai vendukiren

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி வெங்கட், மாதங்கி, கணபதி.

வாசன்! நமோநமோ என்பதை மீண்டும் மீண்டும் வணக்கம் என்றழைப்பதே மிக நெருக்கமாய் இருக்கும்.

உங்களுடைய கற்பனையும் அழகாய்த் தான் இருக்கிறது ப்ரதக்ஷிணமாய்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...