27.9.12

ஒரு பட்டத்தின் முக்யத்வம் - பாவ்லோ கோயெலோ - 4 -


ஒரு பட்டத்தின் முக்யத்வம் (The Importance of a Degree):

ஃப்ரான்ஸின் ஒரு சிறிய கிராமத்தில், என்னுடைய பழைய ஆலை இருந்தது. பக்கத்தில் இருக்கும் ஒரு பண்ணையையும் என் ஆலையையும் வரிசையாக நிற்கும் மரங்கள்தான் பிரித்தன.

ஒரு நாள் என் அண்டைவீட்டுக்காரர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவருக்கு அநேகமாக எழுபது வயதிருக்கும். அவரும், அவருடைய மனைவியும் வயல்களில் வேலை செய்வதைச் சில தடவைகள் பார்த்திருக்கிறேன். இப்போது வயல்வேலைகளை நிறுத்திவிட்டார்கள்.

அவர் ஒரு இனிமையான மனிதர். ஆனால் அவருடைய கூரைகளில் என் மரத்தின் இலைகள் விழுந்துகொண்டே இருப்பதால் மரங்களை வெட்டிவிடுமாறு சொன்னார்.

எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாக இருந்தது. தன் முழு வாழ்நாளையும் இயற்கையுடன் நெருக்கமாகச் செலவழித்த ஒரு மனிதர், ஒருவேளை அடுத்த பத்து வருஷங்களில்  வரப்போகிற ஒரு ப்ரச்சனைக்காக, வெகு காலமாக வளர்ந்திருந்த இவற்றை எப்படி அழிக்கச் சொல்லமுடியும்?

அவரைக் காஃபிக்காக அழைத்தேன். அவரின் கூரையில் விழும் இலைகள் ( எப்படியானாலும் காற்றாலும், கோடைக்காலத்தாலும் அகற்றப்பட்டுவிடும் ) ஏதாவது சேதத்தை உண்டுபண்ணுமானால் புதிய கூரைக்கான செலவை நான் ஏற்பதாகவும், அதற்கான பொறுப்பு முழுவதும் என்னுடையது என்றும் சொன்னேன். அதில் தனக்கு விருப்பம் இல்லை என்றும், அந்த மரங்களை வெட்டிவிடுவதையே விரும்புவதாகவும் சொன்னார் அண்டைவீட்டுக்காரர். எனக்குக் கொஞ்சம் கோபம் வந்தது. அவரின் பண்ணையைக் கூட வேண்டுமானால் வாங்கிக்கொள்வதாகவும் சொன்னேன்.

“ என் நிலம் விற்பனைக்கு அல்ல “ என்றார் அந்த மனிதர்.

“ அந்தப் பணத்தில் நகரத்தில் அழகான ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு, கடும் பனிக்காலத்தாலோ விவசாயம் பொய்த்துப்போகுமோ என்ற கவலையில்லாமலோ உங்கள் மனைவியுடன் மீதி நாட்களைக் கழிக்கலாமே”

“என் பண்ணையை விற்பதாக இல்லை. நான் பிறந்ததும், வளர்ந்ததும் இந்த மண்ணில்தான். எனக்கும் வயதாகிவிட்டதால் இதை விட்டுப் போக மனமில்லை”

நாம் நகரத்திலிருந்து ஒரு நிபுணரை வரவழைப்போம். இந்த விஷயத்தை அவர் பரிசீலித்து ஒரு முடிவு சொல்லட்டும். நமக்குள் ஒருவர் மீது ஒருவர் கோபப்பட வேண்டாம். என்ன இருந்தாலும் நாமெல்லாம் அண்டைவீட்டுக்காரர்கள் இல்லையா என்று யோசனை சொன்னார்.

அவர் கிளம்பியபின் பூமித்தாயை மதிக்காதவர் எனவும், மழுங்கிய புத்திக்காரர் எனவும் அவரின் மேல் முத்திரை குத்தினேன். அவர் நிலத்தை விற்க மறுக்க என்ன காரணம்? என்றறிய எனக்குள் ஆர்வமாக இருந்தது. அதன் காரணம் அவர் வாழ்க்கையில் நிலைத்திருப்பது ஒரே ஒரு கதைதான் என்பதும், அதை மாற்ற என் அண்டைவீட்டுக்காரர் விரும்பவில்லை என்பதும்தான் என்று அன்றைய நாளின் முடிவில் உணர்ந்தேன். ஒரு நகரத்தில் வாழ்வது என்பது முன்பின் அறிந்திராத, வெவ்வேறுவிதமான சூழல்களிலும் மதிப்பீடுகளிலும் தன்னை மூழ்கடித்துக்கொள்வது என்பதனாலும், தான் அவற்றை எல்லாம் கற்றுக்கொள்ளும் வயதைக் கடந்துவிட்டதாகவும் அவர் நினைத்திருக்கலாம்.

இது என் அண்டை வீட்டுக்காரருக்கு மட்டுமேயான ப்ரத்யேகமானதா? இல்லை. இதுபோல எல்லோருக்கும் நிகழலாம். சில சமயங்களில், நாம் நமக்குப் பழக்கமான வாழ்க்கையோடு நெருக்கமாகப் பிணைக்கப்பட்டு, அற்புதமான சந்தர்ப்பங்களைத் - அவற்றோடு எப்படி நம்மை இணைத்துக்கொள்வது என்றறியாமல் - தவிர்த்துவிடுகிறோம். இவரைப் பொறுத்தவரையில் அவரின் பண்ணையும், அந்தக் கிராமமும் அவருக்குப் பரிச்சயமானவை. அவற்றை மீறி வேறெந்த ஆபத்தையும் விலைக்கு வாங்குவதில் அர்த்தமில்லை. நகரத்தில் வாழும் மக்கள் அனைவரின் நம்பிக்கையுமே ஏதாவது ஒரு பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டம், திருமணம், குழந்தைகள், அவர்களும் பட்டம் பெற்றுவிடுதல் என்று ஒரேமாதிரியாய் உழல்வதில்தாகத்தான் இருக்கிறது. யார் ஒருவரும் “ நான் புதிதாய் வேறேதாவது செய்துபார்க்கலாமா?” என்று தங்களைக் கேட்டுக்கொள்வதில்லை.

தன் மகள் சமூகவியலில் ஒரு பட்டம் வாங்கிவிடுவதற்காக இரவுபகலாக உழைத்த என் நாவிதரை எனக்கு நினைவிருக்கிறது. அவளும் கடைசியில் பட்டம் பெற்று விட்டாள். பல கதவுகளைத் தட்டி அலுத்துப்போய், ஒரு சிமெண்ட் ஆலையில் காரியதரிசியாக வேலையில் அமர்ந்தாள். ஆனபோதும் என் நாவிதர் பெருமையோடு “என் மகள் பட்டம் பெற்றுவிட்டாள்” என்று சொல்லிக்கொள்வார்.

என் அநேக நண்பர்கள், அவர்களின் குழந்தைகள் எல்லோருமே பட்டம் பெற்றவர்கள். அதற்காக அவர்கள் விரும்பிய விதத்தில் அவர்களின் பணிவாழ்க்கை அமைந்துவிட்டது என்று பொருள் இல்லை. நிச்சயமாக இல்லை. ஒரு காலத்தில், பல்கலைக்கழகங்கள் அவசியமானதாக இருந்த காலத்தில், இந்த உலகத்தில் முன்னேறுவதற்கு ஒருவர் பட்டம் பெறவேண்டும் என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கக் கூடும். இந்த விதமாகத்தான் உலகம் அபாரமான தோட்டக்காரர்களையும், ரொட்டி சமைப்பவர்களையும் (bakers), பழங்காலப் பொருட்கள் சேகரிக்கும் வியாபாரிகளையும் (antique dealers), சிற்பிகளையும், எழுத்தாளர்களையும் இழந்துபோயிருக்கிறது. அநேகமாக இந்தச் சூழலை மறுபரிசீலனை செய்ய இதுதான் தருணம். மருத்துவர்களும், பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், வழக்கறிஞர்களும் பல்கலைக்கழகங்களுக்குப் போய்த்தான் ஆக வேண்டும். அதற்காக எல்லாருமேயா?

ராபர்ட் ஃப்ராஸ்டின் இந்த வரிகள் சொல்லும் பதிலை இந்த இடத்தில் சொல்ல விரும்புகிறேன்.

Two roads diverged in a wood, and I-
      I took the one less travelled by,
And that has made all the difference.

இரு வேறு சாலைகள்
பிரியும் புள்ளியில்
யாரும்
அதிகம் பயணிக்காத
பாதையை நான்
தேர்ந்தெடுத்தேன்.
யாரும் அடைந்திராத
இலக்கை
அது பரிசளித்தது.

என் அண்டை வீட்டுக்காரர் கதையைச் சொல்லிவிடுகிறேன். அந்த நிபுணர் வந்தார். எந்த ஒரு மரமும் மற்றவரின் சொத்தின் எல்லையிலிருந்து மூன்று மீட்டர் இடைவெளியுடன் நடப்பட்டிருக்கவேண்டும் என்ற எதிர்பாராதபடியான ஒரு ஃப்ரென்ச் சட்டத்தைச் சுட்டிக் காட்டினார். நான் நட்டிருந்தவை இரண்டு மீட்டர் இடைவெளியில் இருந்ததால் எல்லா மரங்களையும் வெட்டும் படியாயிற்று.

5 கருத்துகள்:

RVS சொன்னது…

அடாடா..அருமை சுந்தர்ஜி... மொழிமாற்றம் செய்த அந்தக் கைக்கு தங்கக்காப்பு போட வேண்டும். :-)

ஆ.செல்லதுரை சொன்னது…

பாவ்லோ கோயெலோவின் விருட்ச்சம் என் வீட்டு மரத்தையோ,உஙகள் வீட்டுக் கூரையையோ நினைவூட்டுகிறது.

மாநகரங்களை நோக்கி மனிதர்கள் அர்ததமின்றி விரியும் இக்கரும்பொழுதில்,எல்லோருக்குமாக அவ்ர் உரக்கக் கூவுகிறார்.

இனிமையும் அமைதியும் நிறைந்த வாழ்வை நோக்கிய திரும்புதலை நினைவூட்டுகிறார்.ப்ரஸிலில் மாத்திரமா? எதிர்வீட்டு முருங்கை காய்த்துக் கிடப்பதில் எத்தனை பேருக்கு சந்தோஷம்?

சாளரங்களில் தெறிக்கும் மழை நீரை நம்மில் எத்தனை பேர் அநுமதிக்கிறோம்?

நம் உடைமையையும், அது குறித்த அகம்பாவத்தையும் ஒரு சிறு புல்பூண்டிற்காகக் கூட நாமும், நம் சட்டங்களும் விட்டுத் தருவதாயில்லை- நகரும் கதியற்ற, அறியா அம்மரங்கள் நம் கூரைகளில் பூச்சொறிந்தாலும் கூட.

பாவ்லோ கோயெலோவின் இதயம் சுந்தர்ஜியின் சொற்களில் துடிக்கிறது.

G.M Balasubramaniam சொன்னது…


எனக்கும் அந்த மாதிரியான அனுபவம். என் வீட்டுக் காம்பௌண்ட் ஓரம் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு தென்னங்கன்று நட்டேன். வீட்டை அடுத்த இடத்தில் ஒரு சிறிய வீடு இருந்தது. என் மரம் வளர்ந்து பெரிதாகும் சமயம் அடுத்த வீட்டுக்காரர் அவர் வீட்டில் இரண்டு நிலைகள் ஏற்ற விரும்பினார். அதற்குத் தடங்கலாக இருந்த என் தென்னை மரத்தை வெட்டச் சொன்னார். அவர் வீடு கட்ட இடைஞ்சல் இல்லாதபடி அவ்வப்போது தென்னை மட்டைகளை வெட்டிக் கொடுத்தேன். இப்போது என் மரம் அவர்கள் வீட்டை விட்டு விலகி நிற்க பிரச்சனைகள் தடுக்கப் பட்டன. பாவ்லோ கொயாலாவின் பதிவு சில நினைவுகளை மீட்டது. நம் ஊரில் அந்தமாதிரி சட்டம் ஏதாவது இருப்பதாகத் தெரியவில்லை சுந்தர்ஜி.

அப்பாதுரை சொன்னது…

மொழியாக்கம் சுவையாகவே இருக்கிறது.
//கொய்லோவின் இதயம் சுந்தர்ஜியின் சொற்களில் துடிக்கிறது//
இது அற்புதம் செல்லதுரை.

நிலாமகள் சொன்னது…

பாவ்லோ கோயெலோ>சுந்த‌ர்ஜி>ஆ.செல்ல‌துரை... சொல்ல‌ வார்த்தைக‌ளின்றி பார‌மாகி மெள‌னித்த ம‌ன‌ம் சிந்தையை துருவுகிற‌து. நாம் உருவாக்கிய‌தை ந‌ம்மில் ஒருவ‌ரே அப்புற‌ப்ப‌டுத்த‌ ஆய‌த்த‌மாய்... இச்ச‌ட்ட‌ங்க‌ளெல்லாம் த‌ன்னிச்சையாய் திரியும் ம‌னித‌ர்க‌ளிட‌ம் நூறு ச‌த‌ம் செல்லுப‌டியாகிற‌தா என்ன‌...?!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...