14.9.12

ஹே! ஏழு மட்டும்!

நவீனம், நவீனம் என்று வடமேற்குப் பக்கமாக தலையைத் திருப்பிக்கொண்டு அநியாயத்துக்கு அழிச்சாட்டியம் பண்ணும் பேர்வழிகளுக்கான தமிழின் நயமான மருந்து இது. 

நவீனம் என்பது காலம் சம்பந்தப்பட்டதல்ல. அது சிந்தனை அல்லது கற்பனையின் புதுமை. மேன்மை.

இதைப் புரிய வைக்க எனக்குப் பிடித்த ஏழு பாட்டுக்கள் இன்றைக்கு.

முதல் ஐந்தும் ஔவைக் கிழவி எழுதியது.

பாட்டு- 1:

நண்டு சிப்பி வேய்கதலி நாசமுறும் காலத்தில்
கொண்ட கருவழிக்கும் கொள்கைபோல்- ஒண்தொடீ இ
போதம் தனம் கல்வி பொன்றவரும் காலம்அயல்
மாதர் மேல் வைப்பார் மனம்.                                                           (நல்வழி-36)

பொருள்: 

குஞ்சு பிறந்தால் அம்மா நண்டு இறந்துவிடும். முத்து முத்திவிட்டால் சிப்பியின் வாழ்க்கை முடிவுக்கு வந்து விடும். அரிசி பூத்து விட்டால் மூங்கில் அழிந்துவிடும். தார் போட்டுவிட்டால் வாழையின் வாழ்க்கை அவ்வளவுதான். வேறுவார்த்தைகளில் சொன்னால் அழிவு காலம் நெருங்கினால் அவை கொண்ட சூலாலேயே அது நேரும்.

அதுபோல பிற பெண்களுக்குப் பின்னால் பித்துப்பிடித்து அவன் மனம் செல்லத் தொடங்கிவிடும் காலத்தில், அவனுடைய ஞானம், செல்வம், கல்வி முதலியன அழியத் தொடங்கிவிடும்.

பாட்டு- 2:

பூவாதே காய்க்கும் மரமும்உள; மக்களுளும்
ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே; - தூவா
விரைத்தாலும் நன்றாகா வித்தெனவே பேதைக்கு
உரைத்தாலும் தோன்றாது உணர்வு.                                            (நல்வழி-35)

பொருள்:

பூக்காமலேயே காய்க்கும் மரங்கள் உள்ளதைப் போல சொல்லாமலே உணரும் அறிவாளிகள் இருக்கிறார்கள்.

என்னதான் கிரமப்படி நன்கு உழுது தூவி விதைத்தாலும் முளைக்காத விதைகள் போல, எத்தனை சொல்லிக் கொடுத்தாலும், மூடனால் அதை உணர முடியாது.

பாட்டு- 3:

வேதாளம் சேருமே; வெள்ளெருக்குப் பூக்குமே;
பாதாள மூலி படருமே; - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே;
மன்றோரம் சொன்னார் மனை.                                                      (நல்வழி-23)

பொருள்:

நடுநிலைமை தவறுபவன் அல்லது தவறான சாட்சி சொல்லுபவன் வீட்டில் வேதாளம் குடியேறும். வெள்ளை எருக்கு தழைத்துப் பூக்கும். பாழ் மனைகளில் மட்டுமே தழைத்து வளரும் பாதாள மூலி எனும் செடி படரும். மூதேவி குடிபுகுந்து ஆட்சி செய்வாள். விஷப் பாம்புகள் நிரந்தரமாக வசிக்கும்.

பாட்டு- 4: 

கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடுஞ்சினத்துப்
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே; - விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.                                                          (மூதுரை-23)

பொருள்:

பிளக்கப்பட்ட கற்பாறை மீண்டும் சேராது. அதுபோல மூர்க்கர்களின் கோபம் என்றும் நன்மை தராது.

பொன்னாலான கட்டி ஒன்று பிளந்தால் பொடியுடன் பற்ற வைத்தால் மீண்டும் இணைந்துவிடும். சிலரின் கோபம், நியாயம் தவறாத பெரியவர்களின் அறிவுரையால் சரியாகி விடும்.

ஆனால் சான்றோர்களின் சினமோ,  நீர்ப்பரப்பின் மீது எய்யப்பட்ட அம்பால் உண்டாகும் காயம் போல அடுத்த நொடியே மறைந்துவிடும்.

பாட்டு- 5:

மடல்பெரிது தாழை; மகிழினிது கந்தம்;
உடல்சிறியர் என்றிருக்க வேண்டா; - கடல் பெரிது
மண்ணீரும் ஆகாது; அதன் அருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகிவிடும்.                                                                 (மூதுரை-12)

பொருள்:

தாழம்பூவின் மடல் பெரியது. ஆனால் நறுமணம் குறைவானதுதான். மகிழம்பூவோ சிறிதானாலும் ஊரையே மயக்கும் நறுமணம்.

அளவிட முடியாது பரந்து விரிந்த கடலின் நீர் எந்த உபயோகத்துக்கும் உதவாது. ஆனால் அதன் பக்கத்திலேயே தோண்டப்பட்ட அளவில் சிறியதான ஊற்று நீர் தாகம் தணிக்கும்.

ஆகவே ஒருவர் அறிவின் ஆழம் தெரியாமல் புறத் தோற்றத்தைக் கண்டு இகழக்கூடாது.  

அடுத்த இரண்டு பாடல்களும் எழுதியவர் யாரென்று தெரியாது போனாலும் எழுதியவரின் கருத்தால் காலங்களைக் கடந்து நிற்கிறது.

இவை நீதி வெண்பா எனப் பெயர் இடப்பட்டு அழைக்கப்படுகிறது. மொத்தம் 100 பாடல்கள். கிட்டத்தட்ட சமஸ்க்ருதத்தில் வெளியான நீதி சாஸ்த்ரத்தின் கருத்துக்களை ஒத்து இருக்கிறது.

பாட்டு- 6:

ஆயுமலர்த் தேன்வண்டு அருந்துவது போல்இரப்போர்
ஈயுமவர் வருந்தாது ஏற்றம் அறல் - தூயஇளம்
பச்சிலையைக் கீடம்அறப் பற்றி அரிப்பதுபோல்
அச்சமுற வாங்கல் அகம்.                                                               (நீதிவெண்பா-60)

பொருள்:

வண்டு பூக்களில் தேன் பருகும் நாசூக்குடன் யாசிப்பவர்கள் தானம் தருபவர்களின் மனம் கோணாமல் யாசிக்க வேண்டும்.

இளம் பச்சிலையை விடாமல் பற்றி ஒரு புழு அரித்துத் தின்பது போல பயத்தை உண்டாக்கி யாசிப்பது அகம்பாவம்.

கிட்டத்தட்ட இதையே ஒரு அரசின் வரிவிதிப்புக்கும் பொருத்தமாக இதைக் கொள்ளலாம்.

இன்றைக்கு அசராமல் டீசல் லிட்டருக்கு ரூ 5/- உயர்த்தியிருக்கும் இந்திய அரசுக்கு இந்தப் பாடல் அர்ப்பணம்.

பாட்டு- 7:

வேசியரும் நாயும் விதிநூல் வயித்தியரும்
பூசுரரும் கோழிகளும் பொன்னனையாய்! - பேசில் ஒரு
காரணந்தான் இன்றியே கண்டவுடனே பகையாம்;
காரணந்தான் அப்பிறப்பே காண்.                                                       (நீதிவெண்பா-65)

பொருள்:

இரு வேசிகள் சந்திக்க நேர்ந்தால் காரணமின்றிப் பொறாமை பிடித்துப் பகைத்துக் கொள்வார்கள்.

இரு நாய்கள் சந்தித்தால், ஒன்றை ஒன்று முறைப்பதும் குரைப்பதும் சகஜம்.

இரண்டு வைத்தியர்கள் சந்தித்தால் ஒத்துப்போக மாட்டார்கள்.

இரண்டு அந்தணர்கள் சந்தித்தால் சாஸ்திரங்களிலும், வியாக்யானங்களிலும் ஒன்றாமல் வேறுபடுவார்கள்.

இரண்டு சேவல்கள் சந்திக்க ஒன்றை ஒன்று கொத்திக் காயப்படுத்திக் கொள்ளும்.

இதற்குக் காரணம் பிறவிக்குணமே அன்றி வேறு காரணம் இல்லை. நாய்வாலை நிமிர்த்தமுடியாது.

தேடிக்கொண்டே இருந்தால் என்றோ தொலைத்த நம் தலைமுறைகளின் வேர் கால்களில் தட்டுப்படும்.

12 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அத்தனையும் அமிர்தம்....

ஒரு பாடல் மட்டும் முன்பே படித்ததாய் நினைவு...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைத்தும் அருமை... குறிப்பாக 4 & 7

சிவகுமாரன் சொன்னது…

பச்சிலையைக் கீடம்அறப் பற்றி அரிப்பதுபோல்
அச்சமுற ச் செய்யும் அரசு.

-- காலத்துக்கேற்ற பகிர்வு.

தமிழ் படிப்பதே அரிதாகி விட்ட இந்த காலத்தில் வரும் தலைமுறைக்கு இதை எல்லாம் எப்படி கொண்டு சேர்க்கப் போகிறோம் என்ற கவலை மனதை அரிக்கிறது.

vasan சொன்னது…

த(ச‌)ங்க‌ப் பாட‌ல்க‌ள்,
பொ(சொ)ற்கொல்ல‌ன்
கர‌ம்ப‌ட்டு, நாக‌ரீக‌ "ந‌கை செய்கிற‌து"
ஞால‌த்தை, ஞான‌த்தால்.
ந‌ன்று செய்தீர்
த‌லைந‌ரைக்க‌ த‌லைமுறைக்கு.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அழகாய்ச் சொன்னீர்கள்
ஞாயிறு தினமணியின் நாலாம் பக்கத்தில் இப்படித் தான் நான்மணிக் கடிகை, நீதி வெண்பா என்று அருமையாக வெளியிடுவார்கள்!

மோகன்ஜி சொன்னது…

அற்புதம் சுந்தரா! இதில் பெரும்பாலான பாடல்களை என் அம்மா இடம் பார்த்து சொல்லி சிந்திக்க வைப்பாள். தாழை, மகிழம்பு பாடலை அவள் பிரிவதற்கு சில நாட்களுக்குமுன் குறிப்பிட்டதை நெகிழ்வுடன் நினைவு கோருகிறேன்.

ரிஷபன் சொன்னது…

உண்ணீர் ஆன பதிவு.

அப்பாதுரை சொன்னது…

மடல் பெரிது பாடல் எனக்கும் பிடிக்கும்.

மாதர் மேல் வைப்பார் மனம் போன்ற பாடல்களை நாம் திருத்த வேண்டும் அல்லது ஓசைப்படாமல் நீக்க வேண்டும் என்று நினைக்கிறேன். மாதர் மேல் மனம் வைப்பதற்கும் அறிவு அழிவதற்கும் தொடர்பே இல்லாதது மட்டுமல்ல, பொருந்தாத உதாரணம் மட்டுமல்ல, இது 'மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமை'யில் சேரும். ஔவை எழுதியது ஆச்சரியம். 'பிற மாதர்' என்றால் மட்டும் சரியாகிவிடாது.

நிலாமகள் சொன்னது…

இன்றைக்கு அசராமல் டீசல் லிட்டருக்கு ரூ 5/- உயர்த்தியிருக்கும் இந்திய அரசுக்கு இந்தப் பாடல் அர்ப்பணம்.//

நீதியையும் அற‌நெறியையும் வேண்டிய‌ம‌ட்டும் த‌மிழ‌முதில் திளைக்க‌ச் செய்த‌ அக்கால‌ப் புல‌வ‌ர்க‌ளை விய‌ந்து விய‌ந்து ஏத்துகிற‌து ம‌ன‌ம். எக்கால‌மும் பொருந்துமாறு செய்த‌ மாட்சிமையும் குறுஞ்சிரிப்பை வ‌ர‌வ‌ழைக்கிற‌து எடுத்துக் காட்டிய‌தால். ப‌ள்ள‌ம் ப‌டுகுழி இருக்குமிட‌ம் பார்த்துப் போகுமாறு சொல்லி வைத்துப் போனார்க‌ள். த‌லைகால் புரியாம‌ல் த‌டுமாறினால் விளைவுக‌ளை அனுப‌வித்தே தீர‌ வேண்டியிருக்கிற‌து.

ம‌ன‌ப்பாட‌ செய்யுளாக‌ பாட‌திட்ட‌ங்க‌ளில் இருந்த‌வை ம‌ற‌க்காம‌ல் ந‌ட‌க்க‌வும், சிவா சுட்டிய‌து போல் ச‌ந்த‌திக‌ளுக்கு க‌ட‌த்த‌வும் உங்க‌ளைப் போன்ற‌வ‌ர்க‌ள், ம‌திப்பெண் துர‌த்த‌லென்னும் அந்த‌கார‌த்தின் சிறு வெளிச்ச‌மாய்

vasan சொன்னது…

"த‌லைந‌ரைக்கா" த‌லைமுறைக்கு.
எனவ‌ந்திருக்க வேண்டும்.
நெறில் குறிலாகி விட்ட‌து.
(நெறி எழுத்திலும் குறைகிற‌து!!)

Annamalai சொன்னது…

உங்களின் தொகுப்பு மிக அற்புதம் .
மு வ அவர்கள் எழுதிய " வாழை தாய்"
என்ற கட்டுரை தொகுப்பில் நண்டு,தேள் போன்றவற்றின்
வாழ்கை அவற்றின் குஞ்சுகள் வெளிவரும்போது முடிந்துவிடும்.
என்று சொல்லிருப்பார்
அவை மனிதனின் தாய்மை பற்றை சாடுவது போல் கட்டுரை
அமைந்திருக்கும்.
குருவிபோர் என்ற தலைப்பில் 10 கட்டுரைகள்.

அப்பாதுரை சொன்னது…

:) vasan

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...