7.6.11

ராவண் லீலா




 

















மிக நீண்ட காலத்துக்குப் பிறகு இந்த ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சி பார்த்தேன்.

ஊடகங்களின் முதிர்ச்சியும் அரசியல்வாதிகளின் முதிர்ச்சியும் எந்த அளவில் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள முடிந்தது.

ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண்லீலா  அதிர்ச்சியளித்தது.
நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் எழுப்பிவிடப்பட்டு விரட்டியடிக்கப் பட்ட அக்கிரமக் காட்சி நாம் எந்த மாதிரியான பாதுகாப்பற்ற சூழலில் இருக்கிறோம் என்பதைக் காட்டியது.

அங்கு கூடியிருந்த கூட்டத்தில் பலதரப்பட்ட மக்கள் இருந்தார்கள். அவர்கள் ஊழலுக்கும் கறுப்புப் பண மீட்புக்கும் எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து அங்கு கூடியிருந்தார்களா என்பதையும் விட-

அந்த கூட்டத்தைக் கூட்டிய ராம்தேவின் பின்னணி மற்றும் அதற்கு ஆர்.எஸ்.எஸ்-பஞ்ரங்தள்-பாஜக- ஆதரவு இருந்தது என்பதையெல்லாம் ஆராய்வதை விட-

பாதுகாப்பற்ற ஒரு தலைநகரில் தலைக்கு மேல் பாதுகாப்பான கூரையை நம்பி பெட்டி படுக்கையுடன் வந்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமை அன்றிரவில் என்னவாயிருந்திருக்கும்? அவர்கள் அந்த இரவின் சொச்சத்தை எப்படிக் கழித்திருப்பார்கள்? ஊருறங்கும் வேளையில் தங்களின் இயற்கை உபாதைகளுக்கும் குடிநீர் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கும் என்ன செய்திருப்பார்கள்? என்ற ஆதங்கம் எவரொருவர் வாயிலிருந்தும் உதிரவில்லை.

வெளிப்படையாகச் சொன்னால் எதையோ நம்பிவந்த அவர்களை நடுத் தெருவில் நிறுத்தியது இந்த அரசு.

தங்களின் கட்சிக்கு ஏற்ற வகையில் கருத்துக்களைச் சார்ந்தோ எதிர்த்தோ வளவளத்துக் கொண்டிருந்த எந்த ஒரு அரசியல்வாதியிடமும் பொதுமக்களின் பாதுகாப்புக் குறித்த கோபமோ அக்கறையோ இல்லை.

சந்தோஷ் ஹெக்டே-ஸ்வபன் தாஸ் குப்தா-சந்தன் மித்ரா மற்றும் மணிசங்கர் அய்யர் இவர்களின் பேச்சுக்களில் மட்டுமே விருப்பு வெறுப்பற்ற உண்மையான பார்வை காணக்கிடைத்தது.

பல்லாயிரக் கணக்கில் கூடும் கூட்டம் எந்த நம்பிக்கையைச் சார்ந்ததாகவும் இருக்கட்டும். யார் தலைமையில் வேண்டுமானாலும் கூடட்டும். அந்தக் கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செய்கைகளில் இறங்குவது அரசின் முகத்தில் நம்மைக் காறி உமிழ வைக்கிறது.

இந்த மூர்க்கத்தனமான முடிவை எடுத்தது யார் உத்தரவின் பேரில்? நான்தான் தவறிழைத்தது. இந்த விளைவுகளுக்கு என் உத்தரவுதான் காரணம் என்று தைரியமாகப் பொறுப்பேற்க ஊடகங்களின் ஒலிபெருக்கியின் முன் பேசியபடியே பிறரைக் குற்றம் சாட்டும் ஆளும் கட்சியின் பயில்வான்களுக்கோ அரசின் நிர்வாக ஜாம்பவான்களுக்கோ தைரியமில்லை.வெட்கம் கெட்டவர்கள்.

இதே அரசு எந்த முகத்தை வைத்துக்கொண்டு அடுத்த தேர்தல்களில் ஓட்டுக் கேட்கப் போகும்? அல்லது ஓட்டுக் கேட்கும் போது இது ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஆட்கள்-இது பா.ஜ.க.வின் ஆட்கள்-இது இடது சாரி என்று பிரித்துப்பார்த்துக் காலில் விழுவார்களா?

நாட்டின் மக்கள் ஒழுக்கத்தையும் நேர்மையையும் யாரிடமிருந்தோ எதிர்பார்க்கிறார்கள். யாரிடம் அது கிடைக்கும் என்று தேடும் போது எந்தக் குரல் சமீபித்திருக்கிறதோ அந்தக் குரலை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.

ஆளும் நிர்வாகத்தின் மீதான அதிருப்தியில் தங்கள் வாழ்வில் தினம்தினம் எதிர்கொள்ளும் அவலங்களின் தொடர்கதைக்கு முடிவாக பற்றிக்கொள்ள ஒரு கொடியைத் தேடுகிறார்கள்.

அந்த நம்பிக்கை அவர்களின் உரிமை. அதைத் தீர்மானிக்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை. அதே போல் அது யாருக்கும் இடையூறாக இல்லாத போது அதைத் தடுக்கும் அல்லது துரத்தும் உரிமையும் யாருக்கும் இல்லை.

இந்த அநீதிக்கான தண்டனையைத் தர  நினைவோடு காத்திருக்கிறது காலம்.

10 கருத்துகள்:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உண்மையில் நடந்தேறியது ராவண் லீலா தான். இரண்டு நாட்களாக தில்லியின் பிரதான குருத்வாராக்களில் உணவு வழங்கும் லங்கர் கூடாரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருப்பது கண்கூடு. நான் தினமும் வரும் வழியில் உள்ள பங்க்ளா சாஹிப் குருத்வாராவில் இவர்களது நடமாட்டம் நிறைய தெரிவதிலிருந்து தெரிகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//கூட்டத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அரசே இத்தகைய காட்டுமிராண்டித் தனமான செய்கைகளில் இறங்குவது //

மிகவும் பயங்கரமான போக்கு தான். உங்கள் கொதிப்பு அனைவருக்குமே ஏற்பட்டுள்ளது. இதற்கான விலை விரைவில் மக்களால் தரப்படும் என்பது நிச்சயம்.

A.R.ராஜகோபாலன் சொன்னது…

"இந்த அநீதிக்கான தண்டனையைத் தர நினைவோடு காத்திருக்கிறது காலம்"

அந்நாள் விரைவில் வரவேண்டும் அண்ணா இல்லையெனில் வரவைக்கவேண்டும்

மிருணா சொன்னது…

இந்த முறை தேர்தலில் 49 O போட எத்தனை ஆர்வம் இருந்ததது என்பதைப் பார்க்கவும்,கேட்கவும், உணரவும் முடிந்தது.வாக்குப் பதிவு எந்திரத்திலேயே அதைப் பதிவு செய்யும் வாய்ப்பு வரும் பட்சத்தில் நிச்சயம் மாற்றம் வரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

G.M Balasubramaniam சொன்னது…

அரங்கேற்றப்பட்ட நிகழ்ச்சிகளால் யாருக்கென்ன ஆதாயம். ? காலம் சீக்கிரமே பதில் சொல்லும்.

எல் கே சொன்னது…

வரும் தேர்தலில் தண்டனை அளிப்போம்

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! 1000 கோடி சொத்து. ஸ்காட்லாண்டு அருகில் சொந்தமாக ஒரு தீவு . இவை எல்லாம் எப்படி வந்தது என்று அரசு விசாரிக்கப் போகிறதாம்.இது முன்னமெயே தெரிந்தும் ஏன் விசாரிக வில்லை. திருடன் ஒடும்பொது திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே போவான் . நாமும் அவன்கூடவே ஒடி களைத்து நின்றுவிடுவோம். வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணம், லஞ்சம் எல்லாம் மறந்து அரசு இரவு நடத்திய தடியடியில் நின்று விட்டோம்---காஸ்யபன் .

சுந்தர்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! நலமா?

உங்களுக்கான பதில்.

என் இடுகை ஆளும் திருடர்களைப் பற்றியோ போராடும் திருடர்களைப் பற்றியோ அல்ல. பாரதி சொன்னது போல் தவறிழைத்தவர்கள் ஐய்யோவென்று போவார்கள்.

முதியவர்களும் பெண்களும் குழந்தைகளும் விரட்டப்பட்டது பற்றித்தான் என் ஆதங்கம்.

ரிஷபன் சொன்னது…

நாட்டின் மக்கள் ஒழுக்கத்தையும் நேர்மையையும் யாரிடமிருந்தோ எதிர்பார்க்கிறார்கள். யாரிடம் அது கிடைக்கும் என்று தேடும் போது எந்தக் குரல் சமீபித்திருக்கிறதோ அந்தக் குரலை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள்.
உண்மையான வார்த்தை சுந்தர்ஜி.
நடுத்தெருவில் நிறுத்தப்பட்டது அவர்கள் மட்டுமல்ல.. அரசு குறித்த நம் நம்பிக்கைகளும்.

Ramani சொன்னது…

கங்கிரஸின் கஷ்ட நிலமையையும்
நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும்
திடுமென கறுப்புப்பணத்தைப்பிடி
ஊழலை உடனே ஒழி என்றால்
அவர்கள் என்னதான் செய்வார்கள் பாவம்
கொஞ்சம் கால அவகாசம் கொடுத்தால்
அவர்கள் பதுக்கவேண்டியதை பதுக்கிவிட்டு
ஒதுக்கவேண்டியதை ஒதுக்கிவிட்டு
உறுதியாக நடவடிக்கை எடுக்க முயல்வார்கள்
அதை விடுத்து ஆளாளுக்கு இப்படி உண்ணாவிரதம் என்றால்
தடியடி நடத்தாமல் வேறு என்னதான் செய்வதாம்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...