18.6.11

நெருப்பில் பூத்த முழுநிலவு



சினிமாவுக்கு ஒரு பெரிய சக்தி உண்டு. எல்லோராலும் அறியப்படாமல் இருக்கும் விஷயங்களை எளிதாக இதயத்துக்கு எடுத்துச் செல்லும் அதன் வலிமை அசாத்தியமானது.

குணா வெளியான பின் அபிராம பட்டரைப் பற்றியும் அபிராமி அந்தாதியைப் பற்றியும் நிறையப் பேர் அறிய விரும்பினார்கள். இளம் வயதில் கோயில்களில் பாடப்பட்ட ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை அல்லது தனம் தரும் என்று தொடங்கும் சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரல் ஈர்க்காத விஷயத்தை கமலஹாசன் ரோஷினியின் காதல் முலாம் பூசப்பட்ட திரைக்கதையும் அபாரமான உணர்வுப் பூர்வமான நடிப்பும் ஈர்த்தது.

புண்ணியம் செய்தனமே-மனமே.- புதுப் பூங் குவளைக்
கண்ணியும் செய்யக் கணவரும் கூடி நம் காரணத்தால்
நண்ணி இங்கே வந்து தம் அடியார்கள் நடு இருக்கப்
பண்ணி நம் சென்னியின் மேல் பத்ம பாதம் பதித்திடவே

என்ற பாடலுடன் இறந்து போன அபிராமியை மடியில் கிடத்திக் கொண்டு அவளின் மரணத்தை ஏற்கமுடியாது குணா தவிக்கும் போது யார் கண்களில் இருந்து கண்ணீர் வடியாது இருக்க முடியும்?

ஒரு சுவாரஸ்யத்துக்காக குணாவில் துவங்கிய இந்த இடுகை அபிராம பட்டர் இருந்த திசையில் நகருகிறது.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் திருக்கடவூர் என்கிற திருக்கடையூரில் வாழ்ந்தவர் சுப்ரமண்ய அய்யர். அவர் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் அபாரமான பாண்டித்யம் பெற்ற மேதை.

தினமும் திருக்கடவூரின் அபிராமியைப் பார்க்காது அவரின் நாள் துவங்காது. முடியாது. பித்துப்பிடித்தவரின் மனநிலையில் அபிராமியின் மீதான பக்தி இருந்தது. ஒரு கடிகார முள்ளைப் போல் இயங்கும் மக்களின் நடுவில் அவரின் அபிராமிப் பித்து அவரைத் திரும்பிப் பார்க்க வைத்தது.

அப்போதைய திருக்கடவூர் இரண்டாம் சரபோஜியின் ஆட்சியின் கீழ் இருந்தது. வழக்கமாய் திருக்கடவூர் வருகை தந்த சரபோஜி தை மாதம் அமாவாசை கழிந்த பிரதமையில் காவிரிப்பூம்பட்டினத்தில் நீராடிவிட்டு திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரரையும் அபிராமியையும் தரிசிக்க வந்தார். மன்னர் வந்திருப்பது தெரியாத யோகநிலையில் அபிராமியின் மேல் பக்தி செலுத்தியபடி அமர்ந்திருந்த சுப்ரமண்ய அய்யரைப் பற்றி அங்கு கூடியிருந்த மக்களிடம் விசாரித்தான் மன்னன்.

அவரைப் பித்துப்பிடித்த மனிதராய் வர்ணித்தது சமயம் கிடைத்த பொதுஜனம். அதைச் சோதிக்க எண்ணிய மன்னன் அய்யரிடம்-

”இன்றைக்கு அமாவாசை மீதமிருக்கிறதா? எத்தனை நாழிகை இருக்கிறது என்று பார்த்துச் சொல்ல முடியுமா?”

என்று கேட்க அபிராமியின் நிலவு போன்ற வசீகரத்தில் மயங்கிக் கிடந்த அய்யர்

”இன்றைக்குப் பௌர்ணமி அல்லவா?” என்றார்.

தன்னிடம் அவரைப் பற்றிச் சொல்லியிருந்த மக்களின் கூற்று நிரூபணமாகி விட்டதாய் நினைத்த மன்னன் அங்கிருந்து இன்றைக்குப் பௌர்ணமி திதியா? வேடிக்கைதான் என்றபடியே கிளம்பினான்.

வந்திருந்த மன்னனிடம் தன் பரவச நிலையில் செய்த  தவறை எண்ணி வருந்திய அய்யர் தன்னை தண்டித்துக் கொள்ள முடிவு செய்தார்.

”அபிராமி! உன்னைத் துதித்தபடி மயங்கியிருந்த என் உளறலுக்கு நீதானே பொறுப்பு? இருந்தாலும் என் தவறுக்கு என்னை நான் தண்டித்துக் கொள்கிறேன்” என்ற அய்யர் அம்மனின் சன்னதிக்கு முன்னே அரிகண்டம் பாடத் தொடங்கினார்.

அரிகண்டம் என்பது-

நூறு கயிறுகளைக் கொண்டு உறி ஒன்று கட்டப்படும். அதன் கீழே தீக்குழி ஒன்று அமைக்கப்படும். அந்த உறியின் மேல் இருந்து தெய்வத்தைக் குறித்து வேண்டிப்பாடுவது மரபு. பாடும்போது அத்தெய்வத்தின் அருள் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு பாடலாகப் பாடி முடிக்க வேண்டும். கடவுளின் அருள் கிடைக்காதவரை ஒரு பாடல் பாடி முடித்ததும் ஒரு கயிறு வெட்டப்படும். இப்படி எல்லாக் கயிறுகளும் வெட்டப்பட்டால் பாடுபவர் தீக்குழியில் விழுந்து உயிர் துறப்பார்.

சுற்றியிருப்பவர்களுக்கு ஒரே பரபரப்பு.

ஒவ்வொரு அந்தாதியாகப் (அந்தமும் ஆதியும் இணைந்ததுதான் அந்தாதி. எந்தச் சொல்லில் முதல் பாடல் முடிந்ததோ அதே சொல் முதல் வார்த்தையாக அடுத்த பாடல் துவங்கவேண்டும்) பாடத் துவங்கினார். அபிராமியின் மேல் வடிக்கப் பட்ட ஒவ்வொரு பாடலும் அய்யரின் தமிழ்ப் புலமையையும் அவரின் பக்தியையும் காட்டின.

இப்படியே ஒவ்வொரு கயிறாக வெட்டப்பட்டுத் தொங்கியபடியே தனக்குக் கீழே சுட்டுப் பொசுக்கும் வெம்மையோடு 78 அந்தாதிகளை முடித்து-

விழிக்கே அருள் உண்டு அபிராம வல்லிக்கு, வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சு உண்டு எமக்கு அவ்வழி கிடக்க,
பழிக்கே சுழன்று வெம் பாவங்களே செய்து பாழ் நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடு என்ன கூட்டு இனியே?

என்கிற 79ம் அந்தாதியைப் பாடும் போது அடையாளம் எதுவுமில்லாத இந்த அற்பனின் கண்களே கசியும் போது அபிராமி என்னவாகியிருப்பாள்? தன் பக்தனை மேலும் சோதிக்க விரும்பாமல்  வலது காதிலிருந்த முழுநிலவையும் மிஞ்சக் கூடிய ஒளிமிக்கக் காதணியைக் கழற்றி வானமண்டலத்தில் வீசினாள் அபிராமி.

பிரதமையன்று வானில் முழுநிலவு உதித்தது. அய்யர் அம்மையின் அருளில் திளைத்துக் கண்ணீர் வடித்தார்.  அத்தோடு நிறுத்திவிடாமல் நூறு பாடல்கள் பாடிமுடித்து அந்தாதியைப் பூர்த்தி செய்தார்.சுற்றியிருந்த மக்களுக்கும் அய்யரின் பக்தியைப் பித்தென நினைத்த மடமைக்கு வருந்தினார்கள்.

இதைக் கண்டு பிரமித்த மன்னனும் அவரை அன்று முதல் அபிராமப் பட்டர் என்றழைக்க உத்தரவிட்டான். அவருக்கு ஏராளமான பரிசுகளையும் நிலங்களையும் ஏற்க மறுத்த போதும் வற்புறுத்திக் கொடுத்துக் கௌரவித்தான்.

இன்றைக்கும் அபிராமி அந்தாதியைக் கேட்கும் ஒவ்வொரு முறையும் அதனடியில் மறைந்திருக்கும் வெம்மையை உணர்வது போலவே உதித்த முழுநிலவையும் உணர்வதுண்டு.

அபிராமி.அபிராமி.

17 கருத்துகள்:

A.R.ராஜகோபாலன் சொன்னது…

உண்மை தான்
ஒரு படத்தில் சொல்லடி அபிராமி என்று உணர்ச்சி பூர்வமாய் எஸ் .வி.சுப்பையா படும் பாடலும் என்னை அறியாமல் நினைவுக்கு வந்தது.
நல்ல பக்தியை சொன்ன பதிவு

சிவகுமாரன் சொன்னது…

தங்களை கண்ணீர் மல்க வணங்குகிறேன் சுந்தர்ஜி அமிராமி அந்தாதியின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வலிமை உண்டு என் தந்தையார் சொல்வார்கள். சிறுவயதில் என் தமிழார்வத்தை கண்ணுற்ற என் தந்தை அபிராமி அந்தாதி நூலில் " கவிபாடும் ஆற்றல் பெற "என்று தலைப்பிட்டிருந்த "வல்லபம் ஒன்றறியேன் " என்ற 66 ஆவது பாடலை மனனம் செய்யச் சொன்னார். எனக்குள் அந்தாதி அப்போது முதல் ஐக்கியமானது. எனக்கு ஒரு தீராத சோதனை வந்த போது ஒரு அன்பர் அபிராமி அந்தாதி 100 பாடல்களையும் மனனம் செய்யச் சொன்னார். இன்று எனக்கும் என் மனைவிக்கும் 100 பாடல்களும் அத்துபடி.
மனம் சஞ்சலப்படும் போதெலாம் "நன்றே வருகினும் தீதே வருகினும் நான் அறிவது ஒன்றேயுமில்லை" என்று பாடத் தொடங்கிவிடுவேன். மந்திரசக்தி வாய்ந்தது அபிராமி அந்தாதி என்பது என் கருத்து.
பல கோடி நன்றிகள் உமக்கு.

சிவகுமாரன் சொன்னது…

விட்டுப் போனவற்றையும் படித்து விடுகிறேன். வலைப்பக்கம் வந்து வெகு நாளாயிற்று.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

திரு. A R ராஜகோபாலன் மிகச்சரியாகச் சொல்லிவிட்டார். ஆதிபராசக்தி என்ற படம் என்று ஞாபகம். என் தலை தீபாவளி அன்று 1972 அக்டோபரில் தியேட்டரில் போய்ப்பார்த்தது. அந்தக்காட்சி இன்னும் என் கண்முன் நிற்கிறது. எஸ்.வி.சுப்பையா மிக நன்றாக நடித்திருப்பார். ‘சொல்லடி அபிராமி’ என்ற அந்தப்பாடல் வெகு அருமையாக இருக்கும். தியேட்டர் பூராவும் மிகவும் உருக்கமாக அமைதியாக ஜனங்கள் அமர்ந்து ரசிப்பார்கள். அதைக்காணும் பாக்யம் பெறாதவர்களுக்கு, இந்தப்பதிவு அருமையானது தான். நன்றி.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அபிராமியின் அருள் சுந்தர்ஜிக்கும் அவர் மூலமாக அனைவருக்கும் கிடைத்துள்ளது இன்று. அன்புடன் vgk

Ramani சொன்னது…

அபிராமி அந்தாதி குறித்து
அறியாதோரும் மிக எளிதாக அறியும் வண்ணம்
மிகச் சிறப்பாக பதிவிட்டமைக்கு
நன்றி.தொடர வாழ்த்துக்கள்

RVS சொன்னது…

குணா மலை வீட்டை பார்த்ததுமே நினைத்தேன்.
அபிராமி..அபிராமி... என்று முடித்திருப்பது தனிச் சிறப்பு ஜி! ;-))
அரிகண்டம் விளக்கம் அறிந்தேன். நன்றி. ;-))

ராகவன் சொன்னது…

அன்பு சுந்தர்ஜி,

நல்லாயிருந்தது இந்த பதிவு...

அந்தாதியைப் பற்றி கேள்விப்பட்டு, நானும் எழுதிபாத்திருக்கேன் சிறுபிள்ளைத்தனமாக. ஆனால் கண்ணதாசன் சினிமாப்பாடலில் முயன்றிருக்கிறார். மூன்றுமுடிச்சு படத்தில், வசந்த கால நதிகளிலே மற்றும் ஆடி வெள்ளி பாடல்களில் அந்தாதி இருக்கும்...

அபிராமி பட்டர் கதை இன்னும் நிறைய இருக்கு சுந்தர்... நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம்.

அன்புடன்
ராகவன்

ஹேமா சொன்னது…

சிறு வயதில் இந்தப் படம் பார்த்தமாதிரி ஞாபகம் வருது !

Matangi Mawley சொன்னது…

அபிராம பட்டர் கதை-- அம்மா தான் முதல்ல சொல்லி கேட்டிருக்கேன்... இவ்வளோ details தெரியாது... இப்போ தான் முதல் தரம்-- இவ்வளோ details ஓட இந்த கதைய படிக்கறேன்... thanks for sharing the story, sir-ji!
அபிராமி அந்தாதி-- எங்க sloka class miss சின்ன வயசில-- ரெண்டு பாட்டு சொல்லி கொடுத்தா... அப்போலாம் பெருசா அர்த்தம் புரிஞ்சு- உணர்ந்து பாடற வயசு இல்ல... ஒரு சில விஷயங்கள பாக்கற perspective வயசுக்கு ஏத்தாப்ல மாரிக்கறது...
நான் 'குணா' படம் பார்த்ததில்ல... பார்த்தாலும் பார்க்கலாம்...

G.M Balasubramaniam சொன்னது…

மார்க்கண்டேயனை என்றும் பதினாறாக்க காலனை காலால் உதைத்த ஸ்ரீஅமுதகடேசரையும் ஸ்ரீ அபிராமி அம்பிகையையும் சேவித்து ,சஷ்டியப்த பூர்த்தி, மற்றும் சதாபிஷேகம் திருக்கடவூரில் நடத்துவது விசேஷம். பலமுறை தரிசித்த நினைவுகள் உங்கள் பதிவினைப் படித்தபோது எழுகிறது “கலையாத கல்வியும் குறையாதவயதும் ......எனத் துவங்கி அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி அருள்வாய் அபிராமியே” என்று முடியும் அபிராமியம்மை பதிகம் அந்தாதிக்குப் பதிலாக தினம் கூறுவது.
என் நூறாவது பதிவில் அன்னையை வேண்டி நான் ஒரு பதிவு எழுதியுள்ளேன்

ரிஷபன் சொன்னது…

இறையருளும் சேரும் போது கவிதை மந்திரமாகிவிடுகிறது என்பதற்கு அந்தாதியும் ஒரு சாட்சி.

இரசிகை சொன்னது…

nallaayirukku..........sundarji.

சிவகுமாரன் சொன்னது…

அந்தப் படம் அன்னை அபிராமி. அபிராமிபட்டராக எஸ், வி,சுப்பையா கலக்கியிருப்பார். இன்று நிலவு வருமா என்று கேட்க, " வரும் போ " என்று கண்களை உருட்டி சொல்வார் பாருங்கள். சிவாஜிக்கு இணையான நடிகர் எஸ்,வி,சுப்பையா.
அன்னை அபிராமி படம் என் சிறு வயதில் கோயில் திருவிழாவில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். முதலில் இந்தப் படம். பிறகு ஒரு எம்.ஜி.ஆர்., பிறகு ஒரு சிவாஜி படம் என்று திரை கட்டி காண்பிப்பார்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அன்னை அபிராமியும், அபிராமி அந்தாதியும், தொடர்புடைய பல விஷயங்களையும் பற்றிச் சொல்லி எங்களுக்கும் அவள் அருள் கிடைக்கச் செய்த உங்களுக்கு எனது நன்றி....

vasan சொன்னது…

சூடிய‌ 'த‌லைப்பு', அபிராமி த‌லைக்கு தாங்க‌ள் சூட்டிய‌ பூ.

சு.சிவக்குமார். சொன்னது…

சுந்தர்ஜீ...அதே குணா படத்தின் துவக்கத்தில் அனந்து நடித்திருப்பார்(இவர்தான் கமலின் வெல்விசர்..இவர் இருந்துருந்த கமல் நிச்சயம் இன்னிக்கு வேற மாதிரி இருந்துருப்பார்..சரி..அதவிடுங்க..) அம்மன் அம்மையென்றும் ஆணும்,பெண்ணும் ரெட்டையாக ஒட்டிவந்த உடம்பு..பித்தனென்றும்..சித்தனென்றும் சக்கையாக போகும் கரும்பு..இதில் பட்டினத்தார் கருத்துகள் இருக்கா..அவர் பாடிய பாடல்கள் பற்றியும் எழுதங்களேன்..நேயர் விருப்பம் இது....

gkrishna சொன்னது…

அபிராமி பட்டர் (சுப்ரமணிய ஐயர) பஞ்சாங்கம் பார்த்து நாள் சொல்லும் ஜோசியர் என்று ஒரு பதிவில் படித்த நினவு. மேலும் பிரதமை அடுத்த இரண்டாவது நாள் முழு நிலவு தெரிந்தது என்று திருக்கடவூர் ஸ்தல புராணத்தில் பிரிண்ட் ஆகி இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறினார் திரு சுந்தர் அவர்கள் இது பற்றி சற்று விளக்கம் அளிக்க முடியுமா

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...