4.11.12

போனா வராது! அஞ்சு! அஞ்சு! அஞ்சேய்!


’இப்படி விடாமல் நாலடியாரை எழுதினால் எடுபடாதுலே மக்கா’ என்றான் என் நண்பன் ஜூடு (Judeஐத் தமிழில் எழுதுவது கொடுமை).

http://sundargprakash.blogspot.in/2012/10/blog-post_82.html
http://sundargprakash.blogspot.in/2012/10/blog-post_31.html

அவன் எச்சரிக்கையைத் துளியும் பொருட்படுத்தாமல், பொருட்பாலைப் பொருட்படுத்தி அடுத்த ஐந்து பாட்டுக்கள்.

பொறுமையாய் வாசித்தால் சொர்க்கம் சமீபிக்கும். வாசித்து முடித்த பின்னால் மனமிரங்கி பின்னூட்டம் இடும் அன்பர்களுக்குக் காலடியில் புதையல் அகப்படும் என்று தரும தீபிகை தன் 365ம் பக்கத்தில் தெரிவிக்கிறது.

பாட்டு 1:

முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டியுண் பாரும் குறடுபோற் கைவிடுவர்
சூட்டுக்கோல் போல எரியும் புகுவரே
நட்டார் எனப்படு வார்.                                        (208)

தினமும் சுகமாக உங்களோடு சாப்பிடும் உற்றார், சம்மட்டி போல வலியவர்களானாலும் - காலம் மாறும்போது - நெருப்பிலே இரும்பைப் போட்டுவிட்டுத் தப்பிக்கும் குறடு போல் கைவிட்டு விடுவார்கள்;

ஆனால் அன்புள்ள உறவினர்களோ, பொருளோடு சேர்ந்து நெருப்பில் குளிக்கும் சூட்டுக்கோலைப்  போல துன்பம் நெருக்கும் போதும் தாமும் கூடவே இருப்பார்கள்.

ஒரு கொல்லன் பட்டறை நம் கண் முன்னே விரிகிறது. என்றோ நெருப்பில் வாட்டப்பட்டு உருவான சம்மட்டி, பொருளைக் கைவிட்டுத் தப்பிக்கும் குறடு, தினந்தோறும் நெருப்பில் மூழ்கும் சூட்டுக்கோல் இந்த மூன்றும் கவிஞனின் துருத்தியில் ஒரு கவிதையையும், போதனையையும் சமைத்து விட்டது. 

என் மனம் நிறைவில் தளும்புகிறது இத்தருணத்தில்.

பாட்டு :2

யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்
கேண்மை கெழீஇக் கொளல்வேண்டும் - யானை
அறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்
மெய்யதா வால்குழைக்கும் நாய்.                  (213)

யானையோடு பல நாட்கள் பழகியிருக்கலாம் ஒரு பாகன். ஆனால் மதம் பிடித்த சமயத்தில் அது பழகிய பாகனையே கொன்று விடும். ஆனால் நாயோ,  அதை வளர்த்த நீங்கள் கோபத்தில் எறிந்த வேல், அதன் உடலில் பாய்ந்து துடித்தாலும், உங்களைக் கண்டதும் வாலை ஆட்டி உங்கள் அருகே வரும்.

அதுபோலக் கல்வி, குலம் ஆகிய சமாச்சாரங்களை மட்டும் அளவுகோலாக நினைக்காமல், மனதால் அன்பு பாராட்டும் மக்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்.

’மனசைப் பாரு மாமு’ என்பதை யானையையும், நாயையும் காட்டிப் பாடம் நடத்திய என் தாத்தனுக்கு ஒரு சலாம்.

பாட்டு :3

கடித்துக் கரும்பினைக் கந்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.                                 (156)

கரும்பைப் பல்லால் கடித்தாலும், கணுக்கள் நசுங்கும்படி ஆலையில் இட்டு அரைத்தாலும், உரலில் போட்டு இடித்தாலும் அதன் சாறு தரும் இனிமை மாறாது.

அதுபோல தழும்பை ஏற்படுத்தும் அளவு புண்ணாகும்படி  எவ்வளவுதான் இகழ்ந்து பிறர் சிறுமைப்படுத்தினாலும், மேன்மக்கள் தங்கள் வாயால் தீய வார்த்தைகளை ஒருபோதும் சொல்லமாட்டார்கள்.

கரும்பின் துன்பம் எதுவானாலும் இனிமையான சாறுதான் அதன் மொழி. எத்தனை வதைத்தாலும் முகம் வாடாது அவற்றைத் தாங்கி, இசை மொழியால் கடக்கும் மேன்மக்கள் நிச்சயம் கரும்புக்கு ஒப்பானவர்கள். சூரியனைப் பார்த்து நாய் குரைப்பதும் இப்போது கேட்கிறதில்லையா?

பாட்டு :4

ஆடுகோடாகி அதரிடை நின்றதூஉம்
காழ்கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வின்றித் தன்னைச் செயின்.                           (192)

காற்றில் அசையும் இளங்கன்று தன்னை ஒரு ஆடு மேய்ந்துவிடும் ஆபத்தையும் தாண்டி, எதிர்காலத்தில் வைரம் பாய்ந்து ஒரு ஆண் யானையையே கட்டும் பெரும் மரமாகும்.

அதுபோல ஒருவன் எளிதாய் அழிந்துவிடக் கூடிய தாழ்ந்த நிலையிலும் மனந்தளராது தொடர்ந்து செய்யும் விடாமுயற்சியால், அவனுடைய வாழ்வும் வைரம் பாய்ந்த மரத்தின் வலிய நிலையை அடையும்.

கன்று மரமாகும். துளி கடலாகும். முதல் சுவடு யாத்திரையாகும். பொறுத்தார் பூமி ஆள்வார். அழகு. அழகு.

பாட்டு :5

பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானால் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.                                               (158)

ஒருவனுக்கு எந்த அறிவுரையும் கூற வேண்டியதில்லை. அதற்கு மூன்று நிபந்தனைகள்: அவன்

1.பிறருடைய ரகசியங்களைக் கேட்பதில் செவிடனாக-
2.அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாக-
3.பிறர் இல்லாத போது அவரைப் பற்றிப் பழித்துப் பேசுவதில் ஊமையாக-

இருப்பானாயின்.

சபாஷ் பெயர், முகம் தெரியாத சமணத் துறவியே! ஒரு பாடல் மட்டுந்தான் எழுதலாம் என்கிற ஒரு சுயகட்டுப்பாடு விதிக்கப்பட்டால் இப்படி ஒன்று எழுத எத்தனை பேருக்கு முடியும்?

அடுத்த நாலடியார் இடுகையில் மீண்டும் சந்திக்கலாம் நண்பர்களே.

8 கருத்துகள்:

Ramani சொன்னது…

அவசியம் அறிந்து கொள்ளவேண்டிய பாடல்கள்
அருமையாக எளிமையாக புதுமையாக
விளக்கமளித்த விதம் மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…


ஒவ்வொன்றாகவோ அஞ்சு அஞ்சாகவோ நல்ல நல்ல செய்திகள் தாங்கி வருகிறது உமது வலைப்பூ. எவ்வளவு படித்தாலும் அறிவுரை ஏற்காத , ஏற்க முடியாத , விரும்பாத சமூகம் அல்லவா நமது.? இருந்தாலும் விடாது வற்புறுத்தி எழுதும் உம் போன்றவரும் இங்கு உண்டு என்பது ஒரு பெரிய சமாதானம். வாழ்த்துக்கள் சுந்தர்ஜி.

நிலாமகள் சொன்னது…

ஐந்தும் அஞ்செழுத்து போல‌ அற்புத‌ம். உப‌தேச‌த்தை அப்ப‌டியே உள்வாங்கிக் கொள்ள‌ல் ந‌ன்று...எம் போன்றோர்க்கு. புத்தியாம் பூக்குட‌லையில் பொதித்துக் கொண்டேன் பொக்கிஷ‌மாய்.

மோகன்ஜி சொன்னது…

அற்புதம்! நாலடியும்,அதன் உரையடியும்,உமது குறிப்படியும்.தொடருங்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமை... விளக்கம் புதுமை...

தரும தீபிகை அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும்...

நன்றி... தொடர்கிறேன்...

vasan சொன்னது…

க‌டைசி பாடலைப் ப‌டித்த‌பின்
பைய‌ன் கேட்கிறான்,
இது தான் ந‌ம் காந்தியின்
"மூன்று குர‌ங்கு"க‌ளுக்கு
முன்னோடியா? என‌...

மீனாக்ஷி சொன்னது…

எல்லாமே அருமை. உங்கள் விளக்கத்தோடு படிப்பது இன்னும் சுகம். தொடருங்கள்.

மஞ்சுபாஷிணி சொன்னது…

மனம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்பா.....

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...