11.8.13

சுபாஷிதம் - 8

141.
வித்யார்த்தீ ஸேவக: பாந்த: க்ஷுதார்த்தோ பயகாதர:
பாண்டீ ச ப்ரதிஹாரீ ச ஸப்தஸுப்தான் ப்ரபோத்யேத்  

மாணவன், பணியாளன், பயணிப்பவன், பசியோடிருப்பவன், அச்சத்துடன் இருப்பவன், சுமை தூக்குபவன், காவலாளி - தூங்கிக்கொண்டிருக்கும் இந்த ஏழு பேரையும் எப்போதும் எழுப்பலாம். 

142.
காகஹஷ்டிர்பகத்யானம் ஷ்வானநித்ரா ததைவ ச
அல்பாஹாரம் ஜீர்ணவஸ்த்ரம் ஏதத்வித்யார்த்தீ லக்ஷணம்

காக்கைக்குச் சமமான கூர்மையான பார்வை, கொக்குக்குச் சமமான கவனம், நாய்க்குச் சமமான இளந்தூக்கம், குறைவான உணவு, எளிய உடை இவை மாணவனின் லட்சணம்.

143.
ஏகேனாபி ஸுபுத்ரேண வித்யுக்தேன ஸாதுனா
ஆஹ்லாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண ஷர்வரீ

கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஒரே புதல்வன் அந்தக் குலத்துக்கு அளிக்கும் இன்பம்,  உலகத்தின் இரவை ஒரே நிலவு ஒளியூட்டுவதற்கு ஒப்பானது.  

144.
ஷுன: புச்சமிவ வ்யர்த்தம் ஜீவிதம் வித்யா வினா
ந குஹ்யகோபனே ஷக்தம் ந ச தம்ஷநிவாரணே

கல்லாதவன் வாழ்க்கை, தன் மர்ம உறுப்பை மறைக்கவோ, கடிக்கும் ஈக்களைத் துரத்தவோ இயலாத நாய் வாலுக்குச் சமம்.

145.
அநப்யாஸே விஷம் வித்யா அஜீர்ணே போஜனம் விஷம்
விஷம் ஸபா தரித்ரஸ்ய வ்ருத்தஸ்ய தருணீ விஷம்

பயன்படுத்தப்படாத கல்வியும், சீரணமாகாத போது உணவும், வறியவனுக்குப் பொருந்தாத சபையும், முதியவனுக்கு இளம்பெண்ணும் விஷம்.

146.
சிகித்ஸகஜ்யௌதிஷமாந்த்ரிகாணாம் க்ருஹே க்ருஹே போஜனமாதரேண
அன்யானி ஷாத்ஸ்ராணி ஸுஷிக்ஷிதானி பானீயமாத்ரம் ந து தாபயந்தி

மருத்துவர்கள், சோதிடர்கள், மந்திரவாதிகள் இம்மூவருக்கும் வீட்டுக்கு வீடு உணவளித்து கௌரவிக்கப்பட, பிற தொழில் கற்றவர்களுக்கு ஒரு குவளை நீர் கூடத் தர மாட்டார்கள்.

147.
ஸ்நாதமஷ்வம் கஜம் மத்தம் வ்ருஷபம் காமமோஹிதம்
ஷூத்ரமக்ஷரஸம்யுக்தம் தூரத: பரிவர்ஜயேத் 

நனைந்த குதிரை, மதம் பிடித்த யானை, காமத்தால் பீடிக்கப்பட்ட காளை, நற்குணமற்றோனின் கல்வி இவற்றிடமிருந்து வெகுதூரம் விலகி இரு.

148.
லக்ஷ்மீர்லக்ஷணஹீனே ச குலஹீனே ஸரஸ்வதீ
அபாத்ரே லப்தே நாரீ மேதவர்ஷந்து பர்வதே

தகுதியற்றவன் பெற்ற செல்வம், குலம் கெடுத்தவன் பெற்ற கல்வி, பொருத்தமில்லாதோனுக்கு வாய்த்த மனையாள் இவை மூன்றும் மலையில் பொழியும் மழை போல உபயோகமற்றவை.

149.
ஸத்யேன லோகம் ஜயதி தானைர்ஜயதி தீனதாம்
குருன் ஷுஷ்ரூஷயா ஜீயாத்நுஷா ஏவ ஷாத்ரவான்

வாய்மையால் உலகத்தையும், துயரத்தைக் கொடையாலும், மூத்தோரைச் சேவையாலும், எதிரிகளை அம்பினாலும் வெல்ல வேண்டும்.

150.
ஷகடம் பஞ்சஹஸ்தேஷு தஷஹஸ்தேஷு வாஜினம்
கஜம் ஹஸ்தஸஹஸ்த்ரேஷு துர்ஜனம் தூரதஸ்த்யஜேத்

வாகனத்திடமிருந்து ஐந்து முழம்; குதிரையிடமிருந்து பத்து முழம்; யானையிடமிருந்து ஆயிரம் முழம்; தீயகுணமுள்ளவனிடமிருந்து கண்காணாத தொலைவு விலகிச் செல்ல வேண்டும்.

151.
ஆயு: கர்ம ச வித்தஞ்ச வித்யா நிதனமேவ ச
பஞ்சைதே நனு கல்ப்யந்தே கர்பகத்வேன தேஹினாம்

ஆயுள், செயல்பாடு, செல்வம், கல்வி, மரணம் இவை ஐந்தும் கருவிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுகின்றன.

152.
தரித்ரத்வே த்விபார்யாத்வம் பதிக்ஷேத்ரம் க்ருஷித்வயம் 
ப்ராதிபாவ்யஞ்ச சாக்ஷித்வம் பஞ்சாநர்தா: ஸ்வயம்க்ருதா:

வறுமையிலும்  இரு பெண்களைக் கட்டிக்கொண்டவன், சாலையில் வீடு கட்டியவன், இரு வேறு இடங்களில் விவசாயம் செய்பவன், சாட்சிக் கையொப்பமிட்டவன், வழக்கில் பிணையாய் உள்ளவன் இந்த ஐவரும் தன் தலையில் தானே மண்ணைப் போட்டுக் கொண்டவர்கள்.

153.
கஜபுஜங்கவிஹங்கமபந்தனம் ஷஷிதிவாகரயோர்க்ருஹபீடனம் 
மதிமதாஞ்ச ஸமீக்ஷ்ய தரித்ரதாம் விதிரஹோ பலவாநிதி மே மதி:

யானைகளும், பாம்புகளும், பறவைகளும் அடிமைப்பட்டுக் கிடப்பதையும், சூரியனும், சந்திரனும் கிரஹணத்தால் பீடிக்கப்பட்டிருத்தலையும், வறுமையால் வாடும் அறிஞனையும் பார்க்கையில் விதி வலியது என்றே எண்ணத் தோன்றுகிறது.

154.
ஏகதா தஷதா ச்சைவ ஷததா ச ஸஹஸ்த்ரதா 
ரணே  பார்தஷரோவ்ருஷ்டிர்தானம் ப்ரஹ்மவிதே யதா 

குறி பார்க்கையில் பத்து மடங்காகவும், எய்யும்போது நூறு மடங்காகவும், செலுத்தப்பட்ட இலக்கில் செல்கையில் ஆயிரம் மடங்காகவும், இலக்கைத் தாக்கும் போது கணக்கற்றவையாய் மாறும் அர்ச்சுனன் எய்த அம்பின் தன்மை கொண்டது மெய் ஞானத்தை அறிந்தவனுக்கு அளிக்கும் தர்மத்தின் பலன்.  

155.
ஏகபார்யா த்ரய: புத்ரா: த்வேஹலே தஷதேனவ:
மத்யராஷ்ட்ரே க்ருஹம் யேஷாமத்யந்தஸுக்ருதாஷ்ச்ச தே 

ஒரு மனைவி, மூன்று புதல்வர்கள், இரு கலப்பைகள், ஆறு பசுக்கள், நகர மத்தியில் ஒரு வீடு அமைந்தவர்கள் பெரும்பேறு பெற்றவர்கள்.

156.
வால்மீகம் மதுஹாரஷ்ச பூர்வபக்ஷே து சந்த்ரமா 
ராஜத்ரவ்யஞ்ச பைக்ஷஞ்ச ஸ்தோகஸ்தோகேன வர்ததே 

எறும்புப் புற்று, தேன்கூடு, வளர்பிறை நிலா, அரசனின் செல்வம், யாசிப்பவனுக்குக் கிடைக்கும் உணவு இவையனைத்தும் படிப்படியாகத்தான் வளரும்.

157.
ஆயுஷ: கண்டமாதாய ரவிரஸ்தமயம் கத:
அஹன்யஹனி போத்ரவ்யம் கிமேதத் ஸுக்ருதம் க்ருதம் 

ஒருவனின் ஆயுளில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டே தினமும் சூரியன் மறைகிறது. இதையறிந்த ஒவ்வொருவரும் தினமும் நியாயமான பாதையில் செல்ல வேண்டும்.

158.
பாலார்க்க: ப்ரேததூமஷ்ச்ச வ்ருத்வஸ்த்ரீ பல்வலோதகம் 
ராத்ரௌ தத்யன்னபுக்திஷ்ச்ச ரோகவ்ருத்விர்தினேதினே 

காலைச் சூரியன், பிணப்புகை, முதிய பெண்ணுடன் கொள்ளும் உறவு, கலங்கிய நீர், இரவில் புசிக்கும் தயிர்சாதம் இவையனைத்தும் மெல்ல மெல்ல நோயை வளர்க்கும்.

159.
வ்ருத்வார்கோ ஹோமதூமஷ்ச்ச பாலஸ்த்ரீ நிர்மலோதகம் 
ராத்ரௌ க்ஷீரான்னபுக்திஷ்ச்ச ஆயுர்வ்ருத்விர்தினேதினே 

மாலைச் சூரியன், வேள்விப்புகை, இளம் பெண்ணுடனான உறவு, தூய நீர், இரவில் புசிக்கும் பால்சாதம் இவையனைத்தும் மெல்ல மெல்ல ஆரோக்கியத்தை வளர்க்கும். 

160.
அர்தா: க்ருஹே நிவர்த்தந்தே ஷமஷானே புத்ரபாந்தவா:
ஸுக்ருதம் துஷ்க்ருதஞ்சைவ கச்சந்தமனுகச்சதி 

ஈட்டிய பொருள் வீட்டோடு; மகனும், உறவும் மயானத்தோடு; ஒவ்வொருவர் செய்த நல் வினையும், தீய வினையும் அவரவரோடு.

6 கருத்துகள்:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அனைத்துக்கருத்துக்களும் அருமையாக யோசித்துச் சொல்லப்பட்டுள்ளன.

அனுபவ பூர்வமாக அறிந்து தெரிந்து எடைபோட்டு எழுதி வைத்துள்ளார்கள்.

பகிர்வுக்கு நன்றிகள், ஜி.

sury siva சொன்னது…

கா தே காந்தா கஸ்தே புத்ரஹ

என்று துவங்கும் பஜ கோவிந்த பாடலும்

வாழ்வின் அனித்யத்தையே குறிக்கிறது.


சுருக்கமான சுவையான விளக்கம்.

அருமை.

சுப்பு தாத்தா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அனைத்துக் கருத்துக்களும் அருமை...
பகிர்வுக்கு நன்றி ஜி.

G.M Balasubramaniam சொன்னது…

சில சுபாஷிதங்களின் பொருளைத் தமிழில் படித்துவிட்டு சம்ஸ்க்ருதத்தை படித்தால் ஏதோ வடமொழி சிறிது புரிகிறார்போல் இருக்கிறது.சு. 144 ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு நன்றி சுந்தர்ஜி.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வாழ்வில் உய்த்து உணரவேண்டிய

வாக்குகள்..!

அப்பாதுரை சொன்னது…

இந்த உவமைகளை அப்படியே ரியூஸ் செய்யணும்னு துடிக்கிறேன். என்ன வளம்! எப்பேற்பட்ட ஒரிஜினெலிடி!

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...