1.2.12

தரங்கம்பாடியில் கி.பி.1622ல் ஜான் ஓலஃப்ஸன்


1620 ஆம் ஆண்டு தஞ்சாவூரை ஆண்ட விஜயரகுநாத நாயக்கர் டென்மார்க்கின் மன்னர் நான்காவது க்றிஸ்டின் என்பவருடன் ஒரு வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டார். 
அந்த ஒப்பந்தத்தின்படி தரங்கம்பாடியில் டேனிஷ்காரர்கள் ஒரு கோட்டையை அமைத்துக் கொண்டு வாணிகம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்பொழுது தரங்கம்பாடி சுற்றுலா வந்த ஐஸ்லாந்தைச் சேர்ந்த ஜான் ஓலாஃப்ஸன் தரங்கம்பாடி கோயிலில் நடைபெற்ற திருவிழா பற்றியும் அங்கு நிலவிய சட்டம் ஒழுங்கு பற்றியும் நேராகப் பார்த்து ஒரு குறிப்பு எழுதிவைத்துள்ளார். 
1593ம் ஆண்டு ஐஸ்லாந்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜான் டென்மார்க்கின் கோபன்ஹேகனுக்கு படிக்கவும் தொழில் செய்யவும் வந்தார். அந்த நாட்டு மன்னரின் பீரங்கிச் சிப்பாயாக பணியில் அமர்ந்தார். 1618ம் ஆண்டு டென்மார்க் மன்னர் க்றிஸ்டின் இந்தியாவுக்கு "ஒவ்கிட்" என்பவரை வர்த்தகத்துக்கு அனுப்பியபோது ஓலஃப்ஸனும் உடன் செல்லவிரும்பினார். ஆனால் அதற்கு மன்னர் அனுமதி அளிக்கவில்லை. அதன் பின்னர் தஞ்சாவூருக்கும் டென்மார்க்கும் 1620ல் ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் இந்தியாவுக்கு பீரங்கிச் சிப்பாயாக சென்றுவர ஜான் ஓலஃப்ஸனுக்கு மன்னர் அனுமதி கொடுத்தார். இவரது கப்பல் டென்மார்கிலிருந்து தரங்கம்பாடி வந்து சேர ஏழு மாதங்கள் பிடித்தன. அது அக்காலத்தில் மிகவும் விரைவான பயணமாக கருதப்பட்டது. தரங்கம்பாடியில் இவர் ஒன்றரை ஆண்டுகள் பீரங்கிச் சிப்பாயாக பணிபுரிந்தார். 
இவருடைய குறிப்புக்களில் எத்தனை நேர்மையும் ஆச்சர்யமும் தெளிவும் இருந்திருக்கிறது? சுமார் 390 வருடங்களுக்கு முந்தைய நமது நாகரீகமும் கலாச்சாரமும் எத்தனை மேன்மையுடன் விளங்கின என்பதற்கு இவருடைய பயணக் குறிப்புகள் சாட்சியாக இருந்திருக்கின்றன.
இனி நேரடியாக ஜானின் மொழிக்குச் செல்வோம்.

”இங்குள்ளவர்கள் (இந்துக்கள்) தமது விழாக்களைப் பெரும்பாலும் இரவில் கொண்டாடுகிறார்கள். நான் ஒரு நாள் இரவு தரங்கம்பாடி கோட்டையில் பீரங்கிக் கொத்தளத்தில் நின்று கொண்டிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் எதிரே அந்தக் கோயில் தெரியும்.
தரங்கம்பாடி கோயில் ஒரு சதுரமான உயர்ந்த கட்டிடத்தைக் (விமானத்தை) கொண்டது. அதைச் சுற்றிலும் உயர்ந்த சுற்று சுவர்கள் உள்ளன. அதன் நடுவில் ஒரு பரந்த முற்றம் உண்டு. 

அங்கு விவரிக்க முடியாத பயங்கரமான சிற்பக்காட்சிகள் உண்டு. அந்தக் கோயிலின் உள்ளே மிருக வடிவில் ஆறு சிற்பங்கள் இருந்தன. கோயிலின் உள்பகுதியில் தங்கத்தாலான மிகவும் அழகான பீடம் ஒன்றில் மூன்று தெய்வங்களின் உருவங்கள் இருந்தன. இந்த முக்கியமான மூன்று தெய்வங்களும் தான் ஆண்டுக்கு ஒரு முறை வீதிகளில் தேரில் ஏற்றி உலாவாகக் கொண்டு வருகிறார்கள். 


இத்தேரை வீதிகளில் இழுத்துச் செல்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது கொட்டு வாசிப்பவர்களும், மூன்று நான்கு கொம்பு வாசிப்பவர்களும் தங்கள் கருவிகளை வாசித்துக் கொண்டு வருகிறார்கள். தளியார் என்ற பல வீரர்களும் இதன் முன் செல்கிறார்கள். அன்று கோயில் பசுக்களை எல்லாம் சுதந்திரமாக தெருவில் அவிழ்த்து விட்டு விடுகிறார்கள்.
நான் அன்றிரவு கோட்டை மேல் இருந்து கண்ட காட்சி இதுதான். தீவட்டி வெளிச்சத்தில் காட்சி நன்றாகத் தெரிந்தது. அவர்கள் ஆடிக்கொண்டும், பாடிக்கொண்டும் வருவது தெரிந்தது. 

கோயிலின் உள்ளே மற்ற நேரங்களில் தொங்கவிட்டு வைத்திருந்த அழகிய ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து இவர்கள் ஆடிக் கொண்டு வருவது கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது. 


ஒரு நடிகர் மீன்போல் வேடம் போட்டுக் கொண்டு எதையோ விழுங்குவது போல் ஆடிக் கொண்டு வந்தார். இது ஏதோ ஒரு கதையைச் சித்தரிக்கிறது என்று தெரிந்தது.  பின்னர் தேவதாசிகள் அத்தெய்வங்கள் முன் நாட்டியம் ஆடுவதைப் பார்த்தேன்.


நான் அங்கிருந்த ஓர் உள்ளூர் இந்துவிடம் ”ஏன் வாய்பேசாத சிலையைப் போய் நீங்கள் கடவுள் என வணங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் ”எங்கள் கடவுளை நாங்கள் கண்ணால் காண முடிகிறது. உங்கள் கடவுளை நீங்கள் பார்க்கக் கூட முடியாதே!” என்று கூறினார். 
ஆனால் இங்கு ஒன்றுமட்டும் மிகவும் வியப்புடன் கூறத்தான் வேண்டும். இவர்கள் (இந்துக்கள்) நம் சமயத்தை பின்பற்றாததால் இருளில் மூழ்கியிருப்பவர்கள் என நாம் நம்புகிறோம். நாமோ ஒளியைக் கண்டவர்கள். இருப்பினும் இவர்களைக் காட்டிலும் நாம் ஏன் மேன்மையாக நடந்து கொள்வதில்லை. கூறப்போனால் மிகவும் கீழ்த்தரமாகத் தான் நடந்து கொள்கிறோம். 

இந்தியாவில் சட்டம் ஒழுங்கு பெரும்பாலும் நிலைத்து நிற்கிறது. வணிகர்கள் சரியான எடைகளையும் அளவைகளையும் தான் பயன்படுத்துகிறார்கள். மக்கள் கெட்ட பழக்கங்களை வெறுக்கிறார்கள். 


நம் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போல் அளவுக்கு மீறி உண்பது, ஏராளமாகக் குடிப்பது போன்ற பழக்கங்கள் இங்கு இல்லை. தரங்கம்பாடியில் உள்ள இந்திய மக்கள் யாராவது குடிகாரனைப் பார்த்து விட்டால் தலையை ஆட்டி மார்பில் அடித்துக் கொண்டு அவன் மீது காறித் துப்புவார்கள். இவனைப் பேய் பிடித்திருக்கிறது என்று கூறுவார்கள்.
டேனிஷ் போர்ட் என்று பெயர் பெற்ற தரங்கம்பாடி கோட்டை மாளிகை மிகவும் அழகான கட்டிடம், மூலைகளில் கொத்தளங்கள் அழகாக அமைக்கப்பட்டுள்ளன. செங்கல்லால் ஆன இந்தக் கட்டிடத்தை இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். இவர்கள் நம் ஐரோப்பிய கட்டு வேலைக்காரர்களை விட மிகவும் விரைவாகவும் தொழில் நுணுக்கம் சிறந்தவர்களாகவும் திகழ்கிறார்கள். 

இந்த கோட்டையின் நடுவில் எழிலான ஒரு 'சர்ச்' ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. இதையும் இந்தியக் கொத்தனார்கள் தான் கட்டினார்கள். நாம் கொடுத்த டேனிஷ் கட்டிடக்கலை சார்ந்த வரைபடத்தினைப் பின்பற்றி இவர்கள் கட்டியிருக்கிறார்கள்" 

எனக்குத் தெரிந்த வரையில் இவருடைய நூல் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை. தொல்பொருள் ஆய்வுகளின் முன்னோடி டாக்டர். இரா. நாகசாமியின் சுவாரஸ்யமான அறிமுகத்தால் பெற்ற போதையில் "Memoirs of Jon Olafsson" என்ற இந்தப் பயண நூலை எல்லா புத்தக நிலையங்களிலும் விசாரித்து விட்டேன். யாரிடமும் இல்லை. பல பழைய புத்தகக் கடைகளின் கதவுகளையும் தட்டிவிட்டேன். இதைப் படிக்கும் யாரிடமாவது இருக்குமானால் ப்ளீஸ் தாங்களேன். மொழிபெயர்த்துவிட்டு தந்துவிடுகிறேன்.

3 கருத்துகள்:

G.M Balasubramaniam சொன்னது…

முன்பு ஆனந்த ரங்கம் பிள்ளையின் டைரி குறிப்புகள் , இப்போது ஜான் ஓலொஃப்சனின் தரங்கம்பாடிக் குறிப்புகள். --அந்தக் கால வாழ்வை அலச இன்னும் என்னென்னவோ. You are different சுந்தர்ஜி.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சூப்பர்...சுந்தர்ஜி!

Ramani சொன்னது…

அருமையான பதிவு
அருமையான முயற்சி
புத்தகம் கிடைக்க ஆண்டவ அருள் புரியட்டும்

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...