20.11.11

உலை


ஓடிக்கொண்டிருந்த
அவர்கள் சொன்ன 
அதிர்ச்சியான தகவல்.
’கிருஸ்துவுக்கு 
முன்பிருந்து
ஓடிக் கொண்டிருந்த 
அந்த நதியைக்
காணவில்லை’.

அப்படியா?
நீங்கள் சொல்வது
புரியவில்லை.
இன்று கூட
எங்கள் குழாய்களில்
தண்ணீர் நிற்காது
வந்து கொண்டிருக்கிறது.

யாரும் பொருட்படுத்தாது
வீசிக்கொண்டிருந்த 
மலைக்காற்று
நாளையிலிருந்து
வீசப்போவதில்லை.

தாமதமான முடிவு.
கதவுகளையும்
ஜன்னல்களையும்
மூடப் பழகி
எத்தனையோ
நாட்களாயிற்று.
வாங்காத காற்று
வீசினால் என்ன?
ஒழிந்தால் என்ன?

நாள்தவறாது 
உதித்துக்கொண்டிருக்கும்
சூரியனின் முடிவும்
-ஓரிருநாள்
தாமதமாகலாம்-
அதுவேதான்.

அதனாலென்ன?
பயமுறுத்துகிறீர்கள்
பெரிதாய்?
செடி கொடிகளுக்கும்
மரங்களுக்குத்தான்
சூரியன்.
எங்களுக்கான 
சூரியனை
நாங்கள்
உருவாக்கிக்கொள்வோம்.

சாக்கடைகளிலும்
உவர்நீரிலும்
விடப்பட்ட 
உபரி மழைநீரும்
இனி
தரை தொடுவதாய்
உத்தேசமில்லை.

கடல்நீர் இருக்கிறது
குடிநீராய்ப்பயன்பட
இன்னும் 
நூறு வருஷங்களுக்கு.
நீர்வேட்கையைக்
குறைக்கவும் 
நீரின் மாற்றையும்
ஆராய்ந்து வருகிறோம்.
மிரட்ட வேண்டாமெனச்
சொல்லிவைய்யுங்கள்
மழையிடம்.

அபாயம்.எச்சரிக்கை.
உங்களின் வாழ்வே
அஸ்தமிக்க இருக்கிறது
இவ்வருடத்துடன்.
வாழ்ந்து 
தீர்த்துக்கொள்ளுங்கள்..

சலம்பல் வேண்டாம்.
இருக்கவே இருக்கிறார்கள்
எங்கள்
ஆட்சியாளர்களும்
கூடங்குளத்து
விஞ்ஞானிகளும்.
அவர்கள் 
பார்த்துக்கொள்வார்கள்
மிச்ச சொச்சத்தை.

4 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

விஞ்ஞானத்தால் இயற்கை சிதையும் ஆதங்கம் வார்த்தைகளில்.எல்லாம் எங்களால் முடியும் !

ப.தியாகு சொன்னது…

எல்லாவற்றிலும் அலட்சியம் நமக்கு.
கவிதை நடையை மிக ரசித்தேன்,
'கிருஸ்துவுக்கு
முன்பிருந்து
ஓடிக் கொண்டிருந்த
அந்த நதி' - வரிகளை படித்து மெய்யாகவே மிரண்டுவிட்டேன் சுந்தர்ஜி சார்.

G.M Balasubramaniam சொன்னது…

IS IT THAT BAD SUNDHARJI.?I DO NOT THINK THAT SUCH NEGATIVE FEELINGS HELP.ANYWAY, KUDOS TO THE PRESENTATION.

ஹ ர ணி சொன்னது…

சுந்தர்ஜி...

மிகமிகப் பொறுப்பான பதிவு. எத்தனை வேதனைகளை உள்ளடக்கிய எள்ளல் சுவையுடன் வெளியாகியுள்ள பதிவு. இந்த சமூகத்தின் நிகழ்வுகளையும் அவலஙக்ளையும் காணும்போது எதுவுமே செய்யவியலாத இயலாமை மனதில் உறுத்திக்கொண்டே ஒவ்வொரு நாளையும் கொல்லுகிறது. உங்களை வணஙகுகிறேன் சுந்தர்ஜி. பொறுப்பான பதிவிற்கு நன்றிகள். இதை நானும் வழிமொழிகிறேன்.

உங்களின் இந்தப் பதிவுக்கான கருத்துரையை எழுதும்போதே கைப்பேசியில் தேவையில்லாத பதிவு செய்யப்பட்ட குரல்கள் தங்களை விற்கின்றன சுந்தர்ஜி. என்னுடைய வாய்க் கட்டுப்பாட்டை இழந்துவிடுவேன் போலிருக்கிறது. அவ்வளவு மோசமான வார்த்தைகள் செல் கம்பெனி நடத்தும் உரிமையாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பஙக்ள் மேல் வருகிறது.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...