23.3.10

அஸ்தமனம்


கொல்கத்தாவின் புராதனமான தெருக்களின் வாசனையைச் சுவாசித்தபடி நின்றிருந்தேன்.

இரவு ஒன்பது ஆகிறது. பத்து மணிக்கு ஒரு சவாரி காத்திருக்கிறது. அதற்குள் ஏதாவது சாப்பிட்டு விடலாமா? ரெண்டு பரோட்டாக்களைச் சாப்பிட்டுவிட்டு சூடாக ஒரு தேநீர் பருகினேன். இனிமேல் இரவுச் சவாரிகளைத் தவிர்த்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.

ஊருக்கு வெளியே அந்த அபார்ட்மென்ட். நெருங்க நெருங்க அந்த அடுக்கு வீடுகளின் அமைப்பே அலாதியாக இருந்தது. அநேகமான வீடுகளில் விடுமுறைக்காக வெளியூருக்குச் சென்றுவிட்டது தெரிந்தது.

வெளிச்சம் அதிகமில்லை. போக வேண்டிய வீட்டிலிருந்து மெல்லிய வெளிச்சம் கசிந்து வந்தது. மனது சஞ்சலமாக இருந்தது. வராமல் இருந்திருக்கலாமோ?

இரவுச் சவாரிகளை நான் தேர்ந்தெடுப்பதே இரவுகளின் மேல் எனக்கிருந்த காதலினால்தான். இரைச்சல் குறைந்த தெருக்களில் இசையின் துணையோடு வண்டி ஓட்டுவது என் பொழுதுபோக்கு. ஆனால் இந்த சவாரி அமானுஷ்யமாக மனதுக்குப் பட்டது. இறங்கிச் சென்று மெல்ல அழைப்பு மணியை இசைத்தேன். உற்றுப்பார்த்தபோது கதவு தாளிடப்படாதது தெரிந்தது. மெல்லத் தள்ளினேன். அறையின் நடுவே நாற்காலியில் எண்பது மதிப்புள்ள ஒரு மூதாட்டி.

"உள்ள வாப்பா" என்றார்.

அறையின் அமைப்பும் ஒழுங்கும் ஆச்சர்யமாக இருந்தன. சுவர்களில் படமோ,கண்ணாடியோ இல்லை.காலி செய்த வெற்றுத் தோற்றம். மின் விசிறிகளில் தூசி படிந்திருந்தது.அந்தப் பெண்ணின் அருகில் ஒரு சிறிய பெட்டி.ஒரு கையில் சில புகைப்பட ஆல்பங்கள்-காகிதங்கள் .வேறெதுவுமில்லை.

"போகலாமா அம்மா?" என்று கேட்டபடியே பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டிக்குச் சென்றேன். திரும்பி வந்து பார்க்கையில் மூதாட்டி உட்கார்ந்தபடியே கையை நீட்டினார்.கைகளைப் பற்றிக் கொண்டு நடந்து வண்டியில் அமர்த்தினேன்.

வண்டியை ஓட்டியபடியே கண்ணாடியில் பார்த்துக் கேட்டேன்."எங்கம்மா போகணும்?"

போகும் இடமும் செல்ல வேண்டிய வழியையும் சொன்னார். மீட்டரைப் போட்டேன். "அந்த வழில போனா சுத்தும்மா" என்றேன்."பரவாயில்லப்பா " என்றபடி யோசனையில் ஆழ்ந்தார்.சுருக்கம் நிறைந்த நெற்றியில் அளவான பொட்டு. காதுகளில் வைரத்தோடு பளபளத்தது.மிகச் சிறிய கண்கள்.கண்ணாடிக்குள் கண்களை மூடியபடியே சாய்ந்திருந்தார்.

"இங்க கொஞ்சம் நிறுத்தப்பா" என்றார் ஒரு பெரிய கட்டிடத்தின் அருகே.பழைய காலக் கட்டிடம்.இருளின் போர்வையில் வண்டியை நிறுத்தினேன்.ஜன்னலின் வழியே அந்தக் கட்டிடத்தை உற்றுப் பார்த்தபடி இருந்தார்."இந்த இடத்தில் சமையல் காரியாக பத்து வருஷங்கள் வேலை செய்திருக்கிறேன்"என்றார் பெருமூச்சுடன்.அந்தப் பெண்மணி சமைத்த பருப்பு மணக்கும் சாம்பார், தாளிப்பின் வாசனை எல்லாம் காற்றோடு கலந்து காலத்தோடு உறைந்து போய்விட்டது.வாழ்வின் இறுதி நோக்கி நழுவிய பாதையின் ஓரத்தில் நின்று அந்த அம்மா கையசைத்தது போலத் தோன்றியது. அத்தனை நேரம் என்ன யோசித்திருப்பாளோ? தெரியவில்லை."சரி.போகலாம்பா" என்றார்.

ரவிஷங்கரின் சித்தாரும் இருளும் இசைவாக வழிந்து பெருகியது.மனது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.சித்தாரின் தந்திகளில் கை விரல்கள் ஏறி இறங்கி ஆன்மாவை ஊடுருவிச் சென்றது இசை. நான் இருளின் வெளியில் கரைந்து போகத் தொடங்கி இருந்தேன்.

"நான் ரொம்ப நாள் இருக்கமாட்டேன். டாக்டரும் அப்படித்தான் சொல்றாரு.கடைசியா எல்லாத்தையும் ஒரு தடவை பாத்திட ஆசையா இருக்கு".இருளை வெறித்தபடி வார்த்தைகளைச் சிந்தினார்.கண்ணாடி வழியே உற்றுப்பார்த்தேன்.கண்களின் ஓரத்தில் நீர் கசிந்து உருண்டது.சாலையை விழுங்கியபடிக் கார் ஓடிக்கொண்டிருந்தது.

"இங்க கொஞ்சம் நிறுத்துப்பா". நிறுத்தினேன்.

அது ஒரு நடன அரங்கம்.புதுப்பிக்கப்படாமல் சிதிலமாகி இருந்தது. வெளிறிப் போன பூச்சு.சீருடை கிழிந்து போயிருந்த ஒரு காவலாளி சுவரில் சாய்ந்து தூங்கியபடி இருந்தான்.பிரபலமான அந்தக்கால நாட்டியக்காரிகளின் கால்கள் பட்ட இடம்.நானே நான்கைந்து முறை வந்ததுண்டு.ஏக்கத்துடன் "நான் நிறைய நடனமாடிய இடம் இதுதாம்பா"என்றார்.அவரின் சதங்கைகளின் ஒலி அவரின் காதுகளில் ஒலித்துக்கொண்டிருந்தது தெரிந்தது.எனக்குத்தான் அவரை அடையாளம் தெரியவில்லை.எத்தனை ஒப்பனைகள் சுமந்த முகம்?இன்று அடையாளம் இழந்து இருளின் ஆழத்தில் அசைகிறது.கைத்தட்டல்களின் அதிர்வுகளில் ஆடிய கால்கள்.மனது கனத்தது.

சித்தார் முடிந்து முகேஷ் "கபீ கபீ மேரே தில் மே"பாடிக் கொண்டிருந்தான்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது.அந்த அம்மா தனக்குத்தானே பேசியபடி வந்தார்."எது உச்சமோ அதுதான் வீழ்ச்சி.எது துவக்கமோ அதுதான் முடிவு". எனக்கு லேசாகப் புரிந்த மாதிரியும் புரியாத மாதிரியும் இருந்தது.நாய்கள் ஒன்றை ஒன்று முகர்ந்து கொண்டே தலையை ஆட்டியபடியே ஓடிக்கொண்டிருந்தன.அவற்றின் வாழ்க்கையில் எது உச்சம் எது வீழ்ச்சி? தெரியவில்லை.

"இந்த வீடுதாம்பா கல்யாணம் முடிஞ்சு நான் மொதல்ல குடி புகுந்தது".நிறுத்தினேன்.

அசையாமல் நின்றிருந்த அந்த நான்கு சுவர்களுக்கும் அந்த அம்மாவை நிச்சயம் தெரிந்திருக்கும்.தெருக்களில் யாருமில்லை.

"கொஞ்சம் இறக்கிவிடப்பா ப்ளீஸ்" என்றார்.

அந்த வீட்டின் சுவர்களை முகர்ந்து தடவிப்பார்த்தார்.கதவுகளின் கிராதிகளில் கன்னத்தைப் பதித்துக் கைகளால் பிடித்துக் கொண்டார்.படிகளில் மெதுவாய்ச் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.அவர் மிகவும் நேசித்த வீடாக இது இருந்திருக்கவேண்டும்.ஒருவேளை அவரின் கணவரோடு இந்தப் படிகளில் அமர்ந்திருந்த தருணங்களோ-மகனைக் கொஞ்சிய மாலைகளோ கண் முன்னே விரிந்திருக்கக் கூடும்.படிகளைத் தட்டிப் பார்த்தார். என்னிடம் ஏதோ சொல்ல முற்பட்டார்.அவரால் பேச முடியவில்லை.சைகையால் "எல்லாம் போயிடுச்சு"என்பது போல அபிநயித்தார்.அவரின் தலையை வருடிக் கொடுத்தேன். காரிலிருந்து சிறிது தண்ணீரை எடுத்து குடிக்கக் கொடுத்தேன்.என் கண்களும்-மனதும் இளகிக் கரைந்தது.

வண்டி சென்றபடி இருந்தது."எனக்கு இப்ப யாரும் இல்ல.எத்தனை நாள் இன்னும் பாக்கி இருக்கோ தெரியல்ல". என்ன பேசுவது என்று தெரியாமல் இசையை நிறுத்தி விட்டு மௌனத்தைப் பரவ விட்டேன்."என்னால தாங்க முடியல்ல.நேரே போப்பா.பாத்ததெல்லாம் போதும்" என்றார்.

காக்கைகள் மெல்லக் கரகரத்தன.என்னென்னெவோ நினைவுகள்.மெதுவே முகவரியின் வாயிலில் நிறுத்தினேன். பார்ப்பதற்கு முதியோர் காப்பகம் போலத் தெரிந்தது.உள்ளே சென்று தகவல் தெரிவித்தேன். இருவர் வெளியில் வந்து அவரிடம் இருந்து ஒரு சீட்டைப் பெற்று சரிபார்த்தபடி இறக்கிச் சக்கர நாற்காலியில் அழைத்துச் சென்றனர்.அவரின் பெட்டியை எடுத்துச் சென்றேன்.

"உன்ன ரொம்பத் தொந்தரவு பண்ணிட்டேம்ப்பா.ரொம்ப நன்றி.எவ்வளவு ஆச்சு?
"பரவாயில்ல அம்மா.வேணாம்.மறுபடி வாய்ப்பிருந்தா சந்திக்கலாம்மா"
"ஒனக்கு புள்ள குட்டிங்கல்லாம் இல்லியா?இந்தா வாங்கிக்கப்பா"
"மத்த சவாரில பாத்துக்கறேன். வரேம்மா" என்று கையெடுத்து வணங்கிவிட்டுக் கிளம்பினேன்.

வண்டி ஓடிக்கொண்டிருந்தது.நகரத்தின் இயக்கம் ஆரம்பிக்க இருந்தது. வீட்டை அடைந்தேன்.அன்றைக்கு வேறு சவாரி எதுவும் போகவில்லை.

3 கருத்துகள்:

Anonymous சொன்னது…

உங்கள் எழுத்து புது மாதிரியாக இருக்கிறது. உங்கள் மொழி மனதை மயக்குகிறது.கவிதைகள் யாரும் பார்க்காத உலகமும்-புது வடிவும்.இந்தக் கதை மனது கனத்துவிட்டது.இன்று இரவு அமைதியாக வருத்தமாக இருக்கிறது. நிறைய எழுதுங்கள். மாதவி.

இரசிகை சொன்னது…

//அன்றைக்கு வேறு சவாரி எதுவும் போகவில்லை.//


intha mudivu....
mothak kathaiyin aazhaththaiyum ulvaangukirathu!

பத்மா சொன்னது…

நல்ல narration . மிகவும் பிடித்திருக்கிறது

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...