30.11.11

சாகாத கனா (அல்லது) ஒரு ஆறரை நிமிஷங்கள் ப்ளீஸ்


கனவு காண்பது கடினமானதல்ல. அது மெய்ப்படுவதுதான் மிகக் கடினமானது. அபூர்வமானது. இதற்கான விலையும் வலியும் மிக மிக அதிகம். கனவுகளை அடைந்தவர்கள் இதற்கான வலியையும் சேர்த்து அடைந்தவர்களாயும் அந்த வலியை ரசித்து உண்டவர்களாயும்தான் இருக்கமுடியும். 

வாழ்வென்பதும் மரணமென்பதும் இரு எல்லைகளாய் நிற்க இடைப்பட்ட வெளியில் நாம் உதைத்துச் செல்லும் உதைபந்தாய் இப்படிப்பட்ட கனாக்கள். அந்தப் பந்து நிச்சயம் அதன் இலக்கைத் தொடும் என்பவர்களால் மட்டுமே விளையாடப்படும் அபூர்வமான ஆட்டம் அது. அப்துல் கலாமின் வார்த்தைகளில் தூங்கும்போது வருவதல்ல. தூங்கவிடாமல் செய்வதே கனா. 

எனக்குள் குமிழியிடும் 
அந்தக் கனா 
இன்றில்லை 
ன்றாலும் 
நாளை மலரும். 
என் சிகை 
நரைத்து விடலாம். 
என் கன்னங்களில் 
குழி விழுந்துவிடலாம். 
நான் போகும் பாதை 
மூடப்பட்டு விடலாம். 
ஆனாலும் 
வெற்றி தோல்வி 
எனும் 
அடையாளங்களை 
உதிர்த்த என் கனா 
எட்டப்பட்டிருக்கும். 
என் பெயரசையும்
வண்ணக்கொடி
அங்கே 
கட்டப்பட்டிருக்கும் 

என்கிற விதமாய் வரையப்படுகிறது கனவு குறித்த இந்த ஓவியம். 

சேர்ந்திசை (கோரஸ் என்று எதற்கும் எழுதிவிடுகிறேன்) என்கிற வடிவத்தை ஆகாஷ்வாணியைப் போல அதன் பின்னால் தூர்தர்ஷனைப் போல வேறு யாரும் பயன்படுத்தியதில்லை. உலகத் தொலைக்காட்சிகளில் முதல்முறையாக என்று பல முதல்களைச் செய்துவிட்டு சப்தமில்லாமல் இருப்பது பற்றி இரைச்சலையும் எல்லா நேரத்திலும் கொஞ்சியும் வழியும் இந்தச் செயற்கைக் கலை வியாபாரிகளுக்கு ( புதிய தலைமுறை மற்றும் மக்கள் தொலைக்காட்சி நீங்கலாக) யாராவது பொட்டில் அடித்தாற் போல சொன்னால் தேவலை.

தமிழில் பல நல்ல சேர்ந்திசைப் பாடல்களை காலத்தால் மறக்கமுடியாத எம்.பி. ஸ்ரீனிவாசன் தந்ததோடு போயிற்று இந்த வடிவம். ஒரு நல்ல செயல் நிகழும் போது நம் கண்ணுக்குப் புலப்படாத முப்பத்துமுக்கோடி தேவர்களும் வானிலிருந்து ததாஸ்து-அப்படியே ஆகட்டும் என ஆசீர்வதிப்பார்கள் என்பது இந்திய நம்பிக்கை. அந்த வகை இந்த சேர்ந்திசைப்பாடல்கள். அற்புதமான சத்தியமான இந்த வரிகளை உரத்த குரலில் சேர்ந்திசையாகக் கேட்கும்போது தேவர்களின் வாழ்தொலி போலக் கேட்பதாய் உணர்கிறேன். 

தமிழின் எல்லா நல்ல இசையமைப்பாளர்களும் கோரஸ் வடிவத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அவை அத்தனையும் வெற்றிப்பாடல்கள்தான். ரெஹ்மான் மெட்ராஸ் கோரஸ் குழுவினரைக் கொண்டு இந்த ஆர்கெஸ்ட்ரைசேஷனை மிகச் சிறப்பான ஹார்மனியைக் (ஒத்திசைவு?) கொண்டு வந்திருக்கிறார். 

சூரியனின் கால் படாத புலரிக் கடல்மணலில் மெல்லக் கால் பதித்துக் கண்டெடுத்த சிப்பியை போல சின்ன நடுக்கத்துடனும் மென்மையுடனும் துவக்குகிற சித்ராவின் குரல் அப்புதையலை வெளிக்கொணர அதன்பின் 1.07ம் நிமிடத்தில் தொடங்கி 2.45 வரை இசைக்கப்படும் இசைக்கோர்வையைக் கேளுங்கள். அது தேவாமிர்தம்.

2.56ல் இருந்து 3.20 வரை -சித்ரா கண்ட கனவு ரெஹ்மானின் கைகளுக்கு மாற தான் மட்டுமே முதன்முதலில் கண்டெடுத்ததாயும் தனக்கே மறுபடியும் ஊர்ஜிதப்படித்திக்கொள்கிற ரகஸ்யமானதுமான ரெஹ்மானின் கீழ்ஸ்தாயிக் குரல் அற்புதமாய் அடுத்துத் தொட இருக்கிற உச்சத்தைக் கோடி காட்டிவிடுகிறது. பின் தனியாய் ஒரு சுடர் போல 3.23 முதல் 4.07 வரை அசைந்தெழும் அந்தக் குரல் கூட்டணியின் சங்கமத்தில் 4.30 முதல் சுட்டெரிக்காத பெரும் ஜ்வாலையாய் பீறிட்டுக் கிளம்புகிறது. முழுதும் கண்களை மூடிக்கேட்டு முடித்தபின் உங்களால் அடுத்த பத்து நிமிடத்துக்கு வேறெதுவும் செய்ய முடியாது. இது சத்தியம்.

மேற்கத்திய உருவத்தில் இந்த வரிகளை நனைத்த சித்ராவுக்கும் ரெஹ்மானுக்கும் எழுதிய வைரமுத்துவுக்கும் நன்றிச் சொல்லுக்கு மாற்றாக எந்த வார்த்தைகளை நான் உபயோகப்படுத்த முடியும்? ஒரு தடவை உன்னதமான உங்கள் குரலில் பாடிப்பாருங்கள். 

ஒரே கனா என் வாழ்விலே 
அதை நெஞ்சில் வைத்திருந்தேன்.
கனா மெய்யாகும் நாள்வரை
உயிர் கையில் வைத்திருப்பேன். 
வானே என் மேல் சாய்ந்தாலுமே
நான் மீண்டு காட்டுவேன். 
நீ என்னைக் கொஞ்சம் கொஞ்சினால்
நிலாவை வாங்குவேன். 

வேண்டுமானால் கடைசி இரு வரிகளை 
- கொஞ்சலும் நிலா வாங்கலும் தேவைப்படாதவர்கள்- 
”வானும் மண்ணும் தேயும்வரை
வாழ்ந்து காட்டுவேன்” 
என்று இப்படி மாற்றிக்கொள்ளலாம். வைரமுத்துவிடம் நான் சொல்லிவிடுகிறேன். 

6 கருத்துகள்:

ரிஷபன் சொன்னது…

2.56ல் இருந்து 3.20 வரை -தான் மட்டுமே முதன்முதலில் கண்டெடுத்த தனக்கே மறுபடியும் ஊர்ஜிதப்படித்திக்கொள்கிற ரகஸ்யமான குரலில் ரெஹ்மானின் அற்புத கீழ்ஸ்தாயியில் அமைந்த குரல் அடுத்துத் தொட இருக்கிற உச்சத்தைக் கோடி காட்டிவிடுகிறது. பின் தனியாய் ஒரு சுடர் போல 3.23 முதல் 4.07 வரை அசைந்தெழும் அந்தக் குரல் கூட்டணியின் சங்கமத்தில் 4.30 முதல் சுட்டெரிக்காத பெரும் ஜ்வாலையாய் பீறிட்டுக் கிளம்புகிறது. முழுதும் கண்களை மூடிக்கேட்டு முடித்தபின் உங்களால் அடுத்த பத்து நிமிடத்துக்கு வேறெதுவும் செய்ய முடியாது. இது சத்தியம்.

நீங்கள் பரம ரசிகர்..

ஹேமா சொன்னது…

ரசனையின் உச்சம் சுந்தர்ஜி.இசையும் சரி கவி வரிகளும் சரி அந்தக் குரலும் சரி இந்த இரவில் மயக்குகிறது !

kashyapan சொன்னது…

சுந்தர் ஜி! மிகவும் சிரமப்பட்டு இடுகையிட்டுள்ளீர்கள்.இரவு தூங்குவதற்கு சில நிமிடங்கள் முன்னால் கெட்டுப் பார்த்தீர்களா? கேளுங்கள்.சுகானுபவம் கிட்டும்.எம்.பி.எஸ் அவர்களின் "பாம்புப் பிடாரன் "கெட்டிருக்கிறீர்களா? அவருடைய மாணவி ராஜராஜேஸ்வரி அம்மையார் சேர்ந்திசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். B.E.A.T(Bank Employees Arts troup) கலைக்குழுவும் சேர்ந்திசையை நடத்திவருகிறார்க் கள் .---காஸ்யபன்

Vel Kannan சொன்னது…

தொடர்ந்து வாசித்து வருகிறேன் ஜி

இரசிகை சொன்னது…

inthak kural
matrum varikal..

முழுதும் கண்களை மூடிக்கேட்டு முடித்தபின் உங்களால் அடுத்த பத்து நிமிடத்துக்கு வேறெதுவும் செய்ய முடியாது. இது சத்தியம்.


m..
saththiyamthaan ithu.

:)

Gounder சொன்னது…

Kana mei aagum......

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...