18.9.10

துளி துளி



I
முன்பே எனக்கிது
தெரியும் என்கிறாள் அவள்.
முன்பே எனக்கிது
தெரியாது போயிற்றே
என்கிறான் அவன்.
தலை நீட்டிச் சிரிக்கிறது காலம்.

II
அவளோடு வாழ முடியாது
போயிற்று.
இவளோடு விலகமுடியாது
போயிற்று.
எளிதில்லை
வாழ்வதும் பிரிவதும்.

III
நினைவுறுத்துகின்றன
கூரிய கத்தியை
பேசப்படாத வார்த்தைகளும்-
வழுக்கும் பாறையை
தீட்டப்படாத மொழியும்.

IV
சில நேரங்களில்
நாம் எதுவும்
சொல்லவேண்டியதில்லாது
போகிறது.

பல நேரங்கள்
ஒரு போதும்
சொல்ல விரும்பாததைச்
சொல்ல வேண்டியதிருக்கிறது.

சொல்ல விரும்புகையில்
யாருமற்றுப் போய்விடுவதும்
நேர்கிறது சமயங்களில்.

18 கருத்துகள்:

vasan சொன்னது…

//III
நினைவுறுத்துகின்றன
கூரிய கத்தியை
பேசப்படாத
வார்த்தைகளும்-
வழுக்கும் பாறையை
தீட்டப்படாத
மொழியும்.//

சுந்த‌ர்ஜி, என்ன‌ அருமையான‌ உவ‌மை!!
எழுதும் போதே ந‌ழுவி வ‌ந்த‌வை தானே?

நான்கும், க‌விதையின் ஒவ்வொரு அழ‌குத் தூண்க‌ள். அதுவும் அந்த‌ மூன்றாவது,
ஈசான‌ மூலைத்தூண்.

Vel Kannan சொன்னது…

//
எளிதில்லை
வாழ்வதும்
பிரிவதும்.//
எளிய சொற்கள் அல்ல இது
உங்களின் அனுபவமும் ஆழமான சிந்தனையும் வெகுவான படிப்பும் இதை எங்களுக்கு எளிய முறையில் தந்துவிட்டிர்கள் என்று எண்ணுகிறேன். நன்றி ஜி

ப.தியாகு சொன்னது…

விதி வலியது.மூன்று கவிதைகளும் போதிக்கின்றன.

சைக்கிள் சொன்னது…

ஆமாம் என்றுதான் சொல்ல முடிகிறது இறுதி வரிகளைப் படித்த உடன்.இயல்பான வரிகள்.வேறு படம் போட்டிருக்கலாம் தானே? கவிதையை கொஞ்சம் குறுக்குகிறது படம்.

சுந்தர்ஜி சொன்னது…

சரியாய்க் கண்டுகொண்டீர்கள் வாசன்.எழுதும்போதே நழுவிவந்ததுதான். உங்களின் பாராட்டு பெருமைக்குரியதும் கூட.நன்றி வாசன்.

எனக்கு அப்படித் தெரியவில்லை வேல்கண்ணன்.பழைய பெருச்சாளி என்பதால் பாதை நன்கு பழகிவிட்டது ஒரு காரணமாக இருக்கலாம்.

படம் சரியாய் அமையவில்லை.இப்பத்தான் கிடைத்தது.மாற்றிவிட்டேன்.ரசனைக்கு நன்றி சைக்கிள்.

ரிஷபன் சொன்னது…

சொல்ல விரும்புகையில்
யாருமற்றுப் போய்விடுவதும்...
ம்.. இதுதான் விதிக்கப்பட்டதாகி விட்டது.

சந்தானகிருஷ்ணன் சொன்னது…

துளி சமுத்ரமாய்ப் பொங்குகிறது சுந்த்ர்ஜி.

தனலக்ஷ்மி பாஸ்கரன் சொன்னது…

நிகழ்வுகளின் சூழலில் அலைக்கழிக்கப்படும் மனங்களின் ஏக்கங்களும் சந்தோஷங்களின் நிலையாமையும அவற்றைத் தவறவிட்ட ஏமாற்றங்களின் பின்னணியுமே இந்த அலசல்களும்.பெரும்பான்மையோர் இவைகளைக் கடந்தவர்கள்தானே.இல்லை என்பவர்களை நான் நம்புவதற்கில்லை.

யாழி சொன்னது…

தீட்டப்படாத வழுக்குப் பாறை அருமை ஜி.

நாணற்காடன் சொன்னது…

அனைத்துமே மிக எளிமையான அருமையான படைப்புகள்.

ஹேமா சொன்னது…

துளி...இது துளியல்ல சுந்தர்ஜி.பெருமழையாய் அடிக்கிறது மனதுக்குள் ஒவ்வொரு வரிகளும்.
அதுவும் பேசப்படாத வார்த்தைகளும் வழுக்கும் பாறையை தீட்டப்படாத மொழியும் நினைவுறுத்துகின்றன கூரிய கத்தியை !

நிலா மகள் சொன்னது…

1 .தெரிந்ததும் தெரியாததிலுமான அல்லாட்டத்தில் நாம்.
2 .எளிதில்லை வாழ்வதும் பிரிவதும் - வெகு சத்தியமான வார்த்தைகள்.
3 .ரொம்ப சரி.
4 .எல்லா நேரமும் ததும்பி வழிகிறது மொழியின் உன்னதம்.
எல்லோரையும் சென்று சேர்ந்திருக்கும் சுகந்தம் மேற்கண்ட நண்பர்களின் கருத்துரைகளில் அழகாக வெளிப்படுகிறது ஜி! பவழ மல்லி மரமிருக்கும் வீட்டைக் கடக்கும் அதிகாலை நேரமாய் மனம் நிறைவாயிருக்கிறது.

பத்மா சொன்னது…

வழுக்கும் பாறை என்னை பயமுறுத்துகிறது சுந்தர்ஜி ..

சுய சோதனையில் ..

இரசிகை சொன்னது…

!!

கமலேஷ் சொன்னது…

இந்த துளிக்குள் தெரிகிறது எனக்கோர் ஆகாயம்.

எத்தனை அருமை இருக்கிறது
துளிக்குள் மிதக்கும் வானம்.

சுந்தர்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன்.பெருமூச்சு சுடுது.

நன்றி தியாகு. விதி வலியதுதான்.

சமுத்திரக் கரையில் நாமிருவரும் சந்தானக்ருஷ்ணன்.

ஆழ்ந்த விமர்சனம்னாலே தனலக்ஷ்மி பாஸ்கரன்னு ஆயிடுச்சோ. நன்றி மேடம்.

விமர்சனம் தீட்டப்பட்ட கத்தி போல யாழி.நன்றி.

எளிமையின் நிழலில் ஒதுங்கியதற்கு நன்றி நாணல்.

பவழமல்லியின் அதிகாலையை உங்கள் வரிகளும் நினைவுபடுத்துகிறன நிலாமகள்.நன்றி பல.

நீங்களா பயப்படறது பத்மா.பயமுறுத்துற ஆள் நீங்க.

என்ன ஆச்சர்யக்குறி போட்டுட்டு எங்க போயிட்டீங்க ரசிகை.நல்லா இருக்கீங்களா?நீங்க ஆடறது குழந்தைங்க மறந்துபோயிட்ட கண்ணாமூச்சியாத் தெரியுது.சீக்கிரம் வாங்க திரும்ப.

உங்கள் ரசனையில் தெரிகிறது அந்த ஆகாயம் பொழியும் ஈரம்.அடிக்கடி வாங்க கமலேஷ்.

சுந்தர்ஜி சொன்னது…

மன்னியுங்க ஹேமா.விடுபட்டுப்போயிடுச்சு நன்றி சொல்ல.உங்க பின்னூட்டமே அழகான ஒரு கவிதையா இருந்தது.

இரசிகை சொன்னது…

//
என்ன ஆச்சர்யக்குறி போட்டுட்டு எங்க போயிட்டீங்க ரசிகை.நல்லா இருக்கீங்களா?நீங்க ஆடறது குழந்தைங்க மறந்துபோயிட்ட கண்ணாமூச்சியாத் தெரியுது.சீக்கிரம் வாங்க திரும்ப.
//

remba nallayirukken sundarji...

kannaamoochchi laam illa sundarji..en blog block aayuttu.athanaalathaan anga yethuvum post seiya mudiyala.puthu blog-nu thodangavum manasukkuth thonala.konja naal computer work aakaamal irunthuchchu so,vanthu vaasikkavum mudiyala.

ivvalavuthaan vishayam...
take care sundarji..
rajaram sir ta pesineenganna naan kettatha sollunga..

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...