12.4.14

ஒரு செடியும் வனமும்

புகைப்படம்: ஒரு செடியும் வனமும்
===================
இலையாகவும் மிதந்தாயிற்று.
கல்லாகவும் கிடந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாகவும் திரிந்தாயிற்று.
பருந்தாகவும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.
இலையாயும் மிதந்தாயிற்று.
கல்லாயும் கி
டந்தாயிற்று.
நதியாகத்தான் முடியவில்லை.
பஞ்சாயும் திரிந்தாயிற்று.
பருந்தாயும் பறந்தாயிற்று.
வானாகத்தான் இயலவில்லை.
கிடந்து பழகுதலுக்கும்
கிடத்தப் பழகுதலுக்கும்
இடைவெளி புரிகிறது -
ஒரு செடிக்கும்
ஒரு வனத்துக்குமானது
போல.

23.3.14

இரு திறவுகோல்கள்


#
மெளனம் என்பது
நீங்கள் நினைப்பது போல்
அமைதியல்ல.
சம்மதம் அல்ல.
சகித்தல் அல்ல.
தத்துவச் செறிவில் தோய்ந்த
நிறைவுமல்ல எப்போதும்.
தளும்பும் குளத்தின்
தாமரையாய் முகம் காட்டி -
அடிமென்மணலின்
ஆழங்களில் புரள்கின்றன
அதன் கோக்க இயலாச் சொற்கள்.


#
நீ ஏற்றுக் கொண்டதும்
வியப்பாய் இல்லை.
நிராகரித்து நகர்ந்ததும்
துயரூட்டவில்லை.
நான் சுமந்து திரியும்
ஒற்றைத் திறவுகோல் 
செய்வதில்லையா
ஒரு நேரம் திறக்கவும்
ஒரு நேரம் மூடவும்?

7.3.14

ஒரு குளமும் ஒரு துளியும்

#
என் சலனமற்ற குளத்தில் 
உன் கூழாங்கல்லை எறிந்து 
மூழ்க வைக்கிறது காலம். 

அலையின் சலனம் 
மொக்குகள் மலரக் காத்திருக்கும் 
தாமரைகளைத் தொட்டுச் சமனப்பட -

மீண்டும் குளம் ஆசை கொள்கிறது
மற்றொரு கல்லெறிக்காக.

அலை தயாராகிறது
தாமரையின் தொடலுக்காக.


#

நீயோ பெருமழை.
நான் உன் சிறுதுளி.
நீ பொழிகிறாய்.
நான் வீழ்கிறேன்.
கொடுந்தூரம் கடந்து
கரிக்கும் பெருங்கடலில் 
பொழிந்து உப்பாகிறாய் நீ.
ஒற்றைச் சிப்பியின்
இதழை முத்தமிட்டு
ஸ்வாதி முத்தாகிறேன்
நான்.


21.2.14

இரு கவிதைகள்

#
ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
ஊனம் என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகக்
கட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு தடவை கூடக்
கற்றுக் கொடுக்கவில்லை
சிறகு என்ற சொல்லுக்கு.
காலங் காலமாகப்
பறந்து கொண்டே இருக்கிறது.

#
ஒரு நீர்த்தொட்டியின் 
துவாரத்திடம் இருந்து
உள்ளிருப்பவற்றை
வெளியேற்றவும் - 
நடுக்கடலில் படகின் 
துவாரத்திடம் இருந்து 
வெளியிருப்பவை
உட்புகாதிருக்கவும் - 
கற்றவனுக்கு 
வேறேதும் போதனை 
புதிதாய்த் தேவையில்லை.

17.2.14

கவிதையின் இறுதி வாக்கியம்.

"கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்." நீங்கள் படித்துக் கடக்கும் இந்த முதல் வாக்கியம் உண்மையிலேயே ’இறுதி வாக்கியமாய் இருக்கட்டும்’ என நான் எடுத்து ஒதுக்கி வைத்ததுதான். உங்களுக்கு இது வினோதமாய் இருக்கலாம். -ஒரு புத்தகத்தை இறுதிப் பக்கத்திலிருந்து வாசிக்கும் பழக்கம் உடையவர்களுக்கும் -அல்லது முதலில் பரிமாறப்பட்ட மிகப் பிடித்த இனிப்பை இறுதியில் சாப்பிட எடுத்து வைக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இது ஒன்றும் பெரிய வியப்பாய் இருக்க முடியாது. ’ஏறுபவர்களும் இறங்குபவர்களும் தீர்மானிக்கும் ஒரு மாடிப்படியின் முதலும் இறுதியுமான படிகள்’ என்ற இறுதி வாக்கியமும் அல்லது ’ஒரு செலாவணியாகும் நாணயத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தல் போல’ என்றெழுதப்பட்ட இந்த வாக்கியமும் என் இரு கவிதைகளின் இறுதி வாக்கியம்தான். எனக்கு ஒரு கவிதையின் இறுதி வாக்கியம் போதும் முழுக் கவிதையின் நுனி அகப்பட. இந்த வினோதமான பழக்கத்தின் நிழலில் இந்தக் கவிதையின் நுனி உங்களுக்கு அகப்படாவிட்டால் பரவாயில்லை. "கிழித்துப் போட்டு விடுங்கள் இதுவரை படித்துவிட்ட இந்தக் கவிதையை ஒரு புன்சிரிப்புடன்."

14.2.14

நானும் நீங்களும்


உங்களுக்கு
மிகப் பரிச்சயமான 
மலையடிவாரத்தின் 
அண்மையில்தான் நிற்கிறேன்.
இப்போது ஓலமிடும் காற்றை 
நீங்கள் கேட்கமுடியும்.
ஓடிக்கொண்டிருக்கும் நதியில் 
இதோ கால் நனைக்கிறேன் 
என்ற இந்த வரியில் 
உங்கள் பாதங்களும் நனைகின்றன.
வேறெங்கோ பார்த்துக்கொண்டே 
எதிர்பாரா பள்ளத்தில் தடுக்கி விழுகிறேன்.
மன்னியுங்கள். என்னால் 
நீங்களும்தான் விழுந்து எழுகிறீர்கள்.
கண்ணில் பட்ட ஆட்டுக்குட்டியை 
அதன் அச்சத்துடன் தூக்கியணைத்துக் 
கொஞ்சி முத்தமிடுகிறேன்.
உங்கள் நாசியிலும் 
கிளர்வூட்டுகிறது தோல் மணம்.
உங்களுக்குத் தெரியாத 
ஒரு மூன்றாம் மனிதருடன் 
நிகழ்த்தும் உரையாடல் 
என்னைப் போலவே 
உங்களுக்கும் அலுப்பூட்டுகிறது.
இதோ நான் போக வேண்டிய இடம் வந்து 
உங்களுடன் சேர்ந்து உள்ளே நுழைகிறேன்.
கவிதை வெளியே காத்து நிற்கிறது.

12.2.14

தேவி காலோத்தரம் மற்றும் ஆன்ம சாட்சாத்காரப் பிரகரணம்


”தேவி காலோத்தரம்”, ”ஆன்மசாட்சாத்காரப் பிரகரணம்” இவை இரண்டும் இரு தொன்மையான நூல்கள். அவற்றிலிருந்து சில பார்வைகள்.

#######

வேர் எதுவுந் தான் பிடுங்க வேண்டாம் இலையினையும்
வேறுபடுத்தும் செயலும் வேண்டாமே - சீறி
இனாத செயவேண்டாம்  எவ்வுயிர்க்கும் பூவும்
அனாதரவாய்க் கிள்ள வேண்டாம்.

சுயமாகவே உதிர்ந்த தூமலர்கள் கொண்டே
செயக்கடவன் பூசை சிவனுக்கு - இயற்றியிடும்
மாரணம் உச்சாடனமுன் மற்ற வித்து வேடணமும்
பேருற்ற தம்பனமும் பின்.

இவை இரண்டும் "தேவி காலோத்தரம்" என்று அழைக்கப்படுகிற மிகத் தொன்மையான நூலில், சிவனுக்கும் உமைக்கும் இடையேயான உரையாடலின் மொழிபெயர்ப்பு.

சமஸ்க்ருதத்தில் இருந்து மொழிபெயர்த்து வெண்பாவாக இயற்றியவர் ரமண மகர்ஷி. இந்த இரு பாடலிலும் தனக்கான வழிபாடு எப்படி இருக்க வேண்டுமென ஈசனின் உத்தரவாய் இந்தப் பாடல்கள் இருக்கின்றன.

பாடலின் பொருள் புரியும்படியாய்த்தான் இருப்பதாய் நினைக்கிறேன்.

தன் பூசைக்கு வேரோ, இலையோ பிடுங்கப்பட வேண்டாம். எந்த ஓர் உயிருக்கும் கோபத்தினால் துன்பமளிக்கக் கூடிய செயல் எதையும் செய்ய வேண்டாம். மென்மையான மலர்களைச் செடியிலிருந்து கிள்ள வேண்டாம்.

தானாய் உதிர்ந்த மலர்கள் கொண்டு சிவனுக்குச் செய்யப்படும் பூசையே உகந்தது. இதை விட்டு மந்திர உச்சாடனங்களால் அழிவை உண்டாக்குதல், மந்திரப் ப்ரயோகத்தினால் ஏவுதல், விரட்டுதல், ஸ்தம்பித்துப் போகச் செய்யும் தம்பனம் செய்தல் சிவனுக்கு உகந்ததல்ல.

அஹிம்சை என்பதன் வேர் நீளும் தொலைவு மலைப்பானதுதான்.

########

மருத்துவ மனைகளில் சிகிச்சை மேற்கொள்ளும் இன்றைய துறவிகளின் மனநிலையை ஒப்புநோக்க "ஆன்ம சாட்சாத்பிரகரணம்" எனும் தொன்மையான நூலின் இரு பாடல்கள் துணை புரிகின்றன. 

"ஆன்ம சாட்சாத்பிரகரணம்" இது சிவன் முருகனுக்கு உபதேசித்த மிகத் தொன்மையான நூல். வடமொழியிலிருந்து தமிழில் வெண்பாவாக்கியது ரமண மகர்ஷி. 

மொத்தம் 62 பாடல்கள் கொண்ட இந்த நூலின் இரு பாடல்களை இப்போது பார்ப்போம். 

செல்லினும் நிற்கினு நித்திரை செய்யினும்
புல்லினும் சாக்கிர போசனநீர் - கொள்ளினும்
காற்று குளிர் வெய்யிற் கலந்திடுங் காலுமெவ்
வாற்றினுமெக் காலத்து மற்று.

[சென்றாலும், நின்றாலும், உறங்கினாலும், தழுவினாலும், விழித்திருந்தாலும், உண்ணுகையில் நீர் பருகினாலும், காற்று, குளிர், வெய்யில் எனத் தாக்கினாலும், வேறு எந்த இடையூறினாலும் எக்காலத்திலும் பாதிப்புற மாட்டான்.]

பயமும் வறுமைநோய் பற்றுசுர மந்த
மியைந்திடுங் காலத்து மேதுந் - தியங்கானே
யான்மநிட் டன்சாந்த னார்நிட் களனாகி
யான்ம திருத்தனா வான்.

[அச்சத்தாலும், வறுமையாலும், நோயாலும், சுட்டெரிக்கும் சுரத்தாலும், செரிப்பின்றி மந்த நோயாலும் அவதியுற்றபோதும், ஆன்ம நிட்டனாய் எதைக் கண்டும் கலக்கமுறாமல் நிலையாய் இருப்பான்.]

22.1.14

அப்பாவும் நானும்


சமீபகாலமாக என் அப்பாவுக்குத் தன் இளம் பிராய நினைவுகள் திரும்பிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் நடப்பவை பற்றி எதுவும் நினைவில் இருப்பதில்லை. 

”1979ல் 900 ரூபாய் கொடுத்து உனக்கு வாங்கித்தந்த BSA SLR sports cycle எங்கே?” என்று நேற்றைக்குக் கேட்டார்.

”1990ல் வித்துட்டேனேப்பா நூறு ரூபாய்க்கு!”

“இத்தனை நாளா எங்கிட்ட ஏன் சொல்லாம மறைச்சுட்ட? ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம்”.

அவர் கன்னத்தைச் சிரித்தபடி தட்டிக் கொடுத்தேன். அவருக்கு வயது 76.

######


இன்றைக்கு மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, சுமார் ஒரு மணி நேரம் வெளியில் நடந்து சென்று வரலாம் என்று மதிய உணவின் போது கூறியிருந்தேன். அரை மணி நேரம் முன்னதாகவே தயாராகி, அவரின் சோர்வுக்கு மத்தியிலும் மிகுந்த ஆர்வம் கலந்த பரபரப்பில் இருந்தார்.


அவரின் திட்டமிடலும், என்னுடையதும் வெவ்வேறு விதமானவை. பிறருக்கு ஒப்புதல் அளித்திருந்த நேரத்தை அநேகமாக நான் கடைப்பிடித்துவிடுவேன். வீட்டுக்குள் அதை என்னால் நடைமுறைப்படுத்த முடிந்ததில்லை.

அதனால் அவர் சரியாக 5 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினார். நான் 5.15க்கு அவரைத் தொடர வீட்டை விட்டு வெளியே வந்தேன். அப்போதுதான் அவர் காலணிகள் அணியாமல் மறதியில் வெற்றுக்காலுடன் சென்றிருக்கிறார் என்பதை உணர்ந்தேன்.

ஒரு ஃபர்லாங் தொலைவில்தான் மிக மெதுவாக அடிமேல் அடி வைத்துச் சென்று கொண்டிருந்தார். காலணி அணியாததை நினைவுபடுத்தினேன். ’அதனால் பரவாயில்லை’ என்று சைகை செய்தார். நான் என் காலணிகளைக் கழற்றி அவரை அணிந்து கொள்ளச் செய்தேன். எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து வந்தார்.

கொஞ்ச தூரம் போனபின், நான் அவரின் மணிக்கட்டில் நாடியைப் பிடித்துப் பார்த்து, ’இன்று ரத்த அழுத்தம் உனக்கு நார்மலா இருக்குப்பா’ என்று அவரை உற்சாகப் படுத்தக் கதை விட்டேன்.

’அப்படியா’ என்பது போல் என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு, எங்கள் எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொண்டார். அவருடன் மிகுந்த வாத்சல்யத்துடன் பேசத் துவங்கினார்.

தன் மணிக்கட்டில் அவரின் விரல்களைப் பிடித்து வைத்து, ‘நாடி சரியா இருக்கா’? என்று கேட்டார். அவரும், சிறிது நேரம் நாடியில் கை வைத்துப் பார்த்து விட்டு, “ நமச்சிவாய! நாடித் துடிப்பு மிகச் சரியா இருக்கு. நிறைவாழ்வு வாழ்வீங்க’ என்று அப்பாவை வாழ்த்தினார்.

’எனக்கு 76. உங்க வயசென்ன?’ என்று அவரிடம் கேட்டார்.

’70’ என்றார் அவர்.

‘சரி. பாக்கலாம் நாளைக்கு’ என்று விடைபெற்றுக் கொண்டார்.

அவரும் என்னிடம், ‘அப்பாவப் பூப் போலப் பாத்துக்குங்க தம்பி’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தபடியே கையசைத்து விட்டுக் கிளம்பினார்.

அவரை இதற்கு முன் அப்பாவுடன் பார்த்த நினைவில்லாததால், ”யாருப்பா அது?’ என்று கேட்டேன்.

அவர் சிரிப்புடன், ‘எனக்கும் தெரியாது. தெரியணுமா என்ன?’ என்றார்.

எதிரில் கடந்து சென்ற் அந்த பரிச்சயமில்லாப் பெரியவரின் மனதிலும் அப்பாவின் பதில் எதிரொலிப்பதை உணர்ந்தேன்.

12.1.14

விவேகானந்தரும் ராக்ஃபெல்லரும்.

சுவாமி விவேகானந்தர், அமெரிக்காவில் சிகாகோ மாநகரத்தில் தங்கியிருந்தார். அங்கு அவரை ராக்ஃபெல்லர் என்பவர் சந்தித்தார். ராக்ஃபெல்லர், பிற்காலத்தில் உலகில் புகழ் பெற்ற பெரிய பணக்காரர்களில் ஒருவராக விளங்கினார். விவேகானந்தரைச் சந்தித்தபோது, ராக்ஃபெல்லர் அவ்வளவாகப் பிரபலம் ஆகவில்லை.

ராக்ஃபெல்லரின் நண்பர்கள் பலர், விவேகானந்தரைப் பற்றி அவ்வப்போது ராக்ஃபெல்லரிடம் கூறியிருந்தார்கள். எனவே விவேகானந்தரைப் பற்றி ராக்ஃபெல்லர் நிறையவே கேள்விப்பட்டிருந்தார். என்றாலும் ஏனோ அவர், விவேகானந்தரைச் சந்திப்பதற்குத் தயங்கினார்.

விவேகானந்தர் அமெரிக்காவில் பல இடங்களுக்குச் சென்று, சொற்பொழிவுகள் செய்துகொண்டிருந்தார். அவர் ஒருமுறை ராக்ஃபெல்லரின் நண்பர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது ஒருநாள் திடீரென்று, விவேகானந்தரைச் சந்திக்க வேண்டும் என்ற தீவிர எண்ணம் ராக்ஃபெல்லருக்கு ஏற்பட்டது.

அந்த வேகத்தில் அவர் விவேகானந்தர் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றார். அங்கு அவருக்காக வீட்டின் கதவை வேலைக்காரன் திறந்தான். அந்த வேலைக்காரனைப் பிடித்துத் தள்ளிவிட்டு, ராக்ஃபெல்லர் முன்அனுமதிகூடப் பெறாமல் விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

விவேகானந்தர் அப்போது அமர்ந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அவ்வளவு வேகமாக ராக்ஃபெல்லர் சென்றும் விவேகானந்தர் தன் முகத்தைத் தூக்கி, வந்தது யார்? என்று பார்க்கவில்லை. இவ்விதம் சிறிது நேரம் கழிந்தது.

தலை கவிழ்ந்திருந்த நிலையில் விவேகானந்தர் - தலை நிமிர்ந்துகூடப் பார்க்காமல் - திடீரென்று ராக்ஃபெல்லர் மட்டுமே அறிந்திருந்த அவருடைய கடந்த கால நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். இறுதியில் அவர், உங்களிடம் இருக்கும் பணம் உண்மையில் உங்களுடையது இல்லை. உலகிற்கு நன்மை செய்வதற்காக இறைவன் உங்களிடம் அந்தப் பணத்தைக் கொடுத்து வைத்திருக்கிறார்.

அதனால் உலகிற்கு நன்மை செய்வதற்கு உரிய ஒரு வாய்ப்பை இறைவன் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார், அவ்வளவுதான்! எனவே நீங்கள் உங்களிடம் இருக்கும் பணத்தை உலக நன்மைக்காகச் செலவு செய்யுங்கள் என்று கூறினார். இவ்விதம் விவேகானந்தர் கூறியது ராக்ஃபெல்லருக்குப் பிடிக்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்னொருவர் எனக்குச் சொல்வதா? என்று அவருக்குத் தோன்றியது. அவர் எதுவும் சொல்லாமல், வேகமாக அந்த அறையைவிட்டு வெளியேறினார்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்மிக சக்தி ராக்ஃபெல்லரிடமும் வேலை செய்தது. ஒரு வாரம் கழிந்திருக்கும். ராக்ஃபெல்லர், பொதுத்தொண்டு நிறுவனம் ஒன்றுக்குப் பெரிய ஒரு தொகையை நன்கொடை அளிக்க வேண்டும் என்று முடிவு செய்தார். எனவே அவர் அதற்கான திட்டங்களை விரிவாக ஒரு காகிதத்தில் எழுதி, அதை எடுத்துக்கொண்டு விவேகானந்தரைச் சந்திப்பதற்குச் சென்றார். முன்பு போலவே அதே வேகத்தில் அவர் மீண்டும் முன்அனுமதியின்றி, விவேகானந்தர் இருந்த அறைக்குள் நுழைந்தார்.

அன்றைய தினமும் விவேகானந்தர் ஏதோ படித்துக்கொண்டிருந்தார். ராக்ஃபெல்லர், தாம் கொண்டு சென்றிருந்த காகிதத்தை விவேகானந்தர் முன்பு வேகமாக வீசி, இதோ, இதைப் படித்துப் பாருங்கள்! இப்போது உங்களுக்குத் திருப்திதானே! நீங்கள் இப்போது எனக்கு நன்றி சொல்ல வேண்டும்! என்று கூறினார்.

விவேகானந்தர் அசையவும் இல்லை; ராக்ஃபெல்லரைத் தலை நிமிர்ந்து பார்க்கவும் இல்லை; அவர் அமைதியாக ராக்ஃபெல்லர் காகிதத்தில் எழுதியிருந்த அனைத்தையும் படித்தார். படித்து முடித்ததும் அவர், ’நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டியதில்லை. நீங்கள்தாம் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்’ என்றார்.

அதுதான் ராக்ஃபெல்லர் தமது வாழ்க்கையில் அளித்த முதல் பெரிய நன்கொடை ஆகும். ராக்ஃபெல்லர் தன்னிடமிருந்த செல்வத்தை மக்களுக்குப் பயன்படும் வகையில், நல்ல விதத்தில் செலவு செய்வதற்கு விவேகானந்தர் வழிகாட்டினார். எனவே அவர்தாம் விவேகானந்தருக்கு, நன்றி சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்.


விவேகானந்தரின் சிந்தனைகள் பல-
================================

பிற மதங்களுக்குப் போய்விட்ட நம் மக்களைக் குறித்து நாம் இப்போது அழுகிறோம். ஆனால் அவர்கள் மதம் மாறுவதற்கு முன் அவர்களுக்காக நாம் என்ன செய்தோம்? நாம் ஒவ்வொருவரும் நம்மையே இந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்வோம். 

நாம் என்ன கற்றுக்கொண்டோம்? சத்திய ஜோதியை நாம் ஏந்தியுள்ளோமா? ஏந்தியுள்ளோம் என்றால், எவ்வளவு தொலைவு அதை எடுத்துச் சென்றோம்? இந்தக் கேள்வியை நாம் நம்மிடம் கேட்டே தீர வேண்டும். 

நாம் அப்போது அவர்களுக்கு உதவவில்லை. இது நாம் செய்த தவறு நாம் செய்த வினை. எனவே இதற்காக யார்மீதும் பழி போட வேண்டாம். நம் சொந்த வினையையே குறை கூறிக் கொள்வோம் ! 
நீங்கள் அனுமதிக்காமல் உலகாயதமோ, முகமதியமோ, கிறிஸ்தவமோ அல்லது வேறு எதுவுமோ உங்களை வெல்ல முடியாது.

=============

நாம் வேதாந்திகள் அல்ல, நம்மில் பெரும்பாலோர் பௌராணிகர்களும் அல்ல தாந்திரிகர்களும் அல்ல; நாம் எல்லாம் வெறும் தீண்டாதே, தீண்டாதே என்ற மதத்தைச் சார்ந்தவர்கள். 

நமது மதம் சமையலறையில் இருக்கிறது. பானைதான் நமது கடவுள். என்னைத் தொடாதே, நான் புனிதமானவன் என்பதே நமது மதம். இது இன்னும் ஒரு நூறாண்டு காலம் இப்படியே சென்றால் நம்மில் பெரும்பாலோர் பைத்தியக்கார விடுதியில்தான் இருப்போம். 

நமது மூளை பலவீனமாகிவிட்டது என்பதற்கு அடையாளம் இது. நமது மனத்தால் வாழ்வின் உயர் பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை; மனம் எல்லா வலிமையையும் செயல் திறனையும் இழந்து, எதிரில்பட்ட சின்னஞ் சிறு பிரச்சினையைத் திரும்பத் திரும்பச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதே இதன் பொருள்.


==================

கல்வி என்றால் என்ன? அது புத்தகங்களைப் படிப்பதா? இல்லை. அல்லது அது பலவிதமானவற்றைக் குறித்த அறிவா?அதுவும் இல்லை. 

எத்தகைய பயிற்சியின் மூலம் மனவுறுதியின் வேகமும் அதன் வெளிப்படும் தன்மையும் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு, பயன்தரும் வகையில் அமைகிறதோ. அந்தப் பயிற்சிதான் கல்வியாகும்.

வெறும் புள்ளி விவரங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதல்ல, மனதை ஒருமுகப்படுத்துவது தான் என்னைப் பொறுத்த வரையில் கல்வியின் அடிப்படையான இலட்சியமாகும்.

மீண்டும் ஒரு முறை நான் கல்வி கற்பதாக இருந்தால், அந்த விஷயத்தில் சுதந்திரம் ஏதாவது எனக்கு இருக்குமானால், புள்ளி விவரங்களை நான் படிக்க மாட்டேன்.

முதலில் மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலையும், பற்றில்லாமல் இருக்கும் திறந்த உள்ளத்தையும் வளர்த்துக் கொள்வேன். அதன் பிறகு, பண்படுத்தப்பட்ட அந்தக் கருவியைக் கொண்டு, நினைத்த நேரத்தில் உண்மைகளை நான் சேகரித்துக் கொள்வேன்.


======================

நீ ஐந்தே ஐந்து உயர்ந்த கருத்துக்களைக் கிரகித்துக் கொண்டு, அவற்றை நீ உன்னுடைய வாழ்க்கையிலும் நடத்தையிலும் ஊடுருவி நிற்கச் செய்தால் - ஒரு பெரிய புத்தகசாலை முழுவதையும் மனப்பாடம் செய்திருப்பவனை விட நீயே அதிகம் கல்வி கற்றவன் ஆவாய்.

=======================

ஒவ்வொருவனும் கட்டளையிடவே விரும்புகிறான். கீழ்ப்படிவதற்கு ஒருவரும் தயாராக இல்லை. பண்டையக் காலத்தில் நிலவி வந்த வியப்பிற்குரிய பிரம்மசரிய முறை இந்த நாளில் மறைந்து போனதுதான் இதற்குக் காரணம்.

முதலில் கீழ்ப்படிவதற்குக் கற்றுக் கொள். பிறகு கட்டளையிடும் பதவி உனக்குத் தானாக வந்து சேரும். எப்போதும் முதலில் வேலைக்காரனாக இருக்க கற்றுக்கொள். அதன் பின்பு எஜமானனாகும் தகுதி உனக்கு வந்து சேரும்.


==========================

உங்கள் பல்கலைக் கழகங்களை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த ஐம்பது ஆண்டுகளாக அவை இருந்து என்ன சாதித்திருக்கின்றன?

சுயமாகச் சிந்திக்கும் உண்மையான மனிதன் ஒருவனையும் அவை உண்டாக்கியதாகத் தெரியவில்லை. அவை வெறும் தேர்வுகளை நடத்தும் நிறுவனங்களாக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொது நலத்திற்காக நம்மைத் தியாகம் செய்ய வேண்டும் என்ற கருத்து நமது நாட்டில் இன்னும் வளராமலேயே இருக்கிறது.


============================

இப்போது நாம் விலங்குகளைவிட அதிக அளவில் ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயத்தின் கட்டுப்பாடு என்னும் சாட்டையடிகளால்தான் நாம் அழுத்தி அடக்கி வைக்கப் பட்டிருக்கிறோம்.

இன்று சமூகம் ,நீ திருடினால் நான் உன்னை தண்டிக்கப் போவதில்லை என்று சொல்லிவிடுமானால், உடனே நாம் விரைந்து ஒருவர் மற்றொருவருடைய சொத்துக்களைப் பறிப்பதற்காகப் பாய்ந்து ஓடுவோம்.

போலீஸ்காரர்கள்தாம் நம்மை நல்ல ஒழுக்கம் உடையவர்களாக வைத்திருக்கிறார்கள். சமுதாயத்தின் பொது அபிப்பிராயம்தான் நம்மை ஒழுக்கமுள்ளவர்களாக வைத்திருக்கிறது. உண்மையில் மிருகங்களைவிட நாம் சிறிதும் உயர்ந்தவர்களாக இல்லை.


============================

உயர்ந்த பண்பு, ஒழுக்கம், ஆன்மிகம் ஆகிய எல்லாச் சிறந்த பெருமைகளுக்கும் பிறப்பளித்தவள் நமது இந்திய தாய். முனிவர்கள் பலர் வாழ்ந்த நாடு இந்த நாடு. கடவுளுக்குச் சமமான மகான்கள் இன்னமும் இந்த நாட்டிலேதான் வாழ்ந்து வருகிறார்கள். இத்தகைய இந்தியாவா அழிந்து போய்விடும்?

எனது அருமைச் சகோதரா? ஒரு பழைய விளக்கை எடுத்துக் கொண்டு, இந்தப் பரந்த உலகிலுள்ள நாடு நகரங்கள் பட்டி தொட்டிகள் , காடு கழனிகள் எல்லாவற்றின் ஊடேயும் உன்னை நான் பின் தொடர்கிறேன்.

உன்னால் முடியுமானால், இப்படிப்பட்ட தலைசிறந்த மகான்களை வேறு எந்த நாட்டிலாவது தேடிக் காட்டு பார்க்கலாம்.


================================

கிரீஸ் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, ரோம் நாகரிகம் பிறப்பதற்கு வெகு நீண்ட காலத்திற்கு முன்பே, தற்கால இந்த நவீன ஐரோப்பியர்களின் முன்னோர் காட்டுமிராண்டிகளாகத் தங்களுடைய உடலிலே பச்சை குத்திக்கொண்டு காடுகளில் திரிந்து வாழ்ந்த அந்தக் காலத்திலேயே, நமது நாட்டில் மிக உயர்ந்த நாகரிகம் இருந்து வந்திருக்கிறது.

ஏன் , அதற்கும் முன்பேகூட வரலாற்றில் குறிப்புக்களே கண்டுபிடிக்க முடியாத , சரித்திரமே புக முடியாத, இருண்ட அவ்வளவு மிகப் பழமையான காலத்திலிருந்து இன்று வரையிலும் பல உயர்ந்த கருத்துக்களும் சிந்தனைகளும் இந்த நாட்டிலிருந்துதான் அலையலையாக வெளியே சென்று பரவியிருக்கின்றன.

ஆனால் இவையெல்லாம் அன்புடனும், வாழ்த்துக்களுடனும் சமாதானத்துடனுமே சென்றிருக்கின்றன. 


================================

அமரத்துவம் வாய்ந்த எனது அருமைக் குழந்தைகளே !

நமது நாடு என்னும் இந்தக் கப்பல் பல்லாயிரக்கணக்கான நீண்ட நெடுங்காலமாகத் தனது நாகரிகத்தை ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறது.

தனது எண்ணற்ற அரும்பெரும் செல்வங்களால் இந்த உலகம் முழுவதையும் மேலும் மேலும் வளமாக்கிக் கொண்டிருக்கிறது.

பல ஆயிரக்கணக்கான நூற்றாண்டுகளாக நமது இந்தக் கப்பல் வாழ்க்கை என்னும் கடலைக் கடக்க நமக்கு உதவி புரிந்து வந்திருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான மக்களை வாழ்க்கைக் கடலின் துன்பமற்ற மறுகரைக்கு அழைத்துச் சென்றபடியே இருக்கிறது.

ஆனால், இன்று அந்தக் கப்பலில் ஓர் ஓட்டை விழுந்து பழுதடைந்து போயிருக்கிறது. இந்த நிலைக்கு உங்களுøடைய தவறுகளே காரணம். அல்லது வேறு காரணங்களும் இருக்கலாம். அதைகுறித்து நாம் அவ்வளவாகப் பொருட்படுத்த வேண்டியதில்லை.

நீங்கள் அதில் அமர்ந்துகொண்டிருக்கிறீர்கள். இப்போது நீங்கள் செய்ய போகும் காரியம் என்ன? அந்தக் கப்பலைத் திட்டிக்கொண்டு, நீங்கள்ஒருவருடன் ஒருவர் சண்டை போட்டுக்கொண்டு இருக்கப் போகிறீர்களா?

அல்லது நீங்கள் அனைவரும் ஒருவருடன் ஒருவர் ஒற்றுமையாக இணைந்து, அந்தக் கப்பலைப் பழுது பார்க்க உங்கள் திறமைகள் அனைத்தையும் பயன்படுத்தப் போகிறீர்களா?

நமது இதயத்தை மனமுவந்து அந்த பணிக்கு நாம் தருவோமாக அல்லது அந்தப் பணியிலே தோல்வி அடைந்தால் மனதில் திட்டிக் கொண்டிருக்காமல் வாழ்த்திக்கொண்டே அனைவரும் ஒன்றாக மூழ்கி இறந்துவிடுவோமாக. 


==============================

சுயநலம், சுயநலமின்மை என்பவற்றைத் தவிரக் கடவுளுக்கும், சாத்தானுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. கடவுளுக்குத்தெரிந்த அளவுக்குச் சாத்தானுக்கும் எல்லாம் தெரியும். கடவுளுக்குச் சமமான ஆற்றல்கள் சாத்தானுக்கும் உண்டு.

ஆனால் தெய்விகத் தன்மை மட்டும் தான் அதனிடம் இல்லை. எனவே அது சாத்தானாகவே இருக்கிறது. இந்தக் கருத்தை நவீன உலகத்தோடு ஒப்பிட்டுப் பார். பெறுகிற மித மிஞ்சிய அறிவும் ஆற்றலும் மனிதர்களைச் சாத்தன்களாக்கி விடுக்கின்றன.


============================

தீர்க்கதரிசிகளின் ஆற்றல் எங்கே இருந்தது என்பதை உலக வரலாற்றிலிருந்தே நீ அறிந்ததில்லையா? அது எங்கே இருந்தது? அவர்களில் எவராவது தத்துவத்தைப் பற்றியோ, மிகவும் நுட்பமான தர்க்க நியாயங்களைப் பற்றியோ, அருமையான ஒரு நூலாவது எழுதியிருக்கிறார்களா? அவர்களில் ஒருவருமே அப்படி எதுவும் எழுதியதில்லை. ஒரு சில வார்த்தைகளை மட்டுமே அவர்கள் பேசினார்கள்.

நீ சிறந்த மகான் ஒருவரைப் போன்ற மனநிலையைக் கொள். அவராகவே நீ ஆகிவிடுவாய்.புத்தரைப் போன்ற மனநிலையைக் கொள். புத்தர் பெருமானாகவே நீ ஆகிவிடுவாய். உயர்ந்த மனநிலைதான் வாழ்க்கையாக அமைகிறது; வலிமையைத் தருகிறது; உயிர்நாடியாக விளங்குகிறது. அத்தகைய மனநிலை இல்லாமற் போனால், அறிவாற்றல் எவ்வளவுதான் வேலை செய்தாலும் கடவுளை அடைய முடியாது.


===============================

நீங்கள் இறைவனை உணர்ந்தால் உங்கள் முகம் மாறிவிடும், உங்கள் குரல் மாறிவிடும், உங்கள் தோற்றமே மாறிவிடும். நீங்கள் மனித குலத்திற்கு ஒரு வரப்பிரசாதமாக இருப்பீர்கள். ரிஷியைத் தடுக்க யாராலும் முடியாது. நமது மதத்தின் லட்சியமான ரிஷிநிலை இதுதான்.

மற்றபடி இந்தப் பேச்சுக்கள், வாதங்கள், தத்துவங்கள்,துவைதங்கள், அத்வைதங்கள், ஏன் வேதங்கள் கூட வெறும் படிக்கற்களே, இரண்டாம் நிலையில் உள்ளவைகளே; நேரடி அனுபவமே முதன்மையானது.

வேதங்கள், இலக்கணம் ,வான நூல் போன்ற எல்லாமே இரண்டாம் நிலையில் உள்ளவைதான். மாறாத ஒன்றை நாம் உணரும்படி எது செய்கிறதோ, அதுவே மேலான அறிவு. அதனை உணர்ந்தவர்கள் ரிஷிகள். அவர்களையே நாம் வேதங்களில் காண்கிறோம்.


================================

நமது புராணங்கள் எல்லாம் மறையலாம், வேதங்கள்கூட அழிந்து போகலாம், நமது சமஸ்கிருத மொழி ஒரேடியாக அழிந்து போகலாம். ஆனால் இந்த நாட்டில் ஐந்து இந்துக்கள் உயிர்வாழ்ந்தாலும்கூட, அவர்கள் கொச்சை மொழி பேசினாலும்கூட, அங்கு சீதையின் கதை இருக்கவே செய்யும்.

என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். அவள் நம் இனத்தின் உயிரோட்டத்தில் ஊடுருவி இருக்கிறாள், இந்துக்களான ஆண்,பெண் ஒவ்வொருவரின் ரத்தத்திலும் கலந்திருக்கிறாள். நாமெல்லாம் சீதையின் குழந்தைகள்.

பெண்களின் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களை சீதை லட்சியத்திலிருந்து விலகச் செய்தால் அந்த நாம் அனுதினமும் கண்டு வருகிறோம். சீதையின் அடியொற்றியே நம் பெண்கள் வளர வேண்டும், முன்னேற வேண்டும், அது ஒன்றே வழி.


==================================

வீண் விபரங்களை அறிந்து கொள்வதில் நேரத்தை வீணாக்காதீர்கள். வாழ்க்கையின் அடிப்படையை, அதன் சாரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கிருஷ்ணரின் வாழ்க்கையில் வரலாற்றிற்கு முரணானவை பல இருக்கலாம், இடைச்செருகல்கள் இருக்கலாம். இவை உண்மையாகவும் இருக்கலாம்.

ஆனால் பரம்பரைப் பாதையிலிருந்து விலகிச் செல்கின்ற இந்தப் புதிய மகத்தான கருத்துக்களுக்கு ஓர் அடிப்படை, ஓர் அடித்தளம் இருந்தேயாக வேண்டும். வேறு எந்த ரிஷி அல்லது மகானின் வாழ்க்கையை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

அவர் தமக்கு முன்பிருந்த கருத்துக்களின் ஒரு பரிணாம வளர்ச்சியாகவே இருக்கிறார். அல்லது தமது காலத்திலே தமது நாட்டிலேயே பரவலாகக் காணப்படுகின்ற கருத்துக்களை மட்டுமே போதிக்கிறார். இந்த மகான் இருந்தாரா இல்லையா என்பதைப் பற்றி சந்தேகம் கூடத் தோன்றலாம்!

ஆனால் நான் சவால் விடுகிறேன். இந்த லட்சியங்கள் - பணிக்காகவே பணி, அன்பிற்காகவே அன்பு, கடமைக்காகவே கடமை - இவை கிருஷ்ணரின் சொந்தக் கருத்துக்கள் அல்ல. இந்தக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்திய வேறொருவர் இருக்கிறார் என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

முடியாது. இந்தக் கருத்துக்கள் வேறு யாரிடமிருந்தும் கடனாக வாங்கப் பட்டிருக்க முடியாது. கிருஷ்ணர் பிறந்த போது அவை காற்றிலே மிதந்து கொண்டிருக்கவில்லை.

கிருஷ்ணபகவான் தான் முதன்முதலில் அதை வெளிப்படுத்தியவர், அவரது சீடரான வியாசர் அதை மனித குலம் முழுவதற்கும் பிரச்சாரம்செய்தார். இது மிகவுயர்ந்த கருத்து.


===========================

ஆன்மீகம், லௌகீகம் இரண்டையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் நம்மால் மேலை நாட்டினராக ஆக முடியாது. எனவே அவர்களைக் காப்பியடிப்பது பயனற்றது.

ஒரு வேளை நீ அவர்களைக் காப்பியடிப்பதாகவே வைத்துக் கொள்வோம். அந்தக் கணமே நீ செத்து விடுவாய். அதன்பின் உனக்கு வாழ்க்கை என்பதே இல்லாமல் போவிடும்.
இரண்டாவதாக அது முடியாத காரியமும் ஆகும்.

காலத்துடனேயே தோன்றி, யுகயுகங்களாக மனித வரலாற்றைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கின்றது ஆறு ஒன்று.
அதனைத் தடுத்து நிறுத்தி, பின்னோக்கித் தள்ளிக் கொண்டு போய், இமாலயப் பனிப் படலங்களில் சேர்த்துவிட எண்ணுகிறீர்களா?

ஒரு வேளை அதுகூட முடிகிற காரியமாக இருக்கலாம். ஆனால் உங்களால் ஐரோப்பியமயமாக முடியாது. சில நூற்றாண்டுகளாக மட்டுமே உள்ள தங்கள் நாகரீகத்தைத் தூக்கி எறிவது ஐரோப்பியர்களால் முடியாமலிருக்கும்போது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பிரகாசிக்கும் நமது பண்பாட்டைத் தூக்கி எறிவது சாத்தியம் என்றா நினைக்கிறீர்கள்? அது முடியாது.


======================================

களி மண்ணிலிருந்தோ அல்லது வேறு ஏதாவது ஒரு மூலப்பொளிலிருந்தோ எண்ணிலடங்காத விதவிதமான பொருட்கள் செய்யப்படுகின்றன.

களிமண்ணாகப் பார்க்கும்போது எல்லாமே ஒன்றுதான். ஆனால் உருவத்தில், புறத்தோற்றத்தில் அவை பலவேறாக உள்ளன. அவை ஒவ்வொன்றும் செய்யப்படுவதற்கு முன் தோன்றாநிலையில் மண்ணில் இருக்கவே செய்தன.

மூலப் பொருள் நிலையில் அவை எல்லாம் ஒரே தன்மை உடையவை. ஆனால் வடிவம் பெற்ற பின்னர், அந்த வடிவம் நிலைத்து வெவ்வேறானவை.

களிமண் சுண்டெலி ஒருநாளும் களிமண் யானையாக முடியாது. காரணம், களிமண்ணோடு களிமண்ணாய் ஒன்றாக இருந்த அவை, உருவம் பெற்ற அளவில், உருவம் காரணமாக வெவ்வேறாகிவிட்டன. உருவம் பெறாத களிமண் நிலையில் அவை எல்லாமே ஒன்றதான்.

அதுபோன்றே, அறுதி உண்மையான பிரம்மத்தின் மிகவுயர்ந்த வெளிப்பாடு இறைவன். இன்னும் தெளிவாகச் சொல்வதானால், பிரம்மத்தைப்பற்றி மனித மனத்தினால் உணரமுடிந்த மிகவுயர்ந்த கருத்து இறைவன். படைப்பு அனாதி காலந்தொட்டு என்றும் இருந்து வருவது, இறைவனும் அப்படியே.


=========================================

ஒன்றன்பின் ஒன்றாக எத்தனையோ நாடுகள் உலக மேடைக்கு வந்து, ஒரு சில கணங்கள் தங்கள் பாத்திரங்களை ஆரவாரமாக நடித்துவிட்டு, காலப் பெருங் கடலில் நீர்க்குமிழி போல், ஏறக்குறைய எந்த அடையாளத்தையும் நிறுத்தாமல் அழிந்து போய்விட்டன.

இங்கு நாமோ நிரந்தரமானது போன்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மிகப் பெரும் 'தகுதி பெற்றதே வாழும்' என்பதைப் பற்றிய புதிய பல கொள்கைகளையெல்லாம் அவர்கள் பெரிதாகப் பேசுகிறார்கள் ; வாழ்வதற்கான மிகப் பெரும் தகுதியாக உடல் வலிமையையே கருதுகிறார்கள்.

அது உண்மையென்றால் பிற நாடுகளை ஆக்கிரமித்ததான பழைய நாடுகளுள் ஒன்றாவது இன்றும் பெருமையோடு வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

ஒருபோதும் எந்த இனத்தையோ நாட்டையோ வெல்லாத பலவீனமான இந்துக்கள் அழிந்திருக்க வேண்டுமே! ஆனால் நாம் முப்பதுகோடிப் பேர் இன்னும் வலிமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.


====================================

மிகப் பழங்காலத்திலிருந்தே நாம் உலகத்திற்குச் சவால் விட்டுக்கொண்டிருப்பது போல் தோன்றுகிறது.

ஒரு மனிதன் எவ்வளவு அதிகமாக வைத்துக்கொள்ள முடியும் என்ற பிரச்சனையைத் தீர்க்க மேலை நாட்டினர் முயன்று கொண்டிருக்கிறார்கள். இங்கோ ஒரு மனிதன் எவ்வளவு குறைவான உடைமைகளைக் கொண்டு வாழ முடியும் என்ற கேள்விக்கு விடைகாண முயன்று கொண்டிருக்கிறோம்.

இந்தப் போராட்டமும் இந்த வேறுபாடும் பல நூற்றாண்டுகள் தொடரவே செய்யும்.

ஆனால் வரலாற்றில் ஏதாவது உண்மையாகி இருக்குமானால், ஆருடங்கள் எப்போதாவது உண்மையாகி இருக்கிறதென்றால், அது யார் குறைவான பொருட்களைக் கொண்டு வாழக் கற்றுக் கொள்கிறார்களோ, கட்டுப்பாட்டுடன் வாழ்கிறார்களோ அவர்களே முடிவில் வெல்கிறார்கள்.

யார் போகத்தின் பின்னாலும் ஆடம்பரத்தின் பின்னாலும் ஓடுகிறார்களோ அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பரப்பரப்பாக அந்ந நேரத்தில் காணப்பட்டாலும் அவர்கள் அழிந்தே தீர வேண்டும், மாய்ந்தேயாக வேண்டும் என்பதுதான்.

தனியே ஒரு கரித்துண்டு

தேவாலயத்தின் எல்லா ஞாயிற்றுக்கிழமைப் பிரார்த்தனைகளிலும் ஜுவன் தவறாமல் கலந்து கொள்வது உண்டு. என்றாலும் பாதிரியார் எப்போதும் ஒரே விஷயத்தை...